Sunday, March 12, 2023

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள்!

தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் (தேர்வுகள்) சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 அன்று தொடங்குகின்றன. பல இலட்சக் கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப் பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். அடுத்தகட்ட உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும் நுழைவாயிலாக பொதுத் தேர்வுகள் விளங்குகின்றன.

மாணவர்கள் பயிலும் பள்ளிகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு ஒரு மணி நேரம் முன்கூட்டியே சென்று பதற்றமோ, அச்சமோ இன்றி இயல்பாக தேர்வை எதிர்கொள்ளுமாறு இளம் மாணவச் செல்வங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மாணவர்கள் எழுதப்போகின்ற இத்தேர்வுகள் மட்டுமே அவர்களின் அறிவாற்றலை அளவிடும் கருவி அல்ல. மாணவர்தம் பயிலும் திறனை அறிந்திடும் அளவுகோல் என்ற அளவில் மட்டுமே தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தேர்வு குறித்த எவ்வித அழுத்தத்தையும், கெடுபிடிகளையும் திணிக்க முயல வேண்டாம். அதனால் எதிர்விளைவுகளே ஏற்படும். தம் வாழ்வில் வெற்றிபெற ஓராயிரம் வழிகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை விதைத்து குழந்தைகளைத் தேர்வுக்கு ஆயத்தப்படுத்துங்கள்.
உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட கனவுகளை இத்தேர்வின் மூலம் நீங்கள் அடைய உங்கள் பெற்றோர் மற்றும் உங்கள் ஆசிரியர்களுடன் இணைந்து நானும் எனது இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
துரை வைகோ
தலைமை கழகச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
12.03.2023

No comments:

Post a Comment