Sunday, April 21, 2019

ஈஸ்டர் வைகோ வாழ்த்து!

மனிதகுல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, கொல்கதா எனப்படும கபால ஸ்தலத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. நெஞ்சைப் பிளக்கும் அந்த சோக சம்பவம்தான், இரட்சகர் இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட அவலம் ஆகும். 


அந்தகார இருள் விலகி, ஒளி வெள்ளம் பாய்வது போல் மூன்றாம் நாள் இயேசு பெருமான் உயிர்த்து எழுந்த உன்னதத்தைத்தான் ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறித்துவப் பெருமக்கள் கொண்டாடுகின்றார்கள். 

வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பவர்களுக்குத் தாங்குதல் தரக்கூடிய மன வலிமையையும், உறுதியையும் தரக்கூடிய வகையில், உயிர்த்து எழுதல் நிச்சயம் உண்டு என்பதை உணர்த்துகின்ற ஈஸ்டர் திருநாள் மலர்ந்துள்ளது. 

வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் கவலையோடும், துன்பத்தோடும் அழிவின் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கின்ற மக்களுக்கு இந்நாள் நம்பிக்கை ஊட்டுகின்றது. அச்சத்தைத் தள்ளி, எழுச்சியின் உச்சத்தை அடையும் வகையில் அமைந்துள்ளது.

‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை ஒருவனின் தாய் அவனைத் தாங்குவது போல, நான் உன்னைத் தாங்குவேன்’ என்ற உறுதியைத் தரக்கூடிய இந்நாளில், மக்கள் இடையே சமய நல்லிணக்கமும், வாழ்வில் மறுமலர்ச்சியும் ஏற்படக்கூடிய வகையில் அமைந்திட, கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஈஸ்டர் வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment