Friday, December 31, 2021

வைகோ MP புத்தாண்டு வாழ்த்து!

2021 ஆம் ஆண்டு அரசியலில் தமிழர்களுக்கு வசந்தத்தின் வெளிச்சம் பிரகாசித்த ஆண்டாகும்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாள் என்று முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததோடு, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்று டாக்டர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்ட முள்ளை அகற்றி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புதிய விடியலை தமிழக முதல்வர் பிரகடனம் செய்தது நூற்றாண்டு கால திராவிட இயக்கத்திற்கு ஒளி சேர்ப்பதாகும்.

ஆனால், இலங்கைத் தீவை வளைத்து, தன்னுடைய ஆதிக்கத்திற்குக் கீழே கொண்டுவந்து அநீதி விளைவிப்பதற்கு சீன அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்பட்டு சிங்களச் சிறைகளில் அடைக்கப்படுவதும் தொடர்கதையாகி விட்டது. இதைத் தடுப்பதற்கு மோடி அரசு சிறு துரும்பைக்கூட தூக்கிப்போடவில்லை.

ஈழத் தமிழர் இனப்படுகொலை நடத்தப்பட்டதன் தொடர்ச்சி இன்னும் நின்றபாடு இல்லை. சிங்களவரின் அடிமை நுகத்தடியிலிருந்து தமிழர்கள் விடுபடவும், சுதந்திரமான தமிழ் ஈழம் அமையவும், சிங்களவர் நடத்திய இனக்கொலைக்கு உரிய பன்னாட்டு விசாரணை நடைபெறவும், தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவும் வேண்டிய நடவடிக்கைகளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் 2022 உதயத்தில் சூளுரைப்போம்.

கொரோனா, ஒமைக்ரான் உள்ளிட்ட நோய்களின் பிடியிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியம் பெறவும் தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி பெறட்டும்.

சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூகநீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
31.12.2021

Friday, December 24, 2021

கிறிஸ்துமஸ் வாழ்த்து! - வைகோ MP!

உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் நன்னாள், மனித குமாரனாக மண்ணில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த புனித குமாரனின் வருகையைப் போற்றி உலகமே கொண்டாடும் திருநாள்.

நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று ஆறுதல் கூறி துன்பத்தில் துடித்தோரை அரவணைத்தவர் ஏசுபெருமான்.

ஒருவனின் தாய் மகனைத் தேற்றுவதைப் போல நான் உன்னைத் தேற்றுவேன் என்று பேசியவர், “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, நீங்கள் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்” என்று உடைந்த உள்ளங்களுக்கு நம்பிக்கையை விதைத்தவர் ஏசுபெருமான்.

கிறித்தவப் பாதிரியார்களும், பெருமக்களும் செந்தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றினர். திராவிட மொழிகளின் மூல மொழி தமிழ் என்பதை ஆதாரங்களோடு கால்டுவெல் நிலைநாட்டினார். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை அரவணைத்துக்கொண்டு ஆறுதல் வழங்கினார்கள்.

இரட்சகர் ஏசுபெருமான் மலைமேல் நின்று அமுதமொழிகளாகப் பொழிந்த கருத்துக்கள் மோதல்களும், அக்கிரமங்களும், சுயநலப் பேராசையும், அலைக்கழிப்பும் கொண்ட இன்றைய உலகத்துக்கு நல்வழி காட்டுகின்றன. சாந்த குணம் உள்ளவர்களாக, நீதியின்மேல் பசி தாகம் உள்ளவர்களாக சிறுமைப்படுகின்றவர்களுக்கு இரக்கம் உள்ளவர்களாக, இருதயத்தில் சுத்தம் உள்ளவர்களாக நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்றவர்களாக வாழ வேண்டும் என்றும், அப்படி வாழ்கின்றவர்கள் உலகத்துக்கு வெளிச்சமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதை ஏற்று வாழ்ந்த உத்தமர்கள் அவற்றை மெய்யாக்கி இருக்கிறார்கள்.

மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் கலவரங்களும், இரத்தக் களறிகளும் மனித சமுதாயத்திற்குப் பேராபாயமாக அச்சுறுத்தும் ஆபத்திலிருந்து விடுபடுவதற்கு ஏசுநாதரின் அறிவுரைகள் மிகவும் இன்றியமையாதவை ஆகும்.

சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியபோதும், அன்பின் சிகரமாகவே திகழ்ந்தார்.

மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம் எனக் கூறி, கிறித்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
24.12.2021

நீலகிரி தேயிலைத் தோட்டத் தொழிலாளர் நலன் காக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன? வைகோ MP கேள்வி: அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 2284 (17.12.2021)

கீழ்காணும் கேள்விகளுக்கு, வணிகம், தொழில்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. தேயிலை மற்றும் காபித் தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்க, குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் நலன் காக்க, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்; அதுகுறித்து, கடந்த 3 ஆண்டுக்காலப் புள்ளிவிவரங்கள் தருக.

2. மருத்துவக் கருவிகள், உயர்கல்வி, குறிப்பாக, தமிழ்நாட்டின் நீலகிரி மலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்க அரசு மேற்கொண்ட சிறப்புத் திட்டங்கள் குறித்த விவரங்கள் தருக.

3. இல்லை என்றால், அதற்கான காரணங்கள் தருக.

வணிகம், தொழில்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் அளித்த விளக்கம்

1 முதல் 3 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

தேயிலை மற்றும் காபித் தோட்டத் தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் நல்வாழ்விற்கான நடவடிக்கைகள், 1951 தோட்டத் தொழிலாளர் சட்டத்தின்படி மேற்கொள்ளப்படுகின்றன. அந்தச் சட்டத்தின்படி, வேலை தருவோர், தொழிலாளர்களுக்கு, வீடு, மருத்துவ வசதிகள், பேறுகால உதவிகள் மற்றும் இதுபோன்ற சமூகநல உதவிகளை வழங்குதல் வேண்டும். தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி, குடிநீர், உணவகங்கள், குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் மனமகிழ் மன்ற நிகழ்வுகள் போன்ற வசதிகள், ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன.

தோட்டத் தொழிலாளர் சட்டம் தவிர வேறு பல பாதுகாப்புச் சட்டங்களும் உள்ளன.

1. உழைப்போருக்கான இழப்பு ஈட்டுச் சட்டம் 1923 (Workmen s Compensation Act,1923)

2. பணிக்கொடைச் சட்டம் (Payment of Gratuity Act 1972)

3. பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் (The Emloyees Provident fund & Miscellaneous Provisions Act 1952)

4. அசாம் தேயிலைத் தோட்ட வருங்கால வைப்பு நிதி, ஓய்வு ஊதிய நிதி, மற்றும் வைப்பு இணைக்கப்பட்ட காப்பு ஈட்டு நிதிச்சட்டம் 1955 (அசாமுக்கு மட்டும்) Assam Tea Plantation Provident Fund, Pension fund and Deposit Linked Insurance Fund Scheme Act 1955)

ஊக்கத்தொகை வழங்கும் சட்டம் 1965 (Payment of Bonus Act 1965),

ஊதியச் சட்டம் 1936 (Payment of Wages Act 1936),

ஆகிய சட்டங்களின்படி, தோட்டத்தொழிலாளர்களுக்குப் பல்வேறு உதவிகள், பணிக்கொடை, ஊக்கத்தொகை, வருங்கால வைப்பு நிதி, சம ஊதியம் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்தச் சட்டங்களின் விதிகள், இப்போது தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலைநிலைமைகள் குறியீடு 2020, சமூகப் பாதுகாப்புக் குறியீடு, தொழில்துறை உறவுகளின் குறியீடு 2020 மற்றும் ஊதியக் குறியீடு 2020 ஆகிய நான்கு குறியீடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நிகழும் ஆண்டில், தேயிலை வாரியம் மற்றும் காபி வாரியம் ஆகியவை, நீலகிரி மலைப்பகுதியில் மேலும் பல நலத்திட்டங்கள், தொழிலாளர்களின் குழந்தைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்புப் பயிற்சிகள், நீலகிரி மலை தேயிலை மற்றும் காபித் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, தேயிலை விரிவு மற்றும் வளர்ச்சித் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த காபி வளர்ச்சித் திட்டங்களின் கீழ் ஏற்பாடு செய்துள்ளன.

மேற்கண்ட திட்டங்களின்படி, தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கு உடல்நலன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
22.12.2021

Tuesday, December 21, 2021

தமிழ்நாட்டு அச்சகங்கள் பாதிப்பு; வேலைவாய்ப்புகள் இழப்பு! வைகோ MP அறிக்கை*

தமிழ்நாடு அரசின் பாடநூல்களை அச்சிடுகின்ற சிறு, குறு அச்சுத் தொழிற்கூடங்கள்,  சென்னை, சிவகாசி மற்றும் பல ஊர்களில் இயங்கி வருகின்றன. கொரோனா முடக்கக் காலத்திலும், எத்தனையோ இடையூறுகளுக்கு நடுவே பணியாற்றி, புத்தகங்களை அச்சிட்டு, தமிழ்நாடு முழுமையும் கொண்டு போய்ச் சேர்த்து இருக்கின்றனர். அச்சுத் தொழிற்கூடங்கள் மட்டும் அன்றி, அது சார்ந்த ink. plate, chemical போன்ற பல்வேறு சிறு தொழிற்கூடத்தினரும், அரசின் தேவை கருதி, உழைத்து இருக்கின்றனர்.

தீப்பெட்டிகள், பட்டாசுகள் மட்டும் அன்றி, சிவகாசி தொழில் நகரம், அச்சுக் கலையிலும், புகழ்பெற்று இருக்கின்றது. ஜப்பான், ஜெர்மனி போன்ற முன்னேறிய நாடுகளில் இருந்து புதிய கருவிகளை இறக்குமதி செய்து, ஏராளமான அச்சகங்கள் இயங்கி வருகின்றன.

வானம் பார்த்த மண்ணாகிய சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் மேற்கண்ட தொழில்களின் மூலமாக இலட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருமே, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தையே சார்ந்து இயங்கி வருகின்றனர். ஆனால், முழுமையான வாய்ப்புகள் கிடைக்காமல், தொழில் கடனுக்காக வங்கிகளுக்கு மாதத் தவணை கட்ட முடியாமல், கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது அண்டை மாநிலங்களில் உள்ள அச்சகங்களிலும் புத்தகங்களை அச்சடித்து, கன்னியாகுமரி வரையிலும் அவர்களே புத்தகங்களைக் கொண்டு போய்ச் சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் ஏற்பாடுகள் செய்து இருக்கின்றது. இதனால், தமிழக அரசுக்கு 6 கோடி ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்படுகின்றது. தமிழ்நாட்டு அச்சகங்கள் பாதிக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில், அண்டை மாநிலங்களுக்கு ஒரு விழுக்காடு பணிகள் மட்டுமே தரப்பட்டன. அப்போது, சிவகாசியில், 53 சிறு குறு அச்சகங்கள் மட்டுமே இருந்தன. அவர்களே, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்திற்குத் தேவையான 99 விழுக்காடு நூல்களை, குறித்த காலத்திற்குள் அச்சிட்டு, மாநிலம் முழுமையும் பள்ளிகளுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். ஆனால், தற்போது, 48 வெப் ஆப்செட் அச்சகங்கள், 51 ஆப்செட் அச்சகங்கள் ஆக மொத்தம் 99 அச்சகங்கள் இயங்கி வருகின்றன; சென்னையில் 30 அச்சகங்கள் உள்ளன; அவற்றின் அச்சிடும் திறன் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இவர்கள், மேலும் வங்கிக் கடன் பெற்று, புதிய கருவிகளை நிறுவி இருக்கின்றனர். பட்டதாரிகள், பொறியாளர்கள், கணினிப் பொறியாளர்கள் என புதிதாக பல ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

இந்த அச்சகங்களில், பாடநூல்களைத் தவிர்த்து, வேறு எந்த வேலைகளும் செய்ய முடியாது.

அண்டை மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அச்சகங்கள் மட்டுமே, அரசின் டெண்டர்  பட்டியலில் உள்ளன; தமிழ்நாட்டு அச்சகங்கள் பங்கு பெற முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே, பிற மாநில அச்சகங்களும் பங்கேற்க முடியும் என்ற விதிமுறை உள்ளது. இதனால், தமிழ்நாட்டு அச்சுக்கூடங்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே, தமிழ்நாடு அரசு, இந்தப் பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்; சிறு குறு அச்சுத் தொழிற்கூடங்களைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
21.12.2021

Monday, December 20, 2021

பாஜக அரசு, தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை. வைகோ MP அறிக்கை!

தமிழ்நாட்டு மீனவர்கள் 55 பேரை, நேற்று இலங்கைக் கடற்படை கைது செய்து இருக்கின்றது; அவர்களுடைய 6 மீன்பிடிப் படகுகளைப் பறிமுதல் செய்து கொண்டு போயிருக்கின்றனர்.

1980 களில் தொடங்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களில், 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்று விட்டது.

அன்று முதல் இன்று வரையிலும், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், இதுகுறித்து நான் பேசி வருகின்றேன்; கேள்விகள் கேட்டு வருகின்றேன். இப்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில்கூட, நான் கேட்டு இருந்த கேள்விக்கு, அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார். (கேள்வி எண் 1350; நாள் 9.12.2021).

இலங்கைப் பிரதமருடன் இந்தியத் தலைமை அமைச்சர் பேசினார்; அயல் உறவுத்துறை அமைச்சர், இலங்கைக்குச் சென்று பேசினார்; அயல் உறவுத்துறைச் செயலர் இலங்கைக்குச் சென்று பேசினார்; கூட்டுப் பணிக்குழு அமைத்து, நான்கு சுற்றுகள் பேசி இருக்கின்றோம்; ஐந்தாவது சுற்று பேசப்போகின்றோம் என, அயல் உறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

இதுவரை நடந்த பேச்சுகளில் என்ன தீர்வு கண்டீர்கள்? இனி எதற்காகப் பேச வேண்டும்?

குஜராத் மீனவர் ஒருவரை, பாகிஸ்தான் கடற்படை தாக்கியது என்றவுடன், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை, அயல் உறவுத்துறை அமைச்சகத்துக்கு வரவழைத்து, கண்டனத்தைப் பதிவு செய்கின்ற பாரதிய ஜனதா கட்சி அரசு, தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற இலங்கைத் தூதரை அழைத்து எச்சரிக்கை செய்யாதது ஏன்?

கேரளத்தில் இரண்டு மீனவர்களைச் சுட்டுக்கொன்ற இத்தாலியர்களைச் சிறைப்பிடித்து, அந்த நாட்டிடம் இருந்து கோடிக்கணக்கில் இழப்பு ஈட்டுத் தொகை பெற்றுக் கொடுத்து இருக்கின்றார்கள். அதுபோல, இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இழப்பு ஈடு எதுவும் பெற்றுத் தந்தது இல்லை. அந்தக் கோரிக்கையைப் பலமுறை வலியுறுத்தியும் பயன் இல்லை.

கேளாக் காதினராக ஒன்றிய அரசு இருக்கின்றது; ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற மாற்றாந்தாய் மனப்போக்கைத்தான் அரசு கடைப்பிடித்து வருகின்றது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை; தீர்வு எதுவும் இல்லை; இந்தியக் கடற்படை தன் கடமையைச் செய்யவில்லை.

லண்டனில் உள்ள லிபிய நாட்டுத் தூதரகக் காவலர்கள், தவறுதலாக இங்கிலாந்து காவலர் ஒருவரைச் சுட்டுக்கொன்றதற்காக, அந்த நாட்டுடன் தூதரக உறவுகளை உடனே முறித்துக் கொள்வதாக இங்கிலாந்து நாடு உடனே அறிவித்தது.

நேற்று இலங்கைக் கடற்படை சிறைப்பிடித்த 55 மீனவர்களை இன்றைக்கே விடுதலை செய்ய வேண்டும்; இல்லாவிட்டால், இலங்கை அரசுடன் தூதரக உறவுகளை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும்; தமிழக மீனவர்களுக்கு இழப்பு ஈடு பெற்றுத் தருவதற்கு,  பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசு மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
20.12.2021

Sunday, December 19, 2021

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் என அரசாணை! மு.க.ஸ்டாலின் அரசுக்கு வைகோ MP பாராட்டு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் நாள், அவை விதி எண்: 110 ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “திமுக எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதோ அப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக, தமிழினத்தின் ஆட்சியாக இருந்துள்ளது” என்று பெருமிதம் கொண்டார்.

அதே நிலை தற்போதும் தொடர்வதற்கான பல அரசாணைகளை வெளியிட்டு வருகிறது திமுக அரசு.

இனி தமிழே தெரியாமல் எவரும் தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேர முடியாது என்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய விதிகள் மாற்றப்பட்டு, டிசம்பர் 1 ஆம் நாள் அரசாணை பிறப்பிக்கபட்டது.

அதற்கு முன்பு நவம்பர் மாதம் 1 ஆம் நாள், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் இருபது விழுக்காடு முன்னுரிமை அளிக்கும் விதிமுறைகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது.

தற்போது, தமிழ்த்தாய்  வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவித்து இருப்பது மு.க.ஸ்டாலின் அரசின் சாதனை மகுடத்தில் வைரமாக ஒளி வீசுகிறது.

தமிழ் தேசிய இனத்தின் தனித்துவத்தைப் பறைசாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய “நீராருங்  கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இனி அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக கட்டாயம் பாடப்பட வேண்டும்.

பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைவட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து, பயிற்சி பெற்றவர்களால் வாய்ப் பாட்டாக பாடப்பட வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்றும்  அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பது வாழ்த்திப் போற்றத்தக்கது.

இந்த அரசாணையின் மூலம், திமுக அரசு தமிழ் அரசு; தமிழ்த் தேசிய இனத்திற்கான அரசு என்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிலைநாட்டி இருப்பதற்கும், இந்த ஒற்றை அரசாணையின் மூலம் “நாம் யார்?“ என்று ஓங்கி சிலரின் முகத்தில் அறைந்து இருப்பதற்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.12.2021

பெட்ரோல், டீசல்: ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவீர்களா? வைகோ MP கேள்வி; அமைச்சர் விளக்கம்!

உடுக்குறிக் கேள்வி (starred question) எண் 164  (13.12.2021)

கீழ்காணும் கேள்விகளுக்கு, பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. எக்சைஸ் வரியைக் குறைத்தபின்பு, பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை நிலவரம் தேவை.

2. எந்தெந்த மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்தன?

3. மேலும் விலையைக் குறைக்க முடியாததற்குக் காரணங்கள் என்ன?

4. பொதுமக்கள் நலன் கருதி, பெட்ரோல், டீசல் விலையை, ஜிஎஸ்டி வரி வரையறைக்குள் கொண்டு வரும் திட்டம் உள்ளதா? இல்லை என்றால், அதற்கான காரணங்கள் தருக.

பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அளித்த விளக்கம்

1 முதல் 3 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்.

பெட்ரோல், டீசல் விலையை, சந்தை நிலவரப்படி தீர்மானிக்க, 26.06.2010 மற்றும் 19.10.2014 ஆகிய நாள்களில் அரசு முடிவு செய்தது. அன்று முதல், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், பன்னாட்டு நிலவரத்திற்கு ஏற்பவும், வரிக் கட்டமைப்பு, அயல்நாட்டுச் செலாவணி மதிப்பு, உள்நாட்டுப் போக்குவரத்து மற்றும் இதுபோன்ற காரணிகளின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை, அவ்வப்போது மாற்றி அறிவித்து வருகின்றன. எனவே, பன்னாட்டுச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல் விலை மாறுகின்றது. 2017 ஆம் ஆண்டு, ஜூன் 16 ஆம் நாள் முதல், நாடு முழுமையும், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை ஆய்வு செய்து, மாற்றங்களை அறிவிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

2021 இல் ஒன்றிய அரசு, பெட்ரோலுக்கு ரூ 5, டீசலுக்கு ரூ 10 விலைக் குறைப்பு செய்தது. பொருளாதார  நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், பணவீக்கத்தைக் குறைக்கவும், ஏழை, எளிய மக்கள் நுகர்வினை மேம்படுத்தவும், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. பல மாநிலங்கள், ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளன; இதர மாநிலங்கள் குறைக்கவில்லை.

நவம்பர் 3 ஆம் நாள் நிலவரப்படி, வரிக்குறைப்பிற்குப் பிந்தைய, பெட்ரோல், டீசலின் சில்லறை விலை, மாநிலவாரிப் பட்டியல், இணைப்பு 1 இல் தரப்பட்டுள்ளது.

டிசம்பர் 2021 நிலவரப்படி, வாட் வரியைக் குறைத்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல், இணைப்பு 2 இல் தரப்பட்டுள்ளது.

கேள்வி 4 க்கான விளக்கம்:

அரசு அமைப்புச் சட்டம் பிரிவு 279A இன் படி, பெட்ரோலியக் கச்சா எண்ணெய், உயர்தர டீசல், மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்), இயற்கை எரிகாற்று மற்றும் வான் ஊர்திகளுக்கான எரிபொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை, எந்த நாள் முதல் நடைமுறைக்குக் கொண்டு வருவது என்பது குறித்து ஜிஎஸ்டி மன்றம்தான், முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.

மேலும், ஒன்றிய ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 9(2) இன் படி, மேற்கண்ட பொருள்களை, ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு, ஜிஎஸ்டி மன்றத்தின் பரிந்துரை தேவை. ஆனால் இதுவரை, அத்தகைய பரிந்துரை எதுவும், ஜிஎஸ்டி மன்றத்திடம் இருந்து கிடைக்கப் பெறவில்லை.

இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.12.2021

Wednesday, December 15, 2021

அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அவர்களுடன் வைகோ MP சந்திப்பு!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நேற்று மாலை 7.00 மணி அளவில், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அவர்களை, சா°திரி பவன் அலுவல் அகத்தில் சந்தித்தார். 

அப்போது அவர் அளித்த கோரிக்கை விண்ணப்பம்.

மாண்புமிகு அமைச்சர் அன்புச்சகோதரர் மாண்புமிகு ஹர்தீப் சிங் புரி அவர்களுக்கு,
வணக்கம்.

தமிழ்நாட்டில், எண்ணெய் மற்றும் எரிகாற்றுக் குழாய்கள் பதிக்கும் பணிகள்,  கீழ்காணும் இடங்களில் விரைவில் தொடங்க இருக்கின்றன.  

1. இருகூர் - தேவனகொந்தை - பாரத் பெட்ரோலியம்.

2. கொச்சி - கூட்டநாடு கெயில்

தமிழ்நாட்டில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில், இந்தக் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அந்தக் குழாய்களை, விவசாய நிலங்களுக்கு உள்ளே பதிக்க இருக்கின்றார்கள். இதனால், விளைநிலங்களும்,  வேளாண் மக்களின் வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படும். மேற்கண்ட மாவட்டங்களில் வேளாண் நிலங்களின் சந்தை மதிப்பைச் சார்ந்து வாழ்கின்ற 30000 விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கெயில் திட்டம், விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக, இன்றுவரையிலும் செயல்படுத்த முடியவில்லை.

விவசாயிகளின் எதிர்ப்பை உணர்ந்து, 2013 ஆம் ஆண்டு, அப்போதைய தமிழ்நாடு முதல் அமைச்சர், கெயில் நிறுவனத்தின் கொச்சி-கூட்டநாடு திட்டத்திற்காக, எண்ணெய் மற்றும் இயற்கை எரிகாற்றுக் குழாய்களை, சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில், ஓரமாகப் பதிக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றினார். அவ்வாறு, இதற்கு முன்பு எத்தனையோ இடங்களில், சாலைகளின் ஓரமாகவே குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றன. அண்மையில், தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி-தர்மபுரி இடையே, 80 கிலோ மீட்டர் தொலைவிற்கு, சாலை ஓரமாகவே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட இரு திட்டங்களும், வணிக நோக்கம் கொண்டவை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது.  

எனவே, பாதிக்கப்படுகின்ற உழவர்களின் சார்பில், கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கின்றேன்:

1. சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் அருகில், பயன்பாட்டுத் தாழ்வாரங்களை உருவாக்க (Utility Corridors) வேண்டும்.

2. அதைப் பயன்படுத்தி, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் இருகூர்-தேவனகொந்தை மற்றும் கெயில் நிறுவனத்தின் கொச்சி -கூட்டநாடு எண்ணெய் இயற்கை எரிகாற்றுக் குழாய்களை, சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரமாகவே பதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

வைகோ அவர்கள் இவ்வாறு தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
15.12.2021

Friday, December 10, 2021

நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தஅரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன? வைகோ கேள்வி: சட்ட அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் 598 (2.12.2021)

கீழ்காணும் கேள்விகளுக்கு, சட்ட அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. கீழமை நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லை என, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கருத்துக் கூறி இருக்கின்றார். அவ்வாறு இருப்பின், அதுகுறித்து, அரசின் விளக்கம் என்ன?

2. கீழமை நீதிமன்ற வளாகங்களில், பெண்களுக்குத் தனி ஒதுங்கிடங்கள், எந்த அளவில்  உள்ளன?

3. நீதிமன்றங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த, அரசு மேற்கொண்ட முயற்சிகள் யாவை?

4. அந்த முயற்சிகள் நிறைவேற, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு ஒதுக்கி இருக்கின்ற நிதி எவ்வளவு?

சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ அளித்த விளக்கம்

1 முதல் 4 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்.

நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அடிப்படைப் பொறுப்பு, மாநில அரசுகளின் கடமை ஆகும். மாநில அரசுகளின் வளங்களைப் பெருக்க, ஒன்றிய அரசு, ஏற்கனவே வகுக்கப்பட்ட நிதிப் பகிர்வு முறைமைகளின் அடிப்படையில், நீதித்துறைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி உதவிகளை அளித்து வருகின்றது. இந்தத் திட்டம், 1993-04 நிதி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ், இன்றுவரையிலும், 8709 கோடி ரூபாய், மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. நீதிமன்ற அறைகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு வீடுகள் மற்றும் துணை நீதிமன்றங்களுக்கு, இந்தத் தொகை செலவிடப்படுகின்றது.

இந்தத் திட்டத்தை, 01.04.2021 முதல் 31.03.2026 வரையிலான, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து இருக்கின்றது; அதற்காக, ரூ 9000 கோடி நிதி ஒதுக்கி இருக்கின்றது; அதில் ஒன்றிய அரசின் பங்கு 5307 கோடி ரூபாய் ஆகும். மேலும், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் ஒதுங்கிடங்கள், கணினி அறைகள், வழக்குஉரைஞர்கள் அமரும் கூடம் ஆகியவற்றைக் கட்டும் வகையில், இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

உச்சநீதிமன்றப் பதிவாளரின் கணக்குப்படி, நாடு முழுமையும் 26 விழுக்காடு நீதிமன்ற வளாகங்களில் பெண்களுக்குத் தனி ஒதுங்கிடங்கள் இல்லை. உயர்நீதிமன்றங்களின் கணக்குப்படி, 20,565 நீதிமன்ற அறைகள், 18,142 குடியிருப்புகள், மாவட்ட மற்றும் துணை நீதிமன்ற வளாகங்களில் உள்ளன. இது, 31.10.2021 வரையிலான கணக்கு. மேலும், 2841 நீதிமன்ற அறைகள், 1807 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

‘தாயகம்’                                            தலைமை நிலையம்
சென்னை - 8                                      மறுமலர்ச்சி தி.மு.க
10.12.2021

Thursday, December 9, 2021

வைகோ MP கோரிக்கை ஏற்பு!

ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆலோசனைக் குழு கூட்டம் (Consultative Committee Meeting) நாடாளுமன்றத்தின் இணைப்புக் கட்டடத்தில் இன்று (08.12.2021) காலை 9 மணிக்கு, ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ பங்கேற்றார்.

அமைச்சர், அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தியில் பேசினர்.

அப்போது வைகோ குறுக்கிட்டு, “இங்கே எல்லோரும் இந்தியில் பேசுகின்றார்கள; நான் எப்படித் தெரிந்து கொள்வது?” என்று கேட்டார்.

அதற்கு அமைச்சர் மன்சுக் மாண்டவியா,

“மூத்த உறுப்பினர் ஆகிய தாங்கள் இன்று இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது எங்களுக்கு மகிழ்ச்சி.

வழக்கமாக வரவேண்டிய மொழிபெயர்ப்பாளர் இன்று வரவில்லை.

எனவே, உங்கள் வேண்டுகோளை ஏற்று இந்தக் கூட்டத்தில் எல்லோரும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என சொன்னார்.

அதன் பிறகு பேசிய உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

மற்ற மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், வைகோ அவர்களை வரவேற்றுப் பேசினர். 

வழக்கமாக இதுபோன்ற கூட்டங்களில், மொழிபெயர்ப்பாளர் ஒருவர், மொழி பெயர்த்துச் சொல்வது வழக்கம்.

உறுப்பினர்கள் காதுகளில் ஒலிபெருக்கி அணிந்துகொண்டு அதன் வழியாக மொழிபெயர்ப்பைக் கேட்க முடியும்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
08.12.2021

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டம் கூடாது. வைகோ MP அறிக்கை!

இந்த உலகில் பழம்பெருமை மிக்க இடங்களுள் ஒன்றாக, ஐ.நா.மன்றம் அறிவித்து இருக்கின்ற, மேற்குத் தொடர்ச்சி மலை, தமிழ்நாட்டின் நீர் ஆதாரமாகத் திகழ்கின்றது. ஆனால், கடந்த ஒரு நூற்றாண்டாக அங்கே கடுமையான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. யானைகளின் காட்டு வழித் தடத்தை மறித்துக் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான சுற்றுலா விடுதிகளை, முழுமையாக இடித்துத் தகர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கின்றது. 

இந்த நிலையில், தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் கருங்கற் பாறையை வெட்டி எடுத்து குகை  குடைந்து, அங்கே நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில், கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இதனால் முல்லைப் பெரியாறு, இடுக்கி ஆகிய அணைகளில் விரிசல் ஏற்படும்.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை, உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தடை இன்மைச் சான்றை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட இறுத் தீர்ப்பில், திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கிய சுற்றுச்சூழல் சான்று செல்லும் என்றும் ஆனால், தேசிய காட்டு உயிர் வாரியத்தின் தடை இன்மைச் சான்று  பெறாமல் (NBWL)  திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டு இருந்தது.

திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் சான்று செல்லும் என்ற பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீடு, விசாரணையில் இருக்கின்றது. 

இந்த நிலையில், கடந்த மே 20ஆம் தேதி, இத்திட்டத்திற்கான காட்டு உயிர்கள் பாதுகாப்பு வாரியத்தின் தடை இன்மைச் சான்று கோரி, தமிழ்நாடு அரசின் வனத்துறையிடம் TATA INSTITUTE OF FUNDAMENTAL RESEARCH விண்ணப்பித்துள்ளது. 

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள அணைகளின் பாதுகாப்பு கேள்விக் குறி ஆகும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, இத்திட்டத்தை, Category A யின் கீழ்தான் பரிசீலிக்க முடியும் என்று அப்போதைய மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA)  கூறிய போதிலும், திட்டத்தை வெறும் கட்டுமானம் கட்டும் பிரிவில் அதாவது Category B என மாற்றி,  தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்று அறிவித்து, ஒன்றிய அரசே நேரடியாக  சுற்றுச்சூழல் சான்று வழங்கி இருந்தது.

தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் தமிழ்நாடு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியை மட்டும்  தவிர்த்து விட்டு, பிற பகுதிகள் அனைத்தையும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் ஒன்றிய அரசு அறிவித்தது. இப்படி தமிழ்நாடு அரசின் முடிவையும் மக்களின் எதிர்ப்பையும் மீறி இத்திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த முனைகின்றது. 

தமிழகத்தின் நீர் ஆதாரமாகத் திகழ்கின்ற மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கேடு விளைவிக்கும் இந்தத் திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தேன். நியூட்ரினோ வழக்கு எண். WP(MD) 733/2015 வழக்கு  தாக்கல் செய்த நாள் 20.01.2015, மேற்படி வழக்கு இறுதியாக மாண்புமிகு நீதிபதிகள்  தமிழ்வாணன், ரவி  ஆகியோர் முன்பு 26.03.2015அன்று விசாரணைக்கு வந்தது. முடிவில் அரசு தரப்பில் தடையின்மைச் சான்று (Clearance Certificate) வாங்கவில்லை என பதில் மனு  தாக்கல் செய்து இருந்தனர்.  ஆகவே,  நீதிமன்றம் தடை ஆணை  வழங்கி உள்ளது

2018 ஆம் ஆண்டு, மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என் தலைமையில் 13 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டோம். இந்த நடைபயணத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார் என்பதையும், 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியூட்ரினோ திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று அறிக்கை வாயிலாக அவர் வலியுறுத்தி இருந்தார் என்பதையும் நினைகூர விரும்புகின்றேன். 

எனவே, காட்டு உயிர்களுக்குக் கேடு இல்லை என, மாநில அரசிடம் சான்று கோரி இருக்கின்ற விண்ணப்பத்தை, தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது; ஏற்கெனவே வழங்கப்பட்ட வனத்துறை சான்றையும் திரும்பப் பெற வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு  அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து உரைத்து சுற்றுச்சூழல் சான்றுக்குத் தடை விதிக்கும் தீர்ப்பைப் பெறவும், தமிழ் நாடு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். 

தமிழ்நாட்டின் உரிமைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிக்காமல், ஒன்றிய அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தொடர்ச்சியாக முயற்சி செய்து  வருகின்றது. எனவே, இந்தத் திட்டத்திற்காகத் தமிழக அரசு வழங்கிய நிலத்தையும் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
08.06.2021

தமிழ்நாட்டில் பலத்த மழை வெள்ளப் பாதிப்பு: ஒன்றிய அரசு அளித்த உதவிகள் என்ன? நாடாளுமன்றத்தில் வைகோ, சண்முகம் கேள்விக்கு**உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த விளக்கம்!

08.12.2021
கேள்வி எண்: 1160

கீழ்காணும் கேள்விகளுக்கு, உள்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. அண்மையில், தமிழ்நாட்டில் பெய்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், குறிப்பாக கடற்கரைப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட நிதி உதவி கோரி, தமிழ்நாட்டு அரசிடம் இருந்து, கோரிக்கை விண்ணப்பம் ஏதேனும் வந்ததா?

2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்து அரசின் நிலை என்ன?

3. எத்தனை பேர் இறந்தார்கள்? எவ்வளவு மதிப்பு சொத்துகள் சேதம் அடைந்தன?

4. பாதிப்புகளைக் கண்டு அறியவும், எவ்வளவு உதவிகள் வழங்கலாம் எனப் பரிந்துரை செய்யவும், ஒன்றிய அரசின் சார்பில் ஏதேனும் குழு அனுப்பப்பட்டதா?

5. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.

உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த விளக்கம்

1 முதல் 5 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

ஆமாம். தமிழ்நாடு அரசு ஒரு கோரிக்கை விண்ணப்பம் கொடுத்து இருக்கின்றது. பலத்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட, ரூ 549.63 கோடி நிதி உதவி கேட்டு இருக்கின்றார்கள். 54 பேர் இறந்தனர்; 6871 கால்நடைகள் இறந்தன; வீடுகளுக்கும், 51025.64 ஹெக்டேர் பயிர்களுக்கும் சேதம் ஏற்பட்டு இருக்கின்றது.

பேரிடர் மேலாண்மைப் பொறுப்புகள், மாநில அரசின் கடமை ஆகும். அதன்படி, மாநில பேரிடர் மீட்பு நிதியத்தில் இருந்து, (State Disaster Response Fund (SDRF) ஒன்றிய அரசின் விதிமுறைகளின்படி இசைவு பெற்று, மாநில அரசு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.  

கூடுதலாக, தேசிய பேரிடர் மீட்பு நிதியத்திற்காக, வகுக்கப்பட்ட நெறிமுறைகளின்படி, கடுமையான பாதிப்புகளுக்கு, ஒன்றிய அரசின் அமைச்சகத்தின் சார்பில் அனுப்பப்படும் குழுவின் பரிந்துரையின்படி, நிதி உதவி வழங்கப்படுகின்றது.

அதன்படி, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய, ஒன்றிய அரசு ஒரு குழுவை அமைத்து இருக்கின்றது.  அந்தக் குழு, நவம்பர் மாதம், 21 முதல் 24 வரை  தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வெள்ளச்சேதத்தைப் பார்வையிட்டது.

அந்த குழு அளிக்கின்ற அறிக்கையின் அடிப்படையில் விதிமுறைகளின்படி நிதி உதவி வழங்கப்படும்.

மேலும் 2021-22 நிதி ஆண்டில், தமிழ்நாடு அரசுக்கு, SDRF நிதியில் இருந்து, 1088 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது.“அதில் ஒன்றிய அரசின் பங்கு 816 கோடி; மாநில அரசின் பங்கு 262 கோடி. ஒன்றிய அரசின் பங்கு, முன்னதாகவே இரண்டு தவணைகளில் 408 கோடி ரூபாய் வழங்கி இருக்கின்றது.

இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
09.12.2021

Monday, December 6, 2021

நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம்!

இன்று 6.12.2021 காலை 10.00 மணிக்கு, மாநிலங்கள் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களுடைய நாடாளுமன்ற அலுவல் அறையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார்.

மாநிலங்கள் அவையின் 12 உறுப்பினர்களை, இந்தக் கூட்டத் தொடர் முழுமையும் நீக்கி வைத்து இருப்பதை எதிர்த்து, இன்று அவையின் நடவடிக்கைகளை நடத்தக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில், மாநிலங்கள் அவையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்று உறுப்பினர்கள். முழக்கங்களை எழுப்பினார்கள். குறிப்பாக. வைகோ அவர்கள் உரத்த குரல் எழுப்பினார். கடந்த கூட்டத் தொடரில் நடைபெற்ற விவாதங்களுக்காக, இந்தக் கூட்டத் தொடர் முழுமையும் அவையில் இருந்து நீக்கி வைத்து இருப்பது ஜனநாயகப் படுகொலை என்று குறிப்பிட்ட வைகோ, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்; கொல்லாதே கொல்லாதே ஜனநாயகத்தைக் கொல்லாதே என தமிழில் முழக்கங்களை எழுப்பினார். தமிழ்நாடு. கேரளா, கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் இணைந்து கொண்டனர். வைகோ எழுப்பிய முழக்கங்கள் அவை முழுமையும் எதிரொலித்தது,

கூட்டத்தை நடத்த முடியாமல், அவை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் மாலை 4.00 மணிக்கு, அவை மீண்டும் கூடியபோது, நாகாலாந்து துப்பாக்கிச் சூடு குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்க அறிக்கை வாசித்தார்.

அப்பொழுது வைகோ குறுக்கிட்டு, நாகாலாந்தில் உங்கள் இராணுவம் அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்கின்றது; இங்கே உங்கள் அரசு ஜனநாயகத்தைப் படுகொலை செய்கின்றது என்று கூறினார்.

ஒவ்வொரு முறை சபை ஒத்திவைக்கப்பட்டபோதும், இதே நிலை நீடித்தது. எனவே, நாளை வரை, அவையின் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.12.2021

சட்ட மாமேதைக்கு வைகோ MP புகழ் வணக்கம்!

அரசு அமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளில்‌ நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க.பொதுச்செலாளர் வைகோ MP மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி புகழ் வணக்கம் செய்தனர்.

Saturday, December 4, 2021

வைகோ MP கோரிக்கை. நிதி அமைச்சர் நிர்மலா உறுதிமொழி!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நேற்று (3.12.2021) வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில்,நிதி அமைச்சர் நிர்மலா அவர்களை, நாடாளுமன்றக் கட்டடத்திற்கு உள்ளே இருக்கின்ற அவரது அலுவல் அறையில் சந்தித்தார்கள். 

அப்போது அவர் வழங்கிய கோரிக்கை விண்ணப்பம் வருமாறு...

1. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் வில்லிசேரி கிராமத்தில், 4500 பேர் வசிக்கின்றார்கள். சுற்றி உள்ள, சிவஞானபுரம், வாகைத்தாவூர், காப்புலிங்கம்பட்டி, தளவாய்புரம், சத்திரப்பட்டி,இடைசெவல், சவலாப்பேரி ஆகிய கிராமங்களுக்கு மையமாக இருக்கின்றது. சுமார் 10000 மக்கள் வசிக்கின்ற பகுதி. 

இந்தக் கிராமங்களில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட்டவர்கள், வளைகுடா நாடுகள், அமெரிக்கா, வியட்நாம், நியூசிலாந்து, மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் பணிபுரிகின்றார்கள். ஆண்டு வரவு செலவு 50 கோடி வரை புரள்கின்றது. 

எனவே, வங்கிக்குச் செல்ல வேண்டுமானால், 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி அல்லது 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கயத்தாறு ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். 

தற்போது வில்லிசேரியில் ஒரு கூட்டுறவு சொசைட்டி மட்டுமே உள்ளது. தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கிக் கிளை எதுவும் இல்லை. 

எனவே, வில்லிசேரி கிராமத்திற்கு கனரா அல்லது ஐஓபி வங்கிக் கிளை அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

2. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம்,நடுவக்குறிச்சி

100000, வல்லராமபுரம், கே.வி.ஆலங்குளம், குத்தாலப்பேரி, அருணாசலபுரம், தர்மத்தூரணி, சூரங்குடி, புதுக்கிராமம், தட்டாங்குளம், சந்திரகிரி, வென்றிலிங்காபுரம், சக்கரைக்குளம் ஆகிய ஊர்களுக்கு மையமாகத் திகழ்கின்றது. மொத்தம் 20000 பேர் வசிக்கின்றார்கள். 

இந்தப் பகுதியில் தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கி எதுவும் கிடையாது. 

எனவே, 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சங்கரன்கோவிலுக்குத்தான் செல்ல வேண்டும். 

இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 700 பேர் இந்தியப் படையில் பணிபுரிகின்றார்கள். வளைகுடா நாடுகளில் 750 பேர் வேலை செய்கின்றார்கள். ஆண்டு வரவு செலவு 25 கோடிக்கு மேல் நடைபெறுகின்றது. 

எனவே, நடுவக்குறிச்சியில் கனரா வங்கி அல்லது ஐஓபி வங்கியின் தேசிய அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். 

3. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெத்தேல்புரம், ஒரு பரபரப்பான வணிக மையம் ஆகும். சுற்றிலும் உள்ள, சேனன்விளை, செம்பொன்விளை, மேற்கு நெய்யூர், வழுதை அம்பலம், கோணங்காடு, படுவர்கரை, களிமார், நெய்யூர் மேக்கன்கரை, வர்தன்விளை உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு மையமாக பெத்தேல்புரம் விளங்குகின்றது. ஒட்டுமொத்தமாக 20000 மக்கள் வசிக்கின்றார்கள். பெத்தேல்புரத்தில், அரசு மருத்துவமனை, மேனிலைப்பள்ளி, அஞ்சல் அலுவல் அகம், கிராம நிர்வாக அலுவல் அகம், முந்திரி ஆலைகள், காய்கறிச் சந்தை, கூட்டுறவு பால் சொசைட்டி, சிபிஎ°இ என எத்தனையோ நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இந்தப் பகுதியில் வங்கிக் கிளைகள் எதுவும் இல்லை. கடந்த 29.07.2021 அன்று, பெத்தேல்புரத்தில் வங்கிக் கிளை அமைத்துத் தரக் கோரி ஏற்கனவே மின்அஞ்சல் வழியாகக் கோரிக்கை விடுத்துள்ளேன். எனவே, கனரா வங்கி, இந்தியன் அல்லது இந்தியன் ஓவர்சீ° வங்கி என ஏதேனும் ஒரு வங்கிக் கிளை அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். 

இவ்வாறு வைகோ கேட்டுக்கொண்டார். 

வங்கிக் கிளைகள் அமைத்துத் தருவதாக நிதி அமைச்சர் நிர்மலா உறுதி அளித்தார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
04.12.2021

ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது: அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், ஒன்றிய அரசு அலுவல் மொழிகளாக ஆக்குங்கள்! நாடாளுமன்றத்தில் வைகோ MP கோரிக்கை!

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் இன்று (03.12.2021) சுழிய நேரத்தின்போது, (Zero Hour) வைகோ ஆற்றிய உரை.

இந்தி பேசாத மாநிலங்களின் மக்கள் விரும்புகின்ற வரையிலும், இந்தியாவின் ஆட்சிமொழியாக, இந்தியுடன் ஆங்கிலமும் நீடிக்கும்; இந்தியைத் திணிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை, மறைந்த பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் வழங்கினார்.

அண்மையில், வாரணாசியில் நடைபெற்ற ராஜபாஷா மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள், கடிதங்கள் அனைத்தையும் இப்போது இந்தியில்தான் எழுதுகின்றோம்’ எனக் கூறி உள்ளார். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், உள்துறை அமைச்சகத்தின் கடிதங்கள் இந்தியில் மட்டுமே வருகின்றன.

இது ஒரு அடக்குமுறை ஆகும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, இந்தியைத் திணிக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருகின்றது.

மேலும், ஒன்றிய அரசு அறிவிக்கின்ற அனைத்துத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் பெயர்கள் அனைத்தும், இந்தியில் மட்டுமே இடம் பெறுகின்றன. அதற்கான, ஆங்கில மொழிபெயர்ப்பு வழங்கப்படுவது இல்லை. அதன் விளைவாக, இந்தி பேசாத மாநில மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அந்தத் திட்டங்களின் குறிக்கோள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை; எடுத்துச் சொல்ல முடியவில்லை. இந்தத் திட்டங்களுக்காக, ஒன்றிய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிடுகின்றது. ஆனால், அந்தத் திட்டங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், அதன் முழுமையான பயன்களை மக்கள் பெற முடியவில்லை.

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர்கள் சூட்டி வந்த நிலையை மாற்றி, இந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.

அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், இந்தியாவின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றோம். அண்மையில், பஞ்சாப் மாநிலச் சட்டமன்றம், பஞ்சாபி மொழிக்கு முதன்மை இடம் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி இருக்கின்றது.

எனவே, அரசு அமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும், ஒன்றிய அரசின் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்தபோது, அதற்கு எதிரான போராட்டம் எரிமலையாக வெடித்த நிலையில், எங்களின் மதிப்பிற்குரிய தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர், மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் இதே அவையில் பேசும்போது, தமிழ் ஆட்சி மொழி ஆக வேண்டும் என்று சொன்னார்.

அதே உணர்வுகள்தான் இன்றைக்கும் நீடிக்கின்றன. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மீது, நீங்கள் ஒருபோதும் இந்தியைத் திணிக்க முடியாது.

இவ்வாறு வைகோ பேசினார்.

அவரது பேச்சுக்கு இடையூறுகள் எழுந்தன. ஆனால், தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், தென் மாநிலங்களைச் சேர்ந்த பல உறுப்பினர்களும் வைகோவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மறுமலர்ச்சி தி.மு.க
தலைமை நிலையம்
‘தாயகம்’                                                   
சென்னை - 8                                             
03.12.2021

Friday, December 3, 2021

தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்படும்; அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வரைவை முற்றுமுழுதாக எதிர்க்கின்றேன்! மாநிலங்கள் அவையில் வைகோ MP!

அவைத்தலைவர் அவர்களே,

அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வரைவை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். இது, பொறுத்துக் கொள்ள முடியாத, இந்தியக் கூட்டு ஆட்சிக்கு எதிரான, இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான தாக்குதல் ஆகும்.

மனித குலத்திற்கான ஒழுக்க நெறிகளை வகுத்த திருவள்ளுவர், திருக்குறளின் வான் சிறப்பு எனும் அதிகாரத்தில், மழையின் சிறப்பை வரையறுத்துக் கூறுகின்றார்.

நீர் இன்றி அமையாது உலகு எனின், யார்யார்க்கும் வான் இன்றி அமையாது ஒழுக்கு.

இதன் பொருள்:
நீர் இல்லை என்றால், இந்த உலகம் இல்லை.
அதுபோல் மழை இல்லை என்றால், மனித வாழ்க்கை இல்லை.

பக்ரா நங்கல் அணைக்கட்டைத் திறந்து வைத்து உரை ஆற்றிய பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், ‘அணைகளே இந்த நாட்டின் ஆலயங்கள்’ என்று சொன்னார்.

இப்போது உலகில், சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, அணைகளைக் கட்டி இருக்கின்றது இந்தியா. இங்கே, 5254 அணைகள் உள்ளன. 44 அணைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்படுவதற்கு முன்பு, சென்னை மாகாண அரசில், பல அணைகள் கட்டப்பட்டன. ஆந்திர, கர்நாடக, கேரள மக்களை, நாங்கள் உடன்பிறப்புகளாகவே, அண்ணன், தங்கைகளாகவே கருதுகின்றோம். ஆனால் இப்போது அவர்கள் எங்களுக்குத் தண்ணீர் தர மறுக்கின்றார்கள்; கழுத்தை நெரிக்கின்றார்கள்.

இந்த அணைகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படுமானால், தமிழ்நாடு மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இது அணைகள் பாதுகாப்புச் சட்டம் அல்ல; பேரழிவை ஏற்படுத்தும் சட்டம்.

வலுஇழந்த அணைகள், உடையக் கூடும். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் தமிழகத்தில் சோழப் பெருவேந்தன் கரிகாலன் கட்டிய கல் அணை, இன்றைக்கும் அப்படியே பயன்பாட்டில் இருக்கின்றது. அதைப் பார்த்த ஜெர்மானியப் பொறியாளர்கள், ‘இந்த அணையை எப்படிக்  கட்டினார்கள்?’ என வியந்து போற்றினார்கள்.

கல்அணை, உலக அதிசயங்களுள் ஒன்று. இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் உறுதியாக நிற்கும்.

19 ஆம் நூற்றாண்டில், கடுமையான வறட்சி தாக்கியபோது, இலட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தார்கள். எனவே, கர்னல் பென்னி குயிக், சர் ஆர்தர் காட்டன், பொறியாளர் மெக்கன்சி போன்ற ஆங்கிலப் பொறியாளர்கள், பல அணைகளைக் கட்டினார்கள்.

கர்னல் பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணை, தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில் பரிதவித்துக் கொண்டு இருந்த விவசாயிகளுக்கு வாழ்வு அளித்து இருக்கின்றது.

ஆனால் நான் வேதனையோடு குறிப்பிட விரும்புகின்றேன்: ‘முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும்; வெள்ளத்திற்குள் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிடுவார்கள்’ என்று, கேரள மாநிலத்தில் தவறான தகவல்களைப் பரப்புகின்றார்கள். அது உண்மை அல்ல.

எனவே, இரண்டு மாநிலங்களுக்கும் இடையே எழுந்த பிரச்சினை, உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அவர்கள் இரண்டு அறிஞர்கள் குழுவை அமைத்தார்கள். ஒன்று எஸ்.எஸ்.பிரார் குழு, மற்றொன்று டி.கே. மிட்டல் குழு. இறுதியாக, நீதிபதி ஆனந்த், நீதிபதி ஏ.ஆர். இலட்சுமணன், நீதிபதி தாமஸ் ஆகிய மூவர் குழு, அணையைப் பார்வையிட்டது. எத்தகைய நில நடுக்கத்தையும் தாங்கக்கூடிய அளவிற்கு அணை வலுவாக இருக்கின்றது என அறிக்கை தந்தனர்.

ஆயினும், தவறான பரப்பு உரைகளின் விளைவாக, ‘அணையை உடைப்போம்; மக்களைக் காப்போம்’ என்ற முழக்கங்கள் கேரளத்தில் எழுப்பப்படுகின்றன.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; தமிழகம் கேட்டுக்கொண்டபடி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம்; பிறகு 152 அடிக்கு உயர்த்தலாம் என்று சொன்னது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் ஏராளமான சுற்றுலா விடுதிகளை புதிதாகக் கட்டி இருக்கின்றார்கள். அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், அந்தக் கட்டுமானங்கள் பாதிக்கப்படும் என்பதற்காக, அவர்கள்தான் அணையின் உறுதித்தன்மை குறித்து பொய்யான தகவல்களை மக்கள் இடையே பரப்புகின்றார்கள். எனவே சிலர், சுத்தியல் இரும்புத் தடிகளோடு சென்று, அணையைத் தாக்கித் தகர்க்க முயற்சித்தார்கள்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், எங்களுடைய மாநில எல்லைக்கு உட்பட்ட பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என, கேரளச் சட்டமன்றம் தீர்மானம் இயற்றியது.

இப்போதும் அவர்கள், முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் எனக் கோரி வருகின்றார்கள்.

அப்படி அணை உடைக்கப்பட்டால், அதன்பிறகு அவர்கள் எங்களுக்குத் தண்ணீர் தர மாட்டார்கள். தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்கள் பாலை மணல்வெளியாக மாறிவிடும்.

1960 களில், பரம்பிக்குளம் ஆழியாறு தொடர்பாக, தமிழ்நாடு கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, முல்லைப்பெரியாறு ஆகிய நான்கு அணைகள், கேரள மாநில எல்கைக்குள் அமைந்து இருந்தாலும், அவற்றின் மீதான தமிழ்நாடு அரசின் உரிமை ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கின்றது. எனவே, கேரள மாநிலத்திற்குள் இருந்தாலும், முல்லைப்பெரியாறு அணையின் உரிமையாளர் தமிழக அரசுதான்.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, மாநிலங்களுக்கு இடையே நீர்ப்பங்கீடு குறித்த இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், நடுவண் அரசின் அணைகள் பாதுகாப்பு மன்றத்திடமே இருக்கும் என்றாலும், பேரழிவு மேலாண்மை ஆணையமும் ஒற்றுமையாக இணைந்தே செயல்பட வேண்டும்.

எங்களுடைய கர்நாடகத்து உடன்பிறப்புகள், அண்ணன் தங்கைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், காவிரியின் குறுக்கே, மேகே தாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

அதற்காக, கர்நாடக அரசு 5962 கோடி ரூபாய்களை ஒதுக்கி இருக்கின்றது.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7, 8 ஆகிய நாள்களில், கர்நாடகத்தைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் ஒருவரது இல்லத்தில், கமுக்கமாக ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கர்நாடகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். அப்போதைய, நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சரும் பங்கேற்றார்.

“மேகே தாட்டு அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் சான்றிதழை நாங்கள் வெளிப்படையாகத் தர மாட்டோம்; ஆனால், நீங்கள் அணையைக் கட்டிக் கொள்ளலாம்” என்று அவர் அந்தக் கூட்டத்தில் உறுதி அளித்தார்.

எனவே, கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.  இது, சென்னை மாகாணத்திற்கும், மைசூரு மாகாணத்திற்கும் இடையே, காவிரி நீர்ப்பங்கீடு குறித்து, 1924 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அமைந்த, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் கர்நாடகம் மதிக்கவில்லை. எனவே, தமிழ்நாட்டு மக்கள் அறவழிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.

ஆந்திர மாநிலம் தன் பங்கிற்கு, பாலாறின் குறுக்கே தடுப்பு அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுக்கின்றது. பலநூறு ஆண்டுகளாகத் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் பெற்று வந்த தண்ணீர் இப்போது கிடைப்பது இல்லை என்பதை, நான் வேதனையோடு சுட்டிக்காட்டுகின்றேன்.

வெந்த புண்ணில் வேல் சொருகுவது போல, தமிழகத்தில் தென்பெண்ணை என அழைக்கப்படுகின்ற, கர்நாடகத்தின் மார்கண்டேயா ஆற்றில், ஒரு புதிய தடுப்பு அணையைக் கட்டுவதற்கான ஏற்பாடுகளைக் கர்நாடக அரசு செய்து வருகின்றது.

கர்நாடகத்தின் நந்தி மலைகளில் இருந்து புறப்பட்டு வருகின்ற தென்பெண்ணை ஆறு, கொடியாலம் என்ற இடத்தில் தமிழநாட்டுக்கு உள்ளே நுழைந்து, 320 கிலோ மீட்டர் நீளத்திற்குப் பாய்கின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர், கேஆர்பி மற்றும் திருஅண்ணாமலை மாவட்டத்தின் சாத்தனூர் அணைகளுக்கான தண்ணீர் அந்த ஆற்றில் இருந்துதான் வருகின்றது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து, வங்கக் கடலில் கலக்கின்றது.

1892 ஆம் ஆண்டு, சென்னை மாகாண அரசுக்கும், மைசூரு மாகாண அரசுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு மாநிலத்தின் ஒப்புதல் இன்றி தென்பெண்ணை ஆற்றில் புதிய அணை எதுவும் கட்ட முடியாது. அதை மீறி, கர்நாடகம் புதிய அணை கட்டினால், அதன்பிறகு, தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்கள் பாலை மணல்வெளியாக மாறிவிடும்.

இந்த அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வரைவு குறித்து, 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதை எதிர்த்து, அன்றைய தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் கடிதம் எழுதினார். டிசம்பர் 6 ஆம் நாள் நான் தில்லிக்கு வந்து, ஒரு சகோதரனாக என் மீது அன்பு காட்டும் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை நேரில் சந்தித்தேன்.

“இந்தச் சட்டத்தை நீங்கள் நிறைவேற்றினால், சோவியத் ஒன்றியம் சிதறியது போல, இந்தியாவிலும் நடக்கும். அதன்பிறகு, சோவியத் ஒன்றியம் எங்கள் நாட்டு எல்லைக்குள் ஆக்கி இருக்கின்ற சொத்துகள் அனைத்தும், எங்களுக்கே சொந்தம் என உக்ரைன் நாடு அறிவித்தது போல, இந்தியாவிலும் நடக்கும்.

தமிழ்நாட்டுக்கு உரிமை உள்ள தண்ணீரை, அண்டை மாநிலங்கள் தர மறுத்தால், நாளை ஒருநாள் எங்கள் பேரப்பிள்ளைகள் சொல்லுவார்கள்: தமிழ்நாட்டுக்குள் இருக்கின்ற விஜயநாராயணம் கடற்படைத் தளம் எங்களுக்கே சொந்தம்; நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ஆவடி பீரங்கித் தொழிற்சாலை, திருச்சி படைக்கலன் தொழிற்சாலை எல்லாம், எங்களுக்கே சொந்தம் என அறிவிக்கும் காலம் வரும்”

என்று சொன்னேன்.

டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டார்கள். அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளைக் கைவிட்டார்கள்.

இப்போது நீங்கள் அந்தச் சட்டத்தை நிறைவேற்றினால், கடுமையாகப் பாதிக்கப்படுகின்ற மாநிலம் தமிழ்நாடுதான். எனவே, நான் இந்தச் சட்ட முன்வரைவை, முற்று முழுதாக எதிர்க்கின்றேன்.

இவ்வாறு வைகோ MP அவர்கள் 02-12-2021 ல் நாடாளுமன்றத்தில் (ராஜ்யசபா) உரையாற்றினார்கள்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
03.12.2021

Thursday, December 2, 2021

89 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஆசிரியர் அண்ணன் மானமிகு கி.வீரமணி வாழ்க! வைகோ MP வாழ்த்து!

டிசம்பர் திங்கள் 2 ஆம் நாளில் பிறந்தநாள் விழா காணும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு நெஞ்சம் இனிக்கும் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கம்போல இந்த ஆண்டும் அவரின் பிறந்தநாள் சுயமரியாதை நாளாக நாடு முழுக்க கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிவு மணம் கமழும் நூல்கள் பெரியார் திடலில் வெளியிடப்பட உள்ளது.

8 வயதிலேயே அறிவாசான் பெரியாரிடம் அடைக்கலமாக சென்று அவருக்கு தொண்டு ஊழியம் செய்து அவரது கொள்கைகளை நாடு முழுக்க பரப்பி அவர் நிறுவிய திராவிடர் கழகம் எனும் தமிழர் உரிமை காக்கும் பாசறையை உயிர்த்துடிப்போடு இயக்கிவரக் கூடிய அண்ணன் கி.வீரமணி அவர்கள் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு உரியவர் என்ற சிறப்பினைப் பெற்றவர் ஆவார்.

“வீரமணி மட்டும் இல்லாதிருந்தால் சமூகநீதிக் கொள்கை பளிங்கு சமாதிக்குப் போயிருக்கும். அதிலிருந்து வீரமணியின் செல்வாக்கு பலமடங்கு உயர்ந்தது. தமிழக பொதுவாழ்வில் அவருக்கு பெரிய வடிவமும் அமைந்துவிட்டது. அவருடைய தலைமையில் திராவிடர் கழகம் நடத்துகின்ற போராட்டம் எதுவாக இருந்தாலும் ஒழுங்காகவும், கட்டுப்பாட்டுடனும் நடப்பது வழக்கமாகிவிட்டதால் திராவிடர் கழகம் தனி மரியாதையை பெறுவது சகஜமாகிவிட்டது” என்று மண்டல் குழு அறிக்கை நிறைவேற்றப்பட்ட காலகட்டத்தில் மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ்முரசு நாளேடு, ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தனிச் சிறப்பை எடுத்து விளக்கியது.

“உலகத்தில் தமிழ் இனம், திராவிடப் பாரம்பரியம் எங்கிருந்தாலும் மகிழ்வோடும், இன்ப முகிழ்வோடும் வாழ வேண்டும் என்பதனை உயிர் மூச்சாய் கொண்டு வாழும் ஒப்பற்ற தலைவர் கி.வீரமணி. தமிழ்ச் சமுதாயம் எழுச்சியுடன் வாழ வேண்டும் என சிந்தித்த தந்தை பெரியாரின் விரிவாக்க சிந்தனையாளர் அவர். தமிழகத்தில் எதையும் படித்து ஆய்ந்து ஆதாரங்களுடன் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் கருத்து வளமிக்க கரிபால்டி அவர். அவர் உயிர் வாழ்வது தமிழர்களுக்காக, உணர்வு பொங்க அவர் பேசுவது, தமிழர் மேம்பாட்டுக்காக ஓய்வின்றி உழைப்பது ஆகியவைகள் அவரின் அரும்பெரும் குணநலன்கள்” என்று மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ் நேசன் எனும் நாளேடு, ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு புகழ் மாலை சூட்டி பெருமைப்படுத்தியது.

இவ்வாறு கடல் கடந்த நாடுகளில் உள்ளவர்களும் பாராட்டி பெருமை சேர்க்கும் பெரியாரின் கொள்கை வாரிசு - பெரியாரின் கொள்கை முரசு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்கள் ஆயிரம் பிறை கண்டு நூறாண்டுக்கு மேல் நல்ல உடல் நலத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழினம் காக்கும் தூய பணியை தொய்வின்றி தொடர வேண்டும் என்ற விழைவுடன் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் இதயம் நிறைந்த வாழ்த்துகளை கனிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
01.12.2021

Tuesday, November 30, 2021

சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் மறைவு! வைகோ MP இரங்கல்!

தென் ஆப்பிரிக்கத் தமிழ்ச் சமூகத்தால், சுவாமி என அன்புடன் அழைக்கப்பெற்ற, அந்நாட்டின் விடுதலைப் போராளிகளுள் ஒருவரான சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் அவர்கள் 94 ஆம் அகவையில், இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.

1944 முதல் தன்னைப் பொதுவாழ்வுக்கு ஒப்படைத்துக் கொண்டார்.

1950 ஆம் ஆண்டு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்து, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

1955 ஆம் ஆண்டு, அந்நாட்டின் விடுதலைப் பட்டயத்திற்கு ஏற்பு அளிக்கப்பட்ட கிளிப்டவுன் சொவேட்டோ மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றவர்களுள் எஞ்சி இருக்கின்ற ஒருசிலருள் சுவாமிநாதனும் ஒருவர்.

அரசியல் தலைவர், சமூகப் போராளி, தொழிற்சங்க செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட சுவாமிநாதன் அவர்கள், நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற அனைத்துப் போராட்டக் களங்களிலும் பங்கேற்று இருக்கின்றார். நாடு விடுதலை பெற்றபிறகும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்காக உழைத்தார். பல்வேறு சமூக அமைப்புகளில் உயர் பொறுப்புகளை வகித்து இருக்கின்றார்.

காந்திய வழி அறப்போராளிகளுள் ஒருவராகத் திகழ்ந்த மாமனிதர் சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் அவர்களின் மறைவுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
30.11.2021

Monday, November 29, 2021

வைகோ MP உடன், விவசாயிகள் சங்கத்தினர் சந்திப்பு!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், இன்று (29.11.2021) புது தில்லியில், ம.தி.மு.க.  பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தனர்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, வரலாறு காணாத வகையில் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தி  வெற்றி பெற்று, விவசாயிகள் வரலாறு படைத்து விட்டனர். இந்த வெற்றி, நாடு முழுமையும்,  மக்கள் கோரிக்கைகளுக்காகப் போராடுவோருக்கு பெரும் ஊக்கம் அளித்து இருக்கின்றது என, அவர்களிடம் வைகோ கூறினார்.

உயர்மின் கோபுரங்கள், கெயில் எரிகாற்றுக் குழாய், பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய்க் குழாய் பிரச்சினைகள் மற்றும் ஒன்றிய அரசின் வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக, சமாதானத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவிக்க வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விண்ணப்பத்தை, விவசாயிகள் சங்கத்தினர் வைகோவிடம் அளித்தனர்.

இத்தகைய சமாதான் திட்டங்களை, ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பலமுறை அறிவித்துச் செயல்படுத்தி இருக்கின்றார்கள். குறிப்பாக, வருமான வரி, பத்திரப் பதிவுத்துறை உள்ளிட்ட அரசுக்கு வருவாய் தரும் அனைத்துத் துறைகளிலும், இத்தகைய சமாதான் திட்டங்களை அறிவித்து, வட்டி, கூடுதல் வட்டி தள்ளுபடி செய்வது வழக்கம். விவசாயிகள் முழுமையான கடன் தள்ளுபடி கோரவில்லை. ஒன்றிய அரசு வங்கிகளில் பெற்று இருக்கின்ற கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு, வட்டி, கூடுதல் வட்டி, அசலில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு குறைப்பது உள்ளிட்ட  சில சலுகைகளைக் கோருகின்றார்கள்.  

வங்கிக் கடன்களுக்காக, விவசாயிகள் தங்கள் சொத்துகளை அடமானமாகக் கொடுத்து இருக்கின்றார்கள். அதன் மீது, வங்கி மேலாளர்களே நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சொத்துகளைக் கையகப்படுத்துவது, ஏலம் விடுவது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் வங்கி மேலாளர்களே மேற்கொள்கின்றார்கள்.  கடன் வசூல் தீர்ப்பு ஆயத்தில் வழக்குத் தொடுத்து, விவசாயிகளை அலைக்கழித்து, தாங்கொணாத் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர்.

எனவே. இந்தியா முழுமையும் கடன் தொல்லையால் ஆண்டுக்கு 10000 விவசாயிகள் தற்கொலை செய்து மடிகின்றார்கள். அதைத் தடுப்பதற்காக, ஒன்றிய அரசு, விவசாயிகள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக சமாதான் திட்டம் ஒன்றை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வழங்கினர்.

இந்தக் கோரிக்கைகள் குறித்து, அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்கின்றேன் என வைகோ கூறினார்.

இந்தச் சந்திப்பில், சங்க நிறுவனர், வழக்கு உரைஞர் ஈசன் முருகசாமி, மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமரேசன், பஞ்சாப் கோல்டன் சிங் (ஆசாத் கிசான் சங்கர்ஷ் கமிட்டி), மதுரை சொக்கலிங்கம், குங்குமம்பாளையம் முத்துசாமி, லூதியானா மோகன், விருதுநகர் இராமசாமி  பங்கேற்றனர்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
29.11.2021

தனி நபர் மசோதாக்களை புதன்கிழமை விவாதத்திற்கு விட வேண்டும். வைகோ MP கோரிக்கை!

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், நாளை தொடங்குகின்றது. அதனை ஒட்டி, குடியரசுத் துணைத்தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தலைவருமான வெங்கையா நாயுடு அவர்கள், இன்று (28.11.2021) மாலை 5 மணி அளவில், மாநிலங்கள் அவை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்குத் தமது இல்லத்தில் விருந்து அளித்தார். மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., அவர்கள் பங்கேற்றார்.

அப்போது அவர் முன்வைத்த கோரிக்கை:-

கடந்த 74 ஆண்டுகளாக, தனியொரு உறுப்பினர் தாக்கல் செய்கின்ற சட்ட முன்வரைவுகள் (Private Member Bill) மற்றும் தீர்மானங்கள் மீதான கருத்துப் பரிமாற்றங்கள், மாநிலங்கள் அவையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில்தான் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில், தங்கள் தொகுதிகளுக்குச் சென்று, நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றார்கள். அதற்காக, அவர்கள் வெள்ளிக்கிழமை மாலையில் வான் ஊர்தியைப் பிடித்து ஊருக்குப் போகின்றார்கள். எனவே, வெள்ளிக்கிழமை காலையில் அவைக்கு வந்து விட்டு, பிற்பகலில் சென்று விடுகின்றார்கள். அந்த நேரத்தில், இத்தகைய சட்டமுன்வரைவுகளின் மீதான விவாதம் பயன் அற்றதாக இருக்கின்றது. அனைத்து உறுப்பினர்களும் பங்கு ஏற்கின்ற வாய்ப்புகள் இல்லை.

எனவே, அந்த நடைமுறையை மாற்ற வேண்டும். இனி, புதன்கிழமை பிற்பகலில், தனி உறுப்பினர் சட்ட முன்வரைவுகள், தீர்மானங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க,
சென்னை - 8
‘தாயகம்’
28.11.2021

இந்தி திணிப்பு. வைகோ‌MP எச்சரிக்கை!

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர், இன்று 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். அமைச்சர்கள் பிரகாலாத் ஜோஷி, பியுஷ் கோயல் முன்னிலை வகித்தனர். அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இதுவரை காணாத அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிர் இழந்த 750 விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றேன். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தங்கள் உடைமைகளை அவர்கள் இழந்து இருக்கின்றார்கள். காஷ்மீரில் இருநது கன்னியாகுமரி வரை மக்கள், போராட்டம் நடத்திய விவசாயிகளை ஆதரித்தனர்.

எனவே, இந்த மூன்று வேளாண் பகைச் சட்டங்களையும் இந்திய அரசு திரும்பப் பெறும் என்று, தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அண்மையில் உறுதி கூறினார். அதன்படி, நடைபெற இருக்கின்ற இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரில் முதுல் நாளே வர வேண்டிய மசோதா, பத்தாவது இடத்தில் இடம் பெற்று இருக்கின்றது,

எம்.எஸ். சுவாமிநாதன் குழு கொடுத்த அறிக்கையின்படி, விளைபொருள்களுக்கு விலை உரிய விலையை, அரசு உறுதி செய்ய வேண்டும்.  

இந்தியா ஒரு கூட்டு ஆட்சி நாடு. ஆனால், கூட்டு ஆட்சித் தத்துவத்தையே தகர்த்துத் தரைமட்டம் ஆக்க, நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு வேலை செய்கின்றது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று, ஒரு சர்வாதிகார நாடு ஆக்கத் துணிந்து விட்டார்கள்.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ர்பபுப் போராட்டம் எரிமலையாக வெடித்தது. எனவே, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், இணையற்ற ஜனநாயகவாதி, பண்டித ஜவகர்லால் நேரு, மக்கள் விரும்புகின்றவரை,  இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் என உறுதிமொழி கொடுத்தார்.

ஆனால், சில நாள்களுக்கு முன்னர்,  உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவுக்கு ஒரே மொழி இந்திதான்; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள் முழுமையும் இப்போது இந்தியில்தான் எழுதுகின்றோம் என்று, அதிகாரத் திமிரோடு கூறி இருக்கின்றார்.

அப்படித் திணிக்க முயன்றால், இந்தியா பல நாடுகளாகச் சிதறி விடும் என எச்சரிக்கின்றேன். இந்த அக்கினிப் பரீட்சையில், கூட்டு ஆட்சித் தத்துவத்தையே ஒழிக்க முனைகின்ற இந்த அரசு, காணாமல் போய்விடும்.

இவ்வாறு வைகோ அவர்கள் பேசினார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
28.11.2021

Monday, November 22, 2021

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனுக்கு வீர வணக்கம். வைகோ MP அறிக்கை!

திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி, அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கின்றது. 

நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர். இரவுக் காவல் பணியில் இருந்தபோது, ஆடு திருடிச் சென்றவர்களைப் பின்தொடர்ந்து, 15 கிலோமீட்டர் தொலைவு விரட்டிச் சென்றார் என்பது, அவரது துணிச்சலையும், கடமை உணர்வையும் காட்டுகின்றது. 

அவரது உடல், உரிய சிறப்புகளுடன்  அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் உதவித்தொகையைத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருப்பது ஆ.றுதல் அளிக்கின்றது. குற்றத் தொடர்பு உடைய 4 பேர்களைக் காவல்துறையினர் பிடித்து இருக்கின்றார்கள். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். 

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் பூமிநாதனுக்கு வீர வணக்கம்.

அவரை இழந்து வேதனையில் உழலும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
22.11.2021

Saturday, November 20, 2021

பெருமழையால், சென்னையில் பாதிக்கப்பட்ட 2000 பேருக்கு உணவு வழங்கிய துரை வைகோ!

தொடர்ந்து பெய்து வரும் பெருமழையால், சென்னையில் பாதிப்புக்கு உள்ளான அண்ணா நகர் gகுதி 100ஆவது வட்டத்தில், திரிவேரி மற்றும்  - எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த 2000 பேருக்கு அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் முன்னிலையில், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவர்கள் இன்று 19.11.2021 வெள்ளிக் கிழமை மதியம் உணவு வழங்கினார்.

தென்சென்னை மேற்கு மாவட்டக் கழச் செயலாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார், அண்ணா நகர் பகுதிச் செயலாளர் இராம.அழகேசன், மகளிர் அணி மாநிலத் துணைச் செயலாளர் மல்லிகா தயாளன், திமுக பகுதிச் செயலாளர் ச.பரமசிவம், வட்டக் கழகச் செயலாளர் என்.டி.திருலோகசந்தர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

விவசாயிகளின் வெற்றி: மத்திய அரசு மண்டியிட்டது! வைகோ MP அறிக்கை!

மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது இலட்சக்கணக்கான விவசாயிகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

மக்கள் சக்தியே ஜனநாயகத்தில் மகேசன் சக்தியாகும் என்பதை விவசாயிகள் நிருபித்திருக்கிறார்கள்.

ஓராண்டு காலமாக இலட்சக்கணக்கான விவசாயிகள் போராடினார்களே, நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தார்களே, கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை இழந்தார்களே, பிரதமர் மோடி அவர்கள் போன உயிர்களை திரும்பக் கொண்டுவந்து சேர்ப்பாரா? உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும்.

பயிர்களைக் கணக்கிட்டு, கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு விவசாயிகளுக்கு தரவேண்டும். வரப்போகின்ற தேர்தலில் தோற்றுப் போவோம் என்கிற பயத்தில் பிரதமர் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வாதிகாரத்தின் முதுகெலும்பு விவசாயிகளால் நொறுக்கப்பட்டுள்ளது. போராடிய விவசாயிகளுக்கு இந்த நாடே தலைவணங்குகிறது.

விவசாயிகள் ஒற்றுமை ஓங்கட்டும்! அவர்களின் உரிமைக் குரல் ஓங்கட்டும்! அவர்களுக்குத் தலைவணங்கி நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறேன்.

இனிமேல் இம்மாதிரி மக்கள் விரோத சட்டங்களை அதிகாரம் இருக்கின்ற வரையில் மத்திய அரசு கொண்டுவராது என்ற நிலையை விவசாயிகள் ஏற்படுத்திவிட்டார்கள்.

போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்தையும், மத்திய அரசுக்குக் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
19.11.2021

திராவிட லெனின் டி.எம்.நாயருக்கு சிலை அமைத்திடுக! வைகோ MP வேண்டுகோள்!

தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி 1916 நவம்பர் 20 ஆம் நாள் உருவாகி, 2021 நவம்பர் 20 ஆம் நாள் 106 ஆவது ஆண்டு தொடங்குகிறது.

அன்றைய சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் வகுப்புரிமையை நிலைநாட்ட காலத்தின் தேவையாக மலர்ந்த நீதிக்கட்சியை வழிநடத்திய முப்பெரும்தலைவர்களான டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் போன்றோரும், 1938 இல் நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற தந்தை பெரியார், பொதுச்செயலாளர் பொறுப்பை வகித்த பேரறிஞர் அண்ணா ஆகியோரின் அருந்தொண்டுதான் திராவிட இயக்கம் நூற்றாண்டு கடந்தும் அசைக்க முடியாத அடித்தளத்துடன் நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் ஆகும்.

மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தத்தின்படி 1920 இல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, அத்தேர்தலில் நீதிக்கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. 1921 இல் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை அமைந்தது. பின்னர் அதே ஆண்டு ஜூலையில் பனகல் அரசர் இராமராய நிங்கார் முதல் அமைச்சர் (First Minister) பொறுப்பை ஏற்றார்.

பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில்தான் சட்டமன்றத்தில் முதன் முதலில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமையை நடைமுறைப்படுத்த 1921 ஆகஸ்ட் 16 இல் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. நீதிக்கட்சி அரசு பிறப்பித்த வகுப்புரிமை ஆணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதிக்கவாதிகள் வழக்குத் தொடுத்து, அதை முடக்கினர்.

அதன்பின்னர் நீதிக்கட்சியின் ஆதரவுடன் சுப்பராயன் முதல் அமைச்சர் பொறுப்பேற்றபோது, அதில் இரண்டாவது அமைச்சராக பொறுப்பேற்றிருந்த எஸ்.முத்தையா முதலியார் தனது ஆவணப் பதிவுத் துறையில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையை 04.11.1928 ஆம் நாளிட்ட அரசாணை எண்.1071 மூலம் சட்டமாக்கினார். இதன் மூலம்தான் அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோரும், பட்டியல் இனத்தோரும் இடஒதுக்கீடு பெற்று சமூகநீதி நிலைநாட்டப்பட்டது என்பது வரலாறு.

கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு இன்று இந்தியாவுக்கே சமூகநீதிக் கோட்பாட்டிற்கு வெளிச்சம் பாய்ச்சியது திராவிட இயக்கம்தான் என்பதும் மறுக்க முடியாத வரலாறு ஆகும்.

சமூகநீதி, ஒடுக்கப்பட்ட, பட்டியல் இன மக்கள் முன்னேற திட்டங்கள்; பெண்களுக்கு வாக்குரிமை; தேவதாசி முறை ஒழிப்பு; இந்து அறநிலையத்துறை உருவாக்கம்; பல்கலைக் கழகங்கள் தொடக்கம்; அனைவருக்கும் சமத்துவமான கல்வி; மாணவர் விடுதிகள்; கல்வி உதவித்தொகை; அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்; சிறுபான்மை மக்களுக்கும் இடஒதுக்கீடு; மருத்துவப் படிப்பிற்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்பது நீக்கம் இவ்வாறு எண்ணற்ற சாதனைகளைப் படைத்தது நீதிக்கட்சியின் அரசு ஆகும்.

இன்று இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு சிறந்தோங்கி இருப்பதற்கு நீதிக்கட்சியின் அரசு நிறைவேற்றிய திட்டங்களும், நிகழ்த்திய சாதனைகளும்தான் காரணம். அதனால்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைகிற பொழுது, எங்கள் அரசு நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான் என்று பிரகடனம் செய்தார்.

நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக அமைந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நீதிக்கட்சி அரசு அமைந்த நூற்றாண்டில் ஒரு அன்பான வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.

வகுப்புவாரி உரிமைக்காக வாதாட இங்கிலாந்து இலண்டன் வரை இரண்டுமுறை சென்று, மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தில், சட்டமன்றத்தில் வகுப்புரிமையை உறதி செய்யப் போராடியவர் டாக்டர் டி.எம்.நாயர். நீரழிவு நோய் வாட்டியபோதும் கவலைப்படாமல் வகுப்புரிமைக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆதரவு திரட்டிய டி.எம்.நாயர், 17.7.1919 அன்று லண்டனிலேயே உயிர் துறந்தார்.

திராவிட இயக்கத்தின் ஆணிவேரான நீதிக்கட்சியின் மாபெரும் தலைவர்கள் டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி தியாகராயர் இருவருக்கும் தலைநகர் சென்னையில் சிலைகள் நிறுவப்பட்டு பெருமைப்படுத்தி இருக்கின்றோம்.

நீதிக்கட்சியின் மற்றொரு தலைவரான டாக்டர் டி.எம்.நாயர் என்ற தாராவாட் மாதவன் நாயர் அவர்களுக்கு சென்னையில் இதுவரையில் சிலை நிறுவப்படவில்லை. நீதிக்கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில் மறுமலர்ச்சி திமுக சார்பில், சென்னையில் டி.எம்.நாயர் சிலை அமைந்திட இடம் ஒதுக்கித் தருமாறு அப்போதைய முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் பலனில்லை.

தற்போது அமைந்திருக்கின்ற திராவிட இயக்க ஆட்சியில், திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பெற்ற டாக்டர் டி.எம்.நாயர் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில்சென்னையில் அவருக்கு முழு உருவச் சிலையை நிறுவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
19.11.2021

ஓரே நாடு! ஓரே மக்கள் பிரதிநிதிகள் சபை! பிரதமரின் கருத்து; நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சி! வைகோ MP அறிக்கை!

இமாச்சலப்பிரதேச மாநில சிம்லாவில் நேற்று (17.11.2021)  சட்டப்பேரவைத் தலைவர்களின் 82 ஆவது மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பிரதமர் தனது உரையில்,சட்டமன்றங்களின் மாண்புகளை காப்பாற்றும் கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கிறது என்பதையும்,

நமது நாடு முற்றிலும் பன்முகத்தன்மை கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே உரையில்,“ வளங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரே நாடு; ஒரே மக்கள் பிரதிநிதிகள் சபை” என்ற கருத்தை தாம் முன்வைப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

பிரதமர் மோடி அவர்களின் இந்த கருத்து, ஆர்.எ°. எ°; பாரதிய ஜனதா கட்சியின் ஓரே நாடு! ஒரே மதம்! ஒரே மொழி! ஒரே பண்பாடு! எனும் கோட்பாட்டின் நீட்சியாகவே இருக்கிறது.

ஏனெனில் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிப்பதற்கு, 1953 ஆம் ஆண்டு டிசம்பரில் ,பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பசல் அலி தலைமையில் எச்.என்.குன்°சுரு, கே.எம்..பணிக்கர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தை அமைத்தார்.

இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப் பட வேண்டும் என்று பசல் அலி ஆணையம் 1955,செப்டம்பரில் தனது பரிந்துரை அறிக்கையை அளித்தது.

அப்போது ஆர்.எ°. எ°. தலைவர் எம்.எ°.கோல்வால்கர், இந்தியா எனபது ஒரே நாடு; இதனை நிர்வாக வசதிக்காக நாட்டை நூறு  பகுதிகளாக பிரிக்க வேண்டும்.

டெல்லியில் மையப்படுத்த ஓரே அரசுதான் இருக்க வேண்டும் என்று மொழிவாரி மாநிலப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தார்.

ஆர்.எ°.எ° கோட்பாடுகளை நிறைவேற்றி வரும் பா.ஜ.க அரசு,“ஒரே நாடு?; ஒரே நாடாளுமன்றம்“ என்ற திட்டத்தை செயற்படுத்த முனைந்து இருக்கிறதோ என்ற ஐயப்பாட்டை பிரதமரின் உரை ஏற்படுத்துகிறது.

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் முக்கியமான காலகட்டம் என்று பிரதமர் குறிப்பிட்டு இருப்பது உண்மைதான்.

நாட்டின் பன்முகத்தன்மை தகர்க்கப்பட்டு பல்வேறு தேசிய இனங்களின் தனித்துவ அடையாளங்கள் சிதைக்கப்பட்டால் 2047 ,ஆக°ட்-15 இல் இந்தியா நூறாவது ஆண்டு விடுதலை நாளைக் கொண்டாடும் போது இந்தியா உடைந்து சிதறி விடும்..அதற்கு வழிவகுத்து விடாமல் இந்தியாவின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும் மாநிலங்களின் உரிமைகளை பேணவும் பா.ஜ.க அரசு புரிதலுடன் செயல்பட வேண்டும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
18.11.2021

தெற்குத் தொடரி பொது மேலாளர் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம்மதுரை 18.11.2021. வைகோ, எம்.பி., முன்வைத்த கோரிக்கைகள்!

வணக்கம். 
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், தொடரித்துறை மனிதநேயத்துடன் சிறப்பான வகையில் மக்களுக்குத் தொண்டு ஆற்றியதைப் பாராட்டுகின்றேன். எல்லையில் நாட்டைக் காக்கும் போர்வீரர்களைப் போல, தொடரித்துறை ஊழியர்கள் பொறுப்பு உணர்வுடன் கடமை ஆற்றினார்கள். அதன் விளைவாக, ஏறத்தாழ பத்து விழுக்காட்டுக்கும் கூடுதலான தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்; இந்தியா முழுமையும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். 
அவர்களுக்கு, என்னுடைய புகழ் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
1. அவர்களுடைய குடும்பங்களுக்கு, போதிய உதவித்தொகை வழங்கப்படுதல் வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு, தொடரித்துறை பணி வாய்ப்பு வழங்கும் என நம்புகின்றேன்.
2. சென்னை, மதுரை, திருச்சி கோட்டங்களுக்கான பணியாளர்களை, சென்னையில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தேர்வு ஆணையம் மேற்கொண்டு வந்தது. சேலம் கோட்டம் அமைப்பதற்கு, கேரள அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். எனவே, அவர்களைக் குளிர்விப்பதற்காக, தெற்குத்தொடரி இரண்டு அறிவிப்புகளைச் செய்தது. 
அ) பொள்ளாச்சி-கிணத்துக்கடவு வழித்தடம், முன்பு மதுரைக் கோட்டம் வசம் இருந்தது. அதை, பாலக்காடு கோட்டத்திற்கு மாற்றிவிட்டனர்.
ஆ) மதுரைக் கோட்டத்திற்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை, திருவனந்தபுரம் ரயில்வே பணியாளர்கள் தேர்வு ஆணையத்திற்கு மாற்றி விட்டனர்.
இந்த அறிவிப்புகள் வெளியானபோதே, நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். எனவே, மேற்கண்ட அறிவிப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். 

3. தொடரித்துறையில் பல்லாயிரக்கணக்கான பணி இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனே நிரப்ப வேண்டும். எந்தப் பகுதியில் காலி இடங்கள் ஏற்படுகின்றனவோ, அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும்.

4. திருநெல்வேலியைத் தலைமை இடமாகக் கொண்டு, புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும்.

5. கொரோனாவுக்கு முன்பு ஓடிக்கொண்டு இருந்த பெரும்பாலான தொடரிகள், படிப்படியாக மீண்டும் ஓடத் தொடங்கி உள்ளன. ஆனால், பாசஞ்சர் தொடரிகள் இன்னமும் ஓடவில்லை. ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் போக்குவரத்து ஆதாரமான பாசஞ்சர் தொடரிகளை மீண்டும் இயக்க வேண்டும். கொரோனா காலத்தில் ஓடிய சிறப்பு விரைவுத் தொடரிகளின் நிறுத்தங்களைக் குறைத்தீர்கள். அவ்வாறு எந்த நிலையமும் விடுபடக் கூடாது. இனி, அனைத்துத் தொடரி நிலையங்களிலும் தொடரிகள் நின்று செல்ல வேண்டும். 

6. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்பு வழங்கப்பட்ட கட்டணச் சலுகைகளை, மீண்டும் தர வேண்டும்.

7. புதிய தொடரிகளை இயக்கப் போவதாக அறிவிப்புகளை மட்டும் வெளியிடுகின்றீர்கள். ஆனால்,  பல ஆண்டுகள் ஆனாலும், அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவது இல்லை. குறிப்பாக, மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு பகல் நேரத் தொடரி இயக்கப்போவதாக, 2013 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்றுவரையிலும் ஓடவில்லை. அதேபோல, செங்கோட்டையில் இருந்து கோவைக்கு தொடரி ஓடும் என்று அறிவிப்பு வெளியாகி பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது. அதுவும் ஓடவில்லை. இராமேஸ்வரம், கோவைக்கு இடையே தொடரி ஓடும் என்ற அறிவிப்பும் நிறைவேறவில்லை. 

8. இந்தியா விடுதலை பெற்ற பிறகு அமைத்த மிகப்பெரிய தொடரித்தடம், கொங்கண் ரயில்வே ஆகும். அந்த வழித்தடத்தில் தொடரிகள் ஓடத்தொடங்கி, 25 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து இதுவரையிலும், அந்த வழித்தடத்தில் தொடரிகள் ஓடவில்லை. குறிப்பாக, தென்மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள், மும்பையில் வசிக்கின்றார்கள். அவர்கள், இன்றளவிலும், மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு சுற்று வழியில் பயணித்து வருகின்றார்கள். எனவே, நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு, கொங்கண் வழித்தடத்தில் ஒரு பயணிகள் தொடரியை, விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும். 

9. நாகர்கோவிலில் இருந்து ஹைதராபாத்துக்கு ஒரு தொடரி கூட இல்லை. ஆனால், சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மூன்று தொடரிகள் ஓடுகின்றன. எனவே, அவற்றுள் ஒரு தொடரியை, நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். 

10. ஆள் இல்லாத ரயில்வே கேட்டுகளை அகற்றுவதற்காக, தரையடி சுரங்கப் பாலங்களை அமைத்து வருகின்றீர்கள். ஒருநாள் மழை பெய்தாலும், தண்ணீர் நிரம்பி விடுகின்றது. எனவே, அந்த வழியை நாள்தோறும் பயன்படுத்துகின்ற பல கிராமங்களைச் சேர்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படுகின்றது. எனவே, அந்த சுரங்கப் பாலங்களில், தண்ணீரை அகற்றுவதற்கான மின் மோட்டார்களைப் பொருத்த வேண்டும். 

11. தூத்துக்குடியில் இருந்து நாகலாபுரம், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரைக்கு புதிய தொடரித் தடம் அமைப்பதாக அறிவித்து, 7 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதை அமைத்து இருக்கின்றீர்கள். அதன்பிறகு, அந்தப் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. எனவே, அந்தப் பணிகளைத்தொடங்கி, நிறைவு செய்து தர வேண்டும். 

12. மதுரை போடி வழித்தடப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும். தேனியில் இருந்து சென்னைக்கு ஒரு புதிய தொடரியை அறிமுகப்படுத்த வேண்டும். 

13. கூடல்நகர் தொடரி நிலையத்தை, மதுரையின் இரண்டாவது முனையமாக (Madurai Second terminal) ஆக்க வேண்டும். சிலைமான் தொடரி நிலையத்தை மேம்படுத்த வேண்டும். 

14. பழநியில் இருந்து தாராபுரம், ஈரோடு, சத்தியமங்கலம் வழியாக, மைசூருக்குப் புதிய தொடரித்தடம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை ஆகும். அடுத்த ஆண்டு ரயில்வே வரவு செலவுத் திட்டத்தில் அந்தத் திட்டத்தை அறிவித்து, விரைவில் நிறைவேற்றித் தரவேண்டும். 

15. மீட்டர்கேஜ் தடங்களை அகன்ற வழித்தடமாக மாற்றும்போது, 15 கிலோமீட்டருக்கு ஒரு தொடரி நிலையம் என இருந்தவை, ஒழிக்கப்பட்டு விட்டன. அந்த வகையில், சங்கரன்கோவில் இராஜபாளையத்திற்கு இடையே இருந்த கரிவலம்வந்த நல்லூர், சோழபுரம் தொடரி நிலையங்களை மூடி விட்டனர். அந்தப் பகுதிகள் இப்போது நல்ல வளர்ச்சி பெற்று உள்ளன. பல்லாயிரக்கணக்கானவர்கள், அரசுப் பணிகளில் உள்ளனர்; இந்தியப் படையிலும் சேர்ந்து உள்ளனர். அவர்களுக்கு தொடரிப்பயணம் எட்டாக்கனியாக உள்ளது. அவர்கள் சங்கரன்கோவிலுக்கும், இராசபாளையத்திற்கும் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. 

முன்பு மூடப்பட்ட நரிக்குடி தொடரி நிலையத்தை, தேவை கருதி, மீண்டும் திறந்து இருப்பதால், கரிவலம்வந்தநல்லூர், சோழபுரம் தொடரி நிலையங்களையும் மீண்டும் திறக்க வேண்டும்.

16. நான் சிவகாசி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தபொழுது, விருதுநகர் கொல்லம் வழித்தடத்தை, அகல ரயில் பாதையாக மாற்றித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன். அப்போதைய ரயில்வே அமைச்சர் நிதீஷ்குமார் அவர்கள் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அறிவித்தார். அவரை விருதுநகருக்கு அழைத்து வந்தேன்; அவர் அடிக்கல் நாட்டினார். தற்போது, அனைத்து வழித்தடங்களையும் மின்மயம் ஆக்குவதற்கு, தொடரித்துறை முடிவு எடுத்துச் செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில், விருதுநகர் கொல்லம் வழித்தடத்தை மின்மயம் ஆக்குகின்ற பணிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும்.

17. சிவகாசி ஒரு தொழில் நகரம்; குட்டி ஜப்பான் என அழைக்கப்படுகின்றது. விருதுநகர் செங்கோட்டை வழித்தடத்தில் ஓடுகின்ற அனைத்துத் தொடரிகளும், சிவகாசி தொடரி நிலையத்தில் நின்று செல்வது வழக்கம். அந்த வழித்தடத்தில் உள்ள பெரிய ஊரும் அதுதான். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள், தொடரிப் பயணங்களை மேற்கொள்கின்றார்கள். 
கொல்லத்தில் இருந்து சென்னை வரை செல்லும் விரைவுத் தொடரி எண் 06102, சிவகாசியில் நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்கின்றது. அதே தொடரி, சென்னையில் இருந்து கொல்லம் செல்லும்பொழுது (வண்டி எண்: 06101) சிவகாசியில் நிற்பது இல்லை. அந்த வண்டி, சிவகாசி நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.

பொதுவாக பயணிகளை ஏற்றிச் செல்லும் தொடரிகள், அனைத்து நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும். அதற்காகத்தான், அவை ஓடுகின்றன. 
இது தொடர்பாக, பொதுமக்களும், வணிகர் சங்கங்களும் தொடர்ந்து விடுத்து வருகின்ற கோரிக்கைகள், இன்னமும் ஏற்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கின்றது. எனவே, அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

18. பாலக்காடு, திருநெல்வேலி, (தொடரி எண்: 6791-6792) பாலருவி விரைவுத் தொடரியை,  செங்கோட்டை, பாவூர்சத்திரம், கீழக்கடையம் நிலையங்களில் நிறுத்த வேண்டும்.

19. சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரங்களில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால், இன்று வரையிலும், இந்தப் பகுதி மக்களுக்கு, தலைநகர் சென்னைக்குச் செல்வதற்கான நேரடித் தொடரிகள் எதுவும் இல்லை. எனவே, அவர்கள் பயணப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு, திருநெல்வேலி அல்லது தென்காசிக்கு வந்துதான் தொடரிகளில் பயணிக்க வேண்டிய நிலைமை உள்ளது. இரண்டு ஊர்களுமே, 30 முதல் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. எனவே, இந்தப் பகுதி மக்களுக்குப் பயன் தருகின்ற வகையில், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு, தென்காசி வழியாக ஒரு தொடரியை அறிமுகம் செய்ய வேண்டும். 

20. கொரோனா முடக்கத்தின் காரணமாக, தொடரித்துறையின் வளர்ச்சி மட்டும் அல்ல, பராமரிப்புப் பணிகளிலும் தேக்கம் ஏற்பட்டு இருக்கின்றது.

இது தொடர்பாக, இந்திய ரயில்வே ஒப்பந்தக்காரர்கள் (IR Infrastructures Providers Association Southern Railway (Tamilnadu) சங்கம் விடுத்து இருக்கின்ற விரிவான கோரிக்கை விண்ணப்பத்தை, தெற்குத் தொடரியின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். அவர்கள், இலட்சக்கணக்கான ரூபாய்களை வங்கிக் கடனாகப் பெற்றும், வெளியில் இருந்து கடன் வாங்கியும் செலவு செய்து, பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களை நம்பி, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் இருக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது அவர்களுடைய கடமை மட்டும் அல்ல; தெற்குத் தொடரிக்கும் அந்தக் கடமையும் பொறுப்பும் உண்டு. 

நடைமுறையில் உள்ள வழக்கத்தை மாற்றி, புதிய விதிகளை அறிமுகப்படுத்தும்போது, அதனால், சிறு, குறு ஒப்பந்தக்காரர்கள், அவர்களைச் சார்ந்து இருக்கின்ற தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சில பிரச்சினைகளைத் தெரிவிக்க விழைகின்றேன்.

தெற்குத் தொடரியில், 10 கோடி அல்லது 15 கோடிக்கு மேல் டெண்டர்கள் கோருவது இல்லை. ஆனால், தற்போது 50 கோடி 60 கோடி என மிகப்bரிய தொகைக்கான டெண்டர் கோரி, விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. சென்னை டிவிசனில் ஒரு பணியை 74 கோடிக்கும் மற்றொரு பணிக்கு 54 கோடிக்கும் டெண்டர் அழைப்பு விடுத்து உள்ளனர்.

அந்தப் பிரிவின் கீழ் வேலை செய்ய, தமிழ்நாட்டு ஒப்பந்தக்காரர்கள் யாரும் இல்லை. எனவே, அந்த ஒப்பந்தங்களை வட இந்திய நிறுவனங்கள்தான் பெறுகின்றன. 

புதிய தடங்களை அமைக்கின்ற கட்டுமானப் பணிகளில் (Construction Wing) , இதுவரை 25 கோடி ரூபாய் மதிப்பு வரையிலான   பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளி (Tender Notice) அறிவிப்புகள்தான்  வெளியிடப்பட்டன. இப்போது, அங்கேயும் 50 கோடிக்கு மேல் கொண்டு போக முயற்சிகள் நடக்கின்றன.

இது, தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை மறுப்பதாகவே இருக்கின்றது. எனவே, பணிகளைப் பிரித்து, ஆகக்கூடுதலாக 20 அல்லது 25 கோடி ரூபாய் அளவில் மட்டுமே டெண்டர்கள் கோருவதற்கான வரையறை வகுக்க வேண்டும்.

ரயில்வே கட்டுமானப் பணிகளுக்கு DSR 2018 ரயில்வே தடங்கள் மற்றும் பாலங்கள் பராமரிப்பிற்கு ருளுளுடீசு 2019 வழிகாட்டுதல்களை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக, ரயில்வே வாரியம், ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கின்றது. கடிதம் எண்: 2019/CE-I/USSOR/W&M/1 dated  26.11.2019

தொடரித்துறையால் ஏற்பு அளிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் (Approved List of Contractors) பதிவு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

GENERAL MANAGER  / SRLY AND 
HON’BLE MEMBERS OF  PARLIAMENT MEETING.
MADURAI      18-11-2021

VAIKO, M.P., REQUESTS NEW PROJECTS AND TRAIN SERVICES  

Vanakkam!

I would like to congratulate the Railway administration and staff who delivered yeoman services to the public with humanity during Covid-19 pandemic period. Railway staffs delivered their duties like warriors and soldiers saving our nation in the border. 

More than 10% of the employees affected by Covid- 19 and more than four thousand employees all over India, lost their lives. 

I salute the martyrs.

Enough relief shall be given to their families and I hope their  wards shall be given suitable appointment in railway.

2. The Railway Recruitment Board-RRB, Chennai recruits for the vacancies from Chennai, Tiruchirappalli and Madurai Divisions of Southern Railway. The political leaders of Kerala opposed the formation of  Salem division. In order to pacify them, Southern Railway administration made two announcements.

i) Pollachi- Palakkadu section which was under the administrative control of Madurai Division was handed over to Palakkadu Division.

ii) Recruitment of vacancies from Madurai Division was shifted to Railway Recruitment Board, Tthiruvannathapuram.

When the announcement was made, we strongly opposed and now I demand to withdraw the above two orders.

3. Lot of vacancies are existing in Railways. While filling up of vacancies, the people of respective area should be given priority.

4. A new Division shall be formed through bifurcation of Madurai and Thiruvananthapuram Divisions with Head quarters at Tirunelveli.

5. The trains which were running prior to Covid, has now been introduced in phased manner. Whereas, the Passenger train services are not yet introduced which is the lifeline for the poor people and downtrodden. I would request to resume the service and stoppage in all stations. 

6. Concessions availed by Senior Citizens and physically handicapped people should be restored. 

7. Railway administration made announcement to start a new day express train between Madurai and Bangalore in the year 2013 and to start new trains between Shencottai– Coimbatore and Rameshwaram-Coimbatore. 

But all the above announcements are yet to be implemented.

8. Konkan Railway line is one of the major project initiated and implemented by Railways after Independence.  Trains are running on the new route for the past 25 yrs;  but, still the people of Tamil Nadu are not getting the usage of Konkan Railway. A new train shall be introduced from Nagercoil to Mumbai via Konkan Railway, which is the shortest route to reach Mumbai.

9. At present, there is no direct train to Hyderabad from southern districts of Tamil Nadu. Now three pairs of Trains are running between Hyderabad and Chennai. Out of this three trains, one train shall be extended up to Nagercoil.

10. The Railways is constructing subways to eliminate unmanned railway gates. However, even with light rain, the subways are flooded. Therefore, electric motors must be fitted to remove stagnant water in the subways.

11. A new line between Madurai and Thoothukudi via Nagalapuram, Vilathikulam, Aruppukottai/ Kariyapatti, Thirupparankundram  was approved by the railway Ministry and very meagre amount was allotted for this project. Only 7 kms of track work is completed. I demand the Administration to complete the approved project within a time limit and ensure sufficient funds to be allotted in the next budget.

12. Madurai–Theni section   conversion works should be completed at the earliest and a new direct train from Theni  to Chennai shall be introduced.

13. Koodal Nagar station should be made as Madurai Second Terminal and Silaimaan Station should be improved. 

14. There is a long pending demand to connect a direct rail link between Palani and Chamraj Nagar in Karnataka via Dharapuram, Erode and Sathiyamangalam. This will reduce half of the journey time to reach Mysore. This project shall be included in the coming budget 2022-2023 with sufficient allocation of funds.

15. There was a station for every 15 Kms in Metre Gauge which was abolished during BG conversion. Cholapuram and Karivalam Vandanallur between Rajapalayam and Sankaran Kovil were closed. 

Now this region has developed a lot and thousands of people from this area are working in Government services and huge people are working in Army and Airforce. To catch train, they have to go  either to Rajapalayam or Sankarankovil. 

Nalli station was closed during Gauge conversion and now it is opened. Similarly, Cholapuram and Karivalamvandanallur stations should be reopened for the public.

16. When I was a Member of Parliament for Sivakasi constituency, I demanded that the Virudhunagar-Kollam railway line be widened. The then Railway Minister Nitish Kumar accepted the request and announced. I brought him to Virudhunagar and he laid the foundation for that project. Now the administration has made a policy to convert all the sections in to electrified section. Now, I demand this Virudunagar – Kollam section shall be converted in to electrified section on top priority.

17. Sivakasi, an important industrial city, called as little Japan. This is the major station in between Virudunagar and Shencottai. Usually, all the trains passing through Sivakasi has stoppage at Sivakasi. Now train No 6102 Exp while going towards Chennai from Kollam has stoppage at Sivakasi, whereas in return direction from Chennai to Kollam, this train doesn’t has stoppage at Sivakasi. 

The travelling public and also the chamber of commerce repeatedly demanded the administration to provide stoppage at Sivakasi for 6101exp and which was not yet accepted by the administration. I  expect en early announcement from the administration to provide stoppage at Sivakasi for this particular train.

18.  Train No 6791/6792 Tirunelveli- Palakkadu Palaruvi Exp shall be given stoppage at Shencottai, Keelakadaiyam and Pavoorchathiram. 

198. More than  a million of people are residing in and around Cheranmahadevi, Kallidai Kurichi, Ambasamudhram, Kadayam and Pavoorchathiram. The travelling public of this area has to travel  with baggages, either to Tirunelveli or Tenkasi to catch train to reach state capital Chennai. I demand to introduce a daily Express train from Tirunelveli to Chennai via Tenkasi in order to cater the demands of this area public.

20. Due to pandemic, the development as well as maintenance of Railway infrastructure has come to a standstill. In this regard the demands raised by the IR Infrastructures Providers Association, Southern Railway, Tamilnadu to the notice of Southern Railway Administration. This contractors obtained huge amount of loan from Banks as well as outsiders to carry out the work. Lot of workers are getting job opportunities and their families are surviving by these contract works. The responsibility of ensuring the future to the school going wards of this workers are not only lies with the workers and the contractors, but the Railway Administration also has the responsibility.

Whenever the existing policies and norms are changed, the small and medium level contractors are getting affected and subsequently the workers are also affected.

Normally, in Divisional level work, the total cost of the work shall not exceed Rs 20 crores. But, now the tenders are floated with huge amount like 50-60 Crores. Recently in Chennai Division two tenders were floated for Rs 54 Crores and Rs 74 Crores.

There is no eligible Contractors available in Tamil Nadu to participate in this tender which involves huge amount. So the Contractors from north India are getting benefitted and the local Contractors are loosing their opportunities.

In Construction Wing, up to now they used to give tender notice for any work up to Rs 25 Crores. It is understood that there is a move to enhance this amount from Rs 25 Crores to 50 Crores. This will affect the chances of contractors belongs to Tamilnadu.

I demand, hereafter the work shall be divided and tender shall be floated not more than Rs 25 Crores in order give opportunity to the local contractors.

The guidelines prescribed in DSR 2018 for doing any construction work and guidelines prescribed in USSOR 2019 for maintenance of P.Way and Bridges shall be implemented immediately. In this regard railway Board also issued a circular No 2019/CE-I/USSOR/W&M/1 dated 26.11.2019.

In Highways and PWD, they used to have the list of approved contractors. But in Railways there is no such procedure. I demand,  railways also explore some procedure and publish the list of approved contractors.