Wednesday, April 5, 2023

காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்!வைகோ MP கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் காவிரிப் படுகை மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசின் சுரங்கத்துறை (Ministry of Mines) மார்ச் 29, 2023 அன்று ஏல அறிவிப்பு வெளியிட்டு, ஏலம் கேட்க கடைசி நாள் மே 30, 2023 என்றும், இதில் நிலக்கரி மற்றும் மீத்தேன் எடுக்க தனியார் நிறுவனங்கள் ஏலம் கேட்கலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா முழுவதும் 101 வட்டாரங்களில் பூமிக்கு அடியிலிருந்து நிலக்கரி அல்லது நிலக்கரி படுகை மீத்தேன் அல்லது நிலத்தடி நிலக்கரியை வாயுவாக மாற்றி எடுக்கும் (Under Ground Coal Gaszification -UCG) திட்டமும் ஒன்றிய அரசின் சுரங்கத் துறைவெளியிட்டுள்ள ஏல அறிவிப்பில் அடங்கும்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் - வடசேரி, அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் - கீழ் மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில்  நிலக்கரி எடுப்பதற்கு சுரங்கத்துறை ஏல அறிவிப்பு செய்திருக்கிறது.

இதில் வடசேரி வட்டாரத்தில் 68.30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 11 ஊர்களும், சேத்தியாதோப்பு பகுதியில் 84.41 சதுர கி.மீ. பரப்பளவில் புவனகிரி வட்டத்தில் உள்ள 21 ஊர்களும், மைக்கேல்பட்டி பகுதியில் 14.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 4 ஊர்களும் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பில் அடங்கியுள்ளன.

மேற்கண்ட வட்டாரங்களில் சுமர் 1.25 இலட்சம் ஏக்கர் சாகுபடி நிலங்கள் ஒன்றிய அரசின் சுரங்கத் துறையால் கையகப்படுத்தப்படும் நிலை உருவாகி உள்ளது.

ஒன்றிய அரசின் சுரங்கத்துறை சார்பில், எம்.இ.சி.எல். நிறுவனம் (Exploration and Consultancy Ltd - MECL) வடசேரி பழுப்பு நிலக்கரி வட்டாரம் (Vadaseri Lignite Block) எனப் பெயரிட்டு, அப்பகுதியில் நிலக்கரி திட்டத்திற்காக 66 ஆழ்துளைக் கிணறுகளும், உடையார்பாளையம் வட்டம் - மைக்கேல்பட்டி நிலக்கரி வட்டாரத்தில் இத்திட்டத்திற்காக 19 ஆழ்துளை கிணறுகளும் அமைத்து ஆய்வு நடத்தி இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் எவ்வித அனுமதியும் பெறாமல் எம்.இ.சி.எல். நிறுவனம் மூலம், ஆய்வு மேற்கொண்டு நிலக்கரி இருப்பை மதிப்பீடு செய்து, தற்போது நிலக்கரி எடுக்க ஏல அறிவிப்பும் வெளியிட்டு இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

எம்.இ.சி.எல். நிறுவனம், ஆழ்துளை கிணறுகள் மூலம் நடத்திய ஆய்வுகளில் காவிரி படுகைகளில் வடசேரி பகுதியில் மட்டும் பூமிக்கடியில் சுமார் 463 அடியிலிருந்து 740 அடி வரையிலான ஆழத்தில் சுமார் 755 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி படிமங்கள் இருப்பதாக ஒன்றிய அரசின் சுரங்கத்துறை கண்டறிந்துள்ளது.

காவிரி படுகை மாவட்டங்களில் நெல் விளையும் பொன் பூமியை நாசமாக்கி, நிலக்கரி சுரங்கம் அமைத்து, பாலைவனப் பகுதியாக மாற்ற முனையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது.

காவிரி பாசனப் பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களை சொந்த வாழ்விடங்களிலிருந்து துரத்தி அடித்து, ஏதிலிகளாக்கி, தரகு முதலாளிகளுக்கு எங்கள் மண்ணை பட்டா போட்டுக் கொடுக்க முயற்சிக்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான போராட்டங்கள் எரிமலையாக வெடிக்கும் என எச்சரிக்கை செய்கிறேன்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி படுகை மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மோடி அரசு ஏலம் விடுவதும், மாநில அரசுடன் கலந்தாய்வு செய்யாமல் ஏகாதிபத்திய பேரரசு மனப்பான்மையுடன் தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலங்களைப் பறிக்க முயற்சிப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.

2011 ஆம் ஆண்டு காவிரிப் படுகை பகுதிகளில் மீத்தேன் திட்டத்திற்காக ஆய்வு அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டபோது, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் விவசாயிகள் போராடினார்கள்.

காவிரி டெல்டாவைப் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக மாநிலத்தின் திட்டத்தைத் தடுக்கக் கோரியும் 2014 ஆம் ஆண்டு நவம்பரில் இரயில் மறியல் போட்டமும், அதைதத் தொடர்ந்து 2014 ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் 2015 ஜனவரி மாதம் வரை ஒன்றரை மாதகாலம் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நான் மக்களிடையே விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டேன்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றிய அரசு அலுவலங்கள் முற்றுகைப் போராட்டமும், மனிதச் சங்கிலிப் போராட்டமும் காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டன.

மீண்டும் காவிரி படுகை மக்கள் போராட்டக் களத்துக்குத் தயாராக இருக்கிறார்கள். எனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் காவிரிப் பாசனப் பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ஏல அறிவிப்பையும் திரும்பப் பெற வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
05.04.2023

No comments:

Post a Comment