Sunday, November 24, 2019

ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு, சிக்கல் இல்லாத வகையில் பணப்பரிமாற்றம் விரைவில் அறிமுகம் வைகோ கேள்விக்கு நிதி அமைச்சர் விளக்கம்!

கேள்வி எண் : 246
கீழ்காணும் கேள்விகளுக்கு, நிதி அமைச்சர் விளக்கம் தருவாரா?
(அ) சரக்கு மற்றும் சேவை வரி வருமானத்தைப் பெருக்குவதற்காக, மறுசீராய்வுக் குழுவை அரசு அமைத்து இருக்கின்றதா?
அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்.
(ஆ) இந்த வரியை, தன்னார்வத்துடன் வணிகர்கள் முன்வந்து கட்டுவதற்கான ஊக்குவிப்புகளை அரசு செய்கின்றதா? இந்தத் திட்டம் குறித்து, வணிகர்களுக்கு போதிய விளக்கங்களை அரசு அளித்து இருக்கின்றதா?
அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்.
(இ) இதுபோல, வேறு எந்தெந்த வழிகளில் இந்த வரி குறித்து அரசு மக்களுக்கு விளக்கங்கள் அளித்து இருக்கின்றது? குறிப்பாக, சிறு குறு வணிகர்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு, எத்தகைய புரிதலை அரசு ஏற்படுத்தி இருக்கின்றது?
நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் அளித்துள்ள விளக்கம்:
அ, ஆ ஆகிய இரு கேள்விகளுக்கான விளக்கம்:
சரக்கு மற்றும் சேவை வரி வருமானத்தைப் பெருக்குவதற்காக, நடுவண் அரசு மற்றும் மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை, அரசு ஏற்படுத்தி இருக்கின்றது. அந்தக் குழு, விரிவான கீழ்காணும் சீர்திருத்தங்களை ஆய்வு செய்து வருகின்றது.
1. முறைகேடுகளைத் தடுப்பதற்கும், தேவைப்படுகின்ற வேளைகளில், முறையான சீர்திருத்தங்களை அறிமுகம் செய்வது.
2. பொதுமக்கள் தன்னார்வத்துடன் பங்கு அளிப்பது.
3. மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கை மற்றும் சட்டத் திருத்தங்கள்.
4. வரித்தளத்தை விரிவுபடுத்துவதற்கான வழிமுறைகள்.
5. இணக்கமான கண்காணிப்பிற்கும், வரி கட்டாமல் தவிர்ப்பதைத் தடுப்பதற்கும் தேவையான அடிப்படைத் தரவுகளைத் திரட்டுவது.
6. மேலாண்மைப் பணிகளை ஒருங்கிணைப்பது.
கேள்வி (இ) க்கு, விளக்கம்:
1. ஓராண்டில் 1.5 கோடிக்கும் குறைவான பரிமாற்றங்கள் கொண்ட, சிறுகுறு வணிகர்கள், கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு, 1 விழுக்காடு மட்டுமே வரி செலுத்தக்கூடிய தொகுப்புத் தீர்வைத் திட்டம் உள்ளது.
2. கிடைத்த வரியைப் பங்கிடுவதற்கும், இதுபோல மாநில அரசுகளுக்குக் கிடைத்த பொருள்கள் மீதான வரி கணக்கீட்டுக்குப் பிறகு எஞ்சிய தொகையைத் திருப்பிக் கொடுப்பதற்கும் நடுவண் அரசே நிதி ஒதுக்குகின்றது.
3. வரி செலுத்துவோருக்கு உதவியாக, ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு, சிக்கல் இல்லாத வகையில் பணத்தை மாற்றுவதற்கான வழிமுறைகள், வெகு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என 24-11-2019 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment