Sunday, June 16, 2024

தியாகத் திருநாள் பக்ரீத் நல்வாழ்த்துகள்..! துரை வைகோ!

மதங்களின் தாயகமாகத் திகழும் ஆசியா கண்டத்தில் தோன்றிய இஸ்லாம் மார்க்கம் ஈமான், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் பயணம் என்னும் ஐந்து பெரும் கடமைகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் மார்க்கத்தை போதித்த நபி ஹஜ்ரத் இப்ராஹிம் பெருமகனார் ஏக இறைவன் கொள்கையில் தீவிர நாட்டமுடையவர். நீண்ட காலமாக குழந்தை பேறு இல்லாத தம்பதியினருக்கு இறைவன் அருளால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு இஸ்மாயில் எனப் பெயரிட்டு மகிழ்ந்தார்கள்.

ஒருநாள் நபி இப்ராஹிம் அவர்கள் இறைவன் கட்டளையை ஏற்று தன் மகனை பலி கொடுப்பதாக கனவு கண்டார். இதுபற்றி தன்னுடைய மகன் இஸ்மாயிலிடம் தெரிவித்தார். அதற்கு எவ்வித மறுப்புமின்றி இஸ்மாயில் உவகையுடன் உடன்பட்டார். நபி ஹஜ்ரத் இப்ராஹிம் தன் மகன் இஸ்மாயிலை வெட்டி பலி கொடுக்க முயன்றார்.

அந்த நேரத்தில் ஜிப்ரில் தோன்றி இதனை தடுத்ததோடு, இஸ்மாயிலுக்கு பதிலாக 'ஆட்டை பலியிடு, அனைவருக்கும் பகிர்ந்து கொடு' என கட்டளை பிறப்பித்தார். இந்த நாளையே இஸ்லாமிய பெருமக்கள் பக்ரீத் பெருநாளாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் இறை பக்தியில் மட்டுமின்றி தியாகத்திலும் ஈகையிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்பதையே இறை தூதர் நபி இப்ராஹிமின் இந்த செயல்பாடு நமக்கு உணர்த்துகிறது. 

இந்தப் பெருநாளில் அன்பு, மனிதநேயம், சகோதரத்துவம் தழைத்தோங்கி சாதி, மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ உறுதியேற்போம்.

உலகம் முழுவதும் பரவி வாழும் இஸ்லாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க சார்பில், தியாகத் திருநாள் பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

துரை வைகோ எம்.பி.,

முதன்மைச் செயலாளர்

மறுமலர்ச்சி திமுக

16.06.2024

No comments:

Post a Comment