Wednesday, November 25, 2020

கணிதம், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கான தேசிய தகுதித் தேர்வை மாற்றுத் தேதியில் நடத்துக! வைகோ வலியுறுத்தல்!

அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையம் (Council of Scientific and Industrial Research University Grants Commission)  சார்பில், கணிதம் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு நாளை (26.11.2020)தேசிய தகுதித் தேர்வு ( (CSIR - NET))நடைபெற உள்ளது. 

இந்த ஆண்டிற்கான தேசிய தகுதித் தேர்வை நவம்பர் 19, 21, 26 ஆகிய தேதிகளில் நடத்த இந்திய தேர்வு முகமை திட்டமிட்டு இருந்தது. திட்டமிட்டபடி நவம்பர் 19, 21 ஆகியத் தேதிகளில் தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், நிவர் புயல் காரணமாக நாளை நடைபெற உள்ள தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. 

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பேருந்து, இரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. இதன் காரணமாக, உரிய நேரத்தில் மாணவர்கள் தேர்வு மையங்களைச் சென்றடைய முடியாது. 

கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணி புரிவதற்கான தகுதித் தேர்வாகவும், முனைவர் பட்ட ஆய்வு மாணவராக பதிவு செய்வதற்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆய்வாளர் உதவித் தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் இந்த தேர்வு அமைந்திருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த தேர்வாக கருத வேண்டியுள்ளது. 

'நிவர்' புயல் காரணமாக, நாளை நடைபெற உள்ள தேசிய தகுதித் தேர்வை தமிழக மாணவர்களால் எழுத இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. 

ஆகவே, தமிழக மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு தேசிய தேர்வு முகமையுடன் கலந்தாலோசித்து உடனடியாக மாற்றுத் தேதியில் தேர்வு நடத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
25.11.2020

No comments:

Post a Comment