Thursday, January 25, 2024

செய்தியாளர் நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைக் கைது செய்து உரிய தண்டனை வழங்கிடுக! வைகோ MP அறிக்கை!

திருப்பூர் மாவட்டம் - பல்லடம் வட்டத்தைச் சார்ந்த திரு நேசபிரபு என்பவர் நியூஸ்-7 தொலைக்காட்சியின் செய்தியாளராக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு அவர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
பரபரப்பான சூழ்நிலையில், கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுகலம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசும் விரைந்து செயல்பட்டு இரண்டு பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட நேச பிரபு அவர்களுக்கு மூன்று இலட்ச ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்குமாறும், செய்தியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை - 8
25.01.2024

No comments:

Post a Comment