Sunday, April 30, 2023

தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்க மே நாளில் உறுதி ஏற்போம் - வைகோ MP அறிக்கை!

‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை’   வேலை செய்ய தொழிலாளர்கள்  நிர்பந்திக்கப்பட்டு பதினாறு, பதினேழு ஏன் பதினெட்டு மணிநேர வேலை என கசக்கிப் பிழியப்பட்டனர்.


1806-ம் ஆண்டிலேயே அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


குறைந்த வேலை நேரத்துக்கான போராட்டம் அமெரிக்காவில் மட்டும் நிகழவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் சுரண்டப்பட்ட எல்லா வளரும் நாடுகளிலும் இப்போராட்டங்கள் நிகழ்ந்தன.


1877இல் மிகப் பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான சாலை, ரெயில்வே, மற்றும் உருக்குத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசாங்கத்தையும் நகராட்சியையும் எதிர்த்து தீவிர போர்க்குணத்தோடு போரிட்டனர். இவர்களுக்கெதிராக ராணுவம் ஏவப்பட்டது. தொழிலாளர்கள் தொடர்ந்து போராடினர்.


1884-ல் அமெரிக்காவில் 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள்தான் மே தினம் உருவாவதற்கு நேரடியான காரணமாய் அமைந்தன.


சிகாகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் மிகத் தீவிரமாக இருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிகாகோ திகழ்ந்தது.


மே முதல் நாள் சிகாகோ, நகரத் தொழிலாளர் இயக்க ஸ்தாபனம் அழைப்பு கொடுத்ததின் பேரில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கிய மாபெரும் காட்சியைக் கண்டது. இந்த ஆர்ப்பாட்டம் முன் எப்போதுமில்லாத வகையில் மாபெரும் வர்க்க ஒற்றுமையாக விளங்கியது…


1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு மகத்தான அத்தியாயத்தை உருவாக்கியது.


1886,மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த  காவல்துறையின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் (ஹே மார்க்கெட் திடல்) ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த கூட்டம் அமைதியாக நடந்தது.  காவல்துறையினர் மீண்டும் கூடியிருந்த தொழிலாளர் மீது தாக்குதலைத் தொடுக்க, கூட்டத்தில் எறியப்பட்ட ஒரு குண்டு ராணுவ அதிகாரி ஒருவரைக் கொன்றது. இதன் விளைவாக எழுந்த மோதலில்  நான்கு தொழிலாளர்களும், ஏழு காவலர்களும் கொல்லப்பட்டனர். வைக்கோல் சந்தை சதுக்கத்தில்  ரத்த ஆறு ஓடியது.


இதனால் போர்க்குணமிக்க சிகாகோ தொழிலாளர் தலைவர்களை சிறைக்கும், தூக்கு மேடைக்கும் அனுப்பியது சிகாகோ முதலாளி வர்க்கம்.


1889-ம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மாநாடு “எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும்” தீர்மானம் நிறைவேற்றியது.


1888 டிசம்பரில் செயிண்ட் லூயிஸில் கூடிய அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு, “இத்தகைய ஆர்ப்பாட்டத்திற்கு 1890 மே முதல் நாளை ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டதால் அதே நாள் சர்வதேச அளவிலான ஆர்ப்பாட்டம் செய்யவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே அந்த குறிப்பிட நாளில் எல்லா நாட்டு தொழிலாளர்களும் அவர்களின் நாட்டு சூழ்நிலைக்கேற்ப இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று மாநாடு அறிவிக்கிறது.” என பிரகடனம் செய்தது .


இதனைத்தொடர்ந்தே ஐரோப்பா, ஜெர்மனி, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் தொழிலாளர் போராட்டங்கள் விரிவடைந்தன.


அதன் பின்னர்தான் உலகம் முழுவதும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


1923-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக மே தின விழாவை கொண்டாடியவர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலனார் ஆவார். முதல் மே தினம் கொண்டாடி நூறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.


தோழர் சிங்காரவேலனார் 1923-ம் ஆண்டு மே தின விழாவை சென்னையில் இரண்டு இடங்களில் நடத்தினார்.


சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள கடற்கரையில், வடசென்னை தொழிலாளர்கள் சார்பாக பெரும் ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தோழர் சிங்காரவேலுவும், தொழிலாளர் தலைவர் பி.நடேச முதலியாரும் பங்கேற்று பேசினர்.


தென்சென்னை தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலம் திருவல்லிக்கேணி கடற்கரையில் முடிவுற்று அங்கே பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சுப்பிரமணிய சிவா, கிருஷ்ணசாமி சர்மா, எம்.பி.எஸ்.வேலாயுதம், சங்கர்லால் ஆகியோர் பங்கேற்று பேசினர். இவ்விரு கூட்டங்களிலும் தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.


“மே1 உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் புனிதமான நாள். இந்தியாவின் தொழிலாளர்கள் அனைவரும் மே தினத்தைக் கொண்டாடி நம் ஆதரவை உலகமெங்கும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும். அதேபோல, உலகமெங்குமுள்ள துன்பப்படும் தொழிலாளர்களுக்கு பலமாக இன்னும் சில ஆண்டுகளில் மாறும் அளவுக்கு ஒரு பெருங்கூட்டமாக உருவாவதற்கான அடிக்கல்லை இன்று பதியுங்கள். அது அவர்களை நாம் எல்லாரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று உணர வைக்க வேண்டும்” என்று சிந்தனை சிற்பி சிங்காரவேலனார் ,1923, மே 1   பொதுக்கூட்டத்தில் முழங்கினார்.


தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மே தினத்தில் உறுதி ஏற்போம்.


உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

30.04.2023

Friday, April 28, 2023

கர்நாடகத்தில் தமிழ்மொழிக்கு அவமரியாதை! பா.ஜ.க. அண்ணாமலையும், ஈஸ்வரப்பாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும். வைகோ MP அறிக்கை!

கர்நாடக மாநிலம், சிவமோகாவில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில், தமிழர்களே பெரும்பாலானவர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டார்.  கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.


அப்போது, கர்நாடக மாநில பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஈஸ்வரப்பா திடீரென்று குறுக்கிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். அத்தோடு கன்னட மொழி பாடலையும் இசைக்கச் செய்யுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார்.


அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எவருக்கும் கன்னட மொழி தெரியவில்லை என்பதை அவர்களே வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்டச் சூழலில் அங்குள்ள தமிழ் மக்களிடம் தமிழ்த்தாய் வாழ்த்தை ஈஸ்வரப்பாவும், அவரது பா.ஜ.க.வும் இழிவு செய்துள்ள போக்கு வன்மையான கண்டனத்திற்கு உரியது.


இதனைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைவர்கள் உள்ளம் குமுறி அறிக்கை வெளியிட்டதை அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமாக பொறுப்பில்லாமல் உளறிக் கொட்டி அறிக்கை என்ற பெயரில் தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.


தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழி என்பது மட்டுமல்ல, உலகின் மூத்த மொழிகளில் ஒன்று, கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய திராவிட மொழிகளின் தாய் தமிழ்மொழி என்னும் வரலாறு அண்ணாமலைக்கும், ஈஸ்வரப்பாவுக்கும் அறவே தெரியாது என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது.


தமிழ்மொழியை இழிவு செய்யும் வகையிலும், தமிழர் - கன்னடர் பகையை வளர்க்கும் வகையிலும் தேச ஒற்றுமையை சிதைக்கும் வகையிலும் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட ஈஸ்வரப்பாவும், அண்ணாமலையும் பா.ஜ.க. நிர்வாகிகளும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

28.04.2023

Wednesday, April 26, 2023

கே எஸ் அழகிரி இல்ல மண விழாவில் வைகோ MP வாழ்த்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வு சென்னை திருவான்மியூர் மருதீஸ்வரர் திருமண மண்டபத்தில் 25.04.2023 நடைபெற்றது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களுக்கு திருக்குறள் புத்தகம் கொடுத்து வாழ்த்தினார்.

உடன் மாவட்டக் கழக செயலாளர்களான, கழககுமார், சைதை சுப்பிரமணி மற்றும் கழக நிர்வாகிகளும் தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பர்காஷ்சிங் பாதல் மறைவு - வைகோ MP இரங்கல்!

இந்தியாவின் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவரும், சிரோன்மணி அகாலிதள கட்சியின் தலைவருமான பர்காஷ்சிங் பாதல் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத துக்கமும், அதிர்ச்சியும் அடைந்தேன்.

முப்பது ஆண்டுகளாக அவரோடு நான் பழகியிருக்கிறேன். பஞ்சாபிலேயே அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்தவர் பாதல் அவர்கள்தான். ஒன்றரை ஆண்டுகள் கோயம்புத்தூர் சிறையில் இருந்தார்.

அவர் முதலமைச்சராக இருந்தபோது, 1998 இல் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்தாள் விழாவினை சென்னை கடற்கரையில் மாநாடாக மதிமுக நடத்தியபோது, அதில் பங்கேற்றுச் சிறப்புச் செய்தார். என் இளைய மகள் கண்ணகியின் திருமணத்திற்கு குடும்பத்துடன் வந்து பங்கேற்றார்.

நான் பஞ்சாப் சென்றிருந்தபோது, பகத்சிங் பிறந்த ஊருக்கு என்னை அழைத்துச் சென்று அடிக்கல் நாட்டு விழாவில் என்னை கலந்துகொள்ள வைத்தார்.

வாகா எல்லையில் உள்ள பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவிடத்திற்கு அழைத்துச் சென்று இலட்சக்கணக்கான சீக்கியர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் என்னைப் பாராட்டி உரையாற்ற வைத்தார்.

நட்புக்கு இலக்கணமான அவரது மறைவு பஞ்சாப் மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் பொதுவாழ்வுக்கே பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் பஞ்சாப் மக்களுக்கும், அகாலிதள தலைவர்களுக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
26.04.2023

Monday, April 24, 2023

பொது இடங்களில் மது அருந்த அனுமதியா? அரசாணையைத் திரும்பப் பெறுக! வைகோ MP அறிக்கை!

தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி வெளியிட்டிருக்கும் அரசாணையில், “திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள், மாநாட்டு அரங்கங்கள் மற்றும் வணிகம் சாரா வளாகங்களில், வீடு தொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் மது அருந்த அனுமதிக்கும் வகையில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களைப் பரிமாறலாம்.


இதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியரும், மதுவிலக்குத் துணை ஆணையர்களும் வழங்குவார்கள்.

பி.எல்-2 எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று, மதுபானங்களைத் திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம். இந்த அறிவிப்புத் தொடர்பான கட்டுப்பாடுகளில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் கண்காணிக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். முழு மதுவிலக்கு என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு பயணிக்க வேண்டும் என்று நாம் கூறி வரும் நிலையில், இதுபோன்ற அறிவிப்புகள் வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.

தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
24.04.2023

Sunday, April 23, 2023

துரை வைகோவுடன், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் சந்திப்பு!

துரை வைகோவுடன், தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் சந்திப்பு!

தமிழ் புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் நாகை திருவள்ளுவன் 19.04.2023 ( புதன் கிழமை) அன்று தலைமை அலுவலகம் தாயகத்தில் சந்தித்தார்.

அப்போது அவரது திருமண அழைப்பிதழை தந்து திருமணத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.
அப்போது விடுதலை தமிழ்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் உடன் இருந்தார்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
23.04.2023.

Saturday, April 22, 2023

உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் சட்ட முன்வரைவை திரும்பப் பெறுக! வைகோ MP அறிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றத்தில், நேற்று (ஏப்ரல் 21) தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும், தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டம் -2023 சட்ட முன்வரைவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.


நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை என வாரத்தில் 6 நாட்களுக்கு 48 மணி நேரம் பணி, ஒரு நாள் ஓய்வு என்பதுதான் நடைமுறையில் இருக்கின்றது. இதனை 12 மணி நேரமாக உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் தொழிலாளர் நலத்துறை ஏற்கனவே பரிந்துரை செய்திருக்கிறது.


ஒன்றிய அரசின் பரிந்துரையைச் செயல்படுத்தும் முயற்சியாக சட்டமன்றத்தில் 65ஏ சட்டத் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டு இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.


தற்போது கொண்டுவந்திருக்கின்ற சட்டத் திருத்த முன் வரைவு பற்றி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், “அனைத்து நிறுவனங்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது. விரும்பக் கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்” என்று அளித்துள்ள விளக்கம் பொருத்தமற்றது.


8 மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டு, தொழிற் நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கு இச்சட்டம் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளித்துவிடும்.


தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நம்முடைய தொழிலாளர்களின் வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத் தன்மை (குடநஒibடைவைல) இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.


மின்னணுவியல் துறை, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் துறை, மென்பொருள்துறை ஆகிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். ஒட்டுமொத்த பணி நேரம் வாரத்திற்கு 48 மணி நேரம் என்பது மாறாது. 4 நாட்கள் வேலை செய்துவிட்டு, 3 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்” என்று குறிப்பிட்டு இருப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது ஆகும்.


இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் அமைப்புச்சாரா உடல் உழைப்புத் தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.


தற்போது 8 மணி நேரம் வேலை என்ற சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே உற்பத்தித் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் பணியாளர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் பணிச் சூழல்தான் இருக்கிறது.


மேலும், தொழிலாளர்கள் மிகை வேலை மூலம் ஈட்டும் ஊதியமும் இச்சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுவிடும், வேலையின்மை பெரும் ஆபத்தும் இருக்கிறது.


தொழிலாளர் வர்க்கத்தை தொழில் நிறுவனங்களின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கவும் கூடாது.


பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்திரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டம் இயற்றி உள்ளன. அதே நிலை தமிழ்நாட்டிலும் உருவாவதை தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட திராவிட மாடல் அரசு அனுமதிக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது.


எனவே ஒட்டுமொத்த தொழிலாளர் நலனுக்கு எதிரான 65ஏ சட்டத் திருத்த முன்வரைவை திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

22.04.2023

Friday, April 21, 2023

ரமலான் வாழ்த்து! வைகோ!

எல்லையற்ற நிலப்பரப்பை ஆட்சி செய்தபோதிலும், ஓர் ஏழையைப் போலவே வாழ்க்கைச் சூழலை வகுத்துக் கொண்டு வாழ்ந்த அண்ணல் பெருமானார் நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை என்ற அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி நேர்மையுடனும், தூய்மையுடனும் செயல்படுவோம் என்று நானிலத்திற்கு அறிவிக்கும் நாள்தான் இந்த நாள்.


வையத்து மாந்தர் எல்லாம் மகிழ்ந்திடும் இந்த ஈகைத் திருநாள், மனிதநேயத்தின் மகத்துவத்தையும், ஈதல் இசைபட வாழ்தல் என்பதையே வாழ்வின் ஊதியம் என்ற உன்னதத்தையும் உரைத்திடும் பொன்னாள் ஆகும்.


ரமலான் என்ற பெயருக்கு ஏற்பப் புலன்களை, இச்சைப்படி சென்ற இடத்தில் செலவிடாமல், பசித்து இருந்து, தனித்து இருந்து, இறை அச்சத்துடன் விழித்து இருந்து, மறுமையை நினைத்து இருந்து, பாவங்களை எரிக்கும் பரிபக்குவம் பேணியவர்கள், அதைக் கொண்டாட ஏழை எளிய மக்களுக்கு வரியாக ‘ஜக்காத்’ என்னும் நன்கொடைகளை வாரி வழங்கும்-ஈத்துவக்கும் இன்பம் துய்க்கும் இப்பொன்னாளில் கொள்ளும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.


இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ந்து கொண்டாடி மகிழ்ந்திடும் இந்த நன்னாளில் மனித சமுதாயத்தில் அன்பு, வாய்மை, வாஞ்சை, நேர்மை, பொறுமை, திறமை, ஒற்றுமை, மனிதநேயம், சகோதரத்துவம் பெரிதும் வளர்ந்தோங்கிட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இனிய ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க.

‘தாயகம்’

சென்னை - 8

21.04.2023

Thursday, April 20, 2023

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதி வென்றே தீரும்! வைகோ அறிக்கை!

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி மீது குஜராத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், மார்ச் 23 ஆம் தேதி, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதனை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக்கிறது.
சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததும், பா.ஜ.க. அரசு அவசர அவசரமாக அவரது மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்தது. தற்போது தனது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்திருப்பதால், இதனை எதிர்த்து ராகுல்காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், அதனைத் தொடர்ந்து தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் வரை சென்று நீதிக்காக போராடவும் வாய்ப்பு இருக்கிறது.
இருந்தாலும், பாசிச பா.ஜ.க. அரசுக்கு எதிராக தொடர்ந்து மக்கள் சக்தியைத் திரட்டி வரும் ராகுல்காந்தியின் குரலை ஒடுக்குவதற்கு பா.ஜ.க. அடக்குமுறைகளை ஏவி விடுகிறது.
முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி தொடங்கிய ஒற்றுமை நடைபயணம் மக்கள் மன்றத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளால் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ராகுல்காந்திக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.
மக்களாட்சியின் மாண்புகளை புதைக்குழிக்கு அனுப்பி வரும் பாசிச பா.ஜ.க.வின் இத்தகைய செயல்கள் ஒருபோதும் வெற்றிப்பெறப் போவது இல்லை. நீதி வென்றே தீரும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
20.04.2023

சீர்காழி சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகளை கோயிலிலேயே வைத்திடுக! தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்!

சீர்காழி சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகளை கோயிலிலேயே வைத்திடுக! தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்!


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோயிலில் கடந்த 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, பூமிக்கு அடியில் இருந்து 23 செப்புத் திருமேனிகள், 412 செப்பேடுகள் மற்றும் பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. 


தருமபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ள அந்தக் கோயிலில் வரும் மே 24ஆம் தேதி குடமுழுக்கு நடக்க உள்ளது. அதற்கு யாகசாலை அமைப்பதற்காக ஏற்பாடுகள் நடந்தபோது இவை கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


இவற்றில் குறிப்பிடத்தக்கது, செப்பேடுகள் தான். சோழர்கள் காலத்தைச் சேர்ந்த அந்தச் செப்பேடுகளில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்ற அப்பர் சுவாமிகள் ஆகியோரின் தேவாரப் பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 


தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறையில் இருந்து உரிய அதிகாரிகள் வந்து இந்தச் செப்பேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். 


திருஞானசம்பந்தர், தனது பாடல்களில் தன்னைத் ‘தமிழ் ஞான சம்பந்தன்’ என்றே குறிப்பிட்டுக் கொள்கிறார்,  தமிழகத்தில் அவரைப் போல வேறு எவரும் அப்படி மொழியோடு சேர்த்து தன் பெயரைக் குறிப்பிட்டதாக வரலாறு இல்லை. அதேபோல், ‘தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்’ என்று திருநாவுக்கரசரும் தம் முதல் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.


இப்படித் தமிழுக்காக வாழ்ந்தவர்களின் பாடல்கள் பொறிக்கப்பட்ட செப்பேடுகள் 750 ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்து நம் காலத்தில் வெளிப்பட்டது, உண்மையில் வரலாற்றுச் சம்பவம் ஆகும்.


இந்த வரலாற்று ஆதாரமான செப்பேடுகள், சீர்காழி சட்டநாதர் கோயிலிலேயே வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு ஓர் சிறப்பு அறை கட்டப்பட்டு அதில் இந்த செப்பேடுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட வேண்டும். 


இதன் மூலம் மக்களிடையே தமிழ் மொழி பற்றிய பெருமித உணர்வு வளர்ந்து ஓங்கும். சோழர்கள் வரலாறு பற்றிய விழிப்புணர்வு மேலும் பரவும். இந்த மண்ணில் தமிழை எப்படி எல்லாம் மன்னர்கள் வளர்த்துள்ளனர் என்பது தெரிய வரும்.  


குடமுழுக்கிற்குப் பின்னர் கோயிலிலேயே அருங்காட்சியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தருமையாதீனத்தின் குருமகா சந்நிதானம் ஏற்கனவே அறிவித்துள்ளார். ‘சைவமும் தமிழும் தழைத்து இனிது ஓங்குக’ என்பதுதான் அந்த ஆதீனத்தின் முழக்கம். தமிழ் வளர்ப்பதில் அந்த ஆதீனம் காட்டி வரும் அக்கறை போற்றுதலுக்குரியது. 


சீர்காழி சட்டநாதர் கோயிலில் அருங்காட்சியகம் அமைத்திட,  தளபதி தலைமையிலான நம் தமிழக அரசு ஆதீனத்திற்கு அனுமதி அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க

சென்னை - 8

‘தாயகம்’

20.04.2023

Tuesday, April 18, 2023

தொழிலாளர் நலன் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக! வைகோ MP வேண்டுகோள்!

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அரசு உருவாக்கித் தந்த தொழிலாளர் தொழில் வாரியான அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியங்களைப் பாதுகாத்து, மாநில தொழிலாளர் சட்டங்களான தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சட்டம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் நலச் சட்டம், தமிழ்நாடு மீன் தொழிலாளர் நல சட்டம் ஆகியவைகளைப் பாதுகாக்கும் வகையில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழ்நாடு அமைப்புச் சாரா தொழிலாளர் கூட்டமைப்பு (ருnடிசபயnளைநன றுடிசமநசள றுடிசமநசள குநனநசயவiடிn) நீண்ட காலமாக அறவழியில் போராடி வருகிறது.
பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு, தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல், கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றியுள்ள அநீதிகளுக்கு எதிராகவும், அமைப்புச் சாரா தொழிலாளர் கூட்டமைப்பு தொடர்ந்து போர்க்குரல் எழுப்பி வருகிறது.
நீதியரசர் கிருஷ்ணய்யர் தலைமையில் கட்டட தேசிய தொழிலாளர் சங்கம் போராடிப் பெற்ற இரண்டு தொழிலாளர் நலச் சட்டங்களையும் ஒன்றிய அரசு ரத்து செய்துவிட்டதைக் கண்டித்தும் இந்தக் கூட்டமைப்பு போராடி வருகிறது.
ஒன்றிய அரசின் தொழிலாளர் நல 44 சட்டங்களை ரத்து செய்து, கொண்டுவரப்பட்ட 4 தொகுப்புச் சட்டங்களையும் புறக்கணித்து, கலைஞர் அரசு நிறைவேற்றிய 36 நலவாரியங்களையும் பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்படுத்த வேண்டும் என்ற இந்தக் கூட்டமைப்பின் வேண்டுகோளை மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஆதரிக்கிறது.
இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்ந்து, திராவிட மாடல் ஆட்சியை மிகச் சிறப்புடன் நடத்தி வரும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழக அரசு, தொழிலாளர் கூட்டமைப்பின் நியாயமான இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
17.04.2023

Sunday, April 16, 2023

மதிமுக மாணவர் அணி செயலாளர் பால.சசிகுமார் திருமணத்தை நடத்தில் வைத்து வைகோ MP வாழ்த்து!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாணவர் அணி செயலாளர் பால.சசிகுமார் - பா. திவ்யா ஆகியோரது திருமணம் 16-04-2023 கரூர் மாவட்ட குளித்தலையில் நடந்தது. திருமணத்தை மதிமுக பொதுச் செயலாளார் வைகோ அவர்கள் சிறப்புடன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

தலைமை கழக செயலாளர் தலைமையில் இந்த திருமணம் நடந்தேறியது.

இந்நிகழ்வில் துணை பொது செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட, மாநில நிர்வாகிகள், கழக கண்மணிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Saturday, April 15, 2023

செண்பகவல்லி அம்மன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார் துரை வைகோ!

கோவில்பட்டி நகரம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான தொழில் நகரமாகும்.இந்த நகரில் இருக்கும் அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவநாத சாமி திருக்கோவில் மிகப் பழமையானது. செண்பக மன்னனால் கட்டப்பட்டதால், இக்கோவிலின் அம்மனுக்கு செண்பகவல்லி அம்மன் என்ற பெயர் வந்திருக்கிறது.
இக்கோவிலின் முக்கிய திருவிழாவான பங்குனி திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 13 ம் தேதி அன்று நடந்தது.
கடந்த ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தேரோட்ட நிகழ்வில் நான் கலந்து கொண்டு,திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து,தேரோட்ட நிகழ்வை தொடங்கி வைக்க வேண்டும் என கோவில்பட்டி நகரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும்,நம் கழகத் தோழர்களும் வேண்டுகோள் வைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று தேரோட்ட நிகழ்வில் பங்கு கொள்வதற்காக ஏப்ரல் 13 ம் தேதி காலை கோவில்பட்டி நகருக்கு வந்தேன்.வழி நெடுக நம் கழகத் தோழர்கள் மிக உற்சாகமான வரவேற்பைத் தந்தனர்.
தேரோட்ட நிகழ்வில் நான் பங்கு கொள்ள வரும் தகவலைக் கேள்விப்பட்டு, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான நம் இயக்கத் தோழர்களும், பொது மக்களும், இளைஞர்களும் வந்திருந்தனர்.அவர்களது அன்பான வரவேற்பின் வழியாக கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று கோவிலை அடைந்தேன்.
செண்பகவல்லி அம்மன் சாமி தரிசனம் முடிந்து தேரோட்ட நிகழ்வில் பங்கு கொள்வதற்காக,மிக நன்றாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருத் தேர் இருந்த தேரடிக்குச் சென்றேன். தேரோட்டம் துவங்க சற்று தாமதம் ஆவது போல தெரிந்தது. உடனே என்னுடன் அருகிலிருந்த நம் இயக்கத் தோழர்களும், கோவில்பட்டி நகரின் முக்கிய பிரமுகர்களும், என்னிடம் வந்து,
"தேரோட்ட நிகழ்வு தொடங்க இன்னும் சற்று நேரமாகும் போல தெரிகிறது. வெயில் வேறு கடுமையாக இருக்கிறது. அதனால் நிகழ்வு தொடங்கும் வரையில், நீங்கள் கோவிலின் உள்ளே நிழலில் அமர்ந்திருக்கலாமே" என்றனர்.
அந்த வேண்டுகோளை நான் உடனே மறுத்து,
"கடவுள் முன் அனைவரும் சமம். இந்த தேரோட்ட நிகழ்வில் பங்கு கொள்வதற்காக இத்தனை ஆயிரம் மக்கள், பெண்கள், குழந்தைகள் இந்த வெயிலில் காத்திருக்கிறார்கள். அவர்களைப் போல நானும் ஒருவன்.அவ்வளவு தான். அதோடு இந்த வெயிலில் நின்று என்னை நானே வருத்திக் கொள்வதை இந்த செண்பகவல்லி அம்மனுக்கு தரும் காணிக்கையாக நான் கருதுகிறேன். அதனால் நிகழ்வு தொடங்கும் வரையில் நான் இப்படி வெயிலில் நிற்பதையும் பக்தியாகவே நான் உணர்கிறேன்" என்றேன்.
அதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து தேரோட்ட நிகழ்வு தொடங்கியது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் பலத்த ஆரவாரத்துடன், பக்திப் பெருக்கில்,தேரின் வடம் பிடித்து கிட்டத்தட்ட முப்பது அடிகள் வரையில் தேரை இழுத்தேன்.
அதன் பின் அடுத்தடுத்த பணிகள் காத்திருந்ததால், அருள்மிகு செண்பகவல்லி அம்மனிடமும்,திருத் தேரோட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுத்த கோவில்பட்டி நகரின் முக்கிய பிரமுகர்களிடமும், நம் இயக்கத் தோழர்களிடமும், மக்களிடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டேன்.
பொதுமக்களோடு மக்களாக நின்று தேரோட்ட நிகழ்வில் பங்கு கொண்டது மனதிற்கு உற்சாகமாக இருந்தது.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
15.04.2023

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் வைகோ மரியாதை!

ஏப்ரல் 14 சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்கள் கழக நிர்வாகிகளுடன் சென்று மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Wednesday, April 12, 2023

ஆளுநரை கண்டித்து போராட்டம்-வைகோ MP பங்கேற்று கண்டன உரை!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் 12.04.2023 அன்று சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் ஐயா வைகோ அவர்கள் கண்டன உரை ஆற்றினார்கள்.

கூட்டணி கட்சித் தலைவர்களும் உரையாற்றினார்கள். உடன் மாவட்ட கழக செயலாளர்களும் தலைமை கழக நிர்வாகிகளும் கழக முன்னணியினரும் திரளாக கலந்து கொண்டார்கள்.