Thursday, February 25, 2021

தமிழக மின்வாரிய அனல்மின் நிலையங்கள் மற்றும் மின் விநியோக வட்டங்களில் விடுபட்ட மற்றும் தற்போது பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்திடுக. தமிழக அரசுக்கு சு.துரைசாமி வேண்டுகோள்!

தமிழக மின்வாரியத்தில் பல்வேறு நிலைகளில் 50000ற்கும் அதிகமாக காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் களப்பணியாளர்கள் பணியிடங்கள் மட்டும் 20000ற்கும் அதிகமாக உள்ளன. இதனால் கூடுதல் பணிச்சுமையுடன் தற்போதுள்ள பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அடிப்படைப் பணிகளான மின்கம்பம் நடுதல், மின்தடைகளைச் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் தாமதமாவதால், பொது மக்களும் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது போன்ற பணிகளை மேற்கொள்ள களப்பணியாளர்கள் பணி என்பது முக்கியமானது.

தற்போது கேங்க்மேன் பதவிகளுக்கு 9613 பேரை புதிதாக நியமித்துள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில், தமிழக மின்வாரிய அனல்மின் நிலையங்களான தூத்துக்குடி, மேட்டூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக 3000ற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். இ.பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த 1999 ஆம் ஆண்டிற்குப்பிறகு அனல்மின் நிலையங்களில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. வாரியத்தின் நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகளில், நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையாக மின் உற்பத்திக்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வரும் ஒப்பந்தப் பணியாளர்கள், தங்களது இளமைக்காலம் முழுவதையும் வாரியத்தின் வளர்ச்சிக்காக உழைத்து, பணி நிரந்தரத்தை எதிர்நோக்கியுள்ளனர். 

அது போலவே மின்வினியோக வட்டங்களில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்படாத கிட்டத்தட்ட 2000 ஒப்பந்தப் பணியாளர்களும், அதற்குப் பின்பாக தற்போது பணியாற்றி வரும் 4000 ஒப்பந்தப் பணியாளர்கள் என மின்வாரியத்தின் பணி நிரந்தரத்திற்காக காத்துக்கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தை தாக்கிய பல புயல் பேரிடர் காலங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள். 

ஏற்கனவே எங்களது மறுமலர்ச்சி தொழிற்சங்கம் சார்பில் கடந்த 02.02.2021 அன்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்து இந்தக் கோரிக்கைளை வலியுறுத்தியுள்ளோம்.

எனவே தமிழக அரசும், மின்வாரியமும் அனல்மின் நிலையங்கள் மற்றும் மின் வினியோக வட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் என 9000 பேரையும் பணிநிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கைளை காலம் தாழ்த்தாது உடனடியாக எடுத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

திருப்பூர் சு.துரைசாமி
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி
‘தாயகம்’
சென்னை - 8
25.02.2021

No comments:

Post a Comment