Tuesday, December 31, 2019

2020 புத்தாண்டு - வைகோ வாழ்த்து!

புத்தாயிரம் ஆண்டுத் தொடக்கம் என்பது போல, ஒரு தலைமுறையைக் குறிக்கின்ற பத்தாவது ஆண்டின் நிறைவு ஆண்டாக மலர்கின்றது 2020. நம்பிக்கையோடு வரவேற்கின்றோம். கடந்து போன ஆண்டின் நிகழ்வுகளும், பதிவுகளும், சந்திக்கப் போகின்ற ஆண்டுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள உதவிடும்.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, ஆட்சியாளர்கள் அடக்குமுறைப் பாதையில் வேகமாக நடைபோடுகின்றார்கள். அறிஞர்களான நமது முன்னோர்கள் ஆக்கத் தந்த அரசியல் சட்டம் வரையறுத்த, மதச் சார்பு அற்ற நாடு என்ற கோட்பாட்டினைச் சிதைக்கின்ற முயற்சிகளில், ஆட்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு இருக்கின்றார்கள். சட்டங்களைத் திருத்தி, மக்களைப் பிரித்து ஆள முனைகின்றார்கள். மத அடிப்படையில், ஒரு பிரிவினரை இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்குகின்றார்கள். அறவழிப் போராட்டங்களை, அடக்குமுறையால் ஒடுக்குகின்றார்கள். சர்வாதிகாரப் போக்கு தலை தூக்குகின்றது. காரிருளில் பாயும் மின்னலைப் போல், மாணவர்களும், இளைஞர்களும், ஜனநாயகத்தை, மதச்சார்பு இன்மையைக் காக்க, நாடு முழுமையும் அறவழியில் களம் காணும் நிலைமை உருவாகி இருக்கின்றது.

இலங்கைத் தீவில் கோரமான தமிழ் இனப் படுகொலை செய்த கோட்டபய ராஜபக்சேவின் கொட்டம் அடிக்கும் ஆட்சி நடக்கின்றது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1914 முதல் 1917 வரை துருக்கியர்கள் நடத்திய ஆர்மினியர்கள் படுகொலைகள், இன அழிப்புக் குற்றம்தான் என, இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க நாடாளுமன்றம் அறிவித்து இருக்கின்றது. அதுபோல, சிங்களக் கொலைகாரக் கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தவும், தமிழ் ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும், உறுதி கொள்வோம்.

தமிழகத்தில், மாநில உரிமைகளை மத்திய அரசிடம் காவு கொடுத்துவிட்டு, ஊழல் ஆட்சி கோலோச்சுகின்றது. ஆனால், இந்த நிலைமைகளை மாற்றி, பேரறிஞர் அண்ணா கனவு கண்ட மாநிலமாக ஆக்குவதற்கு, இந்த 2020 ஆம் ஆண்டில் நம்மை ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும்.

மதச் சார்பு இன்மையைப் பாதுகாப்போம்; அனைத்து சமயத்தினரிடமும் நல்லிணக்கத்தை வளர்ப்போம்.

எந்நாளும் துன்பத்தில் உழல்கின்ற விவசாயப் பெருமக்களுக்கு, வருகின்ற காலம் துயர் துடைக்கின்ற காலமாக அமையும் என்ற நம்பிக்கையோடு, உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்தை 31-12-2019 தெரிவித்துள்ளார்.

Sunday, December 29, 2019

தமிழக மீனவர்கள் கைது; மீன்பிடிப் படகுகள் பறிமுதல் வைகோ கண்டனம்!

இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபராகப் பொறுப்பேற்றதற்குப் பின்னர் சிங்கள பௌத்த இனவெறி தலைவிரித்து ஆடுகிறது. இலங்கை விடுதலை நாளில் அந்நாட்டின் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பாடப்பட்டு வந்ததை மாற்றி, இனி தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என்று சிங்கள அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்தது தமிழ் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இலங்கையின் அரசியலமைப்பின் படி, இணை ஆட்சி மொழியாகவும், இணை தேசிய மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தமிழ் மொழியைப் புறந்தள்ளி, தமிழர்களை மொழி, இன ரீதியாகத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையை கோத்தபய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களையும் அச்சுறுத்தும் செயலில் கோத்தபய ராஜபக்சே அரசு இறங்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் - ஜெகதாபட்டினம் துறைமுகத்திலிருந்து டிசம்பர் 27 ஆம் தேதி மூன்று விசைப்படகுகளில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். எல்லை தாண்டியதாக இவர்கள் அனைவரையும் இலங்கைக் கடற்படைக் கைது செய்துள்ளது. மேலும் மீன் பிடித் தொழிலுக்குப் பயன்படுத்திய மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து, இலங்கைக்குக் கொண்டு சென்றுள்ளது.

இந்நிகழ்வு தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மீண்டும் நேற்று கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்துள்ளனர். பல இலட்ச ரூபாய் மதிப்பிலான மீன் பிடிக் கருவிகளையும் சிங்களக் கடற்படை சேதப்படுத்தி இருக்கிறது. கோத்தபய ராஜபக்சே அரசு தொடர்ந்து தமிழர்கள் மேல் வெறுப்பை காட்டும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.

ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்தற்காக பன்னாட்டு நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய அரசு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.

ஈழத் தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் வன்மத்தை காட்டி வரும் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு, இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

ஏற்கனவே இலங்கை அரசு எல்லை தாண்டி வரும் மீனவர்களைக் கைது செய்து, மூன்று ஆண்டுகள் வரையில் சிறையில் அடைக்கவும், படகுகளைப் பறிமுதல் செய்யவும், இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கவும் இலங்கை கடற்தொழிற் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது.

எனவே இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 13 தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கும், மீன் பிடிப் படகுகளை மீட்பதற்கும் உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 29-12-2019 தெரிவித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகக் கோலம் போட்ட பெண்கள் கைது! வைகோ கடும் கண்டனம்!

மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், மேலும் கொண்டுவர இருக்கின்ற தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை எதிர்த்தும் நாடு முழுவதும் தன்னெழுச்சியான பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அரசியல் கட்சி எல்லைகளைத் தாண்டி மோடி அரசின் ஜனநாயக விரோத சட்டங்களை எதிர்த்து வீதிக்கு வந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை சென்னை - பெசன்ட் நகரில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தங்கள் வீட்டு முற்றத்தில் கோலமிட்டு எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்திய ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றார்கள்.
பெசன்ட் நகர் கடற்கரைக்கு எதிரே இருக்கும் பகுதியில், சாஸ்திரி நகர் காவல் நிலையத்திலிருந்து வாகனத்தில் சென்ற காவல்துறையினர் கோலமிட்ட பெண்களை தரக்குறைவாக பேசி மிரட்டியுள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக பொங்கி எழும் கோபாவேச அலைகளை காவல்துறை மூலம் அடக்கு முறையை ஏவி ஒடுக்கிவிடலாம் என்று எடப்பாடி அரசு கருதுகிறது. ஜனநாயகத்தில் மக்கள் எழுச்சியை ஆட்சியாளர்கள் அவ்வளவு எளிதில் நசுக்கிவிட முடியாது என்பதை வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும்.
தங்கள் வீட்டு வாசலில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துக் கோலமிட்ட பெண்களை எடப்பாடி அரசின் ஏவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது; உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டன அறிக்கையில் 29-12-2019 தெரிவித்துள்ளார்.

Saturday, December 28, 2019

ஜனவரி 16 பெங்கல் நாளில் பிரதமர் மோடி உரை; மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர உத்தரவு! வைகோ கண்டனம்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சாதி, மத வேறுபாடு இன்றி தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.
அந்நாளில் கிராமங்கள், நகரங்களில் இளைஞர்கள், மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, பரிசுகள் வழங்கி அவர்களது திறமையை ஊக்குவிப்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி போகிப்பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், ஜனவரி 17ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் பொங்கலுக்கு தொடர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அதேபோல் வரும் 2020ஆம் ஆண்டும் ஜனவரி 14 முதல் 17ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திடீரென ஜனவரி 16 ஆம் தேதி பொங்கல் விடுமுறை நாளன்று, பிரதமர் மோடி உரையாற்றுகிறார் என்றும், அவரது உரையை கேட்க 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்கள் வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது.
பொங்கல் திருநாளன்று மாணவர்கள் பள்ளிக்குச் வந்தாலும், பிரதமர் மோடியின் உரை மீது அவர்களால் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைதான் ஏற்படும்.
ஆகவே மாணவர்கள் தமிழர் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பள்ளிக் கல்வித் துறை தனது உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டன அறிக்கையில் இன்று 28-12-2019 தெரிவித்துள்ளார்.

Friday, December 27, 2019

இந்திய இராணுவத் தலைமைத் தளபதி அரசியல் பேசுவதா? வைகோ கண்டனம்!

மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் வெடித்துள்ளன. குறிப்பாக பல்கலைக் கழக மாணவர்களும், இளைஞர்களும் இலட்சக்கணக்கில் வீதிக்கு வந்து போராடுகின்ற நிலைமை உருவாகி இருக்கின்றது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது பல இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 22 பேர் உயிர் இழந்திருக்கின்றனர்.
இந்நிலையில், இந்தப் போராட்டங்கள் குறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற சுகாதாரம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய இந்திய இராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் பிபின் ராவத், “மக்களைத் தவறான பாதையில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல, ஏராளமான பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் தலைமையேற்று நடத்தும் போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதை நாம் பார்த்து வருகிறோம். இது சரியான தலைமை அல்ல” என்று கூறி இருக்கின்றார்.
விடுதலை பெற்ற இந்தியாவின் 70 ஆண்டு கால வரலாற்றில் இராணுவத் தளபதி ஒருவர் உள்நாட்டுப் பிரச்சினை மற்றும் அரசியல் விவகாரங்களில் தலையிட்டதோ, கருத்துக் கூறியதோ இல்லை. ஆனால் தற்போது இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடும் மாணவர்களை வன்முறையாளர்கள் என்று சித்தரிப்பதும், மாணவர்களை வழிநடத்துபவர்கள் சரியான தலைவர்கள் இல்லை என்று மறைமுகமாக எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்திருப்பதும் ஏற்றுக்கொள்ளவே முடியாத கண்டனத்துக்கு உரியதாகும்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமைத் தளபதியை நியமனம் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
முப்படைகளையும் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்படும் தலைமைக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஐயப்பாடுகளை எழுப்பி உள்ளது.
இந்நிலையில், ஜனநாயக நாட்டில் இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பது ஆபத்தான விளைவை ஏற்படுத்தும்.
சீருடைப் பணியாளர்கள் மற்றும் சீருடை உயர் அலுவலர்களுக்கு என்று அரசு வகுத்துள்ள விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும், மரபையும் மீறி கருத்துத் தெரிவித்துள்ள இராணுவத் தலைமைத் தளபதி உடனடியாக மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

Thursday, December 26, 2019

தோழர் நல்லகண்ணு 95ஆவது பிறந்தநாள் வைகோ நேரில் வாழ்த்து!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று (26.12.2019) 95ஆவது பிறந்தநாள் காணும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்து, வாழ்த்துக் கூறினார். வைகோ அவர்களின் வாழ்த்து வருமாறு:-
தமிழகத்தில் தோன்றி, தமிழகத்திலேயே கடலோடு சங்கமிக்கின்ற தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருவைகுண்டம் திருநகரில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் பிறந்த போற்றுதலுக்கும் பெரும் மரியாதைக்கும் உரிய ஆருயிர் அண்ணன் நல்லகண்ணு அவர்கள் சின்னஞ்சிறு வயதிலேயே தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு, போராட்ட உணர்வோடு இந்திய விடுதலையிலும் பங்கேற்றவர்.
பின்னர் கம்யூனிஸ்டு இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்தார். வாலிபப் பருவத்திலேயே சித்ரவதைகளை அனுபவித்து, ஐந்தாண்டு காலம் சிறையில் இருந்திருக்கிறார். இரண்டு ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். காவல்துறையினர் அவரை சித்ரவதை செய்து, தெற்குச் சீமைக்கே உரிய அடையாளமான அவரது மீசையை நெருப்பால் சுட்டுப் பொசுக்கிப் பறித்தார்கள். இத்தனைக்கும் அவர் வன்முறையில் ஈடுபடுகிறவர் அல்ல. வன்முறையைத் தவிர்த்து அறவழியில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
நெல்லைச் சீமையிலும், தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்டு கட்சியை வளர்த்து, இந்தியா முழுவதும் கம்யூனிஸ்டு கட்சிக்காகப் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்.
நேற்று முன்தினம் நான் தொலைக்காட்சியைப் பார்த்தபோது, அண்ணன் நல்லகண்ணு அவர்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார். இப்பொழுதும்கூட ஒரு போராட்டக் களத்தக்குப் புறப்பட்டுக்கொண்டு இருக்கிறார். இன்னும் 25 ஆண்டுகள் போராட்டக் களத்தில் நிற்கக்கூடிய அளவுக்கு உடல் வலிமையுள்ள ஒரே தலைவராக இன்றைக்குத் தமிழ்நாட்டில் அண்ணன் நல்லகண்ணு அவர்கள்தான் இருக்கின்றார்கள். இதே உடல் வலிமையோடு அவர் இன்னும் 125 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டு நலனுக்காக உழைக்க வேண்டும்.
அவரது உள்ள வலிமையைப் பற்றிச் சொல்லவேண்டியது இல்லை. அது வைரம் பாய்ந்த நெஞ்சம்.
முறையாகப் படித்து, ஆய்வு செய்து உரையாற்றுகிற ஆற்றல் கொணடவர். இலக்கியம், கலை, அரசியல் என்று அனைத்து வகையிலும் சிறப்பாக உரையாற்றக் கூடியவர். தமிழ்நாட்டுக்குக் கருவூலமாகத் திகழக்கூடியவர் அண்ணன் நல்லகண்ணு.
அண்ணன் நல்லகண்ணு அவர்கள் முழு உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வைகோ அவர்கள் இவ்வாறு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.

Tuesday, December 24, 2019

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வைகோ அஞ்சலி!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, 24-12-2019 மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் கழகப். பொதுச்செயலாளர் வைகோ. உடன் மாவட்ட செயலாளர்கள், கழக கண்மணிகள் ஏராளமானோர் இருந்தனர்.

தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் வைகோ மலரஞ்சலி!



பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 24-12-2019  தாயகத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மக்கள் தலைவர் வைகோ எம்.பி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடம் சென்று பெரியார் நினைவிடத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார்.
அதுபோது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் கழக முன்னணியினர் கலந்துகொண்டனர்.

Monday, December 23, 2019

குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணியில் வைகோ மற்றும் மதிமுக உள்ளிட்ட கூட்டணியினர்!

பாசிச பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இன்று டிசம்பர் 23 காலை 9 மணி அளவில் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகிலிருந்து ராஜரத்தினம் திடல் நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது.

இதில் மதிமுக கழகக் கண்மணிகள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், கலைத் துறையினர் என அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று ஜனநாயகம் காக்க, மதச்சார்பற்ற தன்மையை நிலைநாட்ட கரம் கோர்த்து பேரணியில் கலந்துகொண்டார்கள்.

கூட்டணி தலைவர்களான வைகோ, மு.க.ஸ்டாலின், திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், ஆசிரியர் வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

Saturday, December 21, 2019

அண்ணா அறிவுக்கொடை நூல் வெளியீடு!

அண்ணா அறிவுக்கொடை 110 நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் 21-12-2019 நடந்தது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்ணா அறிவுக்கொடை நூலை வெளியிட மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள் பெற்றுக்கொண்டார். இதில் 64 தொகுதிகள் வெளியிடப்பட்டன.

திராவிட கழக தலைவர் வீரமணி, விஐடி வேந்தர் விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் பேரணி நாட்டைக் காக்க கரம் கோர்த்து எழுவோம்! வைகோ அழைப்பு!


பாரதிய ஜனதா கட்சி அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, ‘இந்து ராஷ்டிரா கனவை’ நனவாக்கிட நாட்டின் பன்முகத்தன்மையை சீரழித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.


காஷ்மீரத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்புரிமை ரத்து, முத்தலாக் தடைச் சட்டம், பொது சிவில் சட்டம் என்று அடுத்தடுத்து தங்கள் நீண்ட கால செயல்திட்டத்தை நிறைவேற்ற முனைந்துள்ள பா.ஜ.க. அரசு தற்போது குடியுரிமை திருத்தத் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.

டிசம்பர் 11 அன்று மாநிலங்கள் அவை விவாதத்தின்போது, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் இந்தச் சட்டத்தை வங்கக் கடலில் தூக்கி வீசி எறிய வேண்டும் என்று கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன்.

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறிஸ்தவர், பார்சி, ஜெயின், சீக்கியர் மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் 2014 டிசம்பர் 31 க்குள் இந்தியாவில் குடியேறி இருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று குடியுரிமைத் திருத்தச் சட்டம் -2019 (ஊவைணைநளோiயீ ஹஅநனேஅநவே ஹஉவ-2019 -ஊஹஹ) கூறுகிறது.

ஆனால் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கும், இலங்கையிலிருந்து ஏதிலிகளாக தமிழகத்திற்கு வந்து 35 ஆண்டுகளாக வாழுகின்ற ஈழத் தமிழர்களுக்கும், மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முஸ்லிம்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்று வரையறுக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 14, 15, 21, 25 மற்றும் 26 ஆகியவற்றுக்கு எதிராக குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019 கொண்டுவரப்பட்டு இருப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

குறிப்பாக இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 14 - மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அடிப்படையில் எவரையும் அரசு பாகுபடுத்தக்கூடாது என்று தெளிவுபட கூறுகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி அரசு, முஸ்லிம்களை மத அடிப்படையிலும், ஈழத்தமிழர்களை இன அடிப்படையிலும் பிரிவினை செய்வது அரசியல் சட்டத்தையே காலில் போட்டு மிதிக்கும் கொடுஞ்செயல் கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.

அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள சமத்துவ உரிமையை மதத்தின் பெயரால் தட்டிப் பறிக்கும் அதிகாரம் பா.ஜ.க. அரசுக்குக் கிடையாது.

ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையோ, நாடாளுமன்ற ஜனநாயகத்தையோ ஒரு பொருட்டாகக் கருதாமல் கிள்ளுக் கீரையாக கருதுகின்ற மதவாத சனாதன கும்பலின் கைகளில் அல்லவா இந்தியாவின் ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டு இருக்கிறது?

ஏற்கனவே அசாமில் கொண்டுவரப்பட்ட குடியுரிமைப் பதிவேடு (சூயவiடியேட சுநபளைவநச டிக ஊவைணைநn -சூசுஊ) 20 இலட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்று வரையறுத்ததை ஏற்காமல் போராட்டம் நடந்து வருகிறது. தற்போது வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசலப் பிரதேசம், மேகலாயா, மிசோரம் மற்றும் திரிபுரா என்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரம் ஆகி வருகிறது.

இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் எரிமலையென வெடித்து இருக்கிறது. காவல்துறை அடக்குமுறையை ஏவி இந்நாட்டு இளைஞர்களின் எழுச்சியை ஒடுக்கிவிடலாம் என்று இந்துத்துவ மதவாத சனாதன அரசு மனப்பால் குடிக்கிறது.

இந்தியா இந்துக்களின் நாடு, இங்கு இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் அந்நியர்கள் என்ற ஆர்.எஸ்.எஸ். மதவாத கருத்தியலை சட்டபூர்வமாக்கி, இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற முனைந்திருக்கிறது பா.ஜ.க. அரசு.

மத அடிப்படைவாதத்தைப் பெரும்பான்மை வாதமாக, தேசியவாதமாகக் கட்டமைத்து வரும் பா.ஜ.க. அரசும், அதற்குத் துணை போகின்ற கட்சிகளையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

மகாத்மா காந்தி கட்டமைத்த மதச்சார்பற்ற இந்தியாவைச் சீரழிக்க முனைந்துள்ள பா.ஜ.க. அரசுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் கிளர்ந்து எழவேண்டிய நேரம் வந்துவிட்டது.

பாசிச பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஆருயிர்ச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் டிசம்பர் 23 காலை 9 மணி அளவில் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகிலிருந்து ராஜரத்தினம் திடல் நோக்கி நடைபெறும் மாபெரும் பேரணியில் கழகக் கண்மணிகளும், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், கலைத் துறையினர் என அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று ஜனநாயகம் காக்க, மதச்சார்பற்ற தன்மையை நிலைநாட்ட கரம் கோர்த்து எழுவோம் வாரீர்! வாரீர்!


என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 22-12-2019 தெரிவித்துள்ளார்.

Friday, December 20, 2019

விவசாய நகைக் கடன் வட்டி மானியம் இரத்துக்கு வைகோ கண்டனம்!

தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகள், தங்க நகை ஈட்டின் பேரில் 7 விழுக்காடு வட்டி விகிதத்தில் மூன்று இலட்சம் ரூபாய் வரையிலான பயிர்க் கடன்களை விவசாயிகளுக்கு அளித்து வருகின்றன. இந்தக் கடன்கள், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் வட்டி மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
விவசாயிகளுக்கான தங்க நகைக் கடன் திட்டத்தின்படி, ஒரு இலட்சம் ரூபாய் வரை நகைகளை ஈடு வைத்துக் கடன் பெற, கையொப்பமிட்டு உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தால் உடனடியாகக் கடன் அளிக்கப்படுகிறது. மூன்று இலட்சம் ரூபாய் வரை கடன் பெற விவசாய நிலங்களின் விவரங்களை வழங்க வேண்டும்.
இந்தக் கடன் திட்டப்படி விவசாயிகளுக்கு நகைக் கடன் 11 விழுக்காடு என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், மத்திய அரசு 4 விழுக்காடு மானியமாக வங்கிகளுக்கு அளிப்பதால் நகைக்கடன் வட்டி என்பது 7 விழுக்காடு மட்டுமே.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் தங்களுடைய குறுகிய கால பயிர்க் கடன்களை உரிய கால கட்டத்தில் திருப்பிச் செலுத்துகின்ற விவசாயிகளுக்குக் கூடுதலாக 3 விழுக்காடு வட்டி மானியம் தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு ஆண்டுக்கு 4 விழுக்காடு என்ற குறைவான வட்டி விகிதத்தில் நகைக் கடன் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம், தற்போது 4 விழுக்காடு வட்டி மானியத்தைத் திடீரென்று இரத்து செய்திருப்பதால் விவசாய நகைக் கடன் வட்டி 7 விழுக்காட்டிலிருந்து 11 விழுக்காடாக அதிகரித்து விடுகிறது. விவசாய நகைக் கடன் பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல என்று புகார்கள் எழுந்துள்ளதாக மத்திய அரசு இதற்குக் காரணம் கூறுகிறது.
வேளாண் நகைக் கடன் பெற விண்ணப்பிக்கின்றவர்களை ஆய்வு செய்து, கடன் வழங்க வேண்டியது வங்கிகளின் பொறுப்பாகும். உண்மையாகவே அரசின் வட்டி மானியத்தை விவசாயிகள் பெறுகிறார்களா? என்று உரிய முறையில் கண்காணிக்க வேண்டியது அரசின் கடமையாகும். அதை விடுத்துவிட்டு விவசாய நகைக் கடன்களுக்கான வட்டி மானியத்தைத் திடீரென்று இரத்து செய்து இருப்பது விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயல் ஆகும். இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
விவசாயிகள் கந்து வட்டிக் கொடுமையில் சிக்கி வாழ்வாதாரத்தையே பறிகொடுக்கும் நிலைமையை அரசே உருவாக்குவது அநீதியாகும்.
விவசாயிகளின் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என்று கைவிட்டுவிட்ட பா.ஜ.க. அரசு, நகைக் கடன் வட்டி மானியத்தையும் நிறுத்துவது கண்டிக்கத்தக்கது ஆகும்.
மத்திய அரசு, வேளாண் துறை அமைச்சகத்தின் உத்தரவை இரத்து செய்து, விவசாயிகளுக்கு நகைக் கடன் வட்டி மானியம் நீடிக்க வழி வகை செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 20-12-2019 அன்று தெரிவித்துள்ளார்.

Thursday, December 19, 2019

பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய வைகோ!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களுடைய 19-12-2019 இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்.
பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
“பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோருக்கு சகோதரனாக, உற்ற துணையாக இயங்கி ஒளி குன்றாத மணிவிளக்காக திராவிட இயக்கத்தைக் கட்டிக் காத்து வருகின்ற அண்ணன் பேராசிரியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறினேன்.
அவர் நலமாக இருக்கின்றார்” என்று கூறினார்.

சோ.தர்மனுக்கு வைகோ வாழ்த்து!

சாகித்ய அகடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று அலைபேசியில் பேசினார். மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் இலக்கிய உலகில் புதிய கருதுகோளாக, கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதி, பல விருதுகளைக் குவித்து, கரிசல் மண்ணுக்கும், நெல்லைச் சீமைக்கும் எழுத்தாளர்கள் பெருமை சேர்த்து வருவது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதற்கு சோ.தர்மன், நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Wednesday, December 18, 2019

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மதிமுக!

அனைத்துக் கட்சி 18-12-2019 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில்  வருகின்ற 23ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் திமுக கூட்டணியின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டனப் பேரணி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மத்திய பா.ஜ.க. அரசே! குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெறுக !

மத்திய பா.ஜ.க. அரசின் கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தவறான பொருளாதாரக் கொள்கைகளால், இந்தியா கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
வேலைவாய்ப்பின்மையின் சதவிகிதம் கூடிக்கொண்டே போகிறது. தொழில்துறையின் வளர்ச்சி தேக்க நிலையில் இருக்கிறது.
நாட்டின் உயிரோட்டமான வேளாண்மைக்கு ஊக்கமின்றியும், விளை பொருள்களுக்கு உரிய விலை இன்றியும் ஒளி இழந்திருக்கிறது. விலைவாசி விண்ணைத் தொடும் அளவு உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏழை எளிய நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே போகிறது.
பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.
சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை மிகக் கடுமையான, முன்னெப்போதும் கண்டிராத அளவிலான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் திணிக்கப்பட்டுள்ள சூழலில்; அனைத்தையும் ஆக்கபூர்வமான சிந்தனையாலும் நடவடிக்கையாலும்
சரிசெய்ய வேண்டிய பணியைத் தவிர்த்துவிட்டு, நாட்டின் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும், ஆர்.எஸ்.எஸ். வகுத்தளித்துள்ள மதரீதியான அடிப்படைவாதக் கொள்கைக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும், "குடியுரிமை திருத்தச் சட்டம் 2019" -ஐ கடந்த 9-12-2019 அன்று மக்களவையிலும், 11-12-2019 அன்று மாநிலங்களவையிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றி உள்ளது. இது அரசியலமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கை ஆகும்.
1955ஆம் ஆண்டே இந்தியாவுக்கான குடியுரிமைச் சட்டம் தெளிவாக நிறைவேற்றப்பட்டு, 60 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவிதப் பிரச்சினையுமின்றி நிலவி வந்த அமைதிக்கு, இப்போது குந்தகம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.
மக்களவையில் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தை மக்கள் வாழ்வு மேம்பாட்டுக்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துவதை விடுத்து, மத்திய பா.ஜ.க. அரசு, பிற்போக்கான காரியங்களிலேயே கவனம் செலுத்துகிறது.
மதவாதக் கண்ணோட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் அவற்றுள் ஒன்று.
இந்தச் சட்டத் திருத்தத்தால் முஸ்லிம் சிறுபான்மை மக்களும், ஈழத்தமிழர்களும் குடியுரிமை பெற இயலாமல், பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து, முத்தலாக் தடைச் சட்டம் - அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து, காஷ்மீரில் ஜனநாயகக் குரல்வளையை நெரித்தல் - தற்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் என தொடர்ச்சியாக, சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தின்மீது தாக்குதல் நடத்தி வருகிறது மத்திய பா.ஜ.க. அரசு.
இந்தத் திருத்தச் சட்டத்தில் புதைந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து, இந்தியாவில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் சக்திகள் அனைத்தும், நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், அதனை நிராகரித்து, தங்கள் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்தன. ஏகோபித்த இந்த எதிர்ப்பை பா.ஜ.க. அரசு துளியும் மதிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் அடுத்த கட்டமாக, ஜனநாயக வழியிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அகில இந்திய அளவில் மாணவர் சமுதாயம் எதிர்ப்புக்குரலை எழுப்பி வருகிறது. இயல்பாக எழும் மாற்றுக் குரலைச் சகித்துக் கொள்ளும் தன்மையை மத்திய அரசு இழந்து விட்டது.
டெல்லி ஜாமியா - உத்திரப்பிரதேச அலிகார் பல்கலைக் கழகங்களில் போராடிய மாணவ - மாணவியர் மீது காவல்துறையினரும், காக்கி சீருடையில் அழைத்து வரப்பட்ட சமூக விரோதக் கும்பலும் கொடூரமான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டதைக் கண்டு நாடே பதறுகிறது.
மாணவர்களை ரத்த வெள்ளத்தில் தள்ளி, அதன்பிறகும் கடுமையான தாக்குதல் நடத்திய காவல்துறைக்கும், ஏவிவிட்ட மத்திய அரசுக்கும் அனைத்து கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
நாடு முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெறும் மாணவர்களின் அறவழிப் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதென்றும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட சில மாநில முதலமைச்சர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு வெளிப்படையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் ஆளுங்கட்சியின் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாகப் பங்கேற்ற குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம், இந்நாட்டில் பாசிச சக்திக்கெதிராக ஜனநாயக சக்திகள் ஓர் அணியில் சேர வேண்டிய தேவையையும் அவசர - அவசியத்தையும் வலியுறுத்தும் முற்போக்கு அடையாளமாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
“எம்மதமும் சம்மதமே”, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற உயர்ந்த சிந்தனைகளின் சிறப்புக் கருவூலமான தமிழ்நாட்டில்; வாழ்ந்துவரும் தொப்புள் கொடி உறவுகளான ஒரு இலட்சம் ஈழத்தமிழர்களின் உரிமை செறிந்த எதிர்காலத்தையும், நாடு முழுவதும் இருக்கும் முஸ்லிம் மக்களின் அமைதியான வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி
யிருக்கிறது குடியுரிமைத் திருத்தச் சட்டம்.
பாகிஸ்தான்-பங்களாதேஷ்-ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களைத் தவிர்த்து, இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் இந்தத் திருத்தச் சட்டம் ; இலங்கையிலிருந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதென்பது, பா.ஜ.க. அரசின் மதவாதம் மட்டுமல்ல, அப்பட்டமான தமிழின விரோதப் போக்குமாகும்.
தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்ற ஈழத்தமிழர்களைப் பாதிக்கும் இந்தத் திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டிய நிலையில், அதனை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்து நிறைவேற ஒத்துழைத்திருப்பது, ஈழத்தமிழர்களுக்குச் செய்திருக்கும் பச்சைத் துரோகம் என்பதை சரித்திரம் மறக்காது, மன்னிக்காது.
மாநிலங்களவையில் இந்தச் சட்டமசோதா நிறைவேறுவதற்கு அ.தி.மு.க.வின் 11 உறுப்பினர்களும், பா.ம.க.வின் ஒரு உறுப்பினரும் அளித்த வாக்குகள்தான் காரணம் என்கிறபோது, பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக அடிமை அ.தி.மு.க. கூட்டணி செயல்பட்டு வருவது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்திலிருந்து துணைச் செயலாளர் ஒருவர், அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு, "இந்தச் சட்ட மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதால், அதன்படி வாக்களித்தோம்" என மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதிலிருந்து, அ.தி.மு.க. எப்படி ஆட்டி வைக்கப்பட்டு வருகிறது, அதிமுகவும் மனமுவந்து எப்படியெல்லாம், தலையாட்டி வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியாவின் அமைதி சீர்குலைந்து, மத நல்லிணக்கம் சிதைந்து, பயமும் பதற்றமும் அதிகரித்து வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களிலும் தலைநகர் டெல்லியிலும் இன்னும் பல பகுதிகளிலும், மக்களின் அச்ச உணர்வு, போராட்டமாக மாறியுள்ளது.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெறவிருந்த இந்தியப் பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தியா வரவிருந்த வங்கதேச அமைச்சரும், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். இந்தச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தனது அருணாசலப்பிரதேசம், மேகாலயா மாநிலங்களுக்கான பயணங்களை ரத்து செய்திருக்கிறார்.
பல நாடுகள், தங்கள் குடிமக்களை "இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்" எனக் கேட்டுக் கொண்டுள்ளன. உலகளாவிய அமைப்புகள் பலவும் மற்றும் 1067க்கு மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற அறிவியலாளர்களும், இந்த மதவாத சட்டத் திருத்தத்திற்கு கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.
"வேற்றுமையில் ஒற்றுமை" என்கிற இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாழ்படுத்திடும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டமும், அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசு மேற்கொள்ளவிருக்கும், குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானதும், சொந்த மண்ணிலே வாழும் சகோதரர்களை அகதிகளாக்கி, அவர்களை அந்நியப்படுத்திக் கொடுமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளுமாகும்.
ஏற்கனவே அசாமில் நடத்தப்பட்ட குடிமக்கள் பதிவேட்டுக்கான பதிவில், கார்கில் போர் வீரரையே அந்நியராகப் பதிவு செய்து கைது செய்த கொடுமைகள் நடந்துள்ளன. முஸ்லிம்கள் மட்டுமின்றி, பல லட்சம் இந்து மக்களும் அசாமில் எதிர்காலம் தெரியாமல் தத்தளிக்கின்றனர்.
இந்நிலையில், மதவாத மற்றும் இனவாதக் கண்ணோட்டத்துடனும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்திடும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்த சட்டத்தை இந்த அனைத்துக் கட்சிக்கூட்டம் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாட்டில் முதலில் “அமைதி நிலவ வேண்டும்” என்ற நல்லெண்ணத்துடன், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.
குடியுரிமைத் திருத்த சட்டத்தைக் கொண்டு வந்து, நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கும், அதன் திட்டத்தின்படியே செயல்பட்டு, ஈழத்தமிழர்களுக்கும் - சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தினருக்கும் துரோகம் இழைத்த மாநில அ.தி.மு.க. அரசுக்கும் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில், 23.12.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னையில், “குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி” நடத்திடுவது என அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

Tuesday, December 17, 2019

கேள்வி எண் 603: சிபிஐ க்கு, தன்னாட்சி அதிகாரம் அளிப்பீர்களா? பிரதமரிடம் வைகோ கேள்வி:

இணை அமைச்சர் அளித்துள்ள விளக்கம்
கீழ்காணும் கேள்விகளுக்கு பிரதமர் விளக்கம் அளிப்பாரா?
(அ) சிபிஐ நடத்திய விழா ஒன்றில் பங்கேற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, சிபிஐ அமைப்பு, மக்களால் கூர்ந்து நோக்கப்படுகின்ற அரசியல் வழக்குகளை, முறையாகக் கையாளும் திறமை அற்றதாக இருக்கின்றது; சட்டத் தேவைகளை முறையாக நிறைவேற்ற அவர்களால் முடியவில்லை என்று கூறி இருப்பது உண்மையா?
(ஆ) அப்படியானால், அதுகுறித்து அரசின் கருத்து என்ன?
(இ) கடந்த மூன்று ஆண்டுகளில், நாடு முழுமையும் உள்ள சிபிஐ அமைப்பின் பல்வேறு நீதிமன்றங்களில், பதிவு செய்யப்பட்டுள்ள, கவனத்திற்கு உரிய அரசியல் வழக்குகள் எத்தனை?
(ஈ) சிபிஐ அமைப்பை அரசின் பிடியில் இருந்து விடுவித்து, தன்னாட்சி அதிகாரங்களுடன் தனித்து இயங்குகின்ற வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வர, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா?
(உ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வு ஊதியம் ஆகிய பிரதமர் துறைகளின்
இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள விளக்கம்.
அ,ஆ ஆகிய இரு கேள்விகளுக்கு விளக்கம்:
2019 ஆகஸ்ட் 13 ஆம் நாள், தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற, டி.பி. கோலி நினைவுச் சொற்பொழிவில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார்.
தீர்ப்பு வழங்குவதில், காவல்துறையினரின் பங்கு அளிப்பை வலுப்படுத்துவது என்ற தலைப்பில் அவரது உரை அமைந்தது. (The Role of Police in strengthening Justice Delivery). அப்போது, சட்டங்களில் உள்ள தெளிவு இன்மை, சிபிஐ அமைப்பின் செயல்திறனைப் பாதிப்பதாக அவர் கூறினார். தற்போது சிபிஐ எதிர்கொள்கின்ற அறைகூவல்கள், எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல் நெறிகள் வகுப்பது குறித்தும், அவர் பேசினார்.
(இ) 2016,2017,2018 மற்றும் 31.10.2019 வரை, அரசுத் துறைகளில் இணைச் செயலாளர் பொறுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள செயலர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் மேலாண்மை அதிகாரிகள், அரசியல் தலைவர்களுக்கு எதிராக, 160 (RC/CE) ஊழல் வழக்குகளை, சிபிஐ பதிவு செய்து உள்ளது. அதன் முழு விவரங்கள், இத்துடன் இணைப்பில் தரப்பட்டு உள்ளன.
ஈ,உ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்: 1946 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தில்லி சிறப்பு காவல்துறை அமைப்புச் சட்டத்தின்படி (Delhi special Police Establishment, 1946), தில்லி சிறப்புக் காவலர்கள் என்ற தகுதியில், சிபிஐ அமைப்பு, குற்ற வழக்குகளைப் புலன் ஆய்வு செய்யும் அதிகாரம் பெற்றது. அவர்கள் மேற்கொள்கின்ற வழக்கு விசாரணைகளில், நடுவண் அரசு தலையிடுவது இல்லை. சிபிஐ அமைப்பிற்குப் போதிய நிதி ஆதாரங்களும், இயக்குநருக்கு மேலாண்மை அதிகாரங்களும் உள்ளன.
இணைப்பு அ
அரசுத் துறைகளில் இணைச் செயலாளர் பொறுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள செயலர்கள் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகள்:
ஆண்டு வழக்குகள் UI PE converted into RC UT RDA முடிந்தவை
2016 10 5 1 1 - 3
2017 26 14 1 3 3 5
2018 14 12 1 - 1 -
2019 4 4 - - - -
அக்டோபர்31வரை
மொத்தம் 54 35 3 4 4 8

இணைப்பு ஆ
பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகள்:
ஆண்டு வழக்குகள் UI PE converted into RC UT RDA முடிந்தவை
2016 12 3 1 2 1 5
2017 15 7 1 4 - 3
2018 16 12 1 1 - 2
2019 7 6 - 1 - -
அக்டோபர்31வரை
மொத்தம் 50 28 3 8 1 10

இணைப்பு இ
அரசியல் தலைவர்கள் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகள்:
ஆண்டு வழக்குகள் UI PE converted into RC UT RDA முடிந்தவை
2016 11 4 2 4 - 1
2017 18 5 5 3 1 4
2018 13 6 4 2 - 1
2019 14 11 - 2 - 1
அக்டோபர்31வரை
மொத்தம் 56 26 11 11 1 7

Monday, December 16, 2019

குடியுரிமை மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தலைவர் வைகோ!

வைகோ எம்பி அவர்கள், சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் குடி உரிமையில் மதத்தை புகுத்தாதே! இலங்கை தமிழருக்கு குடியுரிமையை மறுக்காதே! பிளவுவாத குடியுரிமைச் சட்டத்தை நிராகரிப்போம்! என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அதன் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் 16-12-2019 நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Sunday, December 15, 2019

தென்றல் நிசார் மகன் திருமணத்தில் வைகோ!

மக்கள் தலைவர் வைகோ எம்பி* அவர்கள் எழும்பூர் பகுதி செயலாளர் அண்ணன் *தென்றல் நிசார்* அவர்களின் மகன் *ரசூல் இப்ராஹீம்-அஃப்ரின் நிஷா திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Saturday, December 14, 2019

இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி உண்மைதான்! வைகோ கேள்விக்கு அமைச்சர் ஒப்புதல்!

உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பு (Gross Domestice Product-GDP) கடுமையாக வீழ்ச்சி அடைந்து இருப்பது குறித்து, வைகோ எழுப்பி இருந்த கேள்விகளுக்கு, எழுத்து மூலம் அமைச்சர் விளக்கம் அளித்து இருந்தார். அது தொடர்பாக,12.12.2019 அன்று மாநிலங்கள் அவையில், கேள்வி நேரத்தின்போது, வைகோ துணைக்கேள்விகள் எழுப்பினார்: முழு விவரம் வருமாறு:
கேள்வி எண்: 257
கீழ்காணும் கேள்விகளுக்கு, புள்ளி விவரங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்றுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) கடந்த ஓராண்டாக, இந்தியாவின் உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பு, நாளுக்கு நாள் குறைந்து வருகின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், கடந்த ஆறு ஆண்டுகளில் ஆகக் குறைவாக, ஐந்து விழுக்காடு என்ற நிலைக்கு வந்து இருக்கின்றதா? அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்களைத் தருக.
(இ) அதை உயர்த்துவதற்காக அரசு மேற்கொண்ட/மேற்கொள்ள இருக்கின்ற நடவடிக்கைகள் குறித்த விவரங்களைத் தருக.
(ஈ) இந்த நிலைமை எப்போது மேம்படும்? பொருள் ஆக்கத்தின் மதிப்பு எப்போது உயரும்?
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்றுத் துறை அமைச்சர் இராவ் இந்தர்ஜித்சிங், எழுத்து மூலம் அளித்த விளக்கம்:
(அ மற்றும் (ஆ) ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்.
உள்நாட்டுப் பொருள் ஆக்கம் குறித்த அட்டவணை:
ஆண்டு முதல் கால் ஆண்டு 2 3 4
2014-15 8.0 8.7 5.9 7.2
2015-16 7.6 8.0 7.2 9.1
2016-17 9.4 8.9 7.5 7.0
2017-18 6.0 6.8 7.7 8.1
2018-19 8.0 7.0 6.6 5.8
2019-20 5.0 4.5 - -
கேள்வி (இ) க்கான விளக்கம்:
உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் வளர்ச்சிக்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக, 2016 ஆம் ஆண்டு, நலிவுற்ற, கடன் தீர்க்க வகை அற்ற நிறுவனங்கள் ஒழுங்குமுறை (Insolvency and Bankruptcy Code IBC) விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட வரிச் சீர்திருத்தங்கள், எளிதாக்கப்பட்ட நடைமுறைகள், வணிக நடவடிக்கைகளை எளிமை ஆக்கி இருக்கின்றன. தாராளமயக் கொள்கையின் விளைவாக, அயல்நாடுகளில் இருந்து நேரடி முதலீடுகள் பெருமளவில் வந்துகொண்டு இருக்கின்றன. மேலும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக, அண்மையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை (Corporate Tax) 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக அரசு குறைத்து இருக்கின்றது. உள்நாட்டில் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கான பெருநிறுவன வரி, 15 விழுக்காடு ஆக்கப்பட்டு இருக்கின்றது.
இது, இந்த வகையில், உலகிலேயே மிகக்குறைந்த வரி விகிதங்களுள் ஒன்று ஆகும்.
2019 ஆம் ஆண்டு, கருவூல வங்கி (Reserve Bank), ரெப்போ வட்டியை, 135 புள்ளிகள் குறைத்து இருக்கின்றது. அத்துடன், முதலீட்டாளர்களை ஈர்க்கின்ற வகையில், அவர்கள் போட வேண்டிய முதலீடுகளைக் குறைப்பதற்காக, வங்கிகள் கடன் வட்டியைக் குறைத்து இருக்கின்றன.
கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள தேக்கத்தைப் போக்குவதற்காக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களைத் தொடர்வதற்காக, ரூ 25000 கோடி முதல், அரசு வழங்கி இருக்கின்றது.
கிராமப்புறங்களில் நுகர்வைக் கூட்டுவதற்காக, பிரதமரின் விவசாயிகள் நலத்திட்டங்களில், அனைத்து வகையான விவசாயிகளும் இணைக்கப்பட்டுள்ளனர்.
அயல்நாடுகளுக்கான ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பெருநிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகின்றது. (Merchandise Exports from India Scheme -MEIS). உற்பத்தியாளர் கட்டுகின்ற மறைமுக வரியை, விற்பனையாளர் தனது ஜிஎஸ்டி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்; இதனால், ஒவ்வொரு நிலையிலும் வரி கட்டுவது தவிர்க்கப்படுகின்றது; அந்த வரிகள், இறுதியாக நுகர்வோரிடம் இருந்து திரட்டப்படுகின்றது.
ஜிஎஸ்டி வரிக்கணக்குகள் முழுமையும், கணினிகளின் வழியாகவே மேற்கொள்ளப்படுகின்றது. வரிப்பிடித்தங்களைத் திரும்பத் தருவதும் கணினி வழியாகவே நடைபெறுகின்றது.
2019-20 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்காக, 100 இலட்சம் கோடி நிதி செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. தேசிய நெடுஞ்சாலைப் பணிகளும் சீரமைக்கப்பட்டு உள்ளன.
பாரம்பரியத் தொழில்களை மீள் உருவாக்கம் செய்வதற்கும் தரம் உயர்த்துவதற்குமான நிதித் திட்டம் (Scheme of Fund fo Upgradation and Regeneration of Tradional industries) வெற்றிகரமாக, இலாபகரமாக இயங்குவதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி இருக்கின்றது.
(ஈ) மற்றும் (உ) ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
2011-12 நிதி ஆண்டு முதல், கடந்த ஏழு ஆண்டுகளில் உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் ஆண்டு வளர்ச்சி விகிதம்:
2012-13 5.5
2013-14 6.4
2014-15 7.4
2015-16 8.0
2016-17 8.2
2017-18 7.2
2018-19 6.8

எனவே, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, அரசு எத்தனையோ திட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றது. பன்னாட்டு நாணய நிதியம் (Internationa Monetary Fund-IMF), இந்தியப் பொருளாதாரம் குறித்து நேர்மறையான நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றது. இதன் விளைவுகள், உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பை உயர்த்தும்.
இவ்வாறு அமைச்சர் எழுத்துமூலம் விளக்கம் அளித்து இருந்தார்.
இதுதொடர்பாக, 12.12.2019 அன்று மாநிலங்கள் அவையில்,
கேள்வி நேரத்தின்போது, வைகோ துணைக் கேள்விகள் எழுப்பினார்.
அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:

வைகோ: அவைத் துணைத்தலைவர் அவர்களே,
நீங்கள் இருக்கையில் அமர்ந்து இருக்கின்ற வேளையில், இந்தக் கேள்வி நேரத்தில், அமைச்சரிடம் நேரடியாக விளக்கம் கேட்கக் கிடைத்த வாய்ப்பிற்காக மகிழ்ச்சி அடைகின்றேன். மேலும், இம்முறை உறுப்பினர் ஆனபிறகு, கேள்வி நேரத்தில் இது எனக்கு முதல் வாய்ப்பு.

எழுத்து மூலமாக அமைச்சர் அளித்து இருக்கின்ற புள்ளி விவரங்களின்படி, 2013 மார்ச் மாதத்திற்குப் பிறகு, உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பு ஆகக் குறைவாக, 4.5 புள்ளிக்கு வீழ்ச்சி அடைந்து இருப்பதை ஒப்புக்கொண்டு இருக்கின்றார். இந்தச் சரிவில் இருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்க, அரசு வகுத்து இருக்கின்ற குறுகிய காலத் திட்டங்கள், நீண்ட காலத் திட்டங்கள் யாவை? அடித்தட்டு மக்களின் வாங்கும் திறனை உயர்த்துவதற்காக, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
புள்ளிவிவரங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேற்றுத் துணை இணை அமைச்சர் ராவ் இந்தர் ஜித் சிங்:
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக் கட்டத்தில், இந்திய உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தின் மதிப்பு 4.5 விழுக்காடு என்ற அளவில் இருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் ஆகக் குறைந்த அளவு இதுதான் என்பதும் உண்மை. அதற்காக அச்சம் கொள்ளத் தேவை இல்லை. காரணம், இதற்கு முன்பு, இதேபோல, 4.5 விழுக்காட்டுக்கும் குறைவாகக் கூட வீழ்ச்சி அடைந்து மீண்டு இருக்கின்றது.
எடுத்துக்காட்டாக, 2012-13 முதல் கால் ஆண்டுகளில் இது 4 விழுக்காடாகத்தான் இருந்தது. 2013-14 இல் 4.2 விழுக்காடு ஆக உயர்ந்தது. அடுத்தடுத்த காலகட்டங்களில் 6 விழுக்காடு அளவிற்கு உயர்ந்தது.
இரண்டாவதாக, 2008-09 ஆம் ஆண்டுகளின் மூன்றாவது கால் ஆண்டுக் காலகட்டத்தில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 1.5 விழுக்காடுதான். நான்காவது கால் ஆண்டில், அது வெறும் 0.2 விழுக்காடு மட்டும்தான்.
2008-09 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 3.9 விழுக்காடு அளவில் இருந்து, 2009-10 இல், 8.9 என்கின்ற அளவிற்கு உயர்ந்தது. எனவே, இந்தியப் பொருளாதாரம் என்பது எத்தகைய அதிர்ச்சிக்கும் ஈடு கொடுக்கத் தக்கது. அதுகுறித்து, இந்த அவையின் உறுப்பினர்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. மேலும், அரசு என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கின்றது என உறுப்பினர் கேட்டார்.
அவைத் துணைத் தலைவர் (பொறுப்பு) : உங்களுடைய விளக்க உரையைச் சுருக்கமாக அமைத்துக் கொள்ளுங்கள்.
அமைச்சர் இராவ் இந்தர்ஜித் சிங்: இந்தியப் பொருளாதாரச் சரிவை மீட்க, அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கின்றது? என உறுப்பினர் கேட்டார். அது இந்த அவையில் நான் எழுத்து மூலமாக அளித்து இருக்கின்ற அறிக்கையில் இருக்கின்றது. இருப்பினும், அதை நான் மீண்டும் வாசிக்கின்றேன்.
அவைத்துணைத்தலைவர்: ஆம். அது ஏற்கனவே அறிக்கையில் இருக்கின்றது. எனவே, உறுப்பினர் அடுத்த துணைக்கேள்வியைக் கேட்கலாம்.
வைகோ: ஐயா, அரசு இந்தியாவில் ஆக்குவோம் (Make in India), வணிக நடைமுறைகளை எளிது ஆக்குதல் (Ease of Doing Business) பிரதமரின் விவசாய நலத்திட்டங்கள் எனப் பல திட்டங்களை மேற்கொண்டு இருக்கின்றது. ஆனால், அவை எல்லாம் எழுத்துகளில்தான் இருக்கின்றதே தவிர, நடைமுறையில் இல்லை. உண்மையில், முன்னேற்றத்திற்கான எந்தவிதமான அறிகுறிகளும், கண்ணுக்குத் தெரியவில்லை; அரசுத் திட்டங்கள், உள்நாட்டுப் பொருள் ஆக்கத்தில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
விசைப்பொறிகளால் இயங்குகின்ற ஊர்திகள், கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள மந்த நிலை குறித்து, அரசு ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டதா? அந்தத் துறைகளை, வீழ்ச்சியில் இருந்து மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்: தேவைக்கு ஏற்ற வழங்கல் (Demand and Supply system) போதுமானதாக இல்லை. குறிப்பாக, விவசாயப் பொருளாதாரம் பாதிப்பு அடைந்து இருக்கின்றது. ஆனால், பன்னாட்டு நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட பலதரப்பட்ட அமைப்புகள், இந்தியப் பொருளாதாரம் குறித்து, நேர்மறையான நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றன. அரசுத் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படுமானால், குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட துறைகள் படிப்படியாக வளர்ச்சி பெறும் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

உலக கோப்பை கால்பந்து போட்டியை காண வைகோவுக்கு கத்தார் அழைப்பு!

2020 ஏப்ரல் 6 முதல் 9 வரை கத்தார் நாட்டில் நடைபெறுகின்ற உலக வணிக மாநாட்டு அமைப்பின் தலைவர் யூசுப் அஞ்சாஃபர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்று 14-12-2019 தாயகம் வருகை தந்தனர்.

கத்தார் நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் திங்கள் 6 ஆம் தேதி தொடங்கி, நான்கு நாள்கள் நடைபெறவுள்ள, “உலக வர்த்தகர்கள் மாநாட்டில்" International Business Delegation Summit சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுச் சிறப்பித்திட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை தாயகத்தில் சந்தித்து என அழைப்பு விடுத்தனர்.

மறைந்த கோவி. சுரேசுகண்ணன் அவர்கள் மகளுக்கு மதிமுக இணையதள அணி சார்பாக பொதுச் செயலாளர் வைகோ கல்வி நிதி கையளிப்பு!

மதிமுக இணையதள அணியில் செயல்பட்டுக்கொண்டிருந்த தோழர் கோவி. சுரேசுகண்ணன் சமீபத்தில் உடல் நல குறைவால் மறைந்தார். அவருக்கு புகழஞ்சலி கூட்டம் தாயகத்தில் 14-12-2019 நடந்தது. அதில் அவரது மகள் கல்வி நிதிக்காக இணையதள தோழர்கள் வழங்கிய ரூபாய் 2,55000த்தை அவரது குடும்பத்தாரிடம் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் வழங்கி புகழஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.

Friday, December 13, 2019

மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வெற்றிச்சின்னம் பம்பரம் வெல்லட்டும். 2019 உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக் குழு, மாவட்டக் குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கு மதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனைப் பெறுவதற்கு, தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைப்படி, "தேர்தல் அறிவிக்கை (Notification) வெளியிடப்பட்ட மூன்று தினங்களுக்குள் தமிழகம் முழுவதும் போட்டியிடும் இடங்கள் குறித்த பட்டியல் அளிக்க வேண்டும்."    

அங்கீகரிக்கப் படாத கட்சியான மறுமலர்ச்சி தி மு க வின் வேட்பாளர் என்றும்,  பம்பரம் சின்னம் கேட்டும்  வேட்புமனுக்களை உரிய காலத்தில் தாக்கல் செய்யலாம். வேட்பு மனு வாபஸ் பெறும் நாளன்று பிற்பகல் 3 மணிக்கு முன்பாக  சின்னம் பெறுவதற்குரிய A, B படிவங்களை வழங்கிட வேண்டும். (இதில் அலட்சியம் கூடாது)  பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கையொப்பமிட்ட  A , B படிவங்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு தாயகத்தில் இருந்து ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.  கவனமுடன் கடமை ஆற்றி பணி முடிப்போம்.  இயக்கத்தின் மானம் காக்க களங்காணும் மறுமலர்ச்சி சொந்தங்களை வரலாறு வாழ்த்தட்டும்.