Sunday, August 30, 2020

ஒமானில் மறைந்த கலிங்கப்பட்டி வெங்கட்ராமன் நினைவேந்தல் நிகழ்வு!

கலிங்கப்பட்டி திரு.வெங்கட்ராமன் அவர்கள் கொரோனா கோவிட் 19 பாதிப்பால், 03-08-2020 திங்கள் கிழமை ஒமான் நேரப்படி காலை 6 மணி அளவில் மறைந்தார். அவரது முகம் கண்டிப்பாக நாங்கள் பார்க்க வேண்டுமென்று குடும்பத்தார் வேண்டுகோள் வைத்ததால், உடலை தாயகம் கொண்டு செல்ல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்களின் வழிகாட்டுதலில், தமிழர் மறுமலர்ச்சி பேரவை வளைகுடா அமைப்பாளர் திரு.ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்களின் ஆலோசனையின் படி, ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை செயலாளர் திரு.மைக்கேல் செல்வ குமார், ஒமான் புரைமியில் உள்ள திரு.அர்ஜூன் அவர்களுடன் இணைந்து, திரு.வெங்கட்ராமன் அவர்களது உடலை தனி விமானத்தில் தாயகம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தும், அவரது உடல் கொரானா பாதிக்கப்பட்டிருந்ததால், தாயகம் கொண்டு செல்ல ஒமான் சட்டம் அனுமதிக்கவில்லை. ஆகவே திரு.வெங்கட்ராமன் அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்களும், அவரது தம்பி திரு.வை.ரவிசந்திரன் அவர்களும், தமிழர் மறுமலர்ச்சி பேரவை வளைகுடா அமைப்பாளர் திரு.ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்களும் பல மணி நேரம் பேசி ஒமான் சட்டம் அனுமதிக்காததை எடுத்து கூறி குடும்பத்தார் உடலை ஒமானிலே தகனம் செய்ய ஒப்புதல் பெற்றார்கள். தொடர்ந்து இந்திய தூதரகம் மஸ்கட்டில் குடும்பத்தார் ஒப்புதல் கடிதம் கொடுத்து வெங்கட்ராமன் அவர்களது உடலை ஒமானிலே தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு இறப்பு சான்றிதள் மருத்துவமனையிலிருந்து பெறப்பட்டு, ராயல் ஒமான் போலீஸ் அனுமதியும், முனிசிபாலிட்டு அனுமதியும் பெறப்பட்டது. உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்ய ஒமான் சோஹாரில் உள்ள இந்து மகாஜன சபா நிர்வாகிகளை திரு.அர்ஜூன் மூலம் தொடர்பு கொண்டு இந்து முறைப்படி புது துணிகள், சந்தண கட்டை, மலர் வளையம், தங்க காசு, பட்டாடை மற்றும் ஏனைய பொருட்கள் வைத்து இந்து முறைப்படியே சோஹார் இந்து மகாஜன சபா மயானத்தில் 05-08-2020 ஒமான் நேரம் மாலை 3.15, இந்திய நேரம் மாலை 4.45 மணி அளவில் திரு.வெங்கட்ராமன் உடல் மரக்கட்டைகள் அடுக்கபப்ட்டு எரியூட்டப்பட்டது. அந்த நிகழ்வுகள் zoom இணைய காணொலி மூலம் குடும்பத்தாருக்கு காண்பிக்கப்பட்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பிலும் குடும்பத்தாருக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவிக்கப்பட்டது. திரு.வெங்கட்ராமன் அவர்களது நினைவை போற்றும் வகையில், ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வு zoom இணைய காணொலி மூலம் 28-08-2020 ஒமான் நேரம் மாலை 5.00, இந்திய நேரம் மாலை 6.30 மணி அளவில் தொடங்கி 2 மணி நேரம் திரு.வெங்கட்ராமன் அவர்களது நினைவலைகளை பகிர்ந்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. செயாலளர் மைக்கேல் செல்வ குமார் தலைமையில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் ஒமான் கழக உறுப்பினர் கலிங்கப்பட்டி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் தொடக்க உரை முடிந்ததும், ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை செயலாளர் மைக்கேல் செல்வ குமார் மூலம், திரு.வெங்கட்ராமன் அவர்களது திருஉருவபடம் திறந்துவைக்கப்பட்டு விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் திரு.வெங்கட்ராமன் அவர்களது நண்பர்களாக, முனைவர் இளங்குமரன், பட்டிமன்ற நடுவர் திருமதி தனமணி வெங்கட், சிறுவன் ராகேஷ், திரு.ரவி கோமதி, திரு.சீனிவாசன் ஆதிமூலம், குடும்பத்தின் சார்பில் திரு.வெங்கட்ராமன் அவர்களின் மாப்பிள்ளை திரு. பாஸ்கரன், மற்றும் மூத்த அண்ணனும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் வகுப்பு தோழனுமாகிய திரு.சுப்பாராம் அவர்களும், திரு.வெங்கட்ராமன் அவர்களுடனான நினைவுகளை பகிர்ந்தார்கள். மகன் இந்திரகுமார் தந்தை இறப்புக்கு பின்னர் ஒமான் சோஹாரில் தகனம் வரை உதவிய அனைவருக்கும் உணர்ச்சிபூர்வமாக நன்றி தெரிவித்தார். வளைகுடா நாடுகளின் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் திரு.தாயகம் சுரேஷ், அமைப்பாளர் திரு.வல்லம் பசீர், ஆகியோர் இறந்த உடல்களை தலைவர் தாயகம் கொண்டு வர மேற்கண்ட பணிகளை பட்டியலிட்டு நினைவுகளை பகிர்ந்தார்கள். அமைப்பாளர் திரு.ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் அவரது இறப்பு முதல் தகனம் வரை தலைவர் வைகோ அவர்களின் பங்களிப்பு பற்றி நடந்த நினைவுகளை நினைவு கூர்ந்து உரை நிகழ்த்தினார். தென்காசி மதிமுக மாவட்ட கழகத்தின் சார்பில், மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன் அவர்கள் வெங்கட்ராமன் அவர்களின் மாவட்ட கழக பங்களிப்பு, அன்பு காட்டும் குணம் பற்றி புகழுரைத்தார்கள். ஒமான் தமிழர் மறுமலர்ச்சி சார்பில் செயலாளர் மைக்கேல் செல்வ குமார் நெறியாளுகையுடன், ஒமானில் இணையதள அணியாக மதிமுக அமைப்பை தொடங்கி, ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவையாக வளர்ந்ததில் திரு.வெங்கட்ராமன் அவர்களுடனான பங்களிப்பு பற்றிய நினைவுகளை பகிர்ந்தார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. நினைவேதல் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும், ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை சார்பில், ஒமான் கழக கலிங்கப்பட்டி சீனிவாசகம் அவர்கள் நன்றியுரைத்தார். நினைவேந்தல் நிகழ்வின் முடிவாக, தமிழர்களின் இதய துடிப்பு, உலகின் எந்த மூலையில் தமிழனுக்கு துயரம் என்றால் ஓடோடி வந்து தோள் கொடுக்கும், மனிதாபிமானத்தின் மணி மகுடம், குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் மதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு. வைகோ எம்பி அவர்கள், தனது தாயார் அன்னை மாரியம்மாள் அவர்களுடனான திரு.வெங்கட்ராமன் அவர்களின் பாச பிணைப்பு, மதுக்கடை ஒழிப்பில் பங்கு, உதவும் குணம், ஊர் பாசம், தன் மீதுள்ள பற்று, கழகத்தின் மீதான கொள்கை பிடிப்பு போன்றவற்றை நினைவு கூர்ந்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்கள். நினைவேந்தல் கூட்டத்தில் 100 பேர் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள். மைக்கேல் செல்வ குமார் செயலாளர் ஒமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை 28-08-2020

No comments:

Post a Comment