Saturday, November 23, 2019

தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் வலம் வர கோத்தபய இராஜபக்சே உத்தரவு!வைகோ கண்டனம்!

இலங்கைத் தீவில், ஈழத் தமிழ் இனம், கோரப் படுகொலைக்கு ஆளான பின்னர், மேலும் ஓர் பேரபாயம், இப்போது ஏற்பட்டுவிட்டது. மகிந்த இராஜபக்சே அதிபராக இருந்தபோது, இராணுவ அமைச்சராக இருந்து, இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கொலை பாதகன் கோத்தபய இராஜபக்சே, இம்முறை குடியரசுத் தலைவர் ஆனதோடு, நான் சிங்களவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டேன் என பகிரங்கமாகவும், ஆணவத்தோடும் அறிவித்து உள்ளார்.

பதவி ஏற்றபின்பு, முதல் வேலையாக, வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழர் வாழும் பகுதிகளில், ஆயுதந் தாங்கிய இராணுவத்தினர், தெருக்களைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்.

இனக்கொலைப் போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் மாண்டனர். ஒரு இலட்சம் தமிழர்கள் காணாமல் போயினர். 90 ஆயிரம் விதவைகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழ் இனத்தைக் கூண்டோடு கரு அறுப்பதே கோத்தபய இராஜபக்சேயின் குறிக்கோள் ஆகும். இந்தக் கொலைகாரப் பாவிக்கு, இந்திய அரசு அழைப்பு விடுத்து இருப்பது, தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் துரோகம் ஆகும்.

எட்டுக்கோடித் தமிழர்கள் இந்திய நாட்டின் குடிமக்கள் ஆக இருக்கின்றோம்.

எங்களது தொப்புள் கொடி உறவுகள் ஆகிய ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கின்றது.

இலங்கை அரசின் அடக்குமுறைகளில் இருந்து ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment