Monday, December 18, 2017

எஸ்.சி; எஸ்.டி மாணவர்களை தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளிய அதிமுக அரசுக்கு வைகோ கண்டனம்!

தனியார் கல்வி நிறுவன கல்லூரிகளில் மருத்துவம், சட்டம், பொறியியல் பயிலும் தலித், பழங்குடி இன மற்றும் தலித் கிறித்துவ மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்தி வந்தது.  இதனை தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் பெருமளவுக்குக் குறைத்துவிட்டது.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியல் இன மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணம் மற்றும் பராமரிப்புத் தொகை 85 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகயும், உதவித் தொகை 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 28 ஆயிரம் ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்விக் கட்டணம் 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை திரும்பப் பெறுமாறு பட்டியல் இன மாணவர்கள் கோரிக்கை வைத்ததை தமிழக அரசு அலட்சியப்படுத்திவிட்டது. மத்திய அரசும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ரூபாய் 1,350 கோடி கல்வி கட்டண உதவித்தொகையை வழங்காமல் தன் பங்கிற்கு வஞ்சித்து வருகிறது. மத்திய - மாநில அரசுகளின் அலட்சியப் போக்கால், ஏழ்மையும், வறுமையும் நிறைந்த ஒன்றரை இலட்சம் தலித், பழங்குடி இன மாணவர்கள் ஜனவரி 2, 2018 இல் தொடங்கும் கல்லூரித் தேர்வுகளை எழுத முடியாமல், படிப்பைக் கைவிடும் நிலைமைக்கு ஆளாகி உள்ளதை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளது.

சமூக நீதிக்கு எதிராகச் செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, தலித், பழங்குடி இன மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் உதவித் தொகையை குறைத்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.

தமிழக அரசு உடனடியாக எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களின் கல்லூரி கல்விக் கட்டணம், உதவித் தொகையை முழுமையாக வழங்கி, கல்லூரி படிப்பைக் கைவிடும் சூழலைத் தடுக்க வேண்டும் வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 18-12-2017 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment