Monday, October 10, 2022

முலாயம் சிங் யாதவ் மறைவு! தலைவர் வைகோ இரங்கல்!

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத் தலைவரும், என்னிடம் அளவற்ற அன்பு செலுத்திய பண்பாளருமான முலாயம்சிங் யாதவ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரிதும் அதிர்ச்சியுற்றேன்.
உத்திரப்பிரதேச மாநில முதல்வராகவும், இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றிய முலாயம்சிங் யாதவ் அவர்கள் 10 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர் ஆவார்.
டாக்டர் ராம் மனோகர் லோகியா, முழுப் புரட்சி நாயகர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜ் நாராயணன் ஆகிய தலைவர்களிடம் அன்பு செலுத்தி, அவரது வழியில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர் முலாயம்சிங் யாதவ்.
1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிய முலாயம் சிங் யாதவ் அவர்கள், 19 மாத காலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு தியாக சரித்திரம் படைத்தார்.
திபேத்திய விடுதலையையும், தலாய் லாமா அவர்களையும் ஆதரித்து, திபேத் நாட்டின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை ஆகியவைகளை வற்புறுத்தியவர் முயலாம்சிங் யாதவ்.
பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூக நீதியை நிலைநாட்டவும், ஜனநாயக நெறிமுறைகளுக்காகவும், மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்ட முலாயம் சிங் யாதவ் அவர்களின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பாகும்.
அவரது பிரிவால் வாடும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சி தோழர்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை - 8
10.10.2022

No comments:

Post a Comment