Tuesday, October 31, 2017

கோவில்பட்டியில் விவசாயப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மதிமுக ஆர்ப்பாட்டம்!

கோவில்பட்டியில் விவசாயப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மதிமுக ஆர்ப்பாட்டம்!

மானாவாரி விவசாயப் பயிர்களுக்கு பயிர் காப்பீடு நிவாரணத் தொகை வழங்கிட வலியுறுத்தி மதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று 31-10-2017 நடந்தது.

இதில் காப்பீடு கேட்டு வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது மக்களிடம் நிவாரணம் கிடைத்ததா என செய்தியாளர்களுக்கு முன்பாக கேட்டார். அதற்கு மக்கள் நிவாரணம் கிடைக்கவில்லை என்றார்கள் ஒரே குரலாக. இந்த சத்தமாவது பிரதமர் காதுக்கு எட்ட வேண்டும் என முழங்கினார் வைகோ.

இதில் தென் மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்













Monday, October 30, 2017

முத்துராமலிங்கதேவர் சிலைக்கு வைகோ மலர் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் 110 வது ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் திருவுருவச் சிலைக்கு, இன்று 30-10-2017 காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்

கோவில்பட்டியில் முகேஷ்_வீரலட்சுமி திருமணத்தில் வைகோ வாழ்த்து!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், கோவில்பட்டியில் கோபாலகிருஷ்ணன்(எ) முகேஷ்_வீரலட்சுமி ஆகியோர் திருமணத்தை இன்று 30-10-2017 காலையில் நடத்தி வைத்து வாழ்த்தினார்.

உடன் கழக முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்

மேலாண்மை பொன்னுசாமி மறைவுக்கு வைகோ இரங்கல்!

சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன்.


எனது பக்கத்து கிராமமான மேலாண்மறைநாட்டில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்; ஒரு சிறிய மளிகைக் கடையை நடத்தி, எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.

தொடக்கப்பள்ளிக்கு மேல் படிக்க வழி இல்லை என்றாலும், தானாகவே வாசிக்கத் தொடங்கி, இலக்கியத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டு, கதை, கவிதைகளை எழுதத் தொடங்கினார்.

தென் மாவட்டங்களில் உழைக்கும் மக்களின் வாழ்க்கையைத் தனது எழுத்துகளில் பதிவு செய்தார். கிராமத்து மனிதர்களின் மனப்போக்கு, சாதி மதத்திற்கு எதிரான முற்போக்குக் கருத்துகளைப் பதிவு செய்தார். தென் மாவட்ட இலக்கியத்தில் இவரது வழி தனிவழி.

இன்று போல தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத அந்த நாள்களிலேயே, நிறைய சிற்றிதழ்களில் எழுதினார். பொது உடைமை இயக்க ஏடுகள் தவிர, பொதுவான இதழ்களிலும் இவரது படைப்புகள் வெளியாகின. விகடனில் வெளிவந்த முத்திரைக் கவிதைகளில் தொடர்ச்சியாக எழுதி முத்திரை பதித்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தொடங்கி, பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்துப் பெருமை சேர்த்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்துப் பாராட்டி வளர்த்தார்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி எழுதி வந்ததால், முதுமையிலும் தளராது இயங்கி வந்ததால், ‘மின்சாரப் பூ’ என்ற படைப்பிற்காக சாகித்ய அகடமி விருது இவரைத் தேடி வந்தது. 

எனக்கு நீண்டகால நண்பர். கலிங்கப்பட்டியில் நான் நடத்திய இலக்கிய விழாக்களுக்கு சைக்கிளிலேயே வந்து போவார். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நான் போட்டியிட்டபோது, எனது வேட்புமனுவில் ஆதவுக் கையெழுத்து இட்டதுடன், எனக்காகப் பிரச்சாரமும் செய்தார்.

அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு இழப்பு. அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தார்க்கும், உற்றார் உறவினர்கள், இலக்கிய நண்பர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்

Saturday, October 28, 2017

பொதுப் பங்கீட்டுக் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு! வைகோ கண்டனம்!

தமிழக அரசின் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலை 13 ரூபாய் 50 காசுகள் என்பதை 25 ரூபாயாக உயர்த்தி இருப்பது ஏற்க முடியாதது, கண்டிக்கத்தக்கது ஆகும். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பழைய விலையில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் கண்துடைப்பு ஆகும். தமிழகத்தில் மொத்தம் உள்ள 1 கோடியே 98 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களில், வெறும் 18.64 இலட்சம் பேர்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளார்கள் என்று தமிழக அரசு வரையறுத்துள்ளது.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகம் நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்த பின்னர், மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளை அடையாளம் காணவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதால், 18.64 இலட்சம் பேர்தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளார்கள் என்றும், அவர்களுக்கு மட்டுமே மானிய விலையில் அரிசி மற்றும் சர்க்கரை விநியோகிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் உத்தரவை ஏற்று தமிழக அரசு இந்நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

2017 பிப்ரவரி மாதம் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி நிதிநிலை அறிக்ககை தாக்கல் செய்தபோது, சர்க்கரை மானியம் ரத்து என்று அறிவித்தார். பொது விநியோகத்திட்டத்திற்கான மானியத்தை படிப்படியாக இரத்து செய்து, அத்திட்டத்தையே முழுமையாக முடக்குவதற்கான முயற்சியில் மோடி அரசு தீவிரமாக இருக்கிறது. ஏனெனில் உலக வர்த்தக ஒப்பந்தப்படி உணவு தானிய சந்தையை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கு தடையாக உள்ள பொது விநியோக முறையை கைவிட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கமாகும். அதற்கு முன்னோட்டமாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், “முன்னுரிமை குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு, பங்கீட்டுக் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும். ஆண்டு வருவாய் ஒரு இலட்சம் ரூபாய் உள்ளவர்களுக்கு இனி பங்கீட்டுக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் நிறுத்தப்படும்” என்று கூறி இருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தபோதும் தமிழக அரசு திரும்பப் பெறவில்லை.

உணவு மானியத்திற்கான கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்கும் என்று வெற்று அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது சர்க்கரை விலையும் இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

உணவு மானியத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற உலக வங்கியின் உத்தரவை செயல்படுத்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை ஒதுக்கீட்டில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. விலைவாசி ஏற்றம், ஜி.எÞ.டி. வரி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாறுதல் போன்றவற்றால் மாத ஊதியம் பெறுவோர், நடுத்தர குடும்பத்தினர் கடும் சுமைகளை தாங்க முடியாமல் தவிக்கின்றனர். சாதாரண அடித்தட்டு மக்கள் வாழவே முடியாத நிலை உருவாகி வருகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பொதுவிநியோகத் திட்டத்திற்கு ஒரேயடியாக மூடுவிழா நடத்த முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு அடிபணிந்து வரும் தமிழக அரசு, உடனடியாக சர்க்கரை விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

என வைகோ தனது அறிக்கையில் இன்று 28-10-2017 தெரிவித்துள்ளார்.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஒமன்

Friday, October 27, 2017

திருமங்கலம் நகரசெயலாளர் புதல்வன் திரும்ணத்தில் வைகோ!

மதுரை புற நகர் மாவட்டம், திருமங்கலம் நகர செயலாளர் "அனிதா" பால்ராஜ் அவர்களின் புதல்வர் திருமணத்தை தலைவர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து,மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்குகினார்.

இதில் எராளமான கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்

Thursday, October 26, 2017

மும்பையில் சரத்பவாருடன் வைகோ சந்திப்பு!

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அவர்களை, இன்று காலை (26.10.2017) மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்பு  அரை மணி நேரம் நடந்தது.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்

Wednesday, October 25, 2017

என்.எல்.சி. நிறுவன பங்குகள் விற்பனை! வைகோ கண்டனம்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ‘நவரத்னா’ தகுதியைப் பெற்று சிறப்பாக இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனம், தமிழகத்திற்கும், தென் மாநிலங்களுக்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து குறைந்த விலையில் வழங்கி, மிகப்பெரிய வளர்ச்சி பெற்று, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறது.

1956 இல் என்.எல்.சி. நிறுவனம் நிறுவப்பட்டதில் இருந்து வரலாறு காணாத அளவுக்கு கடந்த 2016-2017 நிதி ஆண்டில் ரூ.2342.9 கோடி லாபம் ஈட்டியுள்ளது. நிலக்கரி வெட்டி எடுத்தல், அனல்மின் உற்பத்தி போன்றவற்றில் 14.4 விழுக்ககாடு வளர்ச்சி பெற்று இருக்கிறது. மின் உற்பத்தியில் சிறப்பான இடம் வகிக்கும் என்.எல்.சி. நிறுவனத்தின் அனல் மின்சார உற்பத்தித் திறன் 4240 மெகாவாட் ஆகும். மரபு சாரா எரிசக்தித்துறையிலும் சாதனை நிகழ்த்தும் வகையில் சூரிய ஒளி மின்உற்பத்தி 10 மெகாவாட், காற்றாலை மின் உற்பத்தி 51 மெகாவாட்என்.எல்.சி. மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக மொத்தம் 4301 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் படைத்துள்ள என்.எல்.சி. 2025 ஆம் ஆண்டில் 20971 மெகாவாட் மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்து தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களிலும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

இத்தகைய சிறப்புடன் தன்னிகரற்று விளங்கும் பொதுத்துறையான என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை 15 விழுக்காடு விற்பனை செய்வதற்கு நரேந்திர மோடி அரசு முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

முதற்கட்டாமக 5 விழுக்காடு பங்குகளை இன்று அக்டோபர் 25 முதல் விற்பனை செய்யவும், அதன் மூலம் 800 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் 72 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்றும், கடந்த ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி திரட்டப்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று பெருமையுடன் கூறி இருக்கிறார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பொதுத்துறை நிறுவனங்களை சூறையாடி, தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு மோடி அரசு துடித்துக்கொண்டு இருக்கிறது. ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்டப் இந்தியா’ என்று தொழில் தொடங்குவதற்கு பன்னாட்டு நிறுவனங்களை கூவிக் கூவி அழைக்கும் மோடி அரசு, சாதனை படைத்து வருகின்ற என்.எல்.சி., பெல், என்.டி.பி.சி., என்.எச்.பி.சி. போன்ற பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது எதற்காக? லாபம் ஈட்டி வரும் பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டுவது ஏன்?

என்.எல்.சி. நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை வாஜ்பாய் அரசு 2002 ஆம் ஆண்டு விற்பனை செய்ய முடிவு எடுத்தபோது, 2002 மார்ச் 19 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, என்.எல்.சி. பங்குகள் விற்பனைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தேன். அப்போது நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவாக என்.எல்.சி. தனியார் மயமாக்கலை எதிர்த்தார்கள். பின்னர் பிரதமர் வாஜ்பாய் அவர்களை நேரில் சந்தித்து என்.எல்.சி. தனியார் மயமாக்கல் திட்டத்தைக் கைவிட வற்புறுத்தினேன். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த திரு வாஜ்பாய், மத்திய அரசின் கொள்கை முடிவையே மாற்றி, என்.எல்.சி. தனியார் மயமாகாது என்று அறிவிப்பு செய்தார்.

திரு வாஜ்பாய் அவர்களையே மறந்துவிட்ட மோடி அரசு, வாஜ்பாய் அரசின் கொள்கையையா பின்பற்றப் போகிறது? என்.எல்.சி. இந்தியா பங்குகள் விற்பனை செய்யும் திட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறவேண்டும். இல்லையேல் ஒட்டுமொத்த தமிழகமே ஓரணியில் நின்று போராட்டக் களத்தில் இறங்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளார்.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்

Tuesday, October 24, 2017

இசக்கிமுத்துவின் மனைவி மக்களை சொந்த ஊரில் அடக்கம் விடாமல் தடுத்த காவல்துறை!

கந்துவட்டி கொடுமையால் நெல்லையை சேர்ந்த இசக்கி முத்து என்பவர் நேற்று 23-10-2017 நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தீக்குளித்தார்.

இசக்கிமுத்து சிகிச்சை எடுத்துவரும் நிலையில், அவரின் இறந்து போன மனைவி, மக்களை சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்கு இசக்கிமுத்துவின் தந்தை, தம்பிகள் ஏற்பாடு செய்யும் வேளையில், காவல்துறை வந்து மிரட்டி பணிய வைத்து, சொந்த ஊரில் அடக்க விடாமல் தடுத்து, அதற்கு பதிலாக இறந்த சடலங்களை நெல்லை மாநகர் மின் மயானத்தில் தகனம் செய்ய தூக்கிச் சென்ற கொடுமை நடந்துள்ளது.

உடனே இதனைக் கண்டித்து பிணவறை முன்பு இசக்கி முத்துவின் தாயார் 20 பெண் களுடன் பெரும் குரல் எடுத்து அழுது கொண்டே இருந்தார்.

இதனால், மதிமுக, CPM, விடுதலைச் சிறுத்தைகள், SDPI உள்ளிட்ட அமைப்பினர் கொந்தளித்து எழுந்து, நெல்லை மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும்,  வன்மையான கண்டனங்களையும் கோசங்களாக எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்

மதிமுக மாணவரணி இளமுருகு தந்தை இறப்புக்கு வைகோ ஆறுதல்!

மதிமுக மாணவரணியைச் சேர்ந்த திருப்பத்தூர் இளமுருகு அவர்களின் தந்தையார் சில வாரங்களுக்கு முன் மறைந்தார். இதயறிந்து இன்று 24-10-2017 அவரது இல்லம் சென்று இளமுருகு தந்தையார் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இளமுருகு அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார். உடன் கழக முன்னணி தலைவர்கள் இருந்தார்கள்.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்.

மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய வைகோ!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இன்று 24-10-2017 அன்று மருது சகோதரர்களுக்கு வீர வணக்கம் செலுத்திவிட்டு, அங்கு உள்ள வருகையாளர் பதிவேட்டில் தன் கருத்துக்களை பதிவு செய்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. உடன் நிர்வாகிகள் இருந்தனர்.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்

Monday, October 23, 2017

திருநெல்வேலியில் குடும்பமே தீக்குளிப்பு; கந்துவட்டிச் சட்டத்தைக் கைவிட்ட காவல்துறை! வைகோ கண்டனம்!

திருநெல்வேலி மாவட்டம். கடையநல்லூருக்கு அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளி இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலெட்சுமி ஆகியோர், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்குக்கு முன்பு, மண் எண்ணெயைத் தங்கள் உடலில் ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டதுடன், தங்களுடைய புதல்வியர் ஐந்து வயது மதி சரண்யா, ஒன்றரை வயது அட்சய பரணியா ஆகியோர் மீதும் மண் எண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளனர்.

80 சதவீதத்திற்கு மேல் கருகிய நிலையில், இனி அவர்கள் பிழைக்க வாய்ப்பு இல்லை என்ற செய்தி, தாங்க முடியாத அதிர்ச்சியையும், வேதனையையும் தருகின்றது. தங்கள் இரு பெண் குழந்தைகள் மீதும் மண் எண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார்கள் என்பதை நினைப்பதற்கே நெஞ்சம் நடுங்குகின்றது.

இசக்கிமுத்து, அதே ஊரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரிடம், 1,45,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கின்றார். அதற்கு மாதம் 39000 ரூபாய் வட்டி செலுத்தி வந்துள்ளார். இப்படி ஆறு மாதங்களில் 2,34,000 ரூபாய் செலுத்தி உள்ளார். அசலை விட மேலும் அதிகமாக 89000 ரூபாய் கட்டிய நிலையில், மேற்கொண்டு பணம் கட்ட முடியாத நிலையில் அவதிப்பட்டபோது, கந்து வட்டிக்காரர் பணம் கேட்டு மிரட்டி வந்ததால், அச்சன்புதூர் காவல்நிலையத்தில் இசக்கிமுத்து புகார் செய்துள்ளார்.

ஆனால், அந்தக் காவல் நிலையம், கந்து வட்டிக்காரருக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளது. வேறு வழி இன்றி, இசக்கிமுத்து மாவட்ட ஆட்சியரிடமும் இதுகுறித்துப் புகார் கொடுத்துள்ளார்.

எந்தப் பயனும் இல்லை:

சுயமரியாதையோடு வாழத் துடித்த இசக்கிமுத்து, இனி வேறு வழி இல்லை என்ற நிலையில் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் நாள், தமிழகத்தில் கந்துவட்டித் தடைச்சட்டம் அறிமுகம் ஆனது. தொடக்கத்தில் சில மாதங்கள் கந்து வட்டிக்காரர்களின் கொடுமை அடங்கியது போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால் அதன்பின்னர், இந்தச் சட்டத்தைக் காவல்துறை கைவிட்டு விட்டது. பயன்படுத்துவதே இல்லை.

ஒருசில காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்துக் கூடங்களாக ஆகி, புகார் கொடுத்தவர் மீதே வழக்குப்போட்டு அச்சுறுத்துகின்றது. இத்தகைய போக்கு, தமிழகக் காவல்துறைக்கே பெரும் களங்கம் ஆகும். அதனால், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வட்டி கேட்டுக் கந்து வட்டிக்காரர்கள் மிரட்டுவது தமிழகத்தில் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டன.

இந்தச் சம்பவத்தால், தமிழகம் மாவட்டம் முழுமையும் நிலவும் கந்துவட்டிக் கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க முடியாமல், புகார் கொடுத்தாலும் காவல்துறை அவர்களையே மிரட்டுவதாலும், ஏராளமான குடும்பங்கள் இந்தப் பிரச்சினையில் சிக்கிப் பரிதவித்துக் கொண்டு இருக்கின்றன.

தங்கள் உடலை நெருப்புப் பற்றி எரித்தபோது, கணவனும், மனைவியும், தாங்கள் ஆசையோடு பெற்று வளர்த்த இரண்டு பெண் குழந்தைகள் நெருப்பிலே கருகுவதைக் கண்டு எப்படித் துடித்து இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்தக் கோரச் சம்பவத்திற்குக் காரணமான கந்து வட்டிக்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய அச்சன்புதூர் காவல்துறையினரை உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்; அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கொடுமையைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் மீது, அரசு விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நால்வரின் உயிரையும் காப்பதற்கு அரசு மருத்துவர்கள் பெருமுயற்சி செய்து வருகின்றார்கள். அந்த முயற்சிகள் பலன் அளித்து, அவர்களது உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்றேன்.

இந்தக் கொடுமைக்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கின்ற வகையில், உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு தமிழக அரசு நீதி விசாரணை நடத்த வேண்டும். கந்துவட்டிக் கொடுமையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 23-10-2017 தெரிவித்துள்ளார்.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்

Sunday, October 22, 2017

சீத்தாராம் யெச்சூரியை சந்தித்தார் வைகோ!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை இன்று 22-10-2017 சென்னையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்

கலிங்கப்பட்டி ஜெயபிரகாஷ் மறைவுக்கு வைகோ அஞ்சலி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் கலிங்கப்பட்டி இல்லத்தின் காவல் அரணாக விளங்கிய  ஜெயபிரகாஷ் அவர்கள் நேற்று 21-10-2017 இயற்கை எய்தினார். இதையறிந்த வைகோ அவர்கள் உடனடியாக கலிங்கப்பட்டி வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

வைகோ அவர்களை காண செல்லும் அனைவருக்கும் கலிங்கப்பட்டி இல்லத்தில் உணவுப் பரிமாரி நமது பசியைப் போக்கிய பெரியவர் ஜெயப்பிகாஷ் அவர்கள்.

அவரின் இறுதி சடங்கு இன்று 22-10-2017 கலிங்கப்பட்டியில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டார். உடன் மதிமுக மாவட்ட செயலாளர்கள், மற்ற நிர்வாகிகள், ஊர்மக்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டார்கள்.

வளைகுடா மறுமலர்ச்சி பேரவை ஓமன்