Monday, August 3, 2020

ஒமான் மதிமுகவின் மூலைக்கல் சாய்ந்தது! கலிங்கப்பட்டி வெங்கட்ராமன் மறைந்தார்!

கடந்த சில நாட்களாக கொரொனா கோவிட் 19 பாதிப்பால் ஒமான புரைமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிக்கிறார் அண்ணன் கலிங்கப்பட்டி வெங்கட்ராமன் அவர்கள். இன்று 03-08-2020, காலை 7 மணி அளவில் மூச்சு திணறல் காரணமாக இயற்கையுடன் கலந்துவிட்டார் என்ற செய்தி சற்று முன் கிடைத்தது. தாங்கமுடியாத அதிர்ச்சியாக இருந்தது. செய்தி பொய்யாக இருக்க கூடாதா இயற்கையே என்று வேண்டினேன். செய்தியை உறுதி செய்தேன். என் மனம் கனத்ததாகவே இருக்கிறது..

அண்ணன் கலிங்கப்பட்டி வெங்கட்ராமன் அவர்கள், அனைவரையும் அரவணைப்பவர். அனைவரிடத்திலும் பாகுபாடில்லாது பழகுபவர். ஜாதி மதத்திற்கு இடம்கொடுக்காமல் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுபவர். கலிங்கப்பட்டி ஊரில் அனைத்து மக்களாலும் அறியப்பட்டிருப்பவர். தனது சிறு வயதிலிருந்தே வெளிநாட்டில் தனது வாழ்வை கழித்தவர். மிக கடின உழைப்பாளி. சமூக வலை தளங்களிலும் சிறப்பாக இயங்கியவர்.

ஒமானில் மதிமுக இணையதள அணி தொடங்க மூலைக்கல்லாக இருந்தவர். அன்பு தலைவர் வைகோ அவர்களின் செய்திகளை நான் முகநூல், பிளாக்கர் வழியாக பதிவிட்டதை கண்டு மனம் மகிழ்ந்து புரைமியிலிருந்து மஸ்கட் வந்து, அன்பு சகோதரர் சத்தியபிரகாஷ் அவர்களுடன் நிஸ்வா வந்து, என்னிடம் அன்பு பாராட்டி, நன்றாக கழக செய்திகளை கொண்டு சேர்க்கிறீர்கள். முன்னெடுத்து செல்லுங்கள். துணை நிற்கிறோம் என்று சொல்லி ஊக்கப்படுத்தியவர். அவரே அவர் மகிழுந்தில் அழைத்து சென்று தான் ராஹேஷ் அப்பார்ட்மன்டில் வைத்து ஒமான் கூட்டத்தை நடத்தினோம். அதற்கு முழுக்க காரணமாக இருந்தார்.

அவருடன் அலைபேசியில் உரையாடும்போதெல்லாம், கழகத்தை பற்றிய பேச்சே அதிகமாக இருக்கும். அன்பு தலைவர் வைகோ அவர்கள் மீது அளவற்ற பாசம் கொண்டவர். அன்னை மாரியம்மாளுடன் மிக நெருங்கிய பாசம் கொண்ட இவர் அன்னை மாரியம்மாள் அவர்களுக்கு மிகவும் பிடித்த அன்பு உறவாக குழந்தையாக விளங்கியவர். அன்னை மாரியம்மாளுடன் பக்கத்தில் அமர்ந்து ஊர் கதைகள் பேசி அன்புடன் பழகியவர்.

இன்று காலை மண்ணுலகை விட்டு மறைந்தார் என்ற செய்தி ஒமான் கழக கண்மணிகளுக்கு பேரிடியாக இருக்கிறது, அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்ப உறவுகளுக்கு ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

 

மறுமலர்ச்சி மைக்கேல்

செயலாளர்

ஒமான் தமிழர் மறுமலர்சி பேரவை

03-08-2020 

4 comments:

  1. 4 நாட்கள் முன்பு என்னுடன் வாட்ஸ் அப்பில் செய்திகள் பரிமாறிக் கொண்டிருந்தோம் லீவு முடிந்தவுடன் நான் உங்களை அழைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார் அதனால் உடம்புக்கு சரியில்லை என்றும் கூறியிருந்தார் என்ன ஏது என்று கூட சொல்லவில்லை.
    ஆழ்ந்த இரங்கல்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete