Sunday, March 3, 2019

வெங்கடேசன் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

திண்டுக்கல்லில் இன்று 03-03-2019 காலையில் திரு வெங்கடேசன் அவர்கள் இல்ல திருமண விழா நடந்தது. இந்த மண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் துணைவியாருடன் கலந்துகொண்டார்.

இதில் மணமக்களுக்கு வாழ்த்து கூறி உரை வழங்கினார். ஏராளமான மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Saturday, March 2, 2019

சூழலியல் போராளி முகிலன் மீட்பு போராட்டம்!

சூழலியல் போராளி தோழர் முகிலன் அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னையிலிருந்து மதுரைக்கு ரயில் ஏறியவரை காணாமலாக்கப்பட்டுள்ளார். அவரை கண்டுபிடிக்க மதிமுக உள்ளிட்ட பல அரசியல் இயக்கங்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

இன்று 02-03-2019 சென்னையில் முகிலனை மீட்க தோழர் நல்லக்கண்ணு அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மதிமுக சார்பில் துணைச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்.

அவருடன் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

சென்னையில் மதிமுகவின் 27 ஆவது பொதுக்குழு!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைக் கோட்பாடுகளையும், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் களங்களைச் சந்திக்கும் அணுகுமுறை, கழகத்தின் தேர்தல் அறிக்கை குறித்த விவாதங்கள் அனைத்தும் மார்ச் 6 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் சென்னை மாநகர், அண்ணாநகரில் உள்ள விஜயஸ்ரீ மகாலில் நடைபெற இருக்கும் 27 ஆவது பொதுக்குழுவில் வடிவமைக்கப்பட இருக்கின்றன. முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழைக் கொண்டுவருவதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு சங்கொலி சந்தா கட்டிய ஆதாரத்தையும் காண்பித்து பொதுக்குழுவில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறவேண்டும்.

கழக வரலாற்றில் நடைபெற இருக்கும் 27 ஆவது பொதுக்குழு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் என்பதைக் கருத்தில் கொண்டு பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் 02-03-2019 அன்று அழைப்பு விடுத்துள்ளார்.

Friday, March 1, 2019

பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டிய வைகோ!

இந்திய பிரதமர் மோடி அவர்களின் குமரி வருகையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டமிட்டபடி, குமரி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் கறுப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் எதிர்ப்பு முழக்கங்களையும் எழுப்பினார்கள்.

ஏராளமான குமரி மற்றும் நெல்லை மாவட்ட தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்.

இதில் 650 பேர் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் பணகுடியில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார்கள்.

இரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறையில் வடமாநிலத்தவர் பணி நியமனம் - வைகோ கண்டனம்!

தென்னக இரயில்வே திருச்சி கோட்டத்தில், எலக்ட்ரிஷியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழிற் பழகுநர் இடங்களுக்கு 1765 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 1600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சி தருகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 52 மாத காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி. இந்தியா, பாரத் மிகுமின் நிறுவனம், வங்கிகள், வருமானவரித்துறை, சுங்க இலாகா, இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காடு பணியில் அமர்த்தி இருக்கிறது.

குறிப்பாக தென்னக இரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து வடமாநிலத்தவர்களையே பணி நியமனம் செய்து வருகிறது.

2014 நவம்பரில் தெற்கு இரயில்வே குரூப்-டி பணியாளர் தேர்வு நடத்தியது. இதற்காக தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது இணைக்கும் சான்றிதழ் நகல்களுக்கு அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெறும் விதி (Attestation) நீக்கப்படுகிறது. இனிமேல் அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெற வேண்டிய தேவை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆங்கில நாளிதழ் விளம்பரங்களில் வெளியிடும்போது, “விண்ணப்பிப்போர் அத்தாட்சி பெற்ற சான்றிதழ் இணைத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தது.

இதனை நம்பி, சான்றிதழ்களில் அத்தாட்சி பெறாமல் விண்ணப்பித்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டரை இலட்சம் பேரின் விண்ணப்பங்களை தென்னக இரயில்வே நிராகரித்தது. ஆனால் பீகார் போன்ற வட மாநிலங்களிலிருந்து விண்ணப்பித்திருந்தவர்களுக்கு தேர்வு நடத்தி டிராக்மேன், போர்ட் மேன், சபாய்வாலா, கலாசி போன்ற பணிகளுக்கு ஆயிரக்கணக்கானவர்களை பணியில் சேர்த்தனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் தனிச் சட்டமே இயற்றி உள்ளன.

தமிழகத்தில் சுமார் 80 இலட்சம் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில், வெளி மாநிலங்களிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

தமிழ்நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில்கள், வணிகம் அனைத்திலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது. வடமாநிலங்களைச் சேர்ந்தோரின் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற நிலைமைகள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் மேற்கு வங்களாம், அசாம் போன்ற மாநிலங்கள் போன்று தமிழ்நாடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் தமிழக அரசு மத்திய அரசுக்கு குற்றேவல் கொத்தடிமையாக செயல்படுவதால் இந்த விபரீதத்தைத் தடுக்கின்ற முதுகெலும்பு இல்லாத அரசாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு ஆகும்.

இரயில்வே துறை உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறைகளிலும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புக் கிடைக்கும் நிலையை உருவாக்க தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், குறிப்பாக வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 1-3-2019 அன்று தெரிவித்துள்ளார்.