Friday, January 14, 2022

தன்னம்பிக்கை, தமிழ் உணர்ச்சி ஊட்டும் தைப்பொங்கல்! வைகோ MP வாழ்த்து!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு, காலம் காலமாகத் தமிழர் கொண்டாடி வரும் திருநாளாம் தைப்பொங்கல், இன்று உலகெங்கும் பல நாடுகளில் பரந்து  வாழ்கின்ற தமிழர்களால் உவகையுடன் கொண்டாடப்படுகின்றது. குழந்தைகள் துள்ளிக் குதித்து ஆனந்தப் பள்ளுப் பாட, புதுப்பானை உலையில் ஏற்றி, அதில் புத்தரிசி இட்டு, முந்திரியும் ஏலமும் மணக்க மணக்க, கன்னல் தமிழோடு, பால் பொங்கிற்றா? எனத் தமிழர்கள் ஒருவரையொருவர் உசாவி மகிழும் நன்னாள் இது.

அறிஞர் அண்ணா அவர்கள், தம்பிக்கு எழுதிய இறுதி மடலில், பொங்கல் வாழ்த்துகளைக் கூறி, ‘நலந்தானா? நலந்தானா?’ என்ற பாடலைக் குறிப்பிட்டு, ‘இன்று இந்த நாடே என்னைப் பார்த்து நலந்தானா? என்று கேட்பது போல உணர்கின்றேன்’ என எழுதி இருந்தார். பொடா சிறைவாசத்தின் போது, அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் படைப்புகள் அனைத்தையும் படித்து ஆய்வு செய்து, சங்கொலியில் தொடராக எழுதினேன். அன்று அவர் எழுதியது, இன்று என் நினைவுக்கு வருகின்றது.

ஆண்டு முழுமையும் நான் எங்கே சுற்றித் திரிந்தாலும், தைப்பொங்கல் காலத்தில், கலிங்கப்பட்டிக்குச் சென்று, ஒரு வார காலம் தங்கி இருந்து, உங்கள் அனைவரையும் சந்தித்து நலம் விசாரித்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தேன். தெருத்தெருவாக நடந்து கழகக் கொடிகளை ஏற்றுவேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பெருந்தொற்று உலகையே அச்சுறுத்துகின்றது; அதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு மேற்கொள்கின்ற முயற்சிகளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்புத் தந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். 

 ஒவ்வொருவரும், அவரவருடைய கோணத்தில் கொண்டாடி மகிழும் தமிழர் திருநாள்,  உழைக்கும் மக்களின் உன்னதத் திருநாள்; உலகெங்கும் வாழும் தமிழர்க்குப் புத்தெழுச்சியையும், மறுமலர்ச்சியையும் தந்திடும் பெருநாளாக இந்த ஆண்டும் பொங்கல் விடிந்துள்ளது.

எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை என்கின்ற உணர்வோடு கொண்டாடப்படுகின்ற, தமிழர் திருநாளாம் பொங்கல் நமக்குத் தன்னம்பிக்கைiயும், தமிழ் உணர்ச்சியையும் ஊட்டுகின்றது.

தலைநிமிர்ந்த தமிழகத்தின் தன்னிகர் அற்ற முதல்வராக உலா வரும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சி, மேலும் எழுச்சியோடு வீறுநடை போட, 2022 இல், எட்டிப் பார்க்கும் ஓமைக்ரானை விரட்டுவோம்; இனப்பகை வெல்வோம் எனச் சூளுரைப்போம்; சுழன்று பணி முடிப்போம்.
உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தைப்பொங்கல் மகிழ்ச்சியைத் தரட்டும்; தன்னம்பிக்கையுடன் பணிகளைத் தொடர்வோம்!


வைகோ  
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8 
13.01.2022

No comments:

Post a Comment