Saturday, October 5, 2019

இராமர் பெயரில் படுகொலைகள் கூடாது; சிறுபான்மை மக்களைப் பாதுகாத்திடுங்கள் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த அறிஞர்கள் மீது, தேசத்துரோக வழக்கு! வைகோ கடும் கண்டனம்!

கடந்த மே மாதம் 23 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முதல் நாள், மத்தியப் பிரதேச மாநிலம் செனாய் பகுதியில் பசுக் காவலர்கள் என்ற போர்வையில், சுபம்சிங் என்ற மதவெறியன் தலைமையில் ஒரு மதவாதக் கும்பல், மாட்டுக்கறி வைத்து இருப்பதாகக் கூறி, இஸ்லாமியப் பெண் உட்பட மூவரைக் கடுமையாகத் தாக்கினர். அவர்களை ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கும்படி மிரட்டி அடித்தனர். அந்தக் காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்பின.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும்பான்மை பெற்றதால் ஊக்கம் பெற்ற சங் பரிவாரங்கள், சிறுபான்மை, தலித் மக்கள் மீது தொடர்ந்து கொலை வெறித் தாக்குதல்களை மேற்கொண்டன.
மே 26 ஆம் தேதி, பிகாரின் பெகுசராய் மாவட்டத்தில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த ராஜிவ் யாதவ் என்பவர், முகமது காசிம் என்ற இஸ்லாமிய இளைஞரிடம், உனக்கு இங்கு என்ன வேலை? பாகிஸ்தானுக்குப் போ என்று மிரட்டித் துப்பாக்கியால் சுட்டார்.
பிரதமர் மோடி, உலக யோகாநாள் விழாவில் கலந்த கொள்ள, கடந்த ஜூன் 23 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் சென்றார். அதே நாளில், ஈத் பெருநாளுக்காக, வெளியூரில் பணியாற்றும் தப்ரோஸ்அன்சாரி என்ற 24 வயது முஸ்லிம் இளைஞர், தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரைப் பிடித்துக் கட்டி வைத்த மதவெறிக் கும்பல், ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் என்று முழங்கச் சொல்லி, இரத்தம் சொட்டச் சொட்டக் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். 12 மணி நேரம் அந்த இளைஞர் மீது ஈர இரக்கம் இன்றி நடத்திய கொடூரத் தாக்குதலைப் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டு மகிழ்ந்தது அந்தக் கும்பல்.
உயிருக்குப் போராடிய நிலையில், நான்கு நாள்களில் தப்ரோஸ்அன்சாரி மரணம் அடைந்தார்.
ஜூன் 27 ஆம் தேதி, மும்பை தானே பகுதியில் இந்துத்துவக் கும்பல் ஒன்று, ஓலா வாடகை மகிழுந்து ஓட்டுநர், ஃபைசல் உஸ்மான் எனும் 25 வயது முஸ்லிம் இளைஞரைப் பிடித்து, ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு தாக்கியது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாக்பூர் அருகே மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள், முகமது முக்தார், தில்பர் உசேன், நவுசார் அலி, என்தாம் அலி ஆகியோரை, ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு தாக்கினர்.
அதே கொல்கத்தாவில், மதரசாவில் பணியாற்றும் ஹபீஸ்முகமது என்ற ஆசிரியரையும் ஜெய் ஸ்ரீ ராம் கூறும்படித் தாக்கியது மட்டும் அல்லாமல், தொடரியில் இருந்து வெளியே தள்ளி விட்டது.
ஜூன் 28 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே, பாரா பகுதியில் வசிக்கும் முகமது தாஜ் என்னும் 16வயது முஸ்லிம் இளைஞர், பள்ளிவாசலில் தொழுகை நடத்திவிட்டுத் திரும்பியபோது, காவிக்குண்டர்கள் வழிமறித்து, ஜெய் ஸ்ரீ ராம் சொல்லும்படித் தாக்கினர்.
ஜூலை 19 ஆம் தேதி பிகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள பனியாபூர் எனற் ஊரில், அதிகாலை 4.30 மணிக்கு, கால்நடைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட மூன்று இஸ்லாமிய இளைஞர்களை, இந்துத்துவ வெறிக்கும்பல் அடித்தே கொன்றது.
ஜூலை 30 ஆம் தேதி, உ.பி. மாநிலம் சந்தாலி மாவட்டத்தில் 15 வயது முஸ்லிம் இளைஞரை, ஜெய் ஸ்ரீ ராம் சொல்லக்கூறி அடித்துத் துவைத்த கும்பல், அவரை உயிரோடு எரித்துக் கொன்றது.
இவ்வாறு இந்தியா முழுவதும் நாள்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும், கொல்லப்படுவதையும் பா.ஜ.க. அரசும், பிரதமர் மோடியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்கக்கூடாது என்று, எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் உள்ளிட்ட 49 பேர் பிரதமருக்கு வெளிப்படையாக மடல் எழுதினர்.
2019 ஜூன் 23 ஆம் தேதி, திரைப்பட இயக்குநர் அபர்ணா சென், வரலாலற்று ஆசிரியர் இராமச்சந்திர குஹா, சமூக ஆர்வலர் ஆசிஷ் நந்தி, ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் கஷ்யப், டாக்டர் பினாயக் சென், சோமிதோரா சட்டர்ஜி, கொங்கணா சென், சுபா முட்கல், அனுபம் ராய், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள், பல்துறை விற்பன்னர்கள் கையெழுத்து இட்டு இருந்தனர்.
அக்கடிதத்தில்,
வட மாநிலங்களில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தின் பெயரால், சிறுபான்மை மக்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றார்கள். தலித் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில், ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கத்திற்காகவும், பசு வதை என்கிற பெயராலும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகுந்த வேதனை தருகின்றது. தலித் மற்றும் சிறுபான்மையினர் தாக்குவோர் மீது, பிணையில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளும் கட்சி என்பது தேசத்துக்கு இணையானது என்று எந்தப் பொருளும் இல்லை. ஆளும்கட்சிக்கு எதிரான கருத்துகளை, தேசத்துக்கு எதிரானதாகக் கருதக் கூடாது. எதிர்ப்புக் கருத்துகளுக்கும் இடம் தருகின்ற நாடுதான் வலிமையானது.
பெரும்பாலான மக்கள் போற்றும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை, போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். மேற்கண்ட வன்முறைத் தாக்குதல்கள் குறித்து, நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டனத்தைப் பதிவு செய்தீர்கள். ஆனால், அது மட்டும் போதாது. ‘ராம்’ என்கின்ற பெயர், இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு மிகவும் புனிதமானது. அந்தப் பெயரை வன்முறைக்காகப் பயன்படுத்தப்படுதைத் தடுக்க வேண்டும்; அதற்கு பிரதமர் நடவடிகை எடுக்க வேண்டும்”
என வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

பிரதமருக்கு இந்தக் கடிதம் தீட்டிய அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் 49 பேர் மீது புகார் கூறி, சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், பிகார் மாநில காவல்துறை பிரதமருக்கு மடல் தீட்டிய 49 பேர் மீதும் தேசத்துரோகம், பொதுத்தொல்லை, மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் அவமதிப்பது உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
நாட்டில் மத சகிப்புதன்மை தொடர வேண்டும்; சிறுபான்மை தலித் மக்கள் மீது மதவாத சனாதனக் கும்பல் தாக்குதல் நடத்தி கொலை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கோரிக்கை வைத்து மடல் எழுதியதற்காக, தேசத்துரோக சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
ஜனநாயக நாட்டில், கருத்து உரிமையை பறிப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுவோரை ‘தேசத்துரோகிகளாக’ சித்தரிப்பதும் பாசிசத்தின் அடையாளம் ஆகும்.
இத்தகைய போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும். அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 10-05-2019 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment