Friday, April 30, 2021

வைகோ MP மே நாள் வாழ்த்து!

மேதினி போற்றும் மே நாள் என்று, மே முதல் நாளை, உழைப்பாளர் நாளாக உலகமே கொண்டாடி மகிழ்கின்றது.

கடந்த நூற்றாண்டுகளில் தொழிலாளர்கள், பொழுது விடிந்து பொழுது அடையும் வரை மட்டும் அல்ல; அதையும் கடந்து 9 மணி 10 மணி வரை வேலை செய்து வந்தார்கள். அந்த நிலையை மாற்றக் கருதி, ஒரு நாளின் 24 மணி நேரத்தை மூன்றாகப் பகுத்து வரையறுத்து, எட்டு மணி நேரம் வேலை; எட்டு மணி நேரம் உறக்கம்; எட்டு மணி நேரம் வாழ்க்கை நிகழ்வுகள் வகுத்துக் கொண்டு, அந்த நேரம் மட்டுமே வேலை என்று கோரிக்கையை முன்வைத்தனர்.
அதற்காக, அமெரிக்காவின் சிகாகோ நகரில், வைக்கோல் சந்தை சதுக்கத்தில் (Hey Market) அணி திரண்டு களம் கண்டனர்; உரிமை முழக்கங்களை எழுப்பினர். ஆட்சியாளர்களின் அடக்குமுறை கட்டு அவிழ்த்து விடப்பட்டது; காவல்துறையினர் துப்பாக்கிகளால் சுட்டார்கள். நான்கு தொழிலாளர்கள் குண்டடிபட்டுச் செத்தார்கள்.
அவர்களுடைய உயிர்க்கொடையை நினைவு கூர்ந்து, இந்த நாளை, உழைப்பாளர் நாளாகக் கொண்டாடுவது எனத் தீர்மானித்தனர். அன்றைக்கு, அத்தொழிலாளர்கள் தங்கள் செங்குருதியால் எழுதிய வரலாறை, இன்று இந்த நாளில் நாம் நினைவு கூர்கின்றோம்.
செல்வங்களுக்கு எல்லாம் பெரும் செல்வம் என்று கொண்டாடப்படும் மக்கள் செல்வத்தைக் கூடக் கட்டுப்படுத்த முனைகின்ற காலகட்டத்தில், ஒவ்வொருவரும் உழைப்பதற்காகப் பத்து விரல்களைப் பெற்றுள்ளோம். அந்தப் பத்து விரல்களும் இணைந்து செயல்பட்டால்தான் ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும். அதைப்போல, உழைப்பாளர்கள் ஒன்றுபட்டு நின்றால்தான், உரிமைகளை வென்றெடுக்க முடியும்.
மே நாளை, ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்க, 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் கோரிக்கை வைத்தேன். பொது உடைமைக் கட்சிகள் வரவேற்றன; பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தனர். அப்படியே அவர்களுடன் சென்று, இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர் பெருந்தகை வி.பி.சிங் அவர்களைச் சந்தித்துக் கோரிக்கையும் வைத்தேன். அவர் உடனே ஏற்றுக்கொண்டு அறிவிப்பு வெளியிட்டார்.
அந்தச் செய்தியை, அன்று இரவே நான் தலைவர் கலைஞர் அவர்களிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். மறுநாள் காலை, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே நாள் பூங்காவில், மே தின விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய தலைவர் கலைஞர் அவர்கள், “தம்பி கோபாலசாமி, இந்த நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்க, முதன்மை அமைச்சர் வி.பி.சிங் அவர்களிடம் கோரிக்கை வைத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றேன்,” எனத் தெரிவித்துப் பாராட்டினார்கள்.
அப்படிப்பட்ட மலரும் நினைவுகளோடு, திராவிட இயக்கத்தின் வெற்றிக்காகவும், உழைக்கும் தோழர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபடுகின்ற சக்திகளை ஒன்று திரட்டி, மேலும் மேலும் வெற்றிகள் குவிக்க உழைப்போம் எனச் சூளுரைத்து, மே நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
30.04.2021

Thursday, April 29, 2021

திருச்செந்தூர் கோவிலில் இந்திக் கல்வெட்டா? வைகோ MP கண்டனம்!

அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூரில், தமிழ்க் கடவுள் முருகனின் ஆலயத்தில், திடீரென இந்திக் கல்வெட்டுகள் முளைத்துள்ளதாக இன்று ஏடுகளில் வந்துள்ள செய்தியால், உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் கொதித்துப் போயிருக்கின்றார்கள்.

கொதிநிலையை அறிவதற்கு, குரங்கு தன் குட்டியின் கையை எடுத்துச் சுடும் நீரில் வைத்துப் பார்ப்பது போல, ஆதிக்க உணர்ச்சிக்கு வாய்ப்புக் கிடைக்குமா என்று பார்க்க, இந்தக் கல்வெட்டு மோ(ச)டி வித்தையை, அரங்கேற்றி உள்ளனர்.

இதை யார் வைத்தார்கள், எப்போது வைத்தார்கள், என்ன நோக்கத்திற்காக வைத்தார்கள்? இந்தி ஆதிக்க சக்திகள் நடத்தும் கொல்லைப்புற ஏற்பாடுகளுக்கு, எந்தவிதத்திலும் தமிழ்நாட்டு அரசு இம்மி அளவும் இடம் தரக் கூடாது.

திருச்செந்தூருக்கும், வட ஆரியத்திற்கு எந்தக் காலத்திலும் எந்தத் தொடர்பும் இல்லை. இத்தகைய கல்வெட்டுகளுக்கு இடம் அளித்து, எதிர்காலத்தில் வரலாறைத் திரித்துக் கூறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடக் கூடாது.

தமிழ்நாட்டில், 1938 இல் தொடங்கிய மொழிப்போர்க் கனல், நீறுபூத்த நெருப்பாக இருக்கின்றது. தந்தை பெரியாரும், பேரறிஞர்  அண்ணாவும், மூதறிஞர் இராஜாஜியும், தலைவர் கலைஞரும் போர்க்கொடி ஏந்திய உணர்வு கொஞ்சமும்  மங்கி விடாமல், மானம் உள்ள தமிழ்மக்கள் இன்றைக்கும் போர்க்களம் புகுவதற்குத் துடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அதற்கு முன்பாக, ஆட்சியாளர்கள், அந்தக் கல்வெட்டுகளை உடனே அகற்ற வேண்டும்;   திருச்சீர் அலை வாய் என்று போற்றப்படும் செந்தில் ஆண்டவனின் சன்னிதியில், இந்திக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

வேல் ஏந்தி, சூரனை வதைத்துக் கோவில் கொண்டு இருக்கின்ற செந்தூர் ஆண்டவன் கோவிலுக்கு, மக்கள் கால்நடையாகவே வந்து வணங்கி வழிபட்டு, தமிழர் பண்பாட்டையும், மரபையும் பேணிக் காத்த மண்ணில், இந்தியைத் திணிக்க முயல்வதை, நொடிப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள்தான் ஆட்சி மொழிகள் என, பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967 ஆம் ஆண்டு, சட்டம் இயற்றினார்கள். அதை இனி யாராலும் மாற்ற முடியாது என்றும் உறுதிபட அறிவித்தார்கள். அந்தச் சட்டம்தான் இப்போதும் நடைமுறையில் இருக்கின்றது. அதன்படி, அந்தக் கல்வெட்டுக்கு அங்கே இடம் கிடையாது.  எனவே, அவற்றை அகற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை; உடனடியாக அகற்றுங்கள்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’                                                              சென்னை - 8                                                      29.04.2021

Wednesday, April 28, 2021

திருச்சி பெல் ஆலையில் உயிர்க்காற்று ஆக்குக! வைகோ கோரிக்கை!

திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL), மருத்துவப் பயன்பாட்டுக்கான உயிர்க்காற்று (ஆக்சிஜன்) ஆக்கும் தொழிற்கூடம் நல்ல முறையில் இயங்கி வந்தது. பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது.


அங்கே, 8 மணி நேரத்தில், 1000 கியூபின் மீட்டர், அதாவது 150 உருளைகள் உயிர்க்காற்று ஆக்கும் திறன் கொண்டது. ஒரு நாளைக்கு மூன்று வேலைநேரங்களில் குறைந்தது 400 உருளைகள் உயிர்க்காற்று ஆக்க முடியும். அவ்வாறு கிடைத்த ஆக்சிஜன், 2016 ஆம் ஆண்டு வரை, திருச்சி பெல் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.


பெல் ஆலையின் மேலாண்மைக் கோளாறுகளால், ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை இயக்கப்படாமல் உள்ளது.


எனவே, தமிழக அரசு, திருச்சி பெல் ஆலையில், உயிர்க்காற்று ஆக்கும் பணிகளை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

28.04.2021

Tuesday, April 27, 2021

திரைப்பட இயக்குனர் தாமிரா மரணம்! வைகோ MP இரங்கல்!

திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் பிறந்த திரைப்பட இயக்குனர் பாசமிகு தம்பி தாமிரா கொடிய கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி இன்று ( ஏப்ரல் 27) காலை சென்னையில் காலமானார் என்ற செய்தி அறிந்து அளவற்ற துயர் அடைந்தேன்.

வேளாண்மையைத் தொழிலாகக் கொண்ட நடுத்தர இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சேக் தாவூது.


தாம் பிறந்த நெல்லைச் சீமையில் வற்றாது பாய்ந்து ஓடும் ஜீவ நதியாம் தாமிர பரணி நதி மீது கொண்ட பற்றுதலால் தம் பெயரை தாமிரா என மாற்றிக் கொண்டார்.


இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களால் வார்ப்பிக்கப்பட்டவர்.


முதன்முதலாக  கல்கியில் இவர் எழுதிய அப்பா எனும் சிறுகதை அனைவர் மனதிலும் இடம் பிடித்தது.


ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் என தமிழக வாரப்பத்திரிகைகளில் இவர் எழுதிய சிறுகதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.


இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து எழுதி வந்தார்.


தாமிராவின் கதை புனையும் ஆற்றலால் கவரப்பட்ட பாலச்சந்தர், தான் இயக்கிய “பொய்” படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பை இவருக்கு வழங்கினார்.


படப்பிடிப்பிற்காக இத்திரைப்பட குழுவினர் அனைவரும் இலங்கை சென்றுவிட தாமிரா விற்கு கடவுச்சீட்டு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தனக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோய்விடுமோ என வருந்திய நிலையில் முன் பின் அறிமுகம் இல்லாத நிலையில் என்னைத் தொடர்பு கொண்டார்.


அவருக்கு கடவுச்சீட்டு கிடைக்க நான் உடனடியாக ஏற்பாடு செய்த உதவியால் அவர் இலங்கை பயணமானார்.


பொய் படத்தின் வசனங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.


தனது திறமையால் படிப்படியாக உயர்ந்த தாமிரா,  தனது குருநாதர் பாலச்சந்தரையும இயக்குனர் சிகரம் பாராஜாவையும் வைத்து ரெட்டைச்சுழி எனும் திரைப்படத்தை இயக்கினார்.


அதன்பின் பாலச்சந்தரின் பட்டரையில் வளர்ந்த சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் வளர்ந்துவரும் அன்புச் சகோதரர் சமுத்திரகனி அவர்களை நாயகனாகக் கொண்ட ஆண்தேவதை எனும் திரைப்படத்தை இயக்கினார்.


தொடர்ந்து குறும்படங்கள், வெப் சீரியல்கள் எடுத்து வந்தார்.


தமிழ் திரையுலகிற்கு  தம் திறமையாலும் ஆற்றலாலும் இன்னும் பல சிறப்புக்களைச் சேர்க்க வேண்டிய தம்பி தாமிரா 52 வயதில் கொடிய கொரோனா தொற்றால் மறைந்த செய்தி மனதை வாட்டுகிறது.


அவ்வப்போது நாட்டு நடப்புகள் குறித்தும், நலம் விசாரித்தும் என்னிடம் அலைபேசியில் உரையாடும் தாமிராவின் குரலை இனி என்று கேட்பேன்?


தாமிராவை இழந்து அதிர்ச்சியில் திகைத்து நிற்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

27.04.2021

ஸ்டெர்லைட்: உச்சநீதிமன்றத் தீர்ப்பு! வைகோ MP அறிக்கை!

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து, 1996 இல் இருந்து போராடி வருகின்றேன். தொடர்ந்து உண்ணாவிரதங்கள், நடைபயணங்கள், மறியல், முற்றுகை  என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டங்கள் நடத்திய அளவிற்கு, தமிழ்நாட்டில் வேறு யாரும் நடத்தியது கிடையாது. 


பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 1997 இல் ரிட் மனு தாக்கல் செய்தேன். அதில் நானே வாதாடினேன். 2010 செப்டெம்பர் 28 ஆம் தேதியன்று, ஆலையை மூடுமாறு தீர்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தடை ஆணை பெற்றது. 2013 ஏப்ரல் 2 ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. அதன்பிறகு, நான் தீர்ப்பு ஆயத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்தேன். மீண்டும இன்னொரு ரிட் மனு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். 


அந்த ரிட் மனு, இன்னமும் நிலுவையில் இருக்கின்றது. .இதற்கு இடையில் நடைபெற்ற போராட்டத்தில்தான் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாடு அரசு, முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஏஜெண்டாகவே வேலை செய்து வந்துள்ளது. 


தற்போது, நாட்டில் ஆக்சிஜன் தேவை என்ற பெயரில், ஸ்டெர்லைட்டை இயக்குவதற்கு வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கின்றது. 


தமிழ்நாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை மட்டும்தான் ஆக்க வேண்டும்; அதைப் பகிர்ந்து  வழங்குகின்ற அதிகாரமும் தமிழ்நாட்டுக்குத்தான் வேண்டும் என, நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 


ஆனால், இன்று உச்சநீதிமன்றத்தில், ஆக்சிஜன் ஆக்கும் முழு உரிமையும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டு விட்டது. 


தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை, அழுத்தமாக உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ய தமிழக அரசு வேண்டும் என்றே தவறி விட்டது. மறைமுகமாக, குறுக்குவழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழி செய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.


வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

27.04.2021

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ MP அவர்கள், இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக அல்லாத கட்சிகளின் முன்னணித் தலைவர்களுக்கு, மின் அஞ்சல் வழியாக எழுதி இருக்கின்ற கடிதம் (27.4.2021): புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும்; ஏன்?

பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஆளுகின்ற நடுவண் அரசு, புதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு அதை எதிர்க்கின்றது. அதற்கான காரணங்களை தங்களின் கனிவான கவனத்திற்குக் கொண்டு வர விழைகின்றேன்.


1. இந்திய விடுதலையின்போது, கல்வி என்பது மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் இருந்தது. ஆனால், நெருக்கடி நிலையின்போது, காங்கிரஸ் அரசு, கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து, பொதுப்பட்டியலுக்கு மாற்றியது. அப்போது, தமிழ்நாடு தவிர, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி நடத்தி வந்தது. பிரதமர் இந்திரா காந்தியின் முடிவை, காங்கிரஸ் முதல்வர்கள் எதிர்க்கவில்லை. எனவே, அரசு அமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு, மாநில அரசுகளின் உரிமையைப் பறித்துக் கொண்டனர்.


2. அதன்பிறகு அமைந்த நடுவண் அரசுகளும், கல்வித்துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து வந்தன. மாநில மொழிகளின் வளர்ச்சியைப் புறந்தள்ளி, இந்தி மொழியை முன்னிலைப்படுத்தி வருகின்றன. இதனால், காலப்போக்கில் மாநில மொழிகள் படிப்படியாக அழிந்து விடும். பல ஆயிரம் ஆண்டுகளாக மாநில மக்கள் கடைப்பிடித்து வருகின்ற பண்பாடு, பழக்கவழக்கங்களை, இந்தி மொழித் திணிப்பு அழித்து விடும்.


எனவேதான், தமிழ்நாட்டு மக்கள் இந்தியை எதிர்த்து 1937 ஆம் ஆண்டு முதன்முதலில் அறப்போர் நடத்தினர். அதன்பிறகு, பல்வேறு காலகட்டங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. ‘இனி இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி’ என்று, காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து, 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் புரட்சி வெடித்தது. கர்நாடகம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் எதிரொலித்தது.


அதன் விளைவாக, “இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகின்ற வரையிலும், ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாக நீடிக்கும்” என, பண்டித ஜவகர்லால் நேரு அறிவித்தார்.


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, 1967 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. முதல் அமைச்சராகப் பொறுப்பு ஏற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள்,  “தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை....தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டும்தான் ஆட்சி மொழிகள்”  என அறிவித்தார்கள்.  


அதன்படி, இன்றுவரை தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் இல்லை. அதன் விளைவாக, தமிழக மாணவர்கள் ஆங்கில மொழியில் நன்கு தேர்ச்சி பெற்று, அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெருமளவில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுச் சாதனை நிகழ்த்தி வருகின்றனர். 


3. உலகம் முழுமையும் இந்தியைப் பரப்புவதற்காக, இந்திய அரசு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய்களைச் செலவிட்டு வருகின்றது. ஆனால், மாநில மொழிகளின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவது இல்லை. தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் இந்தி பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றார்கள். தமிழுக்கு இடம் இல்லை. 


4. இதுவரை இந்தியைப் பரப்பியது போதாது என்று, புதிய கல்விக்கொள்கையின் வழியாக, சமற்கிருத மொழியைக் கொண்டு வந்து திணிக்கும் முயற்சிகளை, பாரதிய ஜனதா கட்சி அரசு தொடங்கி இருக்கின்றது. 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, இந்தியாவில் சமற்கிருதம் பேசுகின்றவர்கள் வெறும் 24000 பேர்தான். பேச்சுவழக்கில் இல்லாத, இறந்து போன ஒரு மொழியின் வளர்ச்சிக்காக, பல நூறு கோடி ரூபாய்கள் செலவில், பல பல்கலைக்கழகங்களைத் தோற்றுவித்து இருக்கின்றார்கள். அதேவேளையில், பல கோடி மக்கள் பேசுகின்ற பெங்காலி, மராட்டி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, மைதிலி உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளின் வளர்ச்சிக்குப் போதுமான நிதி ஒதுக்கவில்லை; நடுவண் பல்கலைக்கழகங்களையும் தொடங்கவில்லை.


5. இன்றைய நிலையில், கூகுள், பேஸ்புக் போன்ற வலைதளங்கள், ஒரு மொழியில் எழுதுகின்ற கருத்துகளை, உலகின் 200 க்கும் மேற்பட்ட மொழிகளில், சில நொடிகளில் மொழிபெயர்த்துத் தருகின்றன. அதேபோல, ஒருவர் பேசுவதையும், பல மொழிகளில் பெயர்த்துச் சொல்கின்றது. உள்ளங்கை அளவிலான சிறிய மொழிபெயர்ப்புக் கருவிகளின் துணையோடு, தமிழ்நாட்டு வணிகர்கள் சீனாவுக்குச் சென்று வணிகம் செய்து வருகின்றனர். 


எனவே, இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஒருவர், தன் தாய்மொழியைத் தவிர வேறு எந்த மொழியையும் படிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. இந்தி, சமற்கிருத மொழிகளைப் படிக்க வேண்டிய தேவையும் அறவே இல்லை.


6. ஆங்கிலம் அயல்நாட்டு மொழி; அதைக் கற்க மாட்டோம் என்று இந்தி பேசும் மாநிலத்தவர்கள் சொன்னால், மாநில மொழிகளைப் பேசுகின்ற மக்களுக்கு இந்தியும் அயல்நாட்டு மொழிதான்.


7. தமிழ்நாடு மாநிலம், கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாகவே, இந்தியாவில் ஒரு மாற்றுக் கல்வி முறையை அறிமுகப்படுத்தி, அதில் வெற்றி கண்டு இருக்கின்றது. அதன் விளைவாக, இன்று இந்தியாவில் கல்வியில் வெகுவாக முன்னேறி இருக்கின்றது. பல நூற்றாண்டுகளாக, சமூகத்தில் நிலவி வருகின்ற பாகுபாடுகளைக் களைந்து இருக்கின்றது. சமத்துவத்தை நிலைநாட்டி வருகின்றது. 


8. இந்தியாவில் பள்ளிகளில் முதன்முதலாக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியது. இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் வருவதற்கு முன்பாகவே, தமிழ்நாட்டில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, ஏழு கிலோ மீட்டருக்கு ஒரு மேனிலைப்பள்ளியை அமைத்தது தமிழ்நாடு. அதேபோல, மாநில அரசு நடத்தி வருகின்ற கல்லூரிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தையும் விட அதிகம்.


9. அரசுப் பள்ளிகளில், மாணவர்களுக்குத் தாய்மொழிக் கல்வி வழங்கப்படுகின்றது. தமிழ் மொழியில் பயில்வோருக்கு, தேர்வுக் கட்டணம் உட்பட எந்தக் கட்டணமும் கிடையாது. மாறாக, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது. இட ஒதுக்கீட்டுக் கொள்கை  முழுமையாகப் பின்பற்றப்படுகின்றது. பெண் கல்வியில் வெகுவாக முன்னேறி இருக்கின்றது. இன்று, ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். 


10. புதிய கல்விக்கொள்கை, கல்வியை முழுக்க முழுக்க மைய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்கின்றது. கூட்டு ஆட்சித் தத்துவத்தையும், அதிகாரப் பரவலையும் மறுக்கின்றது. மாநில அரசுகளிடம் இருந்து கல்வியை, முற்றுமுழுதாகப் பறித்துக் கொள்வதே, இக்கொள்கையின் நோக்கம் ஆகும். மாநிலங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு குழந்தைகள் சிந்திக்கும் உரிமையை முடக்கி விடுகின்றது. 


11. இன்று இந்தியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்த ஆண்டில் மட்டும், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. 


ஆனால், மருத்துவக் கல்வியில் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கின்ற வகையில், நடுவண் அரசு, நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. அதனால், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவக் கல்வியில் சேருவதற்குப் பெருந்தடையை ஏற்படுத்தி இருக்கின்றது. 


மேனிலைக் கல்வி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பு எண்களின் அடிப்படையில்தான் அனைத்து உயர் கல்வியிலும் சேர்க்கை நடைபெற வேண்டும். மாறாக, அதற்கு ஒரு தனித்தேர்வு என்பது, தகுதி, திறமை என்று கூறி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் கல்வி உரிமையை, முற்று முழுதாகப் பறித்து விடும். நீட் தேர்வு பயிற்சி மையங்கள் என்ற பெயரில் இலட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை நடைபெறுகின்றது. ஏழைகளுக்கு உயர் கல்வி என்பது எட்டாக்கனியாக ஆகி விடும். 


12. உலகில் எத்தனை நாடுகளில் மும்மொழிக் கொள்கை இருக்கின்றது? எங்கேயும் கிடையாது. அமெரிக்கர்கள், பிரெஞ்சு மொழியைப் பேச மாட்டார்கள். பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலம் பேசுவதையோ, கற்பதையோ அறவே விரும்புவது இல்லை. 


13. சீனர்களும், ஜப்பானியர்களும் தங்கள் தாய்மொழியைத் தவிர, ஆங்கிலம் கூடக் கற்பது இல்லை. ஆனால், அந்த நாடுகள் இன்று உலக அளவில் வியத்தகு அறிவியல் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.


14. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்பிக்க, புதிய கல்விக் கொள்கையின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. அதேபோல, இந்தி பேசுகின்ற மாநிலங்களில், பெங்காலி, மராட்டி உள்ளிட்ட பிற மாநில மொழிகள் கற்பிக்க நிதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றதா? இல்லை. எனவே, இது முழுக்க முழுக்க மோசடியான திட்டம். 


15. அனைவருக்கும் தாய்மொழிக் கொள்கை என்று பேசுகின்றார்களே தவிர, உண்மையில், இந்தியைத் திணிக்கவும், அதற்கும் மேலாக இப்போது சமற்கிருதத்தைத் திணிக்கவும்தான் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 


16. 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், மண்பாண்டம் செய்தல், மின்சார வேலைகள் உள்ளிட்ட ஒரு தொழிலை, அந்தத் தொழில் நடக்கின்ற இடங்களுக்கு சென்று பத்து நாட்கள் பயிற்சி பெற வேண்டும் என்பது, குலக்கல்வித் திட்டமே ஆகும். 


17. தற்போது நடைமுறையில் இருக்கின்ற 10+2 என்ற அமைப்பைச் சிதைத்து, 5,3,3,4 என்ற புதிய கல்வி அமைப்பைக் கொண்டு வருகின்றார்கள். அதனால், மாணவர்கள் இடைநிற்றல்தான் கூடுமே தவிர, கல்வியின் தரம் உயராது. இதுகுறித்து, மாநில அரசுகளிடம் எந்தக் கருத்தும் கேட்கவில்லை.  


18. மாநில அரசுகளிடம் இருக்கின்ற கல்வியை, முற்று முழுதாகத் தனியார்மயம் ஆக்குகின்ற வகையில்தான் புதிய கல்விக்கொள்கை இருக்கின்றது. மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, தனியார் பள்ளிகள் தாங்கள் ஈட்டுகின்ற இலாபத்தை, முதலீடாக மாற்ற வகை செய்கின்றது. கல்விக் கொள்ளை நடைபெற வழி வகுக்கின்றது. 


19. 15 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடித்து இருந்தாலும், அது உயர்கல்விக்கான தகுதி இல்லை என புதிய கல்விக்கொள்கை சொல்லுகின்றது. அதன்பிறகு, இந்திய அளவில் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வில் பெறுகின்ற மதிப்பு எண்களை வைத்துத்தான் கல்லூரியில் சேர்ப்பார்களாம். இது உயர்கல்விக்கு வழி வகுக்கின்றதா? அல்லது இலட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி பெறுவதைத் தடுத்து, அவர்களைக் கூலித் தொழிலாளர்களாக மாற்றுகின்ற முயற்சியா?


எனவே, இந்தி, சமற்கிருத மொழிகளைத் திணித்து, மாநில மொழிகளை முற்று முழுதாக ஒழித்துக் கட்டவும், சாதி மதப் பாகுபாடுகளை நிலைநிறுத்தி, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கவும் திட்டம் வகுத்துச் செயல்பட்டு வருகின்ற, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் குழுக்கள் இயக்கி வருகின்ற, பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, தாங்கள் விரிவாக ஆய்வு செய்து, தங்கள் மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கின்ற வகையில், எதிர்ப்புக் கருத்தை வெளிப்படுத்துமாறு, அன்புடன் வேண்டுகின்றேன். 


நன்றி, 


தங்கள் அன்புள்ள,

வைகோ

பொதுச்செயலாளர்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்


VAIKO’s LETTER TO NON BJP CHIEF MINISTERS AND POLITICAL LEADERS.

27 APRIL 2021



Dear Sir/Madam,


I would like to bring to your kind notice, Why Tamilnadu is opposing the New 

Education Policy (2020).


The Bharatiya Janata Party led Central Government is taking steps to implement the New Education Policy.


In the Constitution of India, the subject-Education- was in the State List.


During Emergency, the Congress Government brought it to the Concurrent List. 

At that time, the Congress Party was in power in all the States, except in Tamilnadu.  Therefore, the States which were under Congress Rule, did not oppose this move.


This move is against what was originally enshrined in the Constitution of India.


The Government which came to power in Centre, subsequent to emergency, 

continued Education in the Concurrent List and thereby deprived the State Government of its rights.


The result was, the local languages were ignored and Hindi was given prominence. 

It was feared, local languages which are mother tongues to crores and crores of people would die, if this system continued to prevail. 


It was also feared, culture and tradition and language cherished by the local people in the States would be destroyed by imposition of Hindi.


This is the reason why people of Tamilnadu continuously protested against the 

imposition of Hindi, right from 1937.


Realising that the Hindi imposition is detrimental to the culture, tradion and language of the States, the erudite Pandit Jawaharlal Nehru announced that English would also be the official language as long as the non-hindi speaking people desired.  


However, the Hindi imposition continued and the Government announced Hindi to be the only official language.             

It led to a revolution in 1965, not only in Tamilnadu, but also in states like Karnataka, Punjab, Bengal, Andhra Pradesh, Kerala etc.  


The protest against Hindi by the people of Tamilnadu led to the defeat of Congress in 1967 General Election and the victory of DMK in the hustings. Perarignar Anna 

became the Chief Minister and he declared that there would be no room for Hindi in Tamilnadu and only Tamil and English would be the official languages of the State.  


But, the Tamilnadu Government is not against Dakshina Bharat Hindi Prachar Sabha and their classes and examinations in Hindi.


Since, Hindi was not imposed on students in Tamilnadu, they could focus their 

attention on English which helped them to bag employment opportunities and reach high positions in USA and European Countries.


The Union Government is spending huge sums of money to spread Hindi worldwide. Even in countries where Tamils live in large numbers like Sri Lanka, Malaysia, Singapore, Gulf Countries, UK, USA, Hindi is being taught in Indian Embassies. But, there is no attempt made by the Union Government to teach Tamil or any other Indian language.


Now, in addition to Hindi, the BJP Government is taking steps to impose Sanskrit, a dead language under the garb of New Education Policy. It is relevant to point out, according to the 1971 census, the total number of people whose mother tongue is Sanskrit is 24000 only.


To promote  a language spoken by so few, the Union Government has established Sanskrit Universities spending crores of money. But at the same time, languages like Bengali, Marathi, Tamil, Telugu, Kannada, Malayalam etc., which are spoken by 

millions of people are ignored by the Union Government by non-allocation of adequate funds for their development.


In this digital era, sites like Google, Facebook translate contents into as many as 200 languages in a jiffy. Even the speech transcripts are translated utilising this technolocy. Tamil businessmen are trading in China and other countries using this technology.


So, in this 21st Century, it would not be wrong to say that there is no need for anyone to learn any other language than his own mother tongue.


Thus, there is no need to learn Hindi and Sanskrit too.


If English is a foreign language for Hindi speakers, then Hindi is a foreign language for the people who have their own regional languages as their mother tongue.


The Education Policy implemented and followed so far in Tamilnadu, has placed the State in zenith  in many fields not only in this country but also in the world. It has removed diversities and brought commendable unity in the state.


Tamilnadu is the first State in India to implement Midday Meal Scheme for students.


Much before the Right to Education Act was implemented, Tamilnadu boasted a 

Primary School for every one KM, a middle school in every 3 kms and a High School for every 7 Kms. It can rightly br proud of having Government Colleges, for Higher Education far more in number than in any other States.


Tamilnadu is the only State to have 50 medical colleges and 11 more medical colleges would be opened in this year.


But, the Union Govenment is mendling with the admission in these colleges with the introduction of NEET. It has blown away the dreams of many rural and poor students of becoming Doctors and serving rural India.


Admissions to all higher educations should be based on the scores of Higher 

Secondary Class examinations. But, eligibility tests in the name of recognising talents are conducted, which deny opportunities and rights of the poor and oppressed classes as the ill-afford lakhs of rupees of money to coach themselves for such talents spotting examinations like NEET.


Professional Education thus becomes an evalascent dream forever.


In Government Schools in Tamilnadu, Tamil is the medium of instruction. There is no exam fee or any other fee for students who learn through Tamil media. There are scholarships for them. Reservation Policy is scrupulously followed. Women 

education is in full swing. More girls are going to higher studies than boys.


When this is our performance in the field of Educaion, we feel that the Union 

Government is trying to monopolise education. This is against the federal structure of the Constitution and Centralisation of authority.


The purpose of NEP, in our view, is to snatch away the initiative in Education of the State Government and dull the thinking capacity and creativity of the student, which according to us would flourish only if local parameters play.


The NEP speaks about three language policy. We wonder, how many countries in the world have accepted a three language policy!


The French won’t learn English and the English won’t learn French.


China and Japan don’t learn English. They learn the subjects in their mother tongue. Yet, all these people achieve remarkable accomplishments in the global arena.


The NEP speaks out allocation of money to the development of Hindi in non-hindi speaking states. But, it does not allocate funds for the development of regional 

languages.


The NEP speaks about learning through mother tongue. But, it is only lip service. Its heart beats only for the imposition of Hindi and Sanskrit.


NEP further speaks about children below 13 years of age to learn some skills like carpentry, pottery etc., in working places at least for a month. It is an indirect 

imposition of Manu Dharma Policy.


Where is the necessity to study these skills when they are early teens?


The NEP breaks the existing 10+2 system and suggests 5,3,3,4 systems.


This in our view, will promote discontinuation of Education by students.


It further aims to privatise the education sector which is now in the hands of State Governments.


This will help the private sector to make profits in the field of education.


The NEP speaks of entrance examinations by the National Examination Authority to enter in higher education, even after 15 years of schooling.


This we consider totally unnecessary as we feel it will stop lakhs of students from entering the colleges.


Therefore, I request you to kindly study in depth and come out with your considered opposition to the New Education  Policy, adumberated by the Bharatiya Janata Party,  egged on by the RSS and Sangh Parivar, which imposes Hindi and Sanskrit on other languages and thereby destorys them besides   annihilating Social Justice  by promoting differences on the basis of Caste, Community and Religion in India.


With regards,


Yours sincerely,

Vaiko

Member of Parliament

General Secretary

MDMK Party.

Monday, April 26, 2021

ஸ்டெர்லைட் ஆலையை, தமிழக அரசு பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும்! வைகோ MP அறிக்கை!

ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்குவதற்கு, குஜராத், கோவா ஆகிய மாநிலங்கள் அனுமதிக்காத நிலையில், மராட்டிய மாநிலத்தில் தொடங்க உரிமம் அளித்தனர். இரத்தினகிரி மாவட்டத்தில் தொழிற்கூடம் கட்டி தொடங்க இருந்த நிலையில், அங்கே விவசாயிகள் திரண்டு வந்து உடைத்து நொறுக்கினர். அதனால், மராட்டிய அரசு உரிமத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. 

அதன்பிறகு, தமிழ்நாட்டுக்கு வந்து, அண்ணா தி.முக. அரசிடம் உரிமம்  பெற்று, தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் தொடங்கினார்கள். ஆனால், காற்று, நீர் நிலம் அனைத்தையும் மாசுபடுத்தி, புற்று நோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தியதால், ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், பொது நல அமைப்புகளும் தொடுத்த வழக்கில், ஆலையை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் 2010 செப்டெம்பர் 28 இல் தீர்ப்பு அளித்தது. 

அதன்பிறகு, ஸ்டெர்லைட் நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர். மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது. 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மீண்டும் வழக்கு, உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. ஆலையை  மூடச் சொல்லி உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன்படி, மூடப்பட்டது. தற்போதும், ஆலையைத் திறப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை. தடை ஆணை நீடிக்கின்றது. 

ஆயிரக்கணக்கான கோடி லாபம் ஈட்டிய ஸ்டெர்லைட் ஆலை, ஆக்சிஜன் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொண்டு, கள்ளத்தனமாக ஆலையைத் திறப்பதற்கு முயற்சிக்கின்றது. அதற்கு, தமிழக அரசு இடம் தரக் கூடாது. 

ஆனால், அதே நேரத்தில், ஆக்சிஜன் ஆக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பதால், தமிழ்நாடு அரசே அந்த ஆலையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும். அதற்குத் தேவையான பொறியாளர்களை, பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது, ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்கனவே பணி ஆற்றிக்கொண்டு இருக்கும் பொறியாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்திக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை இயக்க அனுமதிக்கக் கூடாது.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
26.04.2021

Saturday, April 24, 2021

புதிய கல்விக் கொள்கை: தமிழில் இல்லை. வைகோ MP கண்டனம்!

ஆர்எஸ்எஸ் இயக்கி வருகின்ற பாரதிய ஜனதா கட்சி அரசு, சாதி, மத வெறி வருணாசிரமத்தை நிலைநிறுத்தத் திட்டம் வகுத்து, தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றது. 

இந்திய ஒன்றியத்தின் அரசு அமைப்புச் சட்டத்தை வரைந்த நாடாளுமன்றத்தில், மாபெரும் தலைவர்கள் நீண்ட நெடிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தினர்; வருணாசிரமம் வகுத்த  சாதிகளின் பெயரால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு அழுத்தப்பட்டுக் கிடக்கின்ற அடித்தட்டு மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அறிமுகம் செய்தனர்.  

ஆனால், அந்த அடித்தளத்தையே தகர்த்து நொறுக்கிய பாஜக அரசு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு, கல்வி வேலைவாய்ப்புகளில் 10 விழுக்காடு இடங்களை ஒதுக்கியது.  

அதன் அடுத்த கட்டமாக, புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்து இருக்கின்றனர். இந்தியாவின் மாநில மொழிகளை, படிப்படியாக, முற்று முழுதாக ஒழித்துக் கட்டுவதே, புதிய கல்விக் கொள்கையின் முதன்மை நோக்கம் ஆகும்.  

இந்தி, சமஸ்கிருத மொழிகளை, இந்தியா முழுமையும் உள்ள அனைத்து மாநில மக்களும் கற்க வேண்டும்; அதற்காக, ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவித்து, அந்த இரண்டு மொழிகளின் வளர்ச்சிக்காக, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஒதுக்கி இருக்கின்றனர். 

அத்துடன், இதுவரை கற்பிக்கப்பட்டு வந்த உண்மை வரலாற்று நிகழ்வுகளை மறைத்து, கற்பனைப் புராண, இதிகாசங்கள், சமஸ்கிருத மொழி வேதங்கள்தான், வரலாறு எனக் கற்பிக்க முனைந்து செயல்பட்டு வருகின்றனர். அதுகுறித்து, இரண்டு நாள்களுக்கு முன்பு விரிவான அறிக்கை கொடுத்து இருந்தேன். 

தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும், இந்தி, சமஸ்கிருதத்தைப் படித்தாக வேண்டும் என்ற புதிய  கல்விக் கொள்கை, தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டுக்கு எதிரானது என்பதால், அதைத் தமிழகம் முற்று முழுதாக ஒதுக்கித் தள்ள வேண்டும் என்பதை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகின்றது. திராவிட இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.   

அந்தப் புதிய கல்விக் கொள்கையை, முதலில், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே வெளியிட்டனர். இன்று, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட 17 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு இருக்கின்றனர். நேபாலி மொழிபெயர்ப்பும் வெளியாகி இருக்கின்றது. ஆனால், தமிழில் வெளியிடவில்லை. காரணம், அந்தக் கல்விக் கொள்கையின் உள்ளடக்கம், தமிழர்களுக்குத் தெரியக்கூடாது; தெரிந்தால் எதிர்ப்புகள்  கிளம்பும்; அந்த எதிர்ப்பு இந்தியா முழுமையும் பரவும் என்ற நோக்கத்துடன், திட்டமிட்டு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை. 

தமிழ் மொழியின் சிறப்பு, பெருமை என மேடைகளில் முழங்குகின்ற நரேந்திர மோடி அரசின் உள்நோக்கம், வெளிப்பட்டு விட்டது. இந்தியாவில் ஏழரைக் கோடி மக்கள் பேசுகின்ற தமிழ் மொழியை, கால வரையறை வகுக்க முடியாத செம்மொழியாம் தமிழைப் புறக்கணித்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசின் போக்கிற்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.04.2021

இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது! வைகோ அறிக்கை!

கொரோனா தொற்று நோய்ப் பரவலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு, நாங்கள் ஆக்சிஜன் ஆக்கித் தருகின்றோம் என்று கூறி, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 

ஆனால், தமிழ்நாட்டில் உயிர்க்காற்று (ஆக்சிஜன்) தட்டுப்பாடு இல்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், செயலரும் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். 

‘அனைத்து இந்திய அளவிலும் கூட, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; போதுமான அளவு இருக்கின்றது; ஆனால், அதை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள்தான் தேவை’ என்று, இந்தியாவின் முன்னணி ஆக்சிஜன் ஆக்க நிறுவனமான ஐநோக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சித்தார்த் ஜெயின் கூறி உள்ளார். இதுகுறித்த அவரது கருத்துகள், டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில ஏட்டில், இன்று விரிவாக வெளிவந்து இருக்கின்றது. இந்தியாவில் ஒரு நாளைக்கு 7000 டன் ஆக்சிஜன் தொழிற்கூடங்களில் ஆக்கப்படுகின்றது. அதில், ஐநோக்ஸ் நிறுவனம் மட்டும், 2000 டன் ஆக்கித் தருகின்றது.

இந்தியாவில் ஆக்சிஜன் ஆக்குவதில், மராட்டிய மாநிலம் முதல் இடத்திலும், குஜராத் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றது. அங்கே உள்ள நிறுவனங்கள், 25 முதல் 50 விழுக்காடு அளவிற்கு ஆக்சிஜனைக் கூடுதலாக ஆக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் 27 நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆந்திரம், ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் தேவைக்குக் கூடுதலாக ஆக்சிஜன் கிடைக்கின்றது. 

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், இதேபோன்ற கொரோனா முற்றுகையின்போது, ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை. 

அண்மையில், இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு 8828 மெட்ரிக் டன்னும், வேறு பல நாடுகளையும் சேர்த்து, மொத்தமாக 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றது. 

சிறிய கருவிகள் மூலம், ஒரு நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் வரை உயிர்க்காற்று ஆக்க முடியும். அப்படி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், ஐந்து அல்லது பத்து கருவிகள் இருந்தால் போதும். அத்தகைய ஒரு கருவி, ஒரு நாளைக்கு, 7200 லிட்டர் உயிர்க்காற்று ஆக்கித் தரும்; ஐந்து கருவிகள் என்றால், ஒரு நாளைக்கு 36000 லிட்டர் ஆக்க முடியும். 

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பரவிய நச்சுக்காற்றால், தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் மயங்கி விழுந்தார்கள்; அந்தப் பகுதி வாழ் மக்களுக்கும், உழவுத் தொழிலுக்கும் கேடு விளைவித்து வருகின்றது என்பதை, சென்னை உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுபடுத்தி இருக்கின்றன. எனவே, அந்த ஆலையை மீண்டும் இயக்க வேண்டிய தேவை இல்லை. அத்தகைய முயற்சிகளுக்கு, தமிழக அரசு இடம் தரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
22.04.2021

சீதாராம் எச்சூரி மகன் மறைவு! வைகோ MP இரங்கல்!

Condolence Message

With great sadness, I learnt the demise of your elder son Ashish Yechuri succumbing to COVID19. 

No words can take away the pain of losing a beloved family member. 

Our heartfelt condolences to you and your family.  

May the Mother Nature give you and your family the courage and strength to overcome this tragic loss.

தங்கள் அன்பு மகன் ஆசிஸ் எச்சூரி அவர்கள் கொரோனா தாக்கி இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு குடும்ப உறுப்பினரின் மறைவை, ஆறுதல் மொழிகள் ஆற்றுப்படுத்தி விட முடியாது.

இப்பெரும் துயரில் இருந்து நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் மீண்டு வரும் ஆற்றலை அளித்திட, இயற்கைத் தாயை இறைஞ்சுகின்றேன்.

இவ்வாறு பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
22.04.2021

கொரோனா தடுப்பூசி இலவசமாகச் செலுத்துவது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு - வைகோ MP அறிக்கை!

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை நாட்டு மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ள நிலையில் கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசி விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது, கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அவர்களும் மத்திய அமைச்சர்களும் அறிவித்து இருந்த நிலையில் தற்போது வெளிச்சந்தையில் தடுப்பூசி விற்பனைக்கு வருவது எதற்கhக என்ற கேள்வி எழுகிறது, மேலும் மத்திய அரசின் கட்டுப்பாடு இன்றி தனியார் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிர்ணயிக்கும் போக்கு நல்லதல்ல. கோடிக்கணக்கhன மக்கள் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பெற்று, அதன் தேவை அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கும் மற்றும் வெளிச் சந்தையிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு வருவது ஆபத்தாகும்.

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் விலையை இரு மடங்கு உயர்த்தி இருந்தாலும் மத்திய மாநில அரசுகளே நேரடியாகக் கொள்முதல் செய்து மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த முனைய வேண்டும். இதில் மத்திய-மாநில அரசுகள் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது பெரும் கேடு விளைவிக்கும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க 
‘தாயகம்’
சென்னை - 8
21.04.2021

பாடத்திட்டங்களில் இந்துத்துவா சனாதனக் கருத்துகள் திணிப்பு! வைகோ MP கடும் கண்டனம்!

கொரோனா பெருந்தொற்று நாட்டை துயரப் படுகுழியில் தள்ளி இருக்கும் சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு, கல்வித் துறையை காவிமயமாக்கும் சதிச் செயலை அரங்கேற்றி இருக்கிறது.

கடந்த 2020-21 கல்வி ஆண்டில் கொரோனா பாதிப்பில் பள்ளிகள் மூடப்பட்டன. இணையம் மூலம் வகுப்புகள் நடப்பதைக் காரணம் காட்டி, மாணவர்களின் பாடச் சுமையை குறைப்பதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது. சி.பி.எஸ்.சி. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் 30 விழுக்காடு பாடங்கள் குறைக்கப்பட்டன.

இதில் 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடங்களிலிருந்து கூட்டாட்சி, குடி உரிமை, தேசியவாதம் மற்றும மதச்சார்பின்மை போன்ற அத்தியாயங்கள் முற்றிலும் நீக்கப்பட்டன.

இந்திய ஜனநாயகம், சமூக அமைப்பு மற்றும் சமூகச் செயல் முறைகள் பற்றிய அத்தியாயங்கள் சமூகவியல் பாடத்திலிருந்து நீக்கப்பட்டன.

இவ்வாறு பாடங்கள் நீக்கப்பட்டதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் சிந்தனைப் போக்கு இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டது. தற்போது மீண்டும் அதே பின்னணியில் பல்கலைக் கழக மானியக் குழு ஒப்புதல் அளித்து பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இளங்கலை வரலாறு படிப்புக்கான பாடத்திட்டங்கள் வரைவு செய்யப்பட்டுள்ளன.

இதில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்றவற்றைச் சேர்த்து இருக்கின்றனர்.

டெல்லி பல்கலைக் கழகத்தின் இளங்கலை வரலாற்றின் பழைய பாடத்திட்டத்தின் முதல் பாகம், இந்தியாவின் தொடக்க கால வரலாற்றைப் பேசுகிறது. ஆனால் தற்போது புதிய பாடத்திட்டத்தின் முதல் பாகம், “பாரத்வர்ஷாவின் கருத்துருவாக்கம் (Concept of Bharatvarsha)” என்ற பாடம் முதல் அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது. “பாரதத்தின் நித்தியம்” எனும் தலைப்பில் வேதங்கள், வேதாந்தங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் மற்றும் புராணங்கள் போன்ற வைதீக பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப காலத்திலிருந்து கி.மு. 550 வரை என்ற மூன்றாவது தாளில், “ சிந்து - சரஸ்வதி நாகரிகம் மற்றும் அதன் தொடர்ச்சி, எழுச்சி மற்றும் வீழ்ச்சி” பாடமாக இடம்பெற்று இருக்கின்றது. ‘சரஸ்வதி’ என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஆறு; இதற்கு வரலாறோ, தொல்லியல் ஆதாரமோ கிடையாது.

புராண கால ‘சரஸ்வதி’ நதியை உண்மை வரலாறாக ஆர்.எஸ்.எஸ். சனாதன அமைப்புகள் சித்தரித்து வருவதைப் பாடத்திட்டத்திலும்  புகுத்திவிட்டனர்.

‘இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம்’ என்ற 12 ஆவது தாளில், “இராமாயணம் மற்றும் மகாபாரதம்” போன்றவை தனித் தனி தலைப்புகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

‘இடைக்கால இந்தியா’ பற்றி தற்போதுள்ள பாடத்திட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாறு குறித்து மூன்று தாள்கள் உள்ளன. அந்தக் காலகட்டம் குறித்து மூன்று பருவங்களுக்கு மேல் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் புதிய பாடத்திட்டத்தில் முஸ்லிம்கள் கால ஆட்சியின் முக்கியத்துவத்தைக் குறைத்து ஒரே ஒரு தாள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பாடத்திட்டத்தில் இடம்பெறாத ஒன்றை முஸ்லிம் மன்னர்கள் பற்றிய பாடங்களில் ‘படையெடுப்பு’ என்ற சொல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதுவரை ‘இந்திய சமூகம்’ என்று பொதுத் தலைப்பில் இடம் பெற்றிருந்த பாடத்தை மாற்றி, ஏழாவது தாளில், இந்து சமூகம், முஸ்லிம் சமூகம் என்று பிரித்து, அவற்றில் இந்து சமூகத்தின் சாதி மற்றும தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகள் என்று பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதே போன்று முஸ்லிம் சமூகத்தின் பிரிவுகள் மற்றும் தொழில் குழுக்கள், வாழ்க்கை முறை, கல்வி, பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகள் தொடர்பான பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

‘நவீன இந்தியா’ குறித்த பாடத்தில், தற்போது 1857 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் தலித் அரசியல் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவை புதிய பாடத்தில் நீக்கப்பட்டுள்ளன.

‘1857’ சிப்பாய் கிளர்ச்சியை, ‘முதல் சுதந்திரப் போர்’ என்று இந்துமகா சபை தலைவர் வி.டி. சாவர்கர் வர்ணித்ததை அப்படியே பாடத்தில் சேர்த்துள்ளனர். அதற்கு முன் வங்காளத்தில் நடந்த சன்யாசி கிளர்ச்சி, ஒடியாவில் பைக்கா கிளர்ச்சி, தமிழ்நாட்டில் வேலூர் புரட்சி போன்றவை இடம்பெறவில்லை.

1905 வங்கப் பிரிவினை மற்றும் அதற்கு எதிரான குறிப்புகள் பாடத் திட்டத்தில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கர் போன்ற வரலாற்றில் வாழும் மாபெரும் தலைவர்களின் முக்கியத்துவத்தை பாடத்திட்டத்தில் இருட்டடிப்பு செய்துள்ளனர்.

இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டிற்கு ஏற்ற வகையில் இளங்கலை வரலாறு பட்டப் படிப்புக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. கல்வித் துறையில் காவி சித்தாந்தத்திற்கு பாதை அமைக்கும் பாசிசப் போக்கு உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
21.04.2021

Sunday, April 18, 2021

இலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு! வைகோ கண்டனம்!

இலங்கை விடுதலை பெற்றதுமுதல், ஆட்சிப் பொறுப்பு வகித்த சிங்களர் பெரும்பான்மை அரசுகள், தமிழர் தாயகப் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கத்துடன், சிங்களவர்களைக் கொண்டு வந்து குடி அமர்த்தினர். கிழக்கு மாகாணத்தில் வேகமாக நிகழ்ந்த சிங்களர் குடியேற்றங்களால், தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. உரிமைகளை இழந்தார்கள். அடுத்து அவர்கள், வடக்கு மாகாணத்தைக் குறிவைத்தனர். தமிழர்கள் மீது அடக்குமுறைகளை மேற்கொண்டனர். அதன் விளைவாக, உள்நாட்டுப் போர் மூண்டது. இலட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என, மார்சுகி தாருஸ்மன் தலைமையில் ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழு அறிக்கை கூறுகின்றது.

2009 ஆம் ஆண்டு அந்தப் போர் முடிவுக்கு வந்தது. 12 ஆண்டுகள் கடந்த பின்னரும், ஈழத்தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை. இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை.
சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்களின் தாயக நிலப்பரப்பில், தடுக்கி விழுந்தால் ஒரு படை முகாம் அமைத்து, தமிழர்களின் நிலங்களைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரங்களை முடக்கிய கொடுமை தொடருகின்றது. உலக நாடுகளை ஏமாற்ற, ஏற்கனவே பறித்த நிலங்களைத் திரும்ப வழங்குவதாகப் போக்குக் காட்டிக்கொண்டே, மறுபுறம், புதிய நிலங்களைப் பறிக்கின்றது.
அண்மையில், மட்டக்களப்பு தமிழ் விவசாயிகளின் நிலங்களில், இலங்கை வனத்துறையினர் திடீரென எல்லைக் கற்களைக் கொண்டு வந்து நட்டு, இவை எல்லாம் வனப்பகுதிகள் என அறிவிப்பு செய்து இருக்கின்றது. இந்த இடங்களை விட்டுத் தமிழர்கள் வெளியேற வேண்டும் என மிரட்டுகின்றார்கள்.
எத்தனையோ நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறைகளாகத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களைப் பறிக்கின்றார்கள். இராஜபக்சே குடும்பத்தினருக்கு நெருக்கமான சிங்கள நிறுவனங்கள், பெரிய கருவிகளைக் கொண்டு வந்து, மணல் அள்ளுகின்றார்கள். அதனால், அருகில் உள்ள தமிழர்களின் விளைநிலங்களில் பயிர்கள் அழிவதைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை; தமிழர்களின் எதிர்ப்புகளைக் கண்டு கொள்வது இல்லை.
மணல் அள்ளுவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை, மேற்கண்ட நிறுவனங்கள் மதிப்பதே இல்லை என, கிழக்கு மாகாணத்தின் சிங்கள ஆளுநர் அனுராதா எகம்பத் கவலை தெரிவித்து இருக்கின்றார்.
கோத்தபாய இராஜபக்சே, இலங்கைக் குடி அரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்றதற்குப் பிறகு, தமிழர்களின் நிலங்களைப் பறிப்பதை விரைவுபடுத்தி இருக்கின்றார். நிலம் மற்றும் பாசன மேலாண்மை மகாவலி ஆணையம், தமிழர்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களில், சிங்களக் குடும்பங்களைக் கொண்டு வந்து குடி அமர்த்தி இருக்கின்றது. இதை எதிர்த்து, மயிலத்தமடு பகுதி வாழ் தமிழ் விவசாயிகள், பல மாதங்களாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
வனங்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களைப் பறிப்பது மட்டும் அல்லாமல், கடந்த ஆண்டு, தொல்லியல் துறையின் சார்பில் பௌத்த சமயத் தடங்கள் குறித்த ஆய்வு என்ற பெயரில், தமிழர்களின் நிலங்களைப் பறிக்கின்ற முயற்சிகளை மேற்கொண்டார்கள். கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இலங்கை நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் பதிவு ஆகி இருக்கின்றன. ஆனால், தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
தொல்லியல் துறை ஆய்வு என்ற பெயரில், கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொள்ள, குடிஅரசுத்தலைவர் கோத்தபாய ராஜபக்சே ஒரு குழு அமைத்தார். அந்தக் குழுவில், சிங்களர்களும், பௌத்த மதகுருக்களும் மட்டுமே இடம் பெற்று இருக்கின்றார்கள். அவர்கள், மட்டக்களப்பு குசலனமலை குமரன் கோவில், முன்பு பௌத்தர்களின் வழிபாட்டு இடம் என நிறுவுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள்.
இதுபோன்ற முயற்சிகளால், தமிழர்களின் நிலங்களை இலங்கை அரசு பறிப்பதை இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கனவே பறித்துக் கொண்ட நிலங்களில் இருந்து சிங்களக் குடியேற்றங்களையும், சிங்களப் படை முகாம்களையும் அகற்ற வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.04.2021

நடிகர் விவேக் மறைவுக்கு வைகோ எம்பி இரங்கல்!

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, சின்னக் கலைவாணர் என்று எல்லோராலும் ஏற்றிப் போற்றப்பட்ட நடிகர் விவேக் அவர்கள், திடீர் மாரடைப்பால் இன்று காலையில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி, மிகுந்த வேதனை அளிக்கின்றது.

எங்கள் ஊருக்குப் பத்துக் கிலோமீட்டர் தொலைவில், பெருங்கோட்டூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம். பட்டதாரி ஆகி, வேலை வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வின் மூலம் நிதித்துறையில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.
பாலச்சந்தர் அவர்களுடைய நாடகங்களில் பங்கேற்று நடித்து, அப்படியே அவர் வழியாகவே மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகி, மெல்ல மெல்ல, ஆனால் உறுதியான முறையில் வளர்ந்து, திரைத்துறையில் தடம் பதித்தார்.
தமிழ்த்திரை உலகில், நகைச்சுவைக் கருத்துகள் மூலம், மிகப்பெரும் சாதனைகளைப் படைத்த கலைவாணரின் வழித்தோன்றல்களாக, நடிகவேள் எம்.ஆர். இராதா, சந்திரபாபு, டி.எஸ். பாலையா, சுருளிராஜன், மணிவண்ணன், சத்தியராஜ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு என்று ஒரு மிகப்பெரும் பட்டாளம், நகைச்சுவை மூலம் நல்ல கருத்துகளைக் கூறியதோடு, குணச்சித்திர நடிகர்களாகவும் திகழ்ந்து இருக்கின்றார்கள்.
அந்த வரிசையில் ஒருவராக, தனக்கென ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொண்டு, சிரிக்கவும், சிந்திக்கவும் தூண்டிய நடிகர் விவேக் அவர்கள், சின்னக் கலைவாணர் என்றே அழைக்கப்பட்டார். தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அதைத் திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தினார். நடிப்பை ஒரு தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தினார்.
தான் ஈட்டிய பொருளிள் பெரும்பகுதியை, சமூகத் தொண்டு அறப்பணிகளுக்காகச் செலவிட்டார். அப்துல் கலாம் அவர்கள் மீது மிகுந்த மதிப்புக் கொண்டு, அவரது நினைவுப் பட்டறை அமைத்து, இளம்பிள்ளைகளுக்கு மனித நேயக் கருத்துகளை எடுத்து உரைத்தார். தமிழ்நாடு முழுமையும் இலட்சக்கணக்கான மரங்களை ஊன்றி வளர்த்தார்.
தான் பிறந்த மண்ணை மறக்காமல், அடிக்கடி வந்து செல்வார். உறவினர்களைச் சந்தித்து மகிழ்வார். தன் முன்னோர்களுக்கு, நினைவு இடமும் கட்டி வைத்து இருக்கின்றார்.
என் மீது மிகுந்த அன்பு கொண்டு இருந்தார். அவரது மகன் மறைவின்போது, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். இன்று அவர், 60 வயதிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
17.04.2021

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு வைகோ MP மரியாதை!

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு, 14.04.2021 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP அவர்கள், சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சி.இ.சத்யா, மாவட்ட செயலாளர்கள் சைதை ப.சுப்பிரமணி, சு.ஜீவன், டி.சி.இராசேந்திரன், மாவை.மகேந்திரன், ஊனை.இரா.பார்த்தீபன், முராத் புகாரி உள்ளிட்ட கழகத் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் உடன் இருந்தனர்.

அண்ணா பல்கலைக்கழகப் பொறிஇயல் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் - வைகோ எம்பி அறிக்கை!

அண்ணா பல்கலைக்கழகம், பொறிஇயல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை, கடந்த மார்ச் மாதம் இணைய வழியில் (ஆன்லைன்) நடத்தியது. நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுகளை எழுதினார்கள்.

ஏப்ரல் 10 ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. 40 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டதால், இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி இருப்பது, அதிர்ச்சி அளிக்கின்றது. கடந்த காலங்களில் தேர்வில் ஒருமுறை கூடத் தோல்வி அடையாத மாணவர்கள் பலர், மூன்று, நான்கு பாடங்களில் தோல்வி அடைந்து உள்ளனர்.
இணைய வழியில் தேர்வு எழுதும்போது, மாணவர்கள் தனி அறையில் உட்கார்ந்து எழுத வேண்டும்; கணிணியை நேராகப் பார்த்து எழுத வேண்டும்; தலையை அசைக்கக் கூடாது; அக்கம் பக்கத்தில் வேறு எவரும் இருக்கக் கூடாது எனப் பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார்கள்.
கிராமப்புற மாணவர்கள், வீடுகளில் தனியாக உட்கார்ந்து எழுதுவதற்கு அறைகள் கிடையாது. சற்றுத் தொலைவில் பெற்றோர் உட்கார்ந்து இருந்தாலும் கூட, அதையும் முறைகேடு என, கணிணிகள் பதிவு செய்து இருக்கின்றன.
கொரோனா பேரிடரால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், கல்லூரிக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக சில மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து இருப்பதாகத் தெரிகின்றது.
இத்தகைய குளறுபடிகளால், பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர். நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று வந்த கடலூரைச் சேர்ந்த சந்தியா என்ற பொறிஇயல் கல்லூரி மாணவி தேர்வில் தோல்வி அடைந்ததால், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முதன்முறையாக, செயற்கை நுண்ணறிவு முறையில் (Artificial Intelligence evaluation system) நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளில், பல குளறுபடிகளும், முறைகேடுகளும் நிகழ்ந்து இருக்கின்றன. ஒன்றரை லட்சம் மாணவர்கள் காப்பி அடித்து முறைகேடு செய்ததாகக் கூறுவதும், தேர்வு எழுதாத மாணவர்கள் சிலர் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிப்புகள் வெளியாகி இருப்பது, அண்ணா பல்கலைக்கழகத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது.
எனவே, தேர்வு முடிவுகளை உடடினயாக மறு ஆய்வு செய்து, நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளையும், கல்லூரிக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் கால தாமதம் இன்றி வெளியிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
தாயகம்’
சென்னை - 8
16.04.2021

Tuesday, April 13, 2021

பெரியார் பெயரை நீக்குவதா? வைகோ MP கடும் கண்டனம்!

சென்னை மையத் தொடரி நிலையம், ரிப்பன் மாளிகை அருகே, நெடுஞ்சாலைத் துறையினர், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையை, புதிதாக நாட்டி இருக்கின்றார்கள்.
1979 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை, ஓராண்டு தொடர் விழாவாக எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. அரசு கொண்டாடியது.
அப்போது, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்று மாற்ற, மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்., அவ்வாறு பெயர் மாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பித்தார்.
ஆனால், எம்.ஜி.ஆர்.பெயரைச் சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்துகின்ற எடப்பாடி பழனிசாமி அரசு, நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில், தந்தை பெரியார் பெயரை நீக்கிவிட்டு ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று பெயர் மாற்றம் செய்து இருக்கின்றது.
ஆர்எஸ்எஸ் சங் பரிவார் வகுத்த வியூகத்தின்படி, தில்லி எஜமான் மோடி பிறப்பித்த ஆணையை, அடிமை எடப்பாடி நிறைவேற்றி இருக்கின்றார். தமிழ்நாட்டின் தன்மானத்தை அடகு வைத்துவிட்டார்.
ஏற்கனவே, சென்னை வான்ஊர்தி நிலையத்தில் இருந்து, காமராசர் அண்ணா பெயரை நீக்கியதையும் அடிமை எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவாக, இப்போது இந்த மாற்றம் நடந்தது இருக்கின்றது.
தமிழக முதல் அமைச்சர் மட்டும் அன்றி நெடுஞ்சாலைத் துறைக்கும் பொறுப்பு வகிக்கின்ற எடப்பாடிக்கு, சூடு சொரணை இருந்தால், தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, இந்தப் பெயர் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும்; ‘‘பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை’’ என்ற பெயர் தொடர வேண்டும்.
தவறினால், மே மாதம் பொறுப்பு ஏற்கின்ற திமுக ஆட்சி தந்தை பெரியாரின் பெயரை மீண்டும் நிலைநிறுத்தும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
13.04.2021

Sunday, April 11, 2021

வேட்பாளர் மாதவராவ் மறைவு! வைகோ MP இரங்கல்!

திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவராவ், அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.

வழக்குரைஞர், எளிமையானவர் பழகுதற்கு இனிய பண்பாளர். மாதவராவ் அவர்கள் மறைவால் துயருறும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
11.04.2021

Saturday, April 10, 2021

யாழ்ப்பாணம் மேயர் கைதுக்கு வைகோ MP கண்டனம்!

யாழ்ப்பாணம் நகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை, இலங்கை அரசு நேற்றுக் காலையில் கைது செய்தது; கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், பிற்பகலில், நீதிமன்றம் பிணை விடுதலை வழங்கி இருக்கின்றது.


இந்தக் கைது நடவடிக்கையை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


இதன் பின்னணி என்ன?


யாழ்ப்பாணம் மாநகராட்சியின் சார்பில், மாநகரக் காவலர்கள் ஐந்து பேர் நியமிக்கப்பட்டனர். பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோர், அசுத்தம் செய்வோர், எச்சில் துப்புவோர், சாலைகளை மறித்து ஊர்திகளை நிறுத்துவோரிடம் அபராதம் வாங்குவது போன்ற சிறிய ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இவர்களுக்கு சீருடை கிடையாது. சாதாரண உடை அணிந்து மேற்கண்ட பணிகளைச் செய்யும்போது, சில இடங்களில் பிரச்சினைகள் எழுந்தன. எனவே, அந்தக் காவலர்களுக்கு, கொழும்பு மாநகரக் காவலர்கள் அணிவது போன்ற சீருடையை வழங்குவது என, விஸ்வலிங்கம் மணிவண்ணன் முடிவு செய்தார். ஏற்கனவே, மாநகரட்சிகயின் வேறு வகையான பணியாளர்கள் சீருடை அணிந்துதான் பணியாற்றி வருகின்றனர். இலங்கை அரசு கெசட் ஆணையின்படி, இவ்வாறு சீருடை வழங்க அவருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, அவர் அந்த ஐந்து காவலர்களுக்கும் தனிச் சீருடை தைக்க ஆணை பிறப்பித்தார்.


ஆனால், அந்தச் சீருடை, முன்பு விடுதலைப்புலிகளின் ஆளுமையில் இருந்த தமிழ் ஈழக் காவல்துறையினர் அணிந்து இருந்ததுபோன்ற வண்ணத்தில் இருக்கின்றது; எனவே, அவர் விடுதலைப்புலிகள் அமைப்பை மீளவும் கட்டி எழுப்ப முயல்கின்றார்;  இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று கூறி, இலங்கை அரசின் பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புப் பிரிவு, இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கின்றது.


அதாவது, இலங்கை உள்ளூர் ஆட்சிச் சட்டத்தின்படி, முதல்வருக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற ஒரு சிறிய அதிகாரத்தையும் செயல்படுத்துவதை, சிங்கள இனவெறி அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கொழும்பு மாநகரக் காவலர்களும் அதே சீருடையைத்தான் அணிந்து இருக்கின்றனர். அவர்களுக்கு  ஒரு நீதி; யாழ்ப்பாணத் தமிழருக்கு அநீதி என்ற நிலையே தொடர்கின்றது.


இந்தியாவின் பொடா (ஞடீகூஹ) சட்டத்தின் பெயரிலேயே, பயங்கரவாதத் தடைச் சட்டம் (ஞசநஎநவேiடிn டிக கூநசசடிசளைஅ ஹஉவ) இலங்கை அரசு கொண்டு வந்தது. அந்தக் கொடிய அடக்குமுறைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரி வருகின்ற நிலையில், அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணம் மேயரை, இலங்கை அரசு கைது செய்து இருக்கின்றது.


மியான்மர் அரசுக்கும், இலங்கை அரசுக்கும் வேறுபாடு இல்லை; இலங்கை ஒரு பாசிச நாடு என்பதையே, இந்தக் கைது நடவடிக்கை காட்டுவதாக, பன்னாட்டு அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்து இருக்கின்றனர். வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும், தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.


ஒரு மாநகர சபைக்கு நிர்வாக கட்டமைப்பைத் தமிழர்கள் ஏற்படுத்த முயல்வதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள ஆட்சியாளர்கள், ஒருபோதும் தமிழருக்கு சம உரிமை தர மாட்டார்கள். ஈழத் தமிழரைக் கரு அறுப்பதற்கான நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொள்வார்கள்.


எனவே, ஈழத்தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமைகள் கிடைத்திட, உரிய நடவடிக்கைகளை, உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.


‘தாயகம்’ வைகோ

சென்னை - 8 பொதுச் செயலாளர்,

10.04.2021 மறுமலர்ச்சி தி.மு.க