Saturday, June 8, 2019

ஹைட்ரோ கார்பன் நாசகாரத் திட்டத்தைக் கைவிடக் கோரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வீர் - வைகோ அழைப்பு!

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடனேயே தமிழகத்தின் தலை மீது கல்லைத் தூக்கிப் போடும் வேலையை மத்திய பா.ஜ.க. அரசு தொடங்கிவிட்டது. காவிரி பாசன பகுதி மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு எடுக்கும் திட்டங்களை எதிர்த்து கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகளும், பொதுமக்களும் அறவழியில் போராடி வருகின்றனர்.

தமிழகத்தின் உயிராதாரமான வேளாண்மைத் தொழிலை முற்றிலுமாக ஒழித்துக் கட்டி, சொந்த மண்ணிலே விவசாயிகளை அலைய விடுவதற்கு பா.ஜ.க. அரசு தீட்டி உள்ள ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசுக்கு கைட்டி, வாய் பொத்தி அடிமைச் சேவகம் புரிகின்ற எடப்பாடி பழனிச்சாமி அரசு அனுமதி அளித்துவிட்டது.
காவிரிப் படுகையை இரு மண்டலமாகப் பிரித்து, மொத்தம் 274 ஹைட்ரோ கார்பன் மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
விழுப்புரம், புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் (பிரிவு -1) 116 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படும். கடலூர் முதல் நாகை வரையுள்ள பகுதிகளில் (பிரிவு -2) 158 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படும்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அமைத்து, இலட்சக்கணக்கான மக்களின் உடல் நலனுக்குத் தீங்கு விளைவித்தும், விவசாய நிலங்களை மலடாக்கியும் பெரும் நாசத்தை உருவாக்கிய வேதாந்தா குழுமம், காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு இரண்டு உரிமங்களை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. மத்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கு ஒரு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது,
காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் பா.ஜ.க. அரசு மூர்க்கத்தனமாக செயல்படுத்தத் துடிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் மாசு அடைந்து, நீர் மட்டமும் ஆயிரம் அடிக்குக்கும் கீழே சென்றுவிடும். விளைநிலங்கள் பாழாகி, விவசாயம் பொய்த்துப் போகும் நிலைமை உருவாகும். மக்கள் குடிநீருக்குக்கூட தவிக்கும் பேராபாயம் ஏற்படும்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக காவிரி நீரைப் பயன்படுத்தி, வேளாண் தொழிலில் சிறந்தோங்கி, நாட்டிற்கே உணவு அளிக்கும் நெற்களஞ்சியமான சோழ மண்டலம், பாலைவன பூமியாக மாற்றப்பட்டுவிடும்.
இந்திய அரசுக்கும், கார்ப்ரேட் பகாசுர நிறுவனங்களுக்கும் பல இலட்சக்கணக்கான கோடி வருவாய் கிடைக்கும். ஆனால் காவிரி டெல்டா விவசாயத்தை நம்பி இருக்கும் இலட்சோப இலட்சம் மக்கள் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக இடம்பெற வேண்டிய துயரநிலை உருவாகும்.
தமிழகத்தை அழிவுப் பள்ளத்தாக்கில் தள்ளும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முனைந்துள்ள ஹட்ரோ கார்பன், சாகர்மாலா, சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை, விளை நிலங்களில் கெயில் குழாய் பதிப்பு உள்ளிட்ட நாசகாரத் திட்டங்களைக் கைவிட வலியுறுத்தியும், காவிரிப் பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் தொடங்கிய ‘பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்’ சார்பில், மாபெரும் மனிதச் சங்கிலி அறப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடைபெறுகிறது.
“வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”

எனும் திருக்குறள் மொழியை நெஞ்சில் தேக்கி, காவிரி தீரத்தைப் பாதுகாத்திட திரண்டு எழுவோம்.
வேளாண்மைத் தொழிலைக் காக்கும் மனிதச் சங்கிலி அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மனிதச் சங்கிலியில் நானும் பங்கேற்கிறேன்.
மத்திய, மாநில அரசுகளுக்கு தரப்படும் எச்சரிக்கை மணி என்பதைத் தெரிவிக்கும் வகையில் விவசாயிகள், மாணவர்கள், வணிகப் பெருமக்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள், இளைய தலைமுறையினர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று மனிதச் சங்கிலிப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வாரீர் அன்போடு அழைக்கிறேன்.
மனிதச் சங்கிலி அறப்போர் வெற்றிகரமாக நடப்பதற்கு மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் எல்லா வகையிலும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 8-6-2019 அன்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment