Thursday, January 27, 2022

குடியரசு நாள் விழாவுக்கு கருப்புத்துண்டு அணிந்து சென்ற புதுச்சேரி மதிமுக செயலாளருக்கு அனுமதி மறுப்பு! வைகோ MP கண்டனம்!

புதுச்சேரியில் ஜனவரி 26 அன்று நடந்த குடியரசு நாள் விழாவில் பங்கேற்க மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக புதுவை மாநில அமைப்பாளர் திரு கபேரியல், புதுச்சேரி அரசின் அழைப்பின் பேரில் சென்று இருக்கிறார். விழா நடைபெற்ற இடத்தின் நுழைவு வாயிலில் இருந்த காவல்துறையினர், கபேரியல் அணிந்திருந்த கருப்புத்துண்டை அகற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அவரை தடுத்துள்ளனர்.

கருப்புத்துண்டு என்பது திராவிட இயக்கத்தின் அடையாளம்; திராவிட இனத்தின் இன அழிவைத் துடைப்பதற்காக களத்தில் நின்று போராடிய அறிவாசான் தந்தை பெரியார் கருப்பு சட்டை அணிவதையே திராவிட இயக்கத் தொண்டர்களுக்கு பெருமிதமாக வழிகாட்டி உள்ளார். பெரியாரின் தொண்டரும், மதிமுக மாநில அமைப்பாளருமான கபேரியல், கருப்பு துண்டை அகற்ற வேண்டும் என்று புதுச்சேரி காவல்துறை அடாவடியாக கூறியபோது, “கருப்புத்துண்டு அணிந்ததால் விழாவுக்கு அனுமதிக்கவில்லை என்று எழுதி தாருங்கள்” என்று கேட்டுள்ளார். அதன் பின்னர் வாக்குவாதம் ஏற்பட்டு, போராட்டம் நடத்த அவர் முனைந்த பிறகுதான் குடியரசு நாள் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
புதுச்சேரி காவல்துறையினரின் அத்துமீறலை வன்மையாக கண்டிப்பதுடன், புதுச்சேரி அரசு எல்லை மீறி நடந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
தாயகம்
சென்னை - 8
27.01.2022

No comments:

Post a Comment