Friday, December 10, 2021

நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தஅரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன? வைகோ கேள்வி: சட்ட அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 598 (2.12.2021)

கீழ்காணும் கேள்விகளுக்கு, சட்ட அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. கீழமை நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லை என, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்துக் கூறி இருக்கின்றார். அவ்வாறு இருப்பின், அதுகுறித்து, அரசின் விளக்கம் என்ன?

2. கீழமை நீதிமன்ற வளாகங்களில், பெண்களுக்குத் தனி ஒதுங்கிடங்கள், எந்த அளவில்  உள்ளன?

3. நீதிமன்றங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த, அரசு மேற்கொண்ட முயற்சிகள் யாவை?

4. அந்த முயற்சிகள் நிறைவேற, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு ஒதுக்கி இருக்கின்ற நிதி எவ்வளவு?

சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ அளித்த விளக்கம்

1 முதல் 4 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்.

நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அடிப்படைப் பொறுப்பு, மாநில அரசுகளின் கடமை ஆகும். மாநில அரசுகளின் வளங்களைப் பெருக்க, ஒன்றிய அரசு, ஏற்கனவே வகுக்கப்பட்ட நிதிப் பகிர்வு முறைமைகளின் அடிப்படையில், நீதித்துறைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகளை அளித்து வருகின்றது. இந்தத் திட்டம், 1993-04 நிதி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ், இன்றுவரையிலும், 8709 கோடி ரூபாய், மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. நீதிமன்ற அறைகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு வீடுகள் மற்றும் துணை நீதிமன்றங்களுக்கு, இந்தத் தொகை செலவிடப்படுகின்றது.

இந்தத் திட்டத்தை, 01.04.2021 முதல் 31.03.2026 வரையிலான, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து இருக்கின்றது; அதற்காக, ரூ 9000 கோடி நிதி ஒதுக்கி இருக்கின்றது; அதில் ஒன்றிய அரசின் பங்கு 5307 கோடி ரூபாய் ஆகும். மேலும், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் ஒதுங்கிடங்கள், கணினி அறைகள், வழக்குஉரைஞர்கள் அமரும் கூடம் ஆகியவற்றைக் கட்டும் வகையில், இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்றப் பதிவாளரின் கணக்குப்படி, நாடு முழுமையும் 26 விழுக்காடு நீதிமன்ற வளாகங்களில் பெண்களுக்குத் தனி ஒதுங்கிடங்கள் இல்லை. உயர்நீதிமன்றங்களின் கணக்குப்படி, 20,565 நீதிமன்ற அறைகள், 18,142 குடியிருப்புகள், மாவட்ட மற்றும் துணை நீதிமன்ற வளாகங்களில் உள்ளன. இது, 31.10.2021 வரையிலான கணக்கு. மேலும், 2841 நீதிமன்ற அறைகள், 1807 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

‘தாயகம்’                                            தலைமை நிலையம்
சென்னை - 8                                      மறுமலர்ச்சி தி.மு.க
10.12.2021

No comments:

Post a Comment