Tuesday, July 16, 2024

திருச்சியில் இருந்து அபுதாபிக்கு வாரம் நான்கு முறை விமானம் இயக்கப்பட்ட உள்ளதாக தகவல்! வரவேற்கத்தக்க செய்தி!

கடந்த 01.07.2024 அன்று ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு ராம் மோகன் நாயுடு அவர்களை நேரில் சந்தித்து திருச்சி விமான சேவைகள் தொடர்பாக சில கோரிக்கைகள் வைத்தேன்.

அதில், திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய கட்டடம் பிரதமர் மோடி அவர்களால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்நிலையில் கூடுதல் விமான சேவைகள் வழங்கப்பட்டால் மட்டுமே பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போதிய ஓடுதள வசதிகள் இல்லை. எனவே, விமான ஓடுபாதை விரிவாக்கப் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க தேவையான நிதியை வழங்குமாறு கோரிக்கை வைத்தேன்.

அதேப்போல, இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் (BASA) படி, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை வழங்கிட அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மட்டுமே துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படுகிறது. வாராந்திர சேவை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு 3760 இருக்கைகள் மட்டுமே இந்த விமானத்தில் நிரப்பப்படுகின்றன. இதனால் பயணக் கட்டணமும் பல மடங்கு அதிமாக உள்ளது. எனவே, திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். இதன்மூலம், திருச்சி மற்றும் அருகமை மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்கள் பெருமளவில் பயனடைவார்கள் என குறிப்பிட்டு இருந்தேன்.

இந்நிலையில், தற்போது திருச்சியில் இருந்து அபுதாபிக்கு வாரம் நான்கு முறை இண்டிகோ விமானம் இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இது வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு. இதன்மூலம் திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்கள் பயனடைவார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
16.07.2024

No comments:

Post a Comment