Wednesday, December 15, 2021

அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அவர்களுடன் வைகோ MP சந்திப்பு!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நேற்று மாலை 7.00 மணி அளவில், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அவர்களை, சா°திரி பவன் அலுவல் அகத்தில் சந்தித்தார். 

அப்போது அவர் அளித்த கோரிக்கை விண்ணப்பம்.

மாண்புமிகு அமைச்சர் அன்புச்சகோதரர் மாண்புமிகு ஹர்தீப் சிங் புரி அவர்களுக்கு,
வணக்கம்.

தமிழ்நாட்டில், எண்ணெய் மற்றும் எரிகாற்றுக் குழாய்கள் பதிக்கும் பணிகள்,  கீழ்காணும் இடங்களில் விரைவில் தொடங்க இருக்கின்றன.  

1. இருகூர் - தேவனகொந்தை - பாரத் பெட்ரோலியம்.

2. கொச்சி - கூட்டநாடு கெயில்

தமிழ்நாட்டில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், இந்தக் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அந்தக் குழாய்களை, விவசாய நிலங்களுக்கு உள்ளே பதிக்க இருக்கின்றார்கள். இதனால், விளைநிலங்களும்,  வேளாண் மக்களின் வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படும். மேற்கண்ட மாவட்டங்களில் வேளாண் நிலங்களின் சந்தை மதிப்பைச் சார்ந்து வாழ்கின்ற 30000 விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கெயில் திட்டம், விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக, இன்றுவரையிலும் செயல்படுத்த முடியவில்லை.

விவசாயிகளின் எதிர்ப்பை உணர்ந்து, 2013 ஆம் ஆண்டு, அப்போதைய தமிழ்நாடு முதல் அமைச்சர், கெயில் நிறுவனத்தின் கொச்சி-கூட்டநாடு திட்டத்திற்காக, எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுக் குழாய்களை, சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில், ஓரமாகப் பதிக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றினார். அவ்வாறு, இதற்கு முன்பு எத்தனையோ இடங்களில், சாலைகளின் ஓரமாகவே குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. அண்மையில், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி-தர்மபுரி இடையே, 80 கிலோ மீட்டர் தொலைவிற்கு, சாலை ஓரமாகவே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட இரு திட்டங்களும், வணிக நோக்கம் கொண்டவை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது.  

எனவே, பாதிக்கப்படுகின்ற உழவர்களின் சார்பில், கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கின்றேன்:

1. சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் அருகில், பயன்பாட்டுத் தாழ்வாரங்களை உருவாக்க (Utility Corridors) வேண்டும்.

2. அதைப் பயன்படுத்தி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் இருகூர்-தேவனகொந்தை மற்றும் கெயில் நிறுவனத்தின் கொச்சி -கூட்டநாடு எண்ணெய் இயற்கை எரிகாற்றுக் குழாய்களை, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரமாகவே பதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ அவர்கள் இவ்வாறு தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
15.12.2021

No comments:

Post a Comment