Friday, June 14, 2019

இரயில்வே துறையில் இந்தி திணிப்பு, தமிழகம் சிலிர்த்து எழும், வைகோ எச்சரிக்கை!

பாரதிய ஜனதா கட்சி மீண்டும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ‘இந்து - இந்தி - இந்தியா’ எனும் கோட்பாட்டில் முனைப்பாகச் செயல்படத் தொடங்கி உள்ளது. அதனால்தான் மூர்க்கத்தனமாக இந்தி மொழித் திணிப்பை எல்லா வகையிலும் நடைமுறைப்படுத்தத் தீவிரப்படுத்தி உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை மாற்றி அமைக்க கஸ்தூரிரங்கன் குழு அளித்த பரிந்துரை வரைவு அறிக்கையில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது. இந்தி மொழியை மூன்றாவது மொழியாக 6-ஆம் வகுப்பிலிருந்து கற்பிக்க வேண்டும் என்று அக்குழு அளித்த பரிந்துரையை ஏற்கக் கூடாது என்று முதல் குரல் தமிழ்நாட்டிலிருந்து எழுந்தது. இந்தியைத் திணிக்கக் கூடாது என்று தென்னகத்தில் கர்நாடகம், தெலுங்கானா, மராட்டியம் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. உடனே மத்திய அரசு மூன்றாவது மொழியாக இந்தியைப் படிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. மாணவர்கள் விரும்பும் மொழியைக் கற்கட்டும் என்று கஸ்தூரிரங்கன் குழு வரைவு அறிக்கையில் திருத்தம் செய்திருப்பதாகக் கண்துடைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விருப்பப் பாடம் என்று சொல்லி மும்மொழிக் கொள்கையைத் திணித்து அதன் மூலம் இந்தியைக் கற்கச் செய்வதற்கு பா.ஜ.க. அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் சதித்திட்டம் தீட்டுகிறது. தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கைதான் இருக்கும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது 1968, ஜனவரி 23-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது.
இதனை மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பதற்கு தமிழகம் போர்முரசு கொட்டியிருக்கின்ற வேளையில், தென்னக இரயில்வே வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கை, இந்தியை அப்பட்டமாகத் திணிப்பதற்கு வழி செய்து வெந்த புண்ணில் வேல் வீசி இருக்கிறது.
தென்னக இரயில்வே சார்பில் நேற்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் தகவல் பரிமாற்றங்களை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்தான் மேற்கொள்ள வேண்டும். இரயில்வே தொடர்பான பணிகள், ரயில்கள் இயக்கம் போன்ற அலுவல் சார்ந்த உரையாடல்கள் இந்தி, ஆங்கிலம் இரண்டைத் தவிர தமிழில் தகவல் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
கடந்த மே மாதம் 9 ஆம் தேதி மதுரை - செங்கோட்டை இடையே இயக்கப்படும் இரு ரயில்கள் ஒரே பாதையில் எதிர் எதிரே சென்றபோது திருமங்கலத்தில் நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விபத்து ஏற்படாமல் காப்பாற்றினர். இதற்கு நிலைய அதிகாரிகளின் தகவல் தொடர்பு மொழி சிக்கல்தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்த குழப்பத்திற்கு காரணம் இந்தி மொழி பேசும் வடமாநிலத்தவர் தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் அதிகாரிகளாக பணி அமர்த்தியதுதான் என்பதை மறைத்துவிட்டு, ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே உரையாடல் இருக்க வேண்டும். தமிழ் அறவே கூடாது என்று இரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை விடுத்திருப்பது கட்டாய இந்தித் திணிப்பு ஆகும். தென்னக இரயில்வே நிர்வாகத்தின் இந்தித் திணிப்பு சுற்றறிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது. உடனடியாக இந்தி சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் 1937 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் 82 ஆண்டுகளாக இன்னும் நீறு பூத்த நெருப்புபோல் கனன்று கொண்டே இருக்கிறது என்பதை பாஜக அரசு மறந்துவிட வேண்டாம். மொழி உரிமைப் போர்க்களத்தில் இரத்தம் சிந்தி, உயிர்களை பலி கொடுத்து களம் கண்ட தமிழகம், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்புக்கு எதிராக சிலிர்த்து எழும்; நெருப்போடு விளையாட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 14-06-2019 அன்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment