Friday, January 15, 2021

ஞானதேசிகன் மறைவுக்கு வைகோ எம்பி இரங்கல்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்கள் அவை முன்னாள் உறுப்பினருமான பி.எஸ்.ஞானதேசிகன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாணவராக காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். சென்னையில் சட்டம் பயின்று, உயர்நீதிமன்ற வழக்கு உரைஞராகப் பணிபுரிந்து பெயர் பெற்றார். முன்னாள் நீதிபதி சோமசுந்தரம் அவர்களுடைய உறவினர்.
ஐயா ஜி.கே. மூப்பனார் அவர்களுடைய நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தார். அவர் மீது ஞானதேசிகன், மிகுந்த பற்றும் பாசமும் கொண்டு இருந்தார். தற்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார்.
பழகுதற்கு இனிய பண்பாளர், நண்பர் ஞானதேசிகன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
15.01.2021

No comments:

Post a Comment