Monday, May 6, 2019

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கத்திற்கு உச்சநீதிமன்றத்தின் தடை ஜனநாயகத்தின் வெற்றி என வைகோ கருத்து!

தமிழக அரசியலில் ஆட்சியைப் பறிகொடுத்துவிடுவோம் என்ற அச்சத்தில் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக இரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்வதற்காக பேரவைத் தலைவர் அவர்கள் எடுத்த நடவடிக்கை தவறானது. அதற்குத் தடை வேண்டும் என்று உச்சநீதின்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு ரஞ்சன்கோகாய் அவர்கள் தலைமையிலான அமர்வு இடைக்காலத் தடை விதித்து இருக்கிறது.


இதை ஜனநாயகத்தின் வெற்றியாக நான் கருதுகிறேன். ஏற்கனவே நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான தாக்கீது கொடுக்கப்பட்டுவிட்டால், அதற்கு பிறகு பேரவைத் தலைவர் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

அந்த அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு தளபதி Þடாலின் அவர்கள் எடுத்த முயற்சியால், பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தாக்கீது கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்காக எடுக்கின்ற முயற்சி தோற்றுப்போகும் என்பதைத்தான் சட்ட வல்லுநர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், தீர்ப்பு வந்திருக்கிறது. சட்டப்பேரவைத் தலைவர் தான் எடுத்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, பேரவையில் எதிர்க்கட்சி கொண்டுவந்திருக்கிற நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அவர் சந்திப்பதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறையாக இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 06-05-2019 அன்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment