Friday, June 21, 2019

ஜூன் 23 இல் மனிதச் சங்கிலி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முறியடிக்க கரம் கோர்த்து எழுவோம்-வைகோ அறிக்கை!

காவிரி பாசனப் பகுதிகளில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடக் கோரி பொதுமக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் அறவழிப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு, காவல்துறையை ஏவி அடக்குமுறை தர்பார் நடத்துகிறது.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நாசகார திட்டத்தால், சோழவள நாடு பாலைவன பூமியாக மாறிவிடும் என்ற அச்சத்தாலும், வாழ்வாதாரம் பறிபோய் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக அலையும் கொடுமை ஏற்பட்டுவிடும் என்ற கவலையாலும் மக்கள் போராடி வருகின்றனர்.

காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ‘ஹெல்ப்’ (HELP - Hydrocarbon exploration and Licensing Policy) எனும் ஒற்றை உரிமம் வழங்கும் முறையை மத்திய பா.ஜ.க. அரசு 2017 இல் அறிமுகம் செய்தது. பின்னர் ‘திறந்தவெளி அனுமதி’ (OALP -Open Acreage Licensing Policy) என்ற உரிமம் வழங்கும் திட்டத்தை அறிவித்து ஜனவரி 19, 2018 இல் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இதற்கு 110 உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. மத்திய அரசு ஆகஸ்டு 28, 2018 இல் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தங்களை இறுதி செய்தது.

இதன்படி காவிரிப் படுகையை இரு மண்டலங்களாகப் பிரித்து மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு கடந்த மே மாதம் அனுமதி அளித்திருக்கிறது. பிரிவு -1இல், விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும், பிரிவு -2 இல் கடலூர் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள பகுதிகளில் 158 கிணறுகளும் அமைக்கப்படும்.

இதற்கான ஒப்பந்தங்கள் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்திற்கும், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் அளிப்பட்டிருக்கிறது.

‘நீரியல் விரிசல்முறை’ (Hydrological Fracturing) எனப்படும் தொழில்நுட்பத்தில் ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயு எடுக்க அமெரிக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

நீரியல் விரிசல் முறை என்பது, பூமிக்கு அடியில் 3500 முதல் 5000 அடி மற்றும் அதற்கும் கீழே உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை மேலே கொண்டு வரும் திட்டம் ஆகும். ஒவ்வொரு இடத்திலும் அமையும் கிணறுகளிலும் இதற்காக துளையிடும்போது 20 கோடி லிட்டர் தண்ணீர் பூமிக்குள் செலுத்தப்படும். அந்தத் தண்ணீருடன் 650 வகையான ரசாயனப் பொருட்கள், மணல் கலந்து மிக உயர்ந்த அழுத்தத்துடன் பூமிக்கு அடியில் செலுத்தும்போது அவை 5 ஆயிரம் அடி ஆழத்திற்குச் சென்று கீழே படிந்துள்ள எண்ணெய், ஹைட்ரோ கார்பன், ஷேல் எரிவாயுகளை மேலே கொண்டு வரும்.

அப்படி வரும்போது கீழே செலுத்தப்பட்ட 20 கோடி லிட்டர் தண்ணீரில் 60 விழுக்காடு நீர் வெளியேறும். அதனுடன் செலுத்தப்பட்ட ரசாயனங்களும் வெளியேற்றப்படுவதோடு, விளைநிலங்கள் சாகுபடித் திறனை இழந்து மலடு ஆகிவிடும் ஆபத்து நேரும்.

நிலத்தடி நீரும், காற்று மண்டலமும் நஞ்சாகும். சுற்றுச் சூழல் சீர்கேடு அடையும். கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீருடன் கலக்கும். இதனால் அதனைப் பயன்படுத்தவே முடியாத நிலைமை ஏற்படும். மக்கள் குடிநீருக்குக்கூட தவிக்கும் நிலைமை உருவாவதைத் தடுக்க முடியாது.

அமெரிக்காவில் பென்சில்வேனியா, மேற்கு வெர்ஜினீயா மாநிலங்களில் இதுபோன்ற நீரியல் விரிசல் முறை மூலம் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து 2011 இல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

பூமிக்குள் செலுத்தப்பட்ட கோடிக்கணக்கான லிட்டர் வேதிப்பொருட்கள் கலந்த நீரில் மெத்தனால், ஹைட்ரஜன் புளுரைடு, கந்தக அமிலம், புற்று நோயை உருவாக்கும் பி.டெக்ஸ், காரீயம், பார்மால்டிஹைடு ஆகியவையும் அடங்கும். புற்று நோயை உருவாக்குபவை என்று வகைப்படுத்தப்பட்ட 650 இரசாயனப் பொருட்கள் சுமார் ஒரு கோடி காலன் அளவுக்கு பூமிக்குள் அமெரிக்க ஷேல் நிறுவனங்கள் செலுத்தி இருப்பதாக அமெரிக்க காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இதே நிலைமைதான் காவிரி டெல்டாவிலும் ஏற்படும். காவிரி படுகையில் பல்லாயிரம் ஆண்டுகளாக செழித்து வந்த வேளாண் தொழில் அழிவதோடு மட்டுமின்றி, சுற்றுச் சூழல் நாசமாகி, மக்கள் உடல்நலனும் கெட்டு, சொந்த மண்ணிலிருந்து வெளியேறும் நிலைமை உருவாகிவிடும்.

காவிரி பாசனப் பகுதி வேளாண் மண்டலத்தைப் பேராபத்திலிருந்து பாதுகாக்கவும், ஹைட்ரோ கார்பன், ஷேல், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை கைவிட வலியுறுத்தியும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நினைவில் வாழும் நம்மாழ்வார் அவர்கள் தொடங்கிய ‘பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்’ சார்பில் ஜூன் 23 ஆம் தேதி மாபெரும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், தமிழகத்தில் மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைத்து அரசியல் இயக்கங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜூன் 23 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவு வரை மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் ஹைட்ரோ கார்பன் பேராபத்தை விரட்டி அடிக்க மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அலை அலையாக பங்கேற்க வேண்டும்.

மரக்காணத்தில் மனிதச் சங்கிலியில் நானும் இணைகிறேன். மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ஜூன் 23 மனிதச் சங்கிலிப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்திட ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 21-06-2019 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment