Friday, August 20, 2021

வைகோவுக்கு, தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் நன்றிக் கடிதம்!

தென் ஆப்பிரிக்கக் குடிஅரசின் முன்னாள் தலைவர் ஜேக்கப் ஜூமா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ஜூலை 9 ஆம் நாள் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுமையும் வன்முறைகளில் ஈடுபட்டனர். கடைகளைச் சூறையாடினர். தீ வைத்தனர். மூன்று வாரங்கள் நடைபெற்ற கலவரங்களில் தமிழர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியது.

எனவே, தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியர்கள் மற்றும் தமிழர்களுக்கு, இந்திய அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனக் கோரி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்திய அயல்உறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இந்திய அரசு தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதற்காக, தென் ஆப்பிரிக்காவின் குவாஜூலு நேடால் மற்றும் கேடாங் மாகாணத் தமிழர்கள் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர். உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம், கிளேர்வுட் தமிழ்க் கல்வியாலயம் சார்பில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதங்களில், நெருக்கடியான காலகட்டத்தில் தங்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியமைக்கு நன்றி; தற்போது, அமைதி திரும்பி விட்டது. நாங்கள் பாதுகாப்பாக உணர்கின்றோம்; இந்தியாவில் எங்களுக்கு ஆதரவுக் குரல் இருக்கின்றது என்ற நம்பிக்கை, எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
 
‘தாயகம்’                                  
சென்னை - 8                          மறுமலர்ச்சி தி.மு.க.,
18.08.2021

No comments:

Post a Comment