Thursday, April 25, 2019

தாயகத்தில் எம்.எல்.எப்.ஜார்ஜ் திருவுருவ படம் திறப்பு!

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் செயற்குழு கூட்டம் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி தலைவர் ஆவடி அந்திரிதாஸ் அவர்கள் தலைமையில் மதிமுக தலைமை நிலையம் தாயகத்தில் இன்று 25-04-2019 காலை 11:20 மணி அளவில் நடைபெற்றது. மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி செயலாளர் எம்.எல்.எப். வி.ஜார்ஜ் அவர்களின் திருவுருவ படம்  திறக்கப்பட்டது.

கழகத்தின் பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்களும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி பொதுச் செயலாளர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் மற்றும் கழக முன்னணியினர் மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.

கழகத்தின் பொதுச் செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மனிதநேயம் வளர்ப்போம்-வைகோ அறிக்கை!

உலகம் முழுமையும், மதவாதமும், பேரினவாதமும் வலுப்பெற்று வளர்ந்து வருவது வேதனை அளிக்கின்றது.

இலங்கையில் நடைபெற்ற கொடூரத் தாக்குதல்கள், மனித நேயம் மனம் கொண்டோரைப் பதைபதைக்கச் செய்து இருக்கின்றது. 359 பேர்களைப் பலி வாங்கி இருக்கின்ற இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்று இருக்கின்ற ஐஎஸ் அமைப்பு, நியூசிலாந்து நாட்டில் மசூதி மீது நடைபெற்ற தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாகத் தெரிவித்து இருக்கின்றது. யாரோ ஒரு இனவெறியன் செய்த தவறுக்காக, எந்தக் குற்றமும் செய்யாத பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களது உற்றார், உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் நெஞ்சைப் பிளக்கின்றன.

நியூசிலாந்து தாக்குதலை யாரும் ஆதரிக்கவில்லை. உலகமே கண்டித்து இருக்கின்றது. பழிக்குப் பழி என்ற கருத்தை எந்த மதமும் போதிக்கவில்லை. அனைத்து மதங்களும், அன்பையும், அறத்தையுமே வலியுறுத்துகின்றன.

உலக அரங்கில் மாறி வருகின்ற அரசியல் சூழ்நிலைகள் கவலை அளிக்கின்றன. மனித உரிமைகளை வலியுறுத்துகின்ற ஐரோப்பாவின் பல நாடுகளில், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில், வெள்ளை இனவெறியை வளர்க்கும் வலதுசாரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்து இருக்கின்றன. அங்கேயும் சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் உருவாகி இருக்கின்றன.

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுக்கால பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கும்பலின் வழிகாட்டுதலோடு, சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றது. அதனால், ஐஎஸ் போன்ற வன்முறை இயக்கங்கள், இந்தியாவிலும் தாக்குதல் நடத்துகின்ற சூழல் உருவாகி இருக்கின்றது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகிய பெருந்தகைகளின் வழிகாட்டுதலில், திராவிட இயக்கத்தால் பண்படுத்தப்பட்ட தமிழகத்திலும், சாதி மத வெறிப் பேச்சுகள் பெருகி வருகின்றன. சமூக வலைதளங்களிலும் இத்தகைய கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது.

சாதி, மத மோதல்களால் பாதிக்கப்படுவோர் அப்பாவிப் பொதுமக்கள்தான். வேற்றுமைகளை மறந்து, எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை என்ற உணர்வோடு, மனித நேயம் வளர்ப்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 25-04-2019 தெரிவித்துள்ளார்.

Tuesday, April 23, 2019

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற திருச்சி கோமதிக்கு வைகோ பாராட்டு!

கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய தடகளப் போட்டிகளில், திருச்சியைச் சேர்ந்த கோமதி, இந்தியாவுக்கு முதலாவது தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2013 முதல் பல்வேறு பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகின்ற கோமதி, தொடக்கத்தில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் மனம் தளரவில்லை. தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார்.
கோமதியின் தந்தை மாரிமுத்து, 2016 ஆம் ஆண்டு, புற்றுநோயால் இயற்கை எய்தினார். அடுத்த சில மாதங்களில், கோமதிக்குப் பயிற்சிகள் அளித்து, ஊக்கத்துணையாக இருந்து வந்த பயிற்சியாளர் காந்தி, திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தினார். 2016 ஆம் ஆண்டில், கோமதிக்கும் அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, மருத்துவம் பெற்றார். 
இத்தகைய சோதனைகள் அனைத்தையும், நெஞ்சுரத்தால் எதிர்கொண்ட கோமதி, இன்று சாதனை படைத்து இருக்கின்றார். 
“அடுக்கடுக்கான துன்பங்களைக் கண்டு நான் மனம் தளர்ந்து விடவில்லை; என்னுடைய திறமையில் முழு நம்பிக்கை கொண்டு இருந்தேன்; என்னால் சாதிக்க முடியும் என உறுதி கொண்டு இருந்தேன்; அதன் விளைவே இந்த வெற்றி” என்கிறார் கோமதி. இன்று வருமானவரித்துறை அதிகாரியாகவும் திகழ்கின்றார்.

கோமதியின் வாழ்க்கையும் சாதனையும், தமிழக மகளிருக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக இருக்கின்றது. அவருக்கு, தமிழக அரசு உரிய மதிப்பு அளித்துச் சிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Sunday, April 21, 2019

இலங்கை குண்டுவெடிப்பு நெஞ்சைப் பிளக்கும் உயிர்ப்பலி! வைகோ கடும் கண்டனம்!

உலகம் முழுவதிலும் இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்று உள்ள செய்தி இதயத்தை நடுங்க வைக்கிறது.

இதுவரையில் மொத்தம் எட்டு இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடந்துள்ளன. அதில் பலியானோர் எண்ணிக்கை 200க்கும் மேற்பட்டு உள்ளதாகவும், வெளிநாட்டவர்கள் 12 பேர் உயிரிழந்ததாகவும், 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளதாகவும் செய்தி கூறுகிறது.

ஈவு இரக்கமற்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்ட கொலைபாதகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

கொச்சிக்கடா புனித அந்தோணியார் ஆலயம், மட்டக்களப்பு தேவாலயம், ஈழத்தமிழர்கள் நிறைந்த பகுதிகளில் உள்ளன. குண்டு வெடிப்பில் தகர்ந்த நீர்க்கொழும்பு தேவாலயத்தில் இருந்த பெரும்பாலானோர் கொல்லப்பட்டு உள்ளனர்.

உயிர் இழந்தோர் குடும்பத்தினருக்குக் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிப்பதுடன், படுகாயமுற்றோருக்கு தக்க சிகிச்சை வழங்கிக் காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளில் இலங்கை அரசும், அனைத்துப் பொதுநல அமைப்புகளும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டன அறிக்கையில் 21-04-2019 தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுஉலையில் பிரச்னைகள் உள்ளதை ஒப்புக் கொண்டது இந்திய அரசு விரிவாக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும். சுதந்திரமான குழுவைக் கொண்டு அணுஉலை செயல்பாடுகளை ஆராய வேண்டும். வைகோ அறிக்கை!

கூடங்குளம் அணுஉலையானது செயல்படத் துவங்கும் முன்னரே அந்த அணுஉலையை அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் ஆராய்ச்சி செய்து அதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை அறிந்த காரணத்தினால் தான் அந்த உலையை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இடிந்தகரை கிராமத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்களும் நீண்டகாலமாக இரண்டு அணு உலைகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

அணுஉலை செயல்பட ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்தே முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இந்திய அணுசக்திக் கழகத்தினரும், அணுசக்தித் துறை வல்லுநர்களும் மறுத்து வந்தனர். ஆனால் ஆர்.டி.ஐ., மூலம் பெறப்பட்ட தகவலின்படி, கூடங்குளம் அணு உலை அலகு 1, 2013ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 47 முறை பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அணு உலை அலகு 2, 2017 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 19 முறை பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் நமக்கு கிடைத்தது. சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு உலையானது ஆண்டிற்கு 2 அல்லது 3 முறைதான் பராமரிப்பிற்காக மட்டும் நிறுத்தப்படும். இதன் மூலமாகவே கூடங்குளம் அணுஉலையில் பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவரும் அணுசக்தித் துறையின் செயலாளருமான கமலேஷ் நில்கந்த் வியாஸ் கூறுகையில், “கூடங்குளம் அணு உலை அடிக்கடி நிறுத்தப்படும் எண்ணிக்கையானது வழக்கத்திற்கு மாறானது. அந்த உலையில் தொடக்க நிலை பிரச்சனைகள் உள்ளது அதை சரிசெய்ய இந்திய அணுமின்சக்தி கழகத்தினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் போராட்டக்காரர்களும், இடிந்தகரை மக்களும் நீண்டகாலமாக முன்வைத்துவரும் குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது.

அணுசக்தி கழகத்தின் செயலாளர் கூறியதை கருத்தில் கொண்டு இனியாவது கூடங்குளம் அணு உலை அலகு 1 மற்றும் 2ன் செயல்பாடுகளை ஒரு சுதந்திரமான வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை கூடங்குளத்தில் மேற்கொண்டு புதிய உலைகள் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன். மேலும் அணுஉலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பேரிடர் மேலாண்மை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மாநில அரசின் கைகளில் உள்ள காரணத்தால் இப்பிரச்சனைக்கு முழுக் கவனம் அளித்து உடனடியாக கூடங்குளத்தில் அணுஉலை செயல்பாடுகள் அனைத்தையும் மாநில அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 21-04-2019 தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் வைகோ வாழ்த்து!

மனிதகுல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, கொல்கதா எனப்படும கபால ஸ்தலத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. நெஞ்சைப் பிளக்கும் அந்த சோக சம்பவம்தான், இரட்சகர் இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட அவலம் ஆகும். 


அந்தகார இருள் விலகி, ஒளி வெள்ளம் பாய்வது போல் மூன்றாம் நாள் இயேசு பெருமான் உயிர்த்து எழுந்த உன்னதத்தைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறித்துவப் பெருமக்கள் கொண்டாடுகின்றார்கள். 

வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்களுக்குத் தாங்குதல் தரக்கூடிய மன வலிமையையும், உறுதியையும் தரக்கூடிய வகையில், உயிர்த்து எழுதல் நிச்சயம் உண்டு என்பதை உணர்த்துகின்ற ஈஸ்டர் திருநாள் மலர்ந்துள்ளது. 

வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் கவலையோடும், துன்பத்தோடும் அழிவின் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கின்ற மக்களுக்கு இந்நாள் நம்பிக்கை ஊட்டுகின்றது. அச்சத்தைத் தள்ளி, எழுச்சியின் உச்சத்தை அடையும் வகையில் அமைந்துள்ளது.

‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை ஒருவனின் தாய் அவனைத் தாங்குவது போல, நான் உன்னைத் தாங்குவேன்’ என்ற உறுதியைத் தரக்கூடிய இந்நாளில், மக்கள் இடையே சமய நல்லிணக்கமும், வாழ்வில் மறுமலர்ச்சியும் ஏற்படக்கூடிய வகையில் அமைந்திட, கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஈஸ்டர் வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Thursday, April 18, 2019

ஜனநாயகம் வெற்றி பெறும் - வாக்களித்த பின் வைகோ பேட்டி!

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது சொந்த கிராமமான கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருக்கும் வாக்குச் சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் வந்து வாக்களித்தார். வாக்களித்த பின் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வாக்குப் பதிவு விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்துகொண்டு இருக்கின்றது. நான் பிறந்த ஊராகிய கலிங்கப்பட்டியில் வழக்கம் போல ஜனநாயகக் கடமையாகிய வாக்களிக்கும் கடமையைச் செய்திருக்கிறேன். எல்லோரும் மலர்ந்த முகத்தோடு வாக்குச் சாவடியில் நிற்கின்றார்கள்.
இம்முறை தேர்தல் களத்தில் மத்திய அரசின் அனைத்து அதிகார அமைப்புகள் குறிப்பாக புலனாய்வுத் துறையையும், அமலாக்கத் துறையையும் ஆளும் கட்சி பயன்படுத்தி ஒருதலைப்பட்சமாக சோதனை நடத்துகிறார்கள். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியை இரத்து செய்தார்கள். இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் துரைமுருகன் அவர்களது மகன் வேட்பாளர் கதிர் ஆனந்த் அவர்களுக்கும் வேலூரில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் தொடர்பு இருப்பதாக எந்தவித ஆதாரங்களும் இல்லை. வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தலை இரத்து செய்வதாக இருந்தால், அந்தத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் ஆகிய இரண்டு சட்டமன்ற இடைத் தேர்தல்களையும் இரத்து செய்திருக்க வேண்டும். அதுதான் நியாயம். ஆகவே மாநில அரசுக்கு உதவுகின்ற விதத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி செயல்பட்டு இருக்கிறது.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக சகோதரி கனிமொழி போட்டியிடுகிறார். நிறைவுப் பிரச்சாரத்தில் நானும், தங்கை கனிமொழியும் கலந்துகொண்டோம். அன்று இரவு கனிமொழி தங்கியிருந்த வீட்டில் சோதனையிடுகிறார்கள். அங்கு எந்தவிதமான ஆதாரங்களும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில், ஓட்டுக்கு 2,000 முதல் 5,000, 10,000 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகின்ற தேனி நாடாளுமன்றத் தொகுதியில் பணம் வெள்ளமாகப் பாய்கிறது என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் செய்திகள் வருகின்றன. அந்தப் பகுதியில் ஏன் சோதனையிடவில்லை? தேனியில் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் பிரச்சாரம் செய்தபோது, அந்த மேடையிலேயே அவரது காலைத்தொட்டு வணங்கினார் வேட்பாளர் ரவீந்திரநாத்குமார். அதிகார வர்க்கம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது.
ஆனால் பணம் கொடுப்பதையும் மீறி, நடைபெறுகின்ற தமிழகம் - புதுவை உள்ளிட்ட 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
ஒரிசா முதலமைச்சர் சென்று இறங்கிய ஹெலிகாப்டரில் சோதனை செய்கிறார்கள். கர்நாடகா முதலமைச்சர் பயன்படுத்திய ஹெலிகாப்டரில் சோதனையிடுகிறார்கள். ஆக, ஜனநாயகத்திற்கு விரோதமான எதேச்சாதிகாரப் போக்கில் மத்திய அரசும், மத்திய அரசு நினைப்பதைச் செயல்படுத்துகின்ற தமிழக அரசு போன்ற மாநில அரசுகளும் செயல்படுகின்றன.
இரண்டாம் சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படுகிற, ஜனநாயகமா? பாசிசமா? என்ற தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெறும் என்று நான் நம்புகின்றேன்.
வைகோ அவர்களுடன் அவரது தம்பி வை.இரவிச்சந்திரன், மகன் துரை வையாபுரி ஆகியோரும் வரிசையில் சென்று வாக்களித்தனர்.
இவ்வாறு வைகோ செய்தியாளர்களிடம் கூறினார்

Tuesday, April 16, 2019

கருப்பு துண்டுக்கு கெளரவம் சேர்த்த வாணி பிச்சையா மறைவுக்கு வைகோ கண்ணீர் அஞ்சலி!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கும் முன்பே தலைவர் வைகோ அவர்களுக்கு முதன் முதலாக கருப்பு துண்டு அணிவித்த பெரியவர் வாணி பிச்சையா அவர்கள் மறைந்தார் என்பது மதிமுகவினருக்கு பேரதிர்ச்சி.

தலைவர் வைகோ அவர்கள் அதன் பிறகுதான் கருப்பு துண்டை தினமும் தனது தோளில் கம்பீரமாக அணிகிறார்.

வாணி பிச்சையா அவர்கள் நேற்று 16-04-2019 சங்கரன்கோயிலில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தலைவர் வைகோ அவர்கள் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.



உடன் மதிமுக மாவட்ட செயலாளர்கள், கழக முன்னணி நிர்வாகிகள், கழக கண்மணிகள் என ஏராளமானோர் இருந்தனர்.

Monday, April 8, 2019

அறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலை உடைப்புக் வைகோ கடும் கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் பட்டுக்கோட்டை சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ள செய்தி தமிழக மக்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

திராவிடர் கழகத்தின் சார்பில் 1998-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தந்தை பெரியார் சிலையின் தலைப்பகுதி உடைக்கப்பட்டு தரையில் கிடந்ததைப் பார்த்து கhலையில் அவ்வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த ஆண்டு புதுக்கோட்டை விடுதி அருகே தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை தேசப்படுத்தப்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 45 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்னமும் தமிழகத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்களும், சிந்தனைகளும்தான் வெகு மக்கள் திரளை ஈர்த்து வருகின்றன; வரலாற்றில் மட்டுமல்ல, மக்கள் இதயங்களிலும் வாழும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை கோட்பாடுகள் இன்றைய தமிழகத்தில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத கூட்டம் ஒன்று பெரியார் சிலைகளைச் சேதப்படுத்துவதையும், இழிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

திருச்சியில் 2018 டிசம்பர் 23-ஆம் தேதி இலட்சோப இலட்சம் இளம் வாலிப வேங்கைகளும் வீராங்கனைகளும் கhவிரி வெள்ளம் போன்று கருஞ்சட்டைப் பேரணியில் அணிவகுத்து வந்ததை தமிழகமே கண்டு எழுச்சியுற்றது. ஆனால், மத சகிப்பின்மையோடு வன்முறைகளையும் ஏவி வரும் கூட்டம் அதிர்ச்சியில் உறைந்தது.

மதவெறி சனாதனச் சக்திகளின் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் எனும் இந்துத்துவா சிந்தனைகளுக்குத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக் ‘கனலாக’ கனன்று கொண்டிருப்பதற்கு அடிப்படைக் கhரணம் இது தந்தை பெரியார் மண் என்பதால்தான்.

தந்தை பெரியாரின் கருத்துக்களை உடைக்க முடியாத கூட்டம், அவரது சிலைகளைச் சேதப்படுத்தி தமிழ்நாட்டில் ரத்தக்களரி ஏற்படுத்துவதற்குத் திட்டமிட்டு சதிவலை பின்னி வருவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் தந்தை பெரியார் சிலையை உடைத்து, கலவர விதைகளைத் தூவ நினைப்போரின் உள்நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொண்டு, தமிழக அரசு இதைப் போன்ற தொடர் சிலை உடைப்பு நிகழ்வுகள் நடப்பதைத் தடுப்பதுடன், இதில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என மதிமுக‌ பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 07-04-2019 தெரிவித்துள்ளார்.

Saturday, April 6, 2019

சிலம்பொலி செல்லப்பனார் மறைவுக்கு வைகோ இரங்கல்!


தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டிப் போற்றி வந்த பெருமகன் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

பழந்தமிழ்நாட்டின் சிறப்பையும். பண்பாடு மற்றும் தமிழ் மக்களின் செம்மாந்த வாழ்வியல் நெறிகளையும் எடுத்து இயம்பும் குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தை, பட்டி தொட்டிகளில் கொண்டு சேர்த்த பெருமை சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கு உண்டு.

1953 ஆம் ஆண்டு இராசிபுரம் இலக்கிய மன்ற விழாவில் செல்லப்பனார் ஆற்றிய சிலப்பதிகாரச் சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்த தமிழறிஞர் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுபிள்ளை அவர்கள் ‘சிலம்பொலி’ எனும் சிறப்புப் பட்டயத்தை வழங்கி அவரை வாழ்த்தினார். தன் வாழ்நாள் முழுவதும் சுமார் 65 ஆண்டுகளாக தனக்கே உரிய தனித்துவமான முறையில் ‘சிலம்பின்’ சிறப்பை முழங்கியவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் என்றால் மிகை ஆகாது.

சிலப்பதிகாரம் பற்றிய முழுமையான ஆய்வு நூலாக ‘சிலம்பொலி’ எனும் படைப்பை வழங்கிய செல்லப்பனார் அவர்கள், ‘மணிமேகலை தெளிவுரை’ எனும் மணிமேகலை காப்பியத்தை விளக்கும் நூலையும் இயற்றினார்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணி, பத்துப்பாட்டு, பதினென்கீழ்க்கணக்கு நூல்களை தனது சொற்பொழிவுகள் மூலம் மக்களிடையே பரப்பி, சங்க இலக்கியத் தேன் சொரிந்த பெருமையும் சிலம்பொலியாருக்கு உண்டு.

திருக்குறளின் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டு தமிழ்நாடு முழுவதும், ஏன் உலகம் எங்கும் தமிழர்களிடையே ‘உலகப் பொதுமறை திருக்குறள்’ சொற்பொழிவுகளை ஆற்றி, செந்தமிழுக்கு சீரிய தொண்டாற்றியவர் சிலம்பொலி செல்லப்பனார்.

ஆயிரக்கணக்கான நூல்களுக்கு ஆய்வு அணிந்துரைகள் வழங்கி, தமிழுக்கு அணிகலனாக விளங்கும் வகையில் ‘அணிந்துரை இலக்கியம்’ படைத்தவர் சிலம்பொலி செல்லப்பனார் மட்டுமே.

சங்க இலக்கியங்களில் தோய்ந்து தனது நுண்மான் நுழைப்புலத்தால் ஆய்வுக் கட்டுரைகளைத் தீட்டியும், மேடைகளில் மெல்லிய பூங்காற்றாக சொற்பொழிவு ஆற்றியும் தமிழ் இலக்கிய உலகுக்கு விண்முட்டப் புகழ் சேர்த்தார்.

“இயற்கையோடு ஒன்றி இலக்கியம் படைத்தவர்கள் சங்கத் தமிழர்கள், சங்க காலத்தில் சாதியும் இல்லை; சண்டையும் இல்லை” என்று உறுதிபட கூறிய சிலம்பொலியார், ஆண்டுதோறும் “சிலப்பதிகார மாநாடு நடத்தப்பட வேண்டும்” என்பதை தனது பெருங்கனவாகக் கொண்டிருந்தார்.

தனது ஈடு இணையற்ற புலமையாலும், அளப்பரிய தொண்டாலும் வரலாற்றில் என்றும் வாழும் கீர்த்தியைப் பெற்றுவிட்ட சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் என் மீது பொழிந்த பேரன்பை எந்நாளும் மறக்க முடியாது.

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் மறைவு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரை நேசிக்கும் தமிழ் அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 06-04-2019 தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tuesday, April 2, 2019

எம் எல் எப் ஜார்ஜ் மறைவுக்கு வைகோ கண்ணீர் அஞ்சலி!

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி மாநில இணை செயலாளர், கழக வெளியீட்டு அணி மாநிலத் துணைச்செயலாளர் எம் எல் எப் ஜார்ஜ் அவர்கள் நேற்று 01-04-2019 மறைந்ததையடுத்து இன்று 02-04-2019 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஜார்ஜ் அவர்கள் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செய்தார்.


பின்னர் ஜார்ஜ் ஜார்ஜ் என அழைத்து கண்ணீர் விட்டார். அந்த காட்சி உடனிருந்தவர்களையும் கலங்க செய்தது.

உடன் மாவட்ட செயலாளர்கள், தாயக நிர்வாகிகள், மதிமுகவினர் என ஏராளமானோர் இருந்தனர்.

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு வைகோ இரங்கல்!

தமிழ்த் திரை உலகில் யதார்த்த இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்லூரி காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர்.1978-ஆம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகம் ஆனவர்.
தொடர்ந்து உதிரி பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு மிகவும் பிடித்த இயக்குநர் என பெயர் பெற்றவர் மகேந்திரன்.
தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். திரை உலகில் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கியவர். அண்மையில் வெளிவந்த தெறி, பேட்ட, நிமிர், பூமராங் படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். வாழ்நாள் முழுவதும் எளிமையாகவே வாழ்ந்தவர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் அழைப்பின் பேரில் தமிழ் ஈழத்திற்குச் சென்று அவரைச் சந்தித்த பெருமை இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்கு உண்டு.
சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது இரங்கலை அறிக்கையாக இன்று 02-04-2019 தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க முன்னோடி எம்.எல்.எப். ஜார்ஜ் மறைவுக்கு வைகோ இரங்கல்!

திராவிட இயக்கத் தொழிற்சங்க வரலாற்றில் முழு ஈடுபாட்டுடன் தன்னை ஒப்படைத்துக்கொண்ட ஜார்ஜ் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன்.
ஜார்ஜ் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, எழுபதுகளில் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பணிகளில் முழுச்சுடன் தன்னை இணைத்துக்கொண்டவர்.
தொழிலாளர் முன்னேற்றச் சங்க தலைவராக காட்டூர் கோபால் அவர்கள் இருந்தபோது, சங்கப் பணிகளுக்கு சுருக்கெழுத்து - தட்டச்சர் தேவைப்பட்ட காலகட்டத்தில் ஆற்காடு வீராசாமி அவர்கள் மூலமாக பணியில் சேர்ந்தவர் ஜார்ஜ். காட்டூர் கோபால் அவர்கள் சங்கப் பணிகளுக்காக பல ஊர்களுக்கு பயணம் செய்யும் போது ஜார்ஜ் அவர்களை உடன் அழைத்துச்சென்று கடிதங்கள் டிக்டேசன் கொடுப்பார். அவர் சொல்லி முடித்தவுடன், அடுத்த ஊரில் காரைவிட்டு இறங்கி, சுருக்கெழுத்தில் எழுதி எடுத்து வந்ததை தட்டச்சு செய்து தயாராக வைத்திருந்து காட்டூர் கோபால் அவர்கள் வந்தவுடன் கையொப்பம் பெற்று அனைத்து துறைகளுக்கும் கடிதங்கள் அனுப்பி வைப்பார். ‘உழைப்பாளி’ பத்திரிகைகளுக்கான கட்டுரைகளையும் அவர் தட்டச்சு செய்து கொடுத்து காட்டூர் கோபால் அவர்களுக்கு செல்லப்பிள்ளையாகத் திகழ்ந்தவர். பத்மநாபன் அவர்களும், ஜார்ஜ் அவர்களும் தொ.மு.ச. பணிகளில் தங்களை முழுமையாக ஒப்படைத்து இருந்தனர்.
மிசா காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது தொழிற்சங்க அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதைக் கலைஞரிடம் தெரிவித்து, அன்பகத்திலே தொழிற்சங்கப் பணிகளைத் தொய்வின்றி செய்து வந்தார். அக்காலகட்டத்தில் கலைஞர் அவர்களுக்குக்கூட சில கடிதங்களை தட்டச்சு செய்து கொடுத்திருக்கிறார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானபோது கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அண்ணன் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி தொடங்கப்பட்டது முதல் 25 வருடங்களாக தொழிற்சங்கப் பணிகளை செவ்வனே செய்து வந்தார். நமது தொழிற்சங்கத் தலைவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் கூறுவார்.
ஜார்ஜ் சிறந்த தொழிற்சங்கவாதியாக மட்டும் அல்லாது கழக மேடைகளில் சிறப்பாக சொற்பொழிவு ஆற்றுவார். கழக பாடகர்களுடன் இணைந்து பொதுக்கூட்ட மேடைகளில் சிறப்பாக பாடல்களும் பாடுவார். அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் செயலாளராகவும் திறம்பட செயலாளற்றினார். கழக வெளியீட்டு அணி மாநிலத் துணைச்செயலாளராகவும் பணியாற்றினார். கழகத் தோழர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தானே முன்னின்று தீர்த்து வைத்து அரவணைத்துச் செல்வார். கழகம் நடத்திய அறப்போராட்டங்கள், மாநாடுகள் உள்ளிட்ட அனைத்திலும் தவறாமல் கலந்துகொள்வார். எப்பொழுதும் சிரித்த முகத்துடனேயே வரவேற்பார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் இல்லாமல் சென்னை ராஜீவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல் அறிந்து, தலைமை மருத்துவரிடம் கூறி உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் சென்ற மாதம் நடைபெற்ற பொதுக் குழுவில்கூட கலந்துகொண்டிருக்கிறார்.
தன்னலம் கருதாமல் தொழிற்சங்கப் பணிகளுக்காகவும், கழகப் பணிகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஜார்ஜ் அவர்கள் மறைவு தொழிற்சங்கத்தினருக்கு மட்டும் அல்ல, கழகத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
ஜார்ஜ் அவர்களை இழந்து துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது இரங்கலை அறிக்கையாக இன்று 02-04-2019 தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் டி.ஜி.மாதையன் மறைவுக்கு வைகோ இரங்கல்!


கிருஷ்ணகிரி மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் டி.ஜி.மாதையன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன்.

மறுமலர்ச்சி தி.மு.கழகம் தொடங்கிய காலத்திலிருந்து கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றிய டி.ஜி.மாதையன் அவர்கள் ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டத்தின் துணைச் செயலாளராகவும், பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டம் உருவானபோது மாவட்டக் கழகச் செயலாளராகவும் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றினார். அவருடைய மகள் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைக்கும் வாய்ப்பை எனக்கு அளித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கழக வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வழக்கறிஞர் டி.ஜி.மாதையன் அவர்கள் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவருடன் கழகப் பணியாற்றிய கிருஷ்ணகிரி மாவட்டத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கலை  02-04-2019 தெரிவித்துள்ளார்.

Monday, April 1, 2019

தாயகத்தின் திறவுகோல் தகர்ந்தது!

அண்ணன் எம் எல் எப் ஜார்ஜ் அவர்கள் என் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர். தாயகத்தில் அவரது இருக்கைக்கு என்னை அழைத்து சென்று உரையாடிய நாட்களும், அலைபேசியில் பாசமாக பேசிய நாட்களும் பசுமை மாறாமல் இன்றளவும் இருக்கிறது.

வாழ்நாளெல்லாம் தாயகத்திலே பிரதிபலன் எதிர்பாராமல் தாயகம் காத்தவர். பாசத்தின் பிறப்பிடமாக திகழ்ந்தவர்.

நல்ல பாடல் பாடுபவர், வேகமாக தட்டச்சு செய்பவர். தொழிலாளர் முன்னணியிலே சிறந்து விளங்கியதால் அடையாளமாக தன் பெயரிலே எம் எல் எப் என்று அடைமொழியோடு அழைக்கப்பட்டவர்.

குடும்பத்தின் மீது மிகுந்த அக்கரை கொண்டு நம்மிடமும் பேசியவர். தன் மகன் ஒரு இசையமைப்பாளர் என்று பெருமைபட்டு சொல்லியதும், தலைவர் வைகோ அவர்கள் தலைமையில் பின்னாளில் திருமணம் செய்து கொண்ட அந்த மகன் மகன் பெரிய இசையமைப்பாளர்களுக்கு கம்போஸ் செய்து கொடுத்த பிறகும், அதற்கான ஊதியங்கள் கிட்டவில்லையென்று வருந்தியும் சொன்னது நெஞ்சத்தை கனக்க செய்தது.

அண்ணன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி முகநூலில் இன்று 01-04-2019 கண்டவுடன் அதிர்ச்சியுற்றேன். அண்ணனுக்கே அழைத்தேன். ஒரு பெண்மணி குரல் தழுதழுத்தது. பாசத்தில் ஊறியவர்களாச்சே மதிமுகவினர். ஆதலால் இந்த பக்கமும் நா தழுதழுக்க இரங்கல் கூறிவிட்டு மதிமுக பக்கபலமாக இருக்கும். நான் ஓமனில் இருந்து மைக்கேல் பேசுகிறேன் என்று சொல்லி வைத்தேன்.

அண்ணனே உங்கள் பாதசுவடுகள் தாயகத்தில் பட்ட இடங்கள் உங்களை எங்களுக்கு என்னாளும் நினைவுகூறும். உங்கள் இருக்கையை காணும் போது நினைவுகள் வந்து போகும்.

அண்ணனே ஓடி உழைத்திர்கள். சற்று இளைப்பாறுங்கள்...

அண்ணன் எம் எல் எப் ஜார்ஜ் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை