Monday, December 6, 2021

நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம்!

இன்று 6.12.2021 காலை 10.00 மணிக்கு, மாநிலங்கள் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களுடைய நாடாளுமன்ற அலுவல் அறையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்.

மாநிலங்கள் அவையின் 12 உறுப்பினர்களை, இந்தக் கூட்டத் தொடர் முழுமையும் நீக்கி வைத்து இருப்பதை எதிர்த்து, இன்று அவையின் நடவடிக்கைகளை நடத்தக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில், மாநிலங்கள் அவையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்று உறுப்பினர்கள். முழக்கங்களை எழுப்பினார்கள். குறிப்பாக. வைகோ அவர்கள் உரத்த குரல் எழுப்பினார். கடந்த கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதங்களுக்காக, இந்தக் கூட்டத் தொடர் முழுமையும் அவையில் இருந்து நீக்கி வைத்து இருப்பது ஜனநாயகப் படுகொலை என்று குறிப்பிட்ட வைகோ, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்; கொல்லாதே கொல்லாதே ஜனநாயகத்தைக் கொல்லாதே என தமிழில் முழக்கங்களை எழுப்பினார். தமிழ்நாடு. கேரளா, கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் இணைந்து கொண்டனர். வைகோ எழுப்பிய முழக்கங்கள் அவை முழுமையும் எதிரொலித்தது,

கூட்டத்தை நடத்த முடியாமல், அவை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் மாலை 4.00 மணிக்கு, அவை மீண்டும் கூடியபோது, நாகாலாந்து துப்பாக்கிச் சூடு குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்க அறிக்கை வாசித்தார்.

அப்பொழுது வைகோ குறுக்கிட்டு, நாகாலாந்தில் உங்கள் இராணுவம் அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்கின்றது; இங்கே உங்கள் அரசு ஜனநாயகத்தைப் படுகொலை செய்கின்றது என்று கூறினார்.

ஒவ்வொரு முறை சபை ஒத்திவைக்கப்பட்டபோதும், இதே நிலை நீடித்தது. எனவே, நாளை வரை, அவையின் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.12.2021

No comments:

Post a Comment