Sunday, June 23, 2024

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும், 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு; தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும். துரை வைகோ MP!

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும், 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு; தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும். துரை வைகோ MP!

இலங்கை கடற்படையினால் இராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 22 பேர் இன்று கைது செய்யப்பட்டதோடு அவர்களின் மூன்று விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இதேப்போல, கடந்த வாரம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதோடு, அவர்களின் ஒரு விசைப்படகும் சிறைபிடிக்கப்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2024 வரை, 150 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு மட்டும் 40 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், இந்த மீன்பிடி தடைக்காலம் முடிந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்ற 26 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதோடு, 4 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இலங்கை கடற்படையின் அட்டூழியச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கின்றது.
தமிழக மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்து வருவதால்தான் எந்தவித அச்சமும் இன்றி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றார்கள்.
ஒன்றிய பாஜக அரசு இப்பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்தி தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கும், வாழ்வாதாரத்திற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அரசோடு பேசி கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக அரசும் ஒன்றிய அரசிற்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
23.06.2024

No comments:

Post a Comment