Saturday, December 28, 2019

ஜனவரி 16 பெங்கல் நாளில் பிரதமர் மோடி உரை; மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர உத்தரவு! வைகோ கண்டனம்!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சாதி, மத வேறுபாடு இன்றி தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.
அந்நாளில் கிராமங்கள், நகரங்களில் இளைஞர்கள், மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, பரிசுகள் வழங்கி அவர்களது திறமையை ஊக்குவிப்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ஆம் தேதி போகிப்பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், ஜனவரி 17ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் பொங்கலுக்கு தொடர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அதேபோல் வரும் 2020ஆம் ஆண்டும் ஜனவரி 14 முதல் 17ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திடீரென ஜனவரி 16 ஆம் தேதி பொங்கல் விடுமுறை நாளன்று, பிரதமர் மோடி உரையாற்றுகிறார் என்றும், அவரது உரையை கேட்க 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர்கள் வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது.
பொங்கல் திருநாளன்று மாணவர்கள் பள்ளிக்குச் வந்தாலும், பிரதமர் மோடியின் உரை மீது அவர்களால் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைதான் ஏற்படும்.
ஆகவே மாணவர்கள் தமிழர் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பள்ளிக் கல்வித் துறை தனது உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கண்டன அறிக்கையில் இன்று 28-12-2019 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment