Friday, November 29, 2019

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோவின் தனி ஒருவர் தீர்மானம் (Private Member Bill)

மத்திய மாநில உறவுகள் குறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கடந்த வாரம் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் ஒரு தீர்மானத்தின் சுருக்கமான முன்வரையை 29-11-2019 அன்று அறிமுகம் செய்து இருந்தார்.

அப்படி பல உறுப்பினர்கள் பல தீர்மானங்களைத் தாக்கல் செய்து இருப்பார்கள்.
எந்தத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என்பதை குலுக்கல் சீட்டு மூலம் தேர்ந்து எடுப்பார்கள்.
அந்தத் தீர்மானத்தின் மீது விரிவான கருத்துப் பரிமாற்றத்திற்கு இடம் தருவார்கள்.
அப்படி நடைபெற்ற குலுக்கலில் வைகோ அவர்கள் பெயர் முதலாவதாகத் தேர்வு பெற்றது.
எனவே நேற்று 29.11.2019 அன்று பிற்பகல் 2.30 மணி அளவில், அந்தத் தீர்மானம் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
வைகோ அவர்கள் தீர்மானத்தைத் தாக்கல் செய்து 30 நிமிடங்கள் நீண்ட விளக்கம் அளித்து உரை ஆற்றினார்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநில சுயாட்சிக்காக எழுப்பிய குரல்,
டாக்டர் கலைஞர் 1974 இல் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம், அவர் அமைத்த ராசமன்னார் குழு அளித்த பரிந்துரை,
அகாலிதளம் கட்சியின் அனந்தபூர் சாகேப் தீர்மானம்,
தேசிய மாநாட்டுக் கட்சி, காஷ்மீர் மாநிலத்தில் நிறைவேற்றிய மாநில சுயாட்சி மாநாடு தீர்மானம்,
கல்கத்தாவில் சிபிஎம் ஜோதிபாசு அவர்கள் இடதுசாரிகள் நிறைவேற்றிய தீர்மானம், அனைத்தையும் தெளிவுபட எடுத்து உரைத்தார்.
திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான மாநில சுயாட்சி உரிமைக்காக வலுவாக குரல் எழுப்பினார்.
இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிகாரங்கள் அனைத்தும் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து விரிவான விவாதம் நடைபெற்றது.
அவரது உரையை உறுப்பினர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், வைகோ மிகச் சிறந்த பேச்சாளர் என்றார்.
1. சுக்லா- பா.ஜ.க
2. ஜெயராம் ரமேஷ்- காங்கிஸ்
3. அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
4. டெரிக்.ஓ.பிரையன்- திரிணமுல் காங்கிரஸ்
5. விஜிலா சத்தியானந்த்- அதிமுக
6. விஷம்பர் பிரசாத் நிஷாத்- சமாஜ்வாதி
7. டாக்டர் அமர பட்நாயக்- பிஜூ ஜனதா தளம்
8. டி.கே.ரங்கராஜன்- சிபிஎம்
9. பேரா மனோஜ் குமார் ஜா- ராஷ்ட்ரிய ஜனதா தளம்
10. ராகேஷ் சின்கா- பா.ஜ.க.
11. சஞ்சய் சிங்- ஆம் ஆத்மி
12. சுதஷன்ச திரிவேதி- பா.ஜ.க
13. சுதான்சு திரிவேதி

ஆகிய 13 உறுப்பினர்கள் உரையாற்றினார்கள்.
அவர்கள் வைகோ கொண்டு வந்த தீர்மானத்தையும், அவரது பேச்சு ஆற்றலையும் வெகுவாகப் பாராட்டி, பல கோணங்களில் கருத்துகளை எடுத்து உரைத்தார்கள்.
உறுப்பினர் திரிவேதி, மாவீரர் திலகம் பிரபாகரன் பற்றி விமர்சித்தபோது, பிரபாகரன் விடுதலைக்காகப் போராடிய மாவீரர் என்று வைகோ ஓங்கி முழங்கினார்.
விவாதம் நிறைவு பெறவில்லை. டிசம்பர் பதின்மூன்றாம் நாள் இந்த விவாதம் தொடரும்.
அதன்பிறகு வைகோ அவர்கள் நிறைவுரை விளக்கம் அளிப்பார்கள்.

Thursday, November 28, 2019

அயல்நாட்டுப் பயணங்கள் குறித்து, பிரதமர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை!

28-11-2019 காலையில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டு, நாடாளுமன்றத் தெரு காவல் நிலைய வளாகத்தில் அடைக்கப்பட்டு இருந்த தலைவர் வைகோ அவர்கள், விடுதலைக்குப் பிறகு, நேராக நாடாளுமன்றம் சென்றார்.
இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள், கடந்த ஒரு மாத காலமாக அயல்நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்து, நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், 28.11.2019 மாலை ஐந்து மணிக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அறிக்கை வாசித்தார்.
நாடாளுமன்ற விதிகளின்படி, அந்த அறிக்கைக்கு விளக்கம் கேட்கலாம். அதன்படி, வைகோ கேட்ட விளக்கம்:
பண்டித ஜவகர்லால் நேரு காலத்தில் இருந்து, மன்மோகன்சிங் காலம் வரையிலும், பிரதமர் அயல்நாடுகள் சென்று வந்தால், அதுகுறித்து, அவரே மாநிலங்கள் அவைக்கு வந்து விளக்கம் அளிப்பார். உறுப்பினர்கள் அதன்மீது விளக்கம் கேட்பார்கள். இதுதான் இத்தனை ஆண்டுக்காலம் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை ஆகும். ஆனால், நமது பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் உலகம் சுற்றி வருகின்றார். பல நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கின்றார். அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவின் புதின், சீனாவின் ஷி ஜின்பிங் ஆகியோரோடு பேசுகிறார். மகிழ்ச்சி. ஆனால், அதுகுறித்து அவர் இந்த அவைக்கு வந்து விளக்கம் அளிக்காதது ஏன்? அயல்நாட்டுத் தலைவர்களோடு நான் என்ன பேசினேன்? அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? என்பதை, அவர் இந்த அவைக்கு வந்து தெரிவிக்காதது ஏன்?
வெளியுறவுத் துறைஅமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், அத்துறையில் பாண்டித்யம் பெற்றவர்தான். ஆனால், பிரதமர் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்யக் கூடாது. ஜெய்சங்கர் பிரதமரானால், அவர் வாசிக்கலாம்.
என் கேள்விக்கு வருகின்றேன்.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் அவர்களே, இலங்கைக்குச் சென்றீர்களே, இலட்சக்கணக்கான தமிழர்களைக் கோரமான இனப்படுகொலை செய்த கொடியவன் கைகளில் பூங்கொத்து கொடுக்கச் சென்றீர்களா?
அப்பாவித் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். எங்கள் தாய்மார்கள், சகோதரிகள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். எங்கள் குழந்தைகளும் தப்பவில்லை. சிங்களவர்கள் ஓட்டுப் போட்டுத்தான் நான் வெற்றி பெற்றேன் என்று கோத்தபய இராஜபக்சே பகிரங்கமாக அறிவித்து விட்டார். துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் தமிழர் வாழும் தெருக்களில் சுற்றி வருகின்றனர். ஈழத்தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டில் 19 தமிழர்கள் தீக்குளித்து இறந்தார்கள். ஈழத்தமிழ் இனப்படுகொலையால், கோடிக்கணக்கான தமிழர்கள் நெஞ்சில் வேதனைத் தீயும், கோபத் தீயும் பற்றி எரிகின்றது. அப்படி எரிகின்ற நெருப்பில், நீங்கள் இப்போது பெட்ரோலை ஊற்றி இருக்கின்றீர்கள்.
அவைத்தலைவர்: இப்படி நீங்கள் பேசக்கூடாது.
வைகோ: நான் பேசுவேன்.
இதன்பிறகு, அவைத்தலைவருக்கும் வைகோவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்,
நான் இலங்கைக்குச் சென்று அதிபரைச் சந்தித்தது குறித்து வைகோ கேட்கின்றார். நான் மொத்த இலங்கைக்கும்தான் அதிபர் என்று அவர் கூறி இருக்கின்றார். அனைத்துத் தரப்பினரின் நலனையும் கருதித்தான் நாங்கள் செயல்படுவோம்.
வைகோ: உங்கள் அழைப்பில்தான் அவர் வருகின்றாரா?
அமைச்சர் ஜெய்சங்கர்: ஆமாம். நான் அவருக்கு அழைப்பு கொடுத்து இருக்கின்றேன்.

எதற்காக இந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்? வைகோ விளக்கம்!


இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபய ராஜபக்சே, முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி ஆவார்.

அப்போது அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே குடியரசுத் தலைவராக இருந்தார். அவர்தான் இனப்படுகொலைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள், இந்தியப் பிரதமராகப் பதவி ஏற்ற விழாவிற்கு, மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

அதை எதிர்த்து நாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இதே நாடாளுமன்ற வீதியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானோம்.

ஈழத்தமிழர் படுகொலை குறித்துத் துளி அளவும் கவலை இன்றி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்குச் சென்று கோத்தபய ராஜபக்சேவை, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து இருக்கின்றார்.

இது ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் எரிகின்ற தீயில், மேலும் பெட்ரோல் ஊற்றுகின்ற செயல் ஆகும்.

ஐ.நா. மன்றம் அளித்துள்ள ஆய்வு அறிக்கையின்படி, 2009-ஆம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

எங்களுடைய தாய்மார்களும் சகோதரிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. மருத்துவமனைகள் மீது இலங்கை வான்படை குண்டுகளை வீசியது; தரைப்படை பீரங்கித் தாக்குதல் நடத்தியது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

பள்ளிக் கட்டடங்களை இடித்துத் தகர்த்தார்கள்.

அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில், ஈழத் தமிழர்கள் சஜித் பிரேமதாஸா வுக்கு ஆதரவாக வாக்கு அளித்து இருக்கின்றனர். எனவே, நான் சிங்கள மக்களின் ஆதரவால்தான் வெற்றி பெற்றேன் என்று கோத்தபய இராஜபக்சே அறிவித்தார்.

பதவி ஏற்றவுடன் முதல் வேலையாக அவர் பிறப்பித்த உத்தரவில், ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற தெருக்களில் இலங்கை இராணுவம் துப்பாக்கி ஏந்தி வலம் வர வேண்டும் என அறிவித்து இருக்கின்றார்.

ஏற்கனவே ஈழத் தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகள், சிங்கள ராணுவத்தின் சித்திரவதைக் கூடமாக, கொலைக்களமாக ஆக்கப்பட்டு இருக்கின்றது.

2008ஆம் ஆண்டு, சண்டேலீடர் என்ற ஆங்கில ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை அனைவரும் அறிவர்.

தான் இறப்பதற்கு முன்பு அவர் எழுதிய தலையங்கத்தில், மஹிந்த ராஜபக்சேவால் நான் கொல்லப்படுவேன் என்று எழுதி இருந்தார்.

கோத்தபய ராஜபக்சே நிகழ்த்திய படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக நிசாந்த சில்வா என்ற அதிகாரி நியமிக்கப்பட்டு இருந்தார்.

அவர் அந்தப் பொறுப்பில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். எனவே அவர் காவல்துறை ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் அணுகி அதே பொறுப்பில் நீடித்தார்.

கோத்தபய ராஜபக்சே குடியரசுத் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு, நிசாந்த சில்வா அவரது மனைவி மூன்று பெண் பிள்ளைகள் இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர். இப்போது அவர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதரகத்தின் ஒரு பெண் அதிகாரி, கோத்தபய ராஜபக்சேவின் வெள்ளை வேன் குண்டர்களால் கடத்தப்பட்டு இருக்கின்றார்.

ஈழத்தமிழர்கள் இனப் இனப்படுகொலையின்போது இந்த வெள்ளை வேன் ஒரு கொலைக்கருவியாகச் செயல்பட்டது. அந்தப் பெண் அதிகாரி எங்கோ ஓரிடத்தில் விசாரிக்கப்படுவதாக நியூயார்க் டைம்ஸ் ஏடு எழுதி இருக்கின்றது.

உலகப் புகழ்பெற்ற ராய்ட்டர் செய்தி நிறுவனம், தங்களுடைய செய்தியாளர்களை இலங்கையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.

கோத்தபாய ராஜபக்சவின் மிரட்டலால், தினப்புயல் தமிழர் தளம் ஆகிய இரண்டு தமிழ் ஏடுகள் நிறுத்தப்பட்டுவிட்டன.

அது மட்டும் அல்ல.

லைட் ஹவுஸ் என்ற, சிங்கள, ஆங்கிலம், தமிழ் செய்தித்தாள்களை வெளியிடுகின்ற, இலங்கையின் பெரிய செய்தி நிறுவனம், தமிழ் செய்தித்தாள்களை நிறுத்துவதாக அறிவித்து விட்டது. இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த 30 ஆண்டுகளில் 580 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள். அவர்களுடைய படகுகளைப் பறிமுதல் செய்து, பிடிபட்ட மீனவர்களை இலங்கைச் சிறைகளில் அடைத்துள்ளனர்.

ஆனால், இலங்கை அரசாங்கத்தோடு நரேந்திர மோடி அரசு கொஞ்சிக் குலாவுகின்றது.

இது தமிழர்களுக்கு எதிரான அநீதி ஆகும்.

இப்போது இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் மிரட்டலுக்கும் அச்சத்திற்கும் வேதனைக்கும் ஆளாகி இருக்கின்றனர்.

அவர்களுடைய துயரத்தை உலகுக்கு எடுத்து உரைக்கவும், கொடியவன் கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த இந்திய அரசாங்கத்தைக் கண்டிக்கவும் நாங்கள் இந்தக் கருப்புக்கொடி அறப்போர் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றோம்.

எங்களுடைய முதன்மையான கோரிக்கை: ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை, பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்.

90,000 ஈழத் தமிழ்ப் பெண்கள் இப்போது விதவைகளாகக் கண்ணீர் சிந்துகின்றனர். காணாமல்போன பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

எனவே ஐநா மன்றம், மனித உரிமைகள் ஆணையம், தமிழ் ஈழம் அமைப்பதற்காக, ஈழத் தமிழர்கள் இடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் அனைவரும், அந்தப் பொது வாக்கெடுப்பில் வாக்கு அளிக்க வகை செய்ய வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
28.11.2019

WHY THIS BLACK FLAG DEMONSTRATION?

Gotabaya Rajapakse, President of Sri Lanka has commited the Crime of Genocide of Tamils, When he was the Defence Minister.

His Brother Mahinda Rajapakse, the then President ordered the massacre.

When Mahinda Rajapakse was invited by Modi for the swaring in ceremony in 2014, we staged a demonstration in the same place Delhi Jantar Mantar and were arrested.

Even without an iota of sympathy for Tamils, our foreign minister went to Colombo to invite Gotabaya to India.

This is nothing but pouring petrol over the flames burning in the hearts of tamils.

According to UN report 1,37,000 of Tamil people were massacred in 2009.

Our mothers and sisters were raped and killed. Even our children were not spared. Bombing, straffing, shelling by canons on the Hospitals was done by the Sri Lankan Army. The wounded were killed. Schools were not spared.

This time the Tamils voted for Sajith Premadasa. That is why, Gotabaya says that only the Sinhalese are voted for me.

He has passed a presidential order that the gun trotting soldiers should patrol in the streets of the Tamils day and night. Already Jaffna and other Tamil traditional areas have become the concentration camp of Sri Lankan Army.

Everybody knows Lasantha Wickramatunge, the editor of Sunday leader was killed in 2008. Before his death, in the editorial, he told I wil be killed by Mahinda Rajapakse’s henchmen. An investigation officer Nishantha Silva was appointed to investigate the murders committed by Gotabaya Rajapakse.

He was transferred from that assignment. He moved the Police Commission and the court to retain his post. Now, four days after Gotabaya became the President, Nishanta Silva and his wife and three daugters, left Sri Lanka. Nobody knows, where they have gone.

A Lady officer of the Swiss Embassy in Sri Lanka was abducted by white van, the notorious killing van of the Sri Lankan Government and was interrogated secretly. This has been reported in New York Times.

Shockingly, REUTER, the world famous news establishment has announced to withdraw their correspondents from Sri Lanka.

Due to the threatening of Gotabaya Government, two Tamil newspapers, Thinappuyal, Thamilar Thalam have been closed their publication.

Not only that, the leading newspaper establishment Light House, which publishes Sinhala English and Tamil newspapers has announced to stop tamil newspaper.

Fishermen of Tamilnadu repeatedly attacked by Sri Lankan Navy. So far, more than 580 Tamil fishermen have been killed in the past 30 years. Their boats were seized and the our fishermens were put behind the bars in Sri Lanka.

The Government of Narendra Modi is hobnobbing with the Sri Lankan Government.

This is nothing but terrible betrayal of Tamils.

Tamils in Sri Lanka are afraid and are in serious panic.

We have come here to show black flags and register our protest against the Government of India for inviting the killer, the butcher of Tamils, Gotabaya Rajapakse.

Our main demand:

The Sri Lankan Government should be tried for the genocide of Eelam Tamils in the International Court of Criminal Justice.

90,000 tamil widows are shedding tears.

What happened to thousands of tamils who have disappeared?

We appeal to the United Nations and the Human Rights Council to adopt a resolution to conduct referendum among the Tamils for a sovereign Tamil Eelam, enabling Eelam Tamils living all over the world to take part.

VAIKO
Member of Parliament,
General Secretary,
Marumalarchi Dravida Munnetra Kazhagam-MDMK Paty,
Tamilnadu

விசாரணை சிறைக் கைதிகளின் விடுதலை எப்போது? வைகோ கேள்விகளும், உள்துறை அமைச்சர் விளக்கமும்!

கேள்வி எண் 354
கீழ்காணும் கேள்விகளுக்கு, உள்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) நாடு முழுமையும் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்ற விசாரணைக் கைதிகள் குறித்து, அரசு ஏதேனும் ஆய்வுகள் மேற்கொண்டதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்களைத் தருக.
(இ) தேசிய குற்றப்பதிவு ஆவணங்களின்படி, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, விசாரணைக் கைதிகளாக சிறைகளில் அடைபட்டுக் கிடப்பவர்கள் எத்தனைப் பேர்?
(ஈ) நாடு முழுமையும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுக் கிடக்கின்ற குழந்தைகள் எத்தனைப் பேர்?
(உ) நீதிமன்றங்களில், விசாரணைக் கைதிகளுடைய வழக்குகளை விரைவுபடுத்த, அரசு மேற்கொண்ட நடவடிக்கைககள் யாவை?
(ஊ) கடுமையான குற்றமாக இல்லாத நிலையில், அவர்களை விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?
உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி அளித்துள்ள விளக்கம்
அ முதல் இ வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:
தேசிய குற்றப் பதிவு ஆவணங்களில் (National Crime Records Bureau-NCRB) பதிவு செய்யப்பட்டுள்ள புள்ளி விவரங்கள், அந்த அமைப்பின், இந்தியச் சிறை புள்ளிவிவரங்கள் (Prison Statistics India) என்ற இதழில் வெளியிடப்படுகின்றன.
அவ்வாறு, 2017 ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் கிடைத்து இருக்கின்றன. அதன்படி, 13,143 பேர், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, விசாரணைக் கைதிகளாக சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்றனர். இதுகுறித்து, உள்துறை அமைச்சகம் எந்த ஆய்வும் மேற்கொள்ளவில்லை.
கேள்வி ஈ குறித்த விளக்கம்:
நாடு முழுமையும், விசாரணைக் கைதிகளாகச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரம் எதுவும் அரசிடம் இல்லை.
உ, ஊ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
இந்திய அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில், பட்டியல் இரண்டு, உட்பிரிவு 4 இன்படி, சிறைகள் மற்றும் அவற்றில் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் குறித்த அதிகாரங்கள் மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டவை. எனவே, சிறைகளை ஆள்வதும், மேலாண்மை செய்வதும், மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
எனினும், விசாரணைக் கைதிகளின் குறைகளைக் களைவதற்காக, நடுவண் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றது. அதற்காக, குற்ற நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதலில் (Code of Criminal Procedure) 436 ஏ என்ற பிரிவு, புதிதாகச் சேர்க்கப்பட்டது. அதன்படி, புனையப்பட்ட குற்றத்திற்காகக் கிடைக்கக்கூடிய ஆகக் கூடுதலான தண்டனையில், மூன்றில் ஒரு பங்கு காலம் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தால், அவருக்கு, பிணை விடுதலை வழங்கலாம். (ஆகக்கூடுதலாக மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கின்ற வழக்குகளைத் தவிர).
மின்சிறை (E-prisons Portal) என்ற இணையதளத்தில் தரப்பட்டு உள்ள தகவல்களைப் பயன்படுத்தி, மாநில சிறை அதிகாரிகள், சிறைவாசிகள் குறித்த புள்ளி விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளலாம்; அதன்படி, விசாரணைக் கைதிகளை அடையாளம் கண்டு, மறு ஆய்வுக் குழுக்களின் விசாரணைக்கு அவர்களுடைய வழக்கை உட்படுத்தலாம்; அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
மாநில சட்டப் பணிகள் ஆணையம் (State Legal Services Authority), சட்ட உதவி மையங்களை (Legal Service Clinics) ஏற்படுத்தி உள்ளது.
அதன் வழியாக, தேவைப்படுவோருக்கு, கட்டணம் இல்லாமல் சட்ட உதவிகள் கிடைத்திட, பகுதி நேர, தன்னார்வ சட்ட உதவியாளர்கள், காவல் நிலையங்கள், முன் அலுவலகங்கள் (குசடிவே டீககiஉநள), சிறைகள் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் செயல்பட ஏற்பாடு செய்து இருக்கின்றது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தேசிய சட்ட உதவிகள் ஆணையம் (National Legal Services Authority-NALSA), விசாரணைக் கைதிகள் குறித்து, ஒரு நிலையான செயல்திட்ட வழிகாட்டுதலை (Procedure-SOS) வரைந்து இருக்கின்றது.
இந்த வழிகாட்டுதல்கள், 2019 பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள், அனைத்து மாநிலங்கள் மற்றும் நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல, 2016 ஆம் ஆண்டு வரையப்பட்ட மாதிரி சிறைக் கையேடு (The Model Prison Manual) அனைத்து மாநிலங்கள் மற்றும் நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், சட்ட உதவி என்ற உட்பிரிவில், விசாரணைக் கைதிகளுக்கு வழங்கப்படக்கூடிய சட்டத் தற்காப்பு, வழக்குரைஞர்களுடன் சந்திப்பு, வழக்கு ஆவணங்களில் கையெழுத்து இடுதல், நீதிமன்றங்களில் விண்ணப்பித்தல் போன்றவற்றிற்கான ஏற்பாடுகளை, அரசின் செலவிலேயே செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், சிறைகளில் நிலவும் நெருக்கடியைத் தடுப்பது, விசாரணைக் கைதிகளின் குறைகளைக் களைவது குறித்து, உள்துறை அமைச்சகம், சீரான இடைவெளிகளில், மாநிலங்கள் மற்றும் நடுவண் அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றது. இதுகுறித்த தகவல்களை, https://mha,gov.in/ என்ற இணையதளத்தில் பெறலாம் என 28-11-2019 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 27, 2019

உச்சநீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவிடுக! மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை!

உயர்நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பில், வழக்குத் தொடுத்தவர்கள் நிறைவு அடையவில்லை என்றால், தீர்ப்பு தவறானது எனக் கருதினால், அவர் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.
ஆனால், தென்னிந்திய மக்கள், உச்சநீதிமன்றத்தை எளிதில் நாட முடியவில்லை. மொழி வேறுபாடு, நெடுந்தொலைவுப் பயணம், மிக உயர்ந்த கட்டணம், பயணத்தில் வீணாகும் நேரம், தில்லியில் தங்கும் இடம் ஏற்பாடு, நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வழக்குரைஞர்கள் கட்டணம் போன்றவை, எதிர்கொள்ள முடியாத கேள்விகள்.
மேற்கண்ட காரணங்கள், ஏழை எளிய அடித்தட்டு மக்களால், உச்சநீதிமன்றத்திடம் இருந்து உரிய நீதியைப் பெற முடியாமல் தடுக்கின்றன.
உச்சநீதிமன்ற மேல் முறையீடுகளில், வட இந்தியாவிற்கு அடுத்தபடியாக, ஆகக்கூடுதலான வழக்குகள், தென் இந்தியாவில் இருந்துதான் வருகின்றன.
எனவே, உச்சநீதிமன்றத்தில் நிரந்தரக் கிளையை, தென்இந்தியாவில் நிறுவினால் மட்டுமே, நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்க முடியும். ஏழை, எளிய மக்கள் எளிதில் நீதிமன்றத்தை அணுக முடியும். வழக்குரைஞர்களுக்கும் வசதியாக அமையும்.
இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21, எல்லோருக்கும் பொது நீதி கிடைப்பதை, அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக அறிவித்து இருக்கின்றது.
2018 மே 4 ஆம் நாள் கணக்கின்படி, தற்போது உச்சநீதிமன்றத்தில் 54,013 வழக்குகள் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கின்றன.
எப்படி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

தக்க நடவடிக்கைகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மேற்கொண்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
அரசியல் சட்டத்தின் 130 ஆவது பிரிவு வழங்கி இருக்கின்ற அதிகாரத்தின்படி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யாரையும் கலந்து பேச வேண்டியது இல்லை; கருத்துகளைக் கேட்க வேண்டியது இல்லை. அவர் தாமாகவே முடிவு எடுத்துச் செயல்படலாம். ஆனால் அதற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
எனவே, உச்சநீதிமன்றக் கிளையை தென் இந்தியாவில், சென்னையில் நிறுவிட வேண்டும்.”
இவ்வாறு வைகோ 27-11-2019 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
வைகோவின் கோரிக்கைக்கு தி.மு.க. உறுப்பினர் வில்சன் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

Tuesday, November 26, 2019

இந்திய அரசியல் சட்ட முகப்புரையை தமிழில் வாசிக்கின்றார் மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள்!

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் சட்ட நாளை முன்னிட்டு 26-11-2019 அன்று, இந்திய அரசியல் சட்ட முகப்புரையை தமிழில் வாசிக்கின்றார் மக்கள் தலைவர் வைகோ எம்பி அவர்கள்.


தாயகத்தில் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாட்டம்!


தமிழின தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 65ஆவது பிறந்தநாளையொட்டி மக்கள் தலைவர் வைகோ அவர்களின் ஆணைக்கு இணங்க, தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று 26-11-2019 காலை கழக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில், சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி,தேவதாஸ் கேக் வெட்டி கேக் வெட்டினார்.

தலைமைக் கழக மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், கழக முன்னணியினர் மற்றும் கழகத் தோழர்கள், தமிழின உணர்வார்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடரித்துறை பராமரிப்புப் பணிகள் தனியார் மயம் ஆகின்றதா? வைகோ கேள்விகளும், அமைச்சர் விளக்கமும்!

கேள்வி எண் 771
கீழ்காணும் கேள்விகளுக்கு, தொடரித்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) தொடரிகளில் உணவுக்கூடங்களையும், கழிப்புஅறைகளின் பராமரிப்புப் பணிகளையும் கைவிட, தொடரித்துறை தீர்மானித்து இருக்கின்றதா?
(ஆ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்கள் தருக.
(இ) தொடரிப் பெட்டிகளின் தூய்மை, கழிப்பு அறைகளின் பராமரிப்பு குறித்து, எத்தனை பேர் குறைகளைத் தெரிவித்துள்ளனர்?
(ஈ) அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
(உ) தொடரிப் பெட்டிகளைத் தூய்மையாகப் பராமரிப்பதற்காக, மாற்று ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்படுகின்றனவா? ஓடுகின்ற தொடரிகளில் மூட்டைப் பூச்சிகள், கரப்பான், எலிகள் ஊர்வது குறித்துக் குறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளனவா?
(ஊ) அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்களைத் தருக.
தொடரித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அளித்து இருக்கின்ற விளக்கம்:
(அ) இல்லை.
(ஆ) கேள்வி எழவில்லை.
இ,ஈ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
தொடரிப் பெட்டிகளின் தூய்மை குறித்து, கடந்த மூன்று ஆண்டுகளில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து 60000 க்கும் மேற்பட்ட குறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் கூறுகின்ற குறைகளைத் தீர்த்து வைப்பதற்கு, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தப் பணிகள் மேற்பார்வை செய்யப்படுகின்றன.
ஒப்பந்தப்படி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளாத நிறுவனங்கள் மீது, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உ, ஊ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்:
தூய்மைப் பணிகள் என்பது, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். அதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்படுகின்றன.
சில எடுத்துக்காட்டுகளைத் தருகின்றேன்:
1. தொடரிப் பெட்டிகள், கழிப்பு அறைகளின் தூய்மைப் பணிகள் இரு வகைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. பணியாளர்கள் வேலை செய்கின்றார்கள். தேவையான கருவிகளும் உள்ளன.
2. தலைநகர் விரைவுத் தொடரிகள் (இராஜ்தானி), நூற்றாண்டுத் தொடரிகள் (சதாப்தி) போன்ற முதன்மையான, நெடுந்தொலைவு ஓடுகின்ற 1090 விரைவுத் தொடரிகளில், இருமுனை வழிகளிலும், (எடுத்துக்காட்டு: மதுரை-சென்னை; சென்னை-மதுரை வைகை விரைவுத்தொடரி) வண்டிகள் ஓடிக்கொண்டு இருக்கும்போதே தூய்மைப் பணிகள் (Onboard House Keeping Service OBHS) தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. கழிப்பு அறைகள் கழுவப்படுகின்றன. கதவுகள் துடைக்கப்படுகின்றன.
3. பெட்டி நண்பன் (கோச் மித்ரா) என்ற திட்டம் உள்ளது. அதன்படி, 1050 தொடரிகளில், இருமுனை வழிகளிலும், தூய்மைப் பணிகள், நோய்த்தொற்றுக் கிருமிகள் அழிப்பு, சணல் துடைப்பான்கள், விளக்குகள், குளிர்பதனப் பணிகள், தண்ணீர் நிரப்புதல் போன்ற, பயணிகளுக்கு உதவுகின்ற ஒற்றைச் சாளர இடைமுக ஏற்பாடுகள் (single window interface) செய்யப்படுகின்றன.
4. தூய்மையான தொடரி நிலையம் என்று ஒரு திட்டம் உள்ளது. இந்த நிலையங்களில், வண்டிகள் நிற்கும்போது செய்ய வேண்டிய தூய்மைப் பணிகள், உரிய கருவிகளைக் கொண்டு செய்யப்படுகின்றன.
5. மூட்டைப் பூச்சி போன்ற சிறுசிறு பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்ற மருந்துகள், தொடர்ச்சியான இடைவெளிகளில் பெட்டிகளில் தெளிக்கப்படுகின்றன. அந்தப் பணிகளை, பயிற்சி பெற்ற, திறமையாகச் செயல்படுகின்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. ஒட்டுண்ணி உயிரிகளைக் கட்டுப்படுத்தும் புகை மூட்டப் பணிகளும் (Fumigation) மேற்கொள்ளப்படுகின்றன.
6. முன்பு, குளிரிப் பெட்டிகளில் மட்டுமே குப்பைக் கூடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இப்போது, அனைத்துப் பெட்டிகளிலும் வைக்கப்படுகின்றன.
7. தொடரிப் பெட்டிக் கழிப்பு அறைகளின் மனிதக் கழிவுகள், முன்பு தொடரித் தடங்களிலேயே கொட்டப்பட்டு வந்தது. இப்போது, பெட்டிகளிலேயே சேகரிக்கப்பட்டு, பின்னர் அகற்றப்படுகின்றன.
8. ஏதேனும் குறைகள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால், அது தொடர்பான அலுவலர்கள், மேற்பார்வையாளர்களது நடவடிக்கைகள், உரிய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுகின்றன.
9. தொடரிப் பெட்டிகளின் தூய்மைப் பணிகளுக்கு, பயணிகளின் ஒத்துழைப்பைப் பெறுகின்ற வகையில், போதிய விழிப்பு உணர்வுப் பரப்புரைகளும் செய்யப்படுகின்றன என 26-11-2019 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, November 25, 2019

எல்லைத் தகராறுகள் குறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ள வழி என்ன? வைகோ கேள்வி, அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண்: 18

கீழ்காணும் கேள்விகளுக்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) பொதுமக்கள் அறிந்து கொள்கின்ற வகையில், எல்லைகளின் வரலாறு குறித்த ஆவணம் வெளியிடும் திட்டம் அரசிடம் இருக்கின்றதா?
(ஆ) சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன், இந்தியாவுக்கு எல்லைத் தகராறு இருக்கின்றதா? அந்த எல்லைகளை, வரலாற்று ஆய்வாளர்கள் எந்த வகையில் வரையறுத்தார்கள்?
(இ) எல்லைகள் குறித்த ஆவணத்தை எழுதும்போது, நாட்டின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் ஏதேனும் மறைக்கப்படுகின்றதா?
(ஈ) எல்லைகள் குறித்த ஆவணம் வெளியிடுவதற்கான கால வரையறை ஏதும் செய்யப்பட்டு இருக்கின்றதா?
பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீ பத் நாயக் அளித்துள்ள விளக்கம்:

(அ) முதல் (ஈ) வரையான கேள்விகளுக்கு விளக்கம், ஆம்;
இந்திய பாதுகாப்புத்துறையின் நிதி உதவியுடன், தில்லியில் உள்ள நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், இந்திய எல்லைகள் குறித்த வரலாற்று ஆவணம் ஒன்றை எழுதி வருகின்றது.
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன், சில இடங்களில் எல்லைத் தகராறு இருக்கின்றது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பன்னாட்டுப் பார்வையுடன், அந்த வரலாற்று ஆவணம் எழுதப்படுகிறது.
இந்த ஆவணத்தை, இரண்டு ஆண்டுகளில் எழுதி முடிக்க, நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், திட்டம் வகுத்துச் செயல்பட்டு வருகின்றது என 25-11-2019 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, November 24, 2019

ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு, சிக்கல் இல்லாத வகையில் பணப்பரிமாற்றம் விரைவில் அறிமுகம் வைகோ கேள்விக்கு நிதி அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் : 246
கீழ்காணும் கேள்விகளுக்கு, நிதி அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) சரக்கு மற்றும் சேவை வரி வருமானத்தைப் பெருக்குவதற்காக, மறுசீராய்வுக் குழுவை அரசு அமைத்து இருக்கின்றதா?
அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்.
(ஆ) இந்த வரியை, தன்னார்வத்துடன் வணிகர்கள் முன்வந்து கட்டுவதற்கான ஊக்குவிப்புகளை அரசு செய்கின்றதா? இந்தத் திட்டம் குறித்து, வணிகர்களுக்கு போதிய விளக்கங்களை அரசு அளித்து இருக்கின்றதா?
அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்.
(இ) இதுபோல, வேறு எந்தெந்த வழிகளில் இந்த வரி குறித்து அரசு மக்களுக்கு விளக்கங்கள் அளித்து இருக்கின்றது? குறிப்பாக, சிறு குறு வணிகர்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு, எத்தகைய புரிதலை அரசு ஏற்படுத்தி இருக்கின்றது?
நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் அளித்துள்ள விளக்கம்:
அ, ஆ ஆகிய இரு கேள்விகளுக்கான விளக்கம்:
சரக்கு மற்றும் சேவை வரி வருமானத்தைப் பெருக்குவதற்காக, நடுவண் அரசு மற்றும் மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை, அரசு ஏற்படுத்தி இருக்கின்றது. அந்தக் குழு, விரிவான கீழ்காணும் சீர்திருத்தங்களை ஆய்வு செய்து வருகின்றது.
1. முறைகேடுகளைத் தடுப்பதற்கும், தேவைப்படுகின்ற வேளைகளில், முறையான சீர்திருத்தங்களை அறிமுகம் செய்வது.
2. பொதுமக்கள் தன்னார்வத்துடன் பங்கு அளிப்பது.
3. மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கை மற்றும் சட்டத் திருத்தங்கள்.
4. வரித்தளத்தை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள்.
5. இணக்கமான கண்காணிப்பிற்கும், வரி கட்டாமல் தவிர்ப்பதைத் தடுப்பதற்கும் தேவையான அடிப்படைத் தரவுகளைத் திரட்டுவது.
6. மேலாண்மைப் பணிகளை ஒருங்கிணைப்பது.
கேள்வி (இ) க்கு, விளக்கம்:
1. ஓராண்டில் 1.5 கோடிக்கும் குறைவான பரிமாற்றங்கள் கொண்ட, சிறுகுறு வணிகர்கள், கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு, 1 விழுக்காடு மட்டுமே வரி செலுத்தக்கூடிய தொகுப்புத் தீர்வைத் திட்டம் உள்ளது.
2. கிடைத்த வரியைப் பங்கிடுவதற்கும், இதுபோல மாநில அரசுகளுக்குக் கிடைத்த பொருள்கள் மீதான வரி கணக்கீட்டுக்குப் பிறகு எஞ்சிய தொகையைத் திருப்பிக் கொடுப்பதற்கும் நடுவண் அரசே நிதி ஒதுக்குகின்றது.
3. வரி செலுத்துவோருக்கு உதவியாக, ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு, சிக்கல் இல்லாத வகையில் பணத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள், வெகு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என 24-11-2019 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வைகோ அறிமுகம் செய்த, சட்ட முன்வரைவு!

இந்திக்கு இணையாக, இந்தியாவின் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும், இந்திய அரசியல் சட்டம் வழி வகுத்து இருக்கின்றது. உலகின் எத்தனையோ நாடுகளில், பல மொழிகள், ஆட்சிமொழிகளாக உள்ளன. எடுத்துக்காட்டாக, தெற்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில், 11 மொழிகள், ஆட்சிமொழிகள் ஆக உள்ளன.
130 கோடி மக்கள் வசிக்கின்ற இந்தியாவில், 454 மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியா, பன்மொழிகள் பேசுகின்ற நாடு; பல்வேறு பழக்கவழக்கங்கள், பண்பாடுகளைக் கொண்டது.
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு, இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியல் இடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் ஆதரித்து வளர்க்க வேண்டும்; இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழிகள் ஆக்க வேண்டும்.
அதற்காக, இந்தச் சட்ட முன் வரைவை நான் அறிமுகம் செய்கின்றேன்.
குறிப்பு:
இதுகுறித்த விரிவான கருத்துப் பரிமாற்றங்கள், அவைத்தலைவர் ஒதுக்குகின்ற நாளில் நடைபெறும் என 24-11-2019 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, November 23, 2019

கொடியவன் கோத்தபயாவே, இந்தியாவுக்குள் நுழையாதே நவம்பர் 28 தலைநகர் தில்லியில் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இலங்கைத் தீவில், மனிதகுலம் சந்தித்திராத பேரழிவுக்கு ஆளான ஈழத்தமிழர்கள், நாதி அற்றுப் போனோமா நாம் என்று பதறிக் கதறி, அவலத்தில் கூக்குரல் இடும் நிலை, தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த அதிபர் மகிந்த இராஜபக்சேயின் இராணுவ அமைச்சராக இருந்த ஈவு இரக்கம் அற்ற கொலைபாதகன் கோத்தபய, இப்போது இலங்கை அதிபர் ஆகி இருக்கின்றார், முன்னாள் அதிபரை பிரதமராக அறிவித்து, அவரிடமே இராணுவப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டார். 

சிங்களர்களால்தான் நான் வெற்றி பெற்றேன் என்றதுடன், முதல் அறிவிப்பாக, தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் தெருக்களில் வலம் வர வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்து விட்டார்.

தமிழ் ஈழம் சிங்களர்களின் இராணுவக் கூடாரம் ஆகி விட்டது, 

காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் தமிழர்களின் கதி என்ன? என்ற வேதனை நம்மை வாட்டுகின்றது.

இந்தியாவில் எட்டுக் கோடித் தமிழர்கள் வாழ்கின்றோம். அதைத் துளியும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத இந்தியாவின் மத்திய அரசு, வெளியுறவுத்துறை அமைச்சரை அனுப்பி வைத்து, கோத்தபய இராஜபக்சேவுக்கு வாழ்த்தும் சொல்லி,
முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருக என அழைப்பும் விடுத்து இருக்கின்றது.

மகிந்த இராஜபக்சே சாஞ்சிக்கு வந்தபோது, 1500 கிலோ மீட்டர் கடந்து சென்று, கருப்புக்கொடி காட்டிக் கைதானோம். 2014 இல், நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்புக்கு மகிந்த இராஜபக்சே வந்தபோது, தலைநகர் தில்லியில் கருப்புக்கொடி காட்டிக் கைதானோம். 

நமக்கு உணர்ச்சி செத்துப் போய்விடவில்லை. நம் நரம்புகள் மரத்துப் போய்விடவில்லை. 
தமிழ்ச் சாதி, நாதி அற்ற இனம் அல்ல என்பதை, உலகத்திற்குப் பிரகடனம் செய்யும் வகையில், வருகின்ற நவம்பர் 28 ஆம் நாள் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, என்னுடைய தலைமையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், புது தில்லி ஜந்தர் மந்தரில், ஈழத்தமிழ் இனக் கொலைகாரனே, இந்தியாவுக்குள் நுழையாதே என்ற முழக்கத்துடன், அறவழியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்.

கழகக் கண்மணிகள், இந்தக் குறைந்த கால அவகாசத்தில் வர முடிந்தவர்கள், தில்லிக்கு வாருங்கள். குண்டடிபட்டுக் கொத்துக்கொத்தாக மடிந்து போன ஈழத்தமிழர்களுக்காகக் கண்ணீர் சிந்துகின்ற நாம், நம் அறப்போரை மேலும் கூர்மை ஆக்குவோம். 

கழகக் கண்மணிகள், ஈழத்தமிழ் உணர்வாளர்கள் இந்த அறப்போரில் பங்கேற்பதோடு, நாங்கள் மேற்கொள்ள இருக்கின்ற அறப்போராட்டத்திற்குத் தமிழ்ச் சமூகம் தோள்கொடுத்துத் துணை நிற்கவேண்டும் என இரு கரம் கூப்பி, பணிவுடன் வேண்டுகிறேன்.

தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் வலம் வர கோத்தபய இராஜபக்சே உத்தரவு!வைகோ கண்டனம்!

இலங்கைத் தீவில், ஈழத் தமிழ் இனம், கோரப் படுகொலைக்கு ஆளான பின்னர், மேலும் ஓர் பேரபாயம், இப்போது ஏற்பட்டுவிட்டது. மகிந்த இராஜபக்சே அதிபராக இருந்தபோது, இராணுவ அமைச்சராக இருந்து, இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொலை பாதகன் கோத்தபய இராஜபக்சே, இம்முறை குடியரசுத் தலைவர் ஆனதோடு, நான் சிங்களவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டேன் என பகிரங்கமாகவும், ஆணவத்தோடும் அறிவித்து உள்ளார்.

பதவி ஏற்றபின்பு, முதல் வேலையாக, வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழர் வாழும் பகுதிகளில், ஆயுதந் தாங்கிய இராணுவத்தினர், தெருக்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்.

இனக்கொலைப் போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் மாண்டனர். ஒரு இலட்சம் தமிழர்கள் காணாமல் போயினர். 90 ஆயிரம் விதவைகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழ் இனத்தைக் கூண்டோடு கரு அறுப்பதே கோத்தபய இராஜபக்சேயின் குறிக்கோள் ஆகும். இந்தக் கொலைகாரப் பாவிக்கு, இந்திய அரசு அழைப்பு விடுத்து இருப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகம் ஆகும்.

எட்டுக்கோடித் தமிழர்கள் இந்திய நாட்டின் குடிமக்கள் ஆக இருக்கின்றோம்.

எங்களது தொப்புள் கொடி உறவுகள் ஆகிய ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கின்றது.

இலங்கை அரசின் அடக்குமுறைகளில் இருந்து ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தலைமைத் தளபதி என்ற புதிய பொறுப்பை உருவாக்கப் போகின்றீர்களா? வைகோ கேள்வி!

அமைச்சர் விளக்கம்- கேள்வி எண் 17

கீழ்காணும் கேள்விகளுக்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

அ) இந்தியப் படைக்கு தலைமைத் தளபதி என ஒருவரை அறிவிக்க அரசு தீர்மானித்து உள்ளதா? 

ஆ) அவ்வாறு இருந்தால், அது குறித்த விவரங்கள்
இ) தலைமைத் தளபதியின் பொறுப்புகளை வரையறை செய்வதற்காக, ஏதேனும் குழு அமைக்கப்பட்டு இருக்கின்றதா?

ஈ) அவ்வாறு இருந்தால், அது குறித்த விவரங்கள்

உ) அவ்வாறு உருவாக்கப்படுகின்ற தலைமைத் தளபதி என்ற பொறுப்பு, தற்போது உள்ள இந்தியப் படை அதிகாரப் பொறுப்புகளின் சமநிலையைச் சீர்குலைக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றதா? 

ஊ) அவ்வாறு இருந்தால், அதுகுறித்த விவரங்கள்

எ) இந்தியப் படைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, கால வரையறை செய்யப்பட்டுள்ளதா? தற்போது பொறுப்பில் உள்ள முப்படைத் தளபதிகளின் பணிகளோடு இயைந்தவாறு அமையுமா? 

ஆணை இடுவதும், கட்டுப்படுத்துவதுமான அதிகாரங்கள் தீர்மானிக்கப்பட்டு உள்ளனவா? 

மேற்கண்ட வினாக்களுக்கு, 18.9.2019 அன்று பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் அளித்து இருக்கின்ற விளக்கங்கள். 

அ முதல் ஈ வரையான கேள்விகளுக்கு விளக்கம், ஆம். 

தலைமைத் தளபதி என்ற பொறுப்பை உரு ஆக்குவது குறித்து, கொள்கை அளவில் அரசு தீர்மானித்து உள்ளது. அதைச் செயல்படுத்துவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது. 

தலைமைத் தளபதியின் பொறுப்புகள், அந்தப் புதிய பொறுப்பின் செயல்பாட்டு எல்லைகளை வரையறுப்பதும், இந்த முடிவை இணக்கமாகச் செயல்படுத்துவதற்கு உரிய வழிமுறைகளையும் அந்தக் குழு ஆய்வு செய்து வருகின்றது. 

உ, ஊ ஆகிய கேள்விகளுக்கு விளக்கம்.

கார்கில் மறுஆய்வுக் குழு, அமைச்சர்களின் ஆய்வு அறிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு குறித்த பணிக்குழு, சேகத்கர் குழு ஆகியவை மேற்கொண்ட ஆய்வுகளின்படி அளித்த அறிக்கைகளில், தலைமைத் தளபதி, பணியாளர் குழுத் தலைவர்களுக்கு பொதுவாக ஒரு தலைவர் என்ற புதிய பொறுப்புகளை உருவாக்குவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டு இருக்கின்றது. 

கேள்வி எ, விளக்கம். 

இந்தியப் படைச் சீர்திருத்தப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு, சீர்திருத்த நடவடிக்கைகள் அமைகின்றன.

வானூர்திகளில் தமிழ் ஒலிக்கட்டும். நாடாளுமன்றத்தில் வைகோ கோரிக்கை ஏற்பு!

இன்று நவம்பர் 22 ஆம் நாள், மாநிலங்கள் அவை சுழிய நேரத்தில், மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:

அவைத் தலைவர் அவர்களே,

இன்றைய காலகட்டத்தில், வானூர்திகளில் பறப்பது சொகுசுப் பயணம் அல்ல. இப்போது நேர சேமிப்பைக் கருதி நடுத்தர மக்கள், மாத ஊதியம் பெறுவோர், விவசாயிகள் வானூர்திப் பயணங்கள் மேற்கொள்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் வேலைகளுக்காக வளைகுடா நாடுகளுக்கு விமானங்களில் செல்கின்றனர். நான் சிறுவனாக கிராமத்தில் இருந்தபோது, வானத்தில் விமானம் பறப்பதைப் பார்த்து, அதையும் ஒரு பறவை என்றே நினைத்தேன். இன்று விமானப் பயணம் சர்வ சாதாரணமாகிவிட்டது.

ஆனால் வானூர்திப் பயணிகள் அறிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விளக்கங்கள், இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. பயணிகளால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

கோலாலம்பூரில் விமானத்தில் தமிழில் அறிவிப்பு கேட்டு மகிழ்ந்தேன். அதேபோல் சிங்கப்பூர் விமானத்தில், வளைகுடா நாடுகளின் விமானங்களில் தமிழில் அறிவிப்புச் செய்தபோது மகிழ்ச்சியால் சிலிர்த்தேன்.

அதுபோல இந்திய வானூர்திகளின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும். குறைந்தது மாநிலத்துக்கு உள்ளேயே பறக்கின்ற வானூர்திகளில் அந்தந்த மாநில மொழிகளிலேயே அறிவிக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, சென்னையில் இருந்து தமிழ்நாட்டுக்கு உள்ளேயே திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, சேலம் ஆகிய ஊர்களுக்குப் பறக்கின்ற வானூர்திகளின் அறிவிப்புகள் முதலில் தமிழில் சொல்லப்பட வேண்டும்.

அதே போல, பயணிகள் தங்கள் உடைமைகளை எந்த இடத்தில் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும், மாநில மொழிகளிலேயே அறிவிக்க வேண்டும்.

என்னுடைய இந்த வேண்டுகோளை, இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரிப்பார்கள் என நம்புகின்றேன்.

இவ்வாறு வைகோ உரையாற்றி முடித்தபோது,

அனைத்து உறுப்பினர்களும் வைகோவின் கோரிக்கை நியாயமானது என்று ஆதரித்தனர். மிகவும் அவசியமானது என்றும் கூறினர்.

உடனே அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், நாடாளுமன்றத் துறை அமைச்சரைப் பார்த்து, இந்த நியாயமான கோரிக்கையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு உடனே தெரிவித்து செயல்படுத்தச் சொல்லவும் என்றார்.

Friday, November 22, 2019

சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் இருந்து மக்களைக் காத்திடுக. நாடாளுமன்றத்தில் வைகோ கோரிக்கை!

தில்லி மாநகர் சுற்றுச்சூழல் மாசு குறித்து, நவம்பர் 21 ஆம் நாள், மாநிலங்கள் அவையில் நடைபெற்ற கவன ஈர்ப்புத் தீர்மான விவாதத்தில், மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை:

“உலகில் தண்ணீர், காற்று, சுற்றுச்சூழல் எல்லாமே மாசு அடைந்து வருகின்றன. கூடுதலாக ஒலி மாசுவும், மனிதர்களைப் பாதிக்கின்றது. தில்லி சுற்று வட்டாரத்தில் காற்று மாசு அடைந்ததற்கு, ஆப்கானிஸ்தான் காரணம் என்றும், பாகிஸ்தான் வழியாக வருகிறது என்றும் ஐஐடி நிறுவனம் ஆராய்ச்சி அறிக்கை தந்திருக்கின்றது. அந்த அறிக்கை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

வைக்கோலை எரிப்பதால் ஏற்படுகின்ற மாசினால்தான், தில்லிப் பட்டணமும், சுற்று வட்டாரங்களும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கின்றன என்பது உண்மை அல்ல; விவசாயிகள் மீது பழி போடுவது நியாயம் அல்ல.

உலகில் அதிக மாசு அடைந்த நகரங்களுள் 14 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 3 வினாடிகளுக்கு ஒரு குழந்தை, மாசு மூட்டத்தால் உயிர் இழப்பதாக, உலக நோய்ச்சுமை ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. அப்படியானால், இந்தப் பிரச்சினையை நாம் வாதிட்டுக் கொண்டு இருக்கின்ற இந்த 120 நிமிடங்களில், எத்தனைக் குழந்தைகள் இறந்து போவார்கள்?

தமிழ்நாட்டில் இன்னும் இரு மாதங்களில் நெற்பயிர் அறுவடை நடைபெறும். நெற்பயிரைத் தரையோடு தரையாக  அறுத்து வைக்கோல் ஆக்குகின்றோம். பெரும்பகுதி மாடுகளுக்குத் தீவனம் ஆகின்றது. மாடுகள் தருகின்ற சாணத்தை உரம் ஆக்கினால் மண் வளம் பெருகும், விவசாயம் செழிக்கும் என எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கை கூறுகின்றது. குடிசை வீடுகளுக்குக் கூரை வேயவும் வைக்கோலைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால், எரிப்பது இல்லை. எனவே, நெற்றி வியர்வை நிலத்தில் விழப்பாடுபட்டு உழைத்து உலகுக்கு உணவு தருகின்ற விவசாயிகள் மீது பழி போடாதீர்கள்.

தமிழ்நாட்டை வானத்தில் இருந்து பார்த்தால், பச்சைப் பசேலெனக் காட்சி அளிக்கும். அவை எல்லாம் பயன் தரும் செடி கொடிகள் அல்ல. சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடு விளைவிக்கும் வேலிக்காத்தான் எனப்படும் ஜூலி புளேரா மரங்கள் ஆகும். இதன் விளைவுகளைப் பற்றித் தெரியாமல், ஐம்பதுகளில் தமிழ்நாட்டில் கொண்டு வந்து விதைத்து விட்டார்கள். வேலிக்காத்தான் மரங்கள், நிலத்திற்குள் 100 அடி ஆழத்திற்கு வேர் ஊன்றும். உயிர்க்காற்றை உறிஞ்சி கறிக்காற்றைத்தான் வெளியிடும். எனவே, இம்மரத்தில் பறவைகள் கூடு கட்டுவது இல்லை. ஆடு மாடுகளும் அம்மரங்களை நெருங்குவது இல்லை. இன்றைக்குத் தமிழ்நாட்டுக்கே பெருங்கேடு, சீமைக் கருவேலம் எனப்படும் வேலிக்காத்தான் மரங்களே ஆகும். இவற்றை அகற்றுவதற்காக விவசாயிகளைத் திரட்டி ஒரு இயக்கம் நடத்தினேன். உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தேன். சிறிது காலம் அரசும் அக்கறை காட்டியது. இப்போது வழக்கு நிலுவையில் இருக்கின்றது.

தமிழ்நாட்டில் மாசு படர்வதற்குப் பேராபத்து, மத்திய அரசின் திட்டங்களாகத்தான் இருக்கின்றன. மீத்தேன், ஹைட்ரோகார்பன், பாறைப் படிம எரிகாற்றுத் திட்டங்களால், தமிழ்நாட்டின் காவிரி தீரம் நாசம் ஆகும். மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால், சுற்றுச்சூழல் மாசு எனும் பேராபத்து, தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகின்றது. கர்நாடகத்துக்காரர்கள், காவிரித் தண்ணீர் கொடுப்பது இல்லை என்ற முடிவில் இருக்கின்றார்கள்.

இன்று இந்த விவாதத்தில், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துத்தான் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். மாசு அடர்த்திப் புகை, அனைத்து மக்களையும் பாதிக்கின்ற பிரச்சினை ஆகும். அதனைக் கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள், மக்களைக் மீட்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.”

இவ்வாறு வைகோ அவர்கள் உரையாற்றினார்.

புதிய கல்விக் கொள்கை அல்ல; புதிய புல்டோசர் கொள்கை - மாநிலங்கள் அவையில் வைகோ கடும் தாக்கு!

இன்று 21.11.2019 மாநிலங்கள் அவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தது. மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் எழுந்து குறுக்கிட்டார்.

அவைத்தலைவர் அவர்களே, நீங்களும், நானும், பல்லாயிரக்கணக்கானவர்களும் நெருக்கடி நிலை காலத்தில் கொடும் சிறைகளில் வாடியபோது, இந்தக் கல்வித் துறையை மாநிலப் பட்டியலில் இருந்து எடுத்து, பொதுப்பட்டியலுக்கு மாற்றி, அதிகாரங்களை மத்திய அரசு கபளீகரம் செய்துகொண்டது.

இது புதிய கல்விக் கொள்கை அல்ல; மாநில அரசுகளின் உரிமைகளைத் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை ஆகும்.

அவைத் தலைவர் வெங்கையா நாயுடு: உங்கள் கேள்விக்கு வாருங்கள்.

வைகோ: நாட்டிற்கு நாசம் விளைவிக்கும் இந்தப் புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? இல்லை. அப்படிப் பெற்றிருந்தால் எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன என அறிந்துகொள்ள விரும்புகின்றேன்.

இந்தியா முழுவதும் கல்வியாளர்களோடு நாங்கள் விவாதங்கள் நடத்தி இருக்கிறோம் என்று அமைச்சர் சுற்றி வளைத்துப் பேசினார். 

வைகோ: எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. என் கேள்விக்குப் பதில் இல்லையே!

அவைத் தலைவர்: உங்கள் வாய்ப்பு முடிந்துவிட்டது. நீங்கள் மூத்த உறுப்பினர். இதற்குமேல் கேட்கக்கூடாது.

வைகோ: உறுப்பினரின் உரிமையையும் தாங்கள்தானே காக்க வேண்டும். என் கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்லவே இல்லையே என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 21.11.2019 பேசினார்.

வைகோ கேள்விகளும், உள்துறை இணை அமைச்சர் அளித்த விளக்கங்களும்!

கேள்வி எண் 352
(20.11.2019)

வைகோ: கீழ்காணும் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா?

(அ) ஒரே நாடு ஒரே மொழி என, உள்துறை அமைச்சர் அறிவித்தாரா? இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும் என்று சொன்னாரா?
(ஆ) அவ்வாறு இருந்தால், அதுகுறித்த விவரங்கள் தருக.
(இ) அதை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றனவா? குறிப்பாகத் தென் இந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அத்தகைய போராட்டங்கள் நடந்தனவா?
(ஈ) அவ்வாறு இருந்தால், அது குறித்த விவரங்கள் தருக.
(உ) எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள அனைத்து மொழிகளையும், இந்திக்கு இணையாக நடுவண் அரசு கருதிச் செயல்படுமா?
(ஊ) அவ்வாறு இருந்தால், இந்தியை ஒப்பிடுகையில், இதர இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு, குறிப்பாகத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு செலவிட்டுள்ள தொகை குறித்த புள்ளி விவரங்களைத் தருக.

உள்துறை இணைஅமைச்சர் கிஷன் ரெட்டி விளக்கம்:
அ முதல் இ வரையான கேள்விகளுக்கு,
ஒரே நாடு ஒரே ஆட்சி மொழி என்ற கருத்து எதுவும் அரசிடம் இல்லை.

ஈ முதல் உ வரையான கேள்விகளுக்கு,
இந்திய அரசியல் சட்டம், அனைத்து மாநிலங்களையும் சமமாகவே கருதுகின்றது. மொழிப் பிரச்சினைகள், பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. எனவே, நடுவண் அரசு மற்றும் மாநில அரசுகளின் பொதுவான அதிகார வரையறைக்குள் இடம் பெறுகின்றது. மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி, மொழிகளின் வரிசைப்படி மானியங்கள் செலவிடப்படுவது இல்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் செலவிடப்பட்டுள்ள தொகை குறித்த புள்ளிவிவரங்கள் தரப்படுகின்றன.
                                             2016-17 2017-18 2018-19
                                                (கோடிகளில்)
நடுவண் இந்தி இயக்ககம்,
புது தில்லி
Central Hindi Directorate
(CHD)                                     46.53 046.53 046.30

இந்திய மொழிகளின்
நடுவண்
நிறுவனம்
Central Institute of Indian
Languages,
Mysore (CIIL)                                040.50 040.50 040.07

இந்தி மற்றும் அனைத்து
இந்திய
மொழிகளிலும் அறிவியல்
மற்றும்
தொழில்நுட்பச்
சொற்களை
உருவாக்கி வரையறுக்க
Commission for Scientific and
Technical Terminology,
New Delhi (CSTT)                          012.10    012.10 012.10

சிந்தி, உருது, சமற்கிருதம்,
இந்தி, செம்மொழி தமிழ்
உள்ளிட்ட மொழிகளின்
வளர்ச்சிக்காக
வழங்கப்பட்ட மானியம்
(Grants for Promotion of Indian
Languages
which includes Sindhi, Urdu,
Sanskrit, Hindi,
Classical Tamil (GPIL)               293.15 355.50 415.25

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க

Wednesday, November 20, 2019

தாயகத்தில், திராவிட இயக்க தொடக்க நாள் விழா!

திராவிட இயக்கத் தொடக்க நாளை முன்னிட்டு, மதிமுகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில், இன்று 20-11-2019, டாக்டர் நடேசனார், சர்.பிட்டி.தியாகராயர், டாக்டர் நாயர் ஆகியோர் திருஉருவப் படங்களுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், வட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்துகொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.

உள்ளாட்சிகளில் மறைமுகத் தேர்தல் - வைகோ கண்டனம்!

மூன்று ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்வந்துள்ள அ.இ.அ.தி.மு.க., அரசு, உள்ளாட்சிகளில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அரசு ஆணை வெளியிட்டு இருக்கிறது.

உள்ளாட்சிகளில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யும் முறை என்பது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்.

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைப் பறித்துள்ள அ.இ.அ.தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.

உள்ளாட்சிகளில் நல்லாட்சி நடைபெற வேண்டுமானால் ஊழலற்ற நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றவர்கள் மேயர்களாக, நகர்மன்ற, பேரூராட்சி மன்றத் தலைவர்களாக தேர்வு செய்யப்படுவதுதான் சாலச் சிறந்தது ஆகும் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது இன்றைய 20-11-2019 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Monday, November 18, 2019

வைகோவை சந்தித்த காஸ்மீஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாசிர் அகமது லவாய் மீர்முகமது ஃபயஸ் இருவரும் இன்று 18-11-2019 நாடாளுமன்ற வளாகத்திற்குள் தலைவர் வைகோ அவர்களைப் பார்த்ததும் விரைந்து வந்து சந்தித்தனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காஷ்மீர் பிரிவினை சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டபோது நாசிர் அகமது லவாய் அதை எதிர்த்து ஓங்கிக் குரல் கொடுத்தார். அதற்காக அவரை அவையில் இருந்து குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றினார்கள்.

தலைவர் வைகோ அவர்கள் பேசும்போது அதைக் கண்டித்துப் பேசினார்கள். அதற்காக லவாய் நன்றி தெரிவித்தார். அப்போது தலைவர் வைகோ அவர்கள், நீங்கள் போராளிகள் நாங்கள் தமிழர்கள் எப்போதும் உங்களுக்குத் துணை நிற்போம்.

என் இனிய நண்பர் ஃபரூக் அவர்கள் எங்களுடைய கட்சி மாநாட்டிற்கு வருவதாக ஒப்புக் கொண்டு இருந்தார். அதைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன் என்றார்.

ஆம். அதை நாங்கள் தொடர்ச்சியாக கவனித்துக் கொண்டு இருந்தோம் என்று இருவரும் சொன்னார்கள்.

தலைவர் வைகோ அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
ஒரு போராளியான உங்களைப் போன்றவர்களைப் பார்த்துத்தான் நாங்கள் ஊக்கம் பெறுகின்றோம் என்றும் சொன்னார்கள்.

வைகோவை சந்தித்த ட்ரிப்யூன் செய்தியாளர் ரவிசிங்!

ட்ரிப்யூன் ஆங்கில நாளிதழின் செய்தியாளர் ரவிசிங் நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர் வைகோ அவர்களைச் இன்று 18-11-2019 மதியம்  சந்தித்தார்.

வைகோ சார், மாநிலங்கள் அவையில் பணியாற்றி, இயற்கை எய்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று 18-11-2019 காலை நீங்கள் ஆற்றிய இரங்கல் உரை தனிச்சிறப்பு வாய்ந்தது.

மற்றவர்கள் எல்லாம் ஏதேதோ பேசினார்கள் நீங்கள் வாழ்க்கையின் தத்துவத்தை விளக்கிச் சொன்னீர்கள். ஆங்கிலக் கவிதை ஒன்றைக் குறிப்பிட்டீர்கள். அதை என்னால் எழுத முடியவில்லை. மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள். நான் எழுதிக் கொள்கிறேன் என்று கேட்டு எழுதிக்கொண்டார்.

வைகோ சார், நான் நீண்ட காலமாக உங்களுடைய ரசிகன். இறைவனுடைய அருள் உங்களுக்கு இருக்கின்றது என்று கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தலைவருடன் படங்கள் எடுத்துக் கொண்டார்.

மறைந்த உறுப்பினர்களுக்கு மாநிலங்கள் அவையில் வைகோ புகழ் ஆரம்!

இன்று 18.11.2019 மாநிலங்கள் அவையில், மறைந்த உறுப்பினர்கள் அருண்ஜெட்லி, ராம்ஜெத்மலானி, ஜெகநாத் மிஸ்ரா, சுக்தேவ்சிங் இப்ரா, குருதாஸ் தாஸ் குப்தா உள்ளிட்ட ஐந்து பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்களில் சிலர் இரங்கல் உரை ஆற்றினர்.
வைகோ ஆற்றிய இரங்கல் உரை வருமாறு:-
எல்லை காண முடியாத காலப் பெருவெளியில் வாழ்க்கை என்பது கண நேரத்தில் தோன்றி மறையும் நீர்க்குமிழி ஆகும் என்றார் கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள்.
மனிதர்கள் வருவார்கள் போவார்கள், நான் நிரந்தரமாகச் சென்றுகொண்டே இருப்பேன் என்று ஆங்கிலக் கவிஞர் டென்னிசன் தன்னுடைய புருக்ஸ் என்ற கவிதையில் சொன்னார்.
கவிதை மட்டும் சொல்லவில்லை, காலமும் அதைத்தான் சொல்லுகிறது.
மறைந்த அருண்ஜெட்லி அவர்கள் நட்புக்கு இலக்கணமானவர். கட்சி வேறுபாடுகளைக் கடந்தவர். நான் அவரோடு மிகுந்த இனிய நட்பு கொண்டிருந்தேன்.
கம்யூனிஸ்டு கட்சித் தலைவரான குருதாஸ் தாஸ் குப்தா அவர்கள் தலைசிறந்த நாடாளுமன்ற மேதை. அவரையும் என்னுடன் அழைத்துக்கொண்டு, அன்றைய தலைமை அமைச்சர் வி.பி.சிங் அவர்களைச் சந்தித்து, மே தினத்தை மத்திய அரசின் விடுமுறை நாளாக அறிவிக்குமாறு நான் கேட்டுக்கொண்டபோது, அதனை ஏற்றுக்கொண்டு அறிவித்தார் வி.பி.சிங்.
70களின் நெருக்கடி நிலை காலத்தில் வழக்குரைஞர் கதாநாயகனான ராம்ஜெத்மலானி என் உயிரினும் மேலான நண்பர். என்னை உயிராக நேசித்தார்.
நான் இம்முறை மாநிலங்கள் அவையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டவுடன், அவர் இல்லத்துக்குச் சென்றேன். படுத்த படுக்கையில் இருந்த அவர், எனக்கு அன்பும் ஆசியும் வழங்கினார். மீண்டும் சில நாள் கழித்து அவர் வீட்டுக்குச் சென்றேன் தழுதழுத்தக் குரலில் எனக்கு ஆசி கூறினார்.
அதன் பின்னர் அவரது உதவியாளர், உங்களிடம் அவர் பேசியதுதான்; கடைசியாகப் பேசியது என்று என்னிடம் தெரிவித்தார். அந்த நேசத்தை நினைத்து நான் கண்ணீர் சிந்துகிறேன்.

இவ்வாறு வைகோ அவர்கள் இரங்கல் உரையாற்றினார்.

Sunday, November 17, 2019

இந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்! இலங்கை தேர்தல் குறித்து வைகோ கருத்து

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று 17.11.2019 ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்த நாள் மனதுக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகின்ற நாளாக அமைந்துவிட்டது. இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து, 90 ஆயிரம் விதவைகளைக் கண்ணீரில் தவிக்க விட்டு, எண்ணற்ற இளம் பெண்களை நாசப்படுத்தி, பச்சிளம் குழந்தைகள் என்றும் பாராமல், வயதானவர்கள் என்றும் பாராமல் இனப்படுகொலை செய்து, இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் எங்கே சென்றார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலைக்குக் காரணம் மகிந்த ராஜபக்சே என்று சொன்னால், முழுக்க முழுக்க அதை இயக்கியது ராணுவ அமைச்சராக இருந்த கொத்தபய ராஜபக்சே.
கொத்தபய ராஜபக்சேவின் கைகளில் தமிழர்கள் இரத்தம் காயாமலேயே இருக்கிறது.
நடந்து முடிந்திருக்கக்கூடிய தேர்தலில், தமிழர்கள் சஜித் பிரேமதேசாவுக்குத்தான் அதிகமான வாக்குகளைத் தந்திருக்கிறார்கள். இன்னும் அழிவு வருமே! ஆபத்து வருமே! என்ற கவலையில் தந்திருக்கிறார்கள். மகிந்த ராஜபக்சேவின் சகோதரன் கொத்தபய ராஜபக்சே வந்துவிட்டால் கொத்துக் கொத்தாக இன்னும் கொலை செய்வதற்குத்தானே காத்திருப்பான் என்ற வேதனையில் வாக்களித்திருக்கின்றார்கள்.
ஆனால் சிங்கள வெறியர்கள் மத்தியில், வெறித்தனத்தை ஊட்டி வருகின்ற கொத்தபய ராஜபக்சே கூட்டம் வெற்றி பெற்றிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.
அதே நேரத்தில் தமிழர்கள் தங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தையும், ஏற்பட இருக்கின்ற ஆபத்தையும் எண்ணி தங்களை பாதுகாத்துக்கொள்ள எது நல்லது என்பதைப் பற்றி தீர்மானித்தற்காக இந்த வேதனையான நேரத்திலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்திய அரசுக்கு பொறுப்பு அதிகம் இருக்கிறது. காணாமல் போன இலட்சக்கணக்கான தமிழர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. இலட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்கவில்லை. படுகொலைகளைச் செய்து, கோர நர்த்தனமாடிய கொலைபாதகன்தான் கொத்தபய ராஜபக்சே. எனவே இந்த நாள் தமிழ் இனத்துக்குத் துயரமான நாள்.
எதிர்காலத்தில் தமிழர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு எடுக்க வேண்டும்.
சீனத்தோடும், பாகிஸ்தானோடும் உறவாடிக்கொண்டே, இந்தியாவையும் ஏமாற்றி, தமிழர்கள் அடையாளமே இல்லாமல் செய்வதற்கு என்னவெல்லாம் முடியுமோ? அத்தனையும் செய்வதற்கு கொத்தபய ராஜபக்சே துடித்துக்கொண்டுதான் இருப்பான். அதைத் தடுக்க வேண்டிய கடமை உலகத் தமிழினத்துக்கு உண்டு; தாய்த் தமிழகத்தில் இருக்கக்கூடிய தமிழர்களுக்கு உண்டு; தமிழ் இளைஞர்களுக்கு உண்டு.
எத்தனையோ அழிவுகளைச் சந்தித்துவிட்டோம். எத்தனையோ இழப்புகளைச் சந்தித்துவிட்டோம். அதனால் நாம் அஞ்ச வேண்டியது இல்லை. கவலைப்பட வேண்டியது இல்லை. நம்பிக்கையோடு நம் உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு, மனிதகுல மனசாட்சியின் கதவுகளைத் தட்டுவதற்கு தொடர்ந்து நம்முடைய கடமைகளைச் செய்வோம்.
செய்தியாளர்: இந்தப் படுகொலைகளுக்கு சர்வதேச அரங்க நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கக்கூடிய நிலையில், அந்த வழக்குகளின் நிலைமை எப்படியாகும் என்று நினைக்கிறீர்கள்?
வைகோ: நீதி ஒரு நாள் எப்படியும் கிடைக்கும். உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்துதான் தீர வேண்டும். நூறு ஆண்டு கடந்தும் அர்மீனியர்கள் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். நடந்த படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இருக்கின்றன. இசைப்பிரியா படுகொலை, சானல்-4 சாட்சியங்கள் இவை எல்லாம் மறைக்க முடியாதவை. இந்தச் சாட்சியங்கள் நம்முடைய நியாயத்தை நிச்சயமாக சர்வதேச சமுதாயத்தின் மனசாட்சியிடம் எடுத்து வைக்கும். அதற்குரிய சூழல் உருவாகும் என்று நான் நம்புகின்றேன்.
செய்தியாளர்: பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. முதல் முறை வரும்போதே மீனவர் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என்று சொன்னார்கள்....?
வைகோ: மீனவர்களைக் கைது செய்வது, அவர்களுக்கு இலட்சக்கணக்கில் அபராதம் விதிப்பது, ஆண்டுக் கணக்கில் சிறையில் அடைப்பது என்ற கொடூரமானச் சட்டத்தை இலங்கை அரசு கொண்டுவந்தபோது, நேரடியாகவே வந்து மத்திய அரசிடம் முறையிட்டும்கூட, அதைத் தடுப்பதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வளவு கொடூரமான சட்டத்தை அங்கே இலங்கை அரசு கொண்டுவந்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கே வந்து அடிக்கின்றான், சுடுகின்றான், கொல்கிறான், கைது செய்து கொண்டு சென்று சிறையில் அடைக்கின்றான். தாங்க முடியாத இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கின்றான், வருடக் கணக்கில் சிறைத் தண்டனை என்கிறான். இதைவிட என்ன கொடுமை இருக்க முடியும்? இதைத் தடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசு அந்தக் கடமையைச் செய்யவில்லை.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.