Monday, November 9, 2020

செய்தியாளர் மோசஸ் படுகொலை; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவு. வைகோ அறிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் நடைபெறுவதைச் செய்தியாக வெளியிட்டதற்காக, தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் என்ற 27 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.

தனக்குக் கொலை மிரட்டல்கள் வந்தபோது, காவல்நிலையத்தில் தெரிவித்து உள்ளார். அவருக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை. எனவே, நேற்று (08-11-2020) இரவு வீட்டில் இருந்த மோசஸை வீட்டுக்கு வெளியே வரவழைத்த ரவுடி கும்பல் ஒன்று, அவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளது.

தமிழகத்தில் ஊடகங்களின் செய்தியாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே இந்தப் படுகொலை எடுத்துக் காட்டுகின்றது.

தமிழகம் முழுமையுமே சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. கடந்த மாதம் ஒரே வாரத்தில் மதுரையில் 20 பேர் வெட்டிக் கொல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து படுகொலைச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் கைகள் ஓங்கியுள்ளன. பொதுமக்கள் இடையே அச்ச உணர்வு மேலோங்கி இருக்கின்றது. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கின்ற முதல்வர், கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடும் தண்டனை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட மோசஸ் குடும்பத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பு ஈட்டுத் தொகை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.11.2020

No comments:

Post a Comment