Saturday, June 2, 2018

வேல்முருகன் மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டத்தைக் கண்டித்து தீக்குளித்த இளைஞர் மன்சூர் அலியை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வைகோ பார்த்தார்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் மீது தமிழக அரசின் காவல்துறை பொய் வழக்குகள் போட்டு, தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்து, 24 மணி நேரம் அவரை உணவு, தண்ணீர் அருந்தவிடாமல் கொண்டுவந்து புழல் சிறையில் அடைத்ததால், அவர் தண்ணீரும் அருந்தாத அறப்போராட்டத்தை சிறையில் மேற்கொண்டார்.

புழல் சிறையில் வைகோ அவர்கள் அவரைச் சந்தித்து உணவு, நீர் அருந்தாப் போராட்டத்தை நிறுத்த வைத்தார். பின்னர் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட வேல்முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், அதிமுக அரசின் காவல்துறை அவர் மீது தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்து, புழல் மத்திய சிறையில் மீண்டும் அடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெரியாண்டிகுழி ஜெகன் சிங் என்கின்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளைஞர் வேல்முருகன் கைதைக் கண்டித்துத் தீக்குளித்து உயிர் நீத்தார்.

இந்நிலையில் சிதம்பரம் பு.முட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் அலி எனும் இளைஞர்  வேல்முருகன் கைதைக் கண்டித்து இன்று ஜூன் 2 ஆம் தேதி காலையில் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செய்தி கேள்விப்பட்டு வைகோ அவர்கள் புதுவைக்கு விரைந்து மாலை 4 மணி அளவில் ஜிப்மர் மருத்துவமனையில் மன்சூர் அலியைப் பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மன்சூர் அலியின் முகம், மார்பு முழுவதும் வெந்து கருகியுள்ளது. சுயநினைவு இல்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றதோடு, ஜெகன்சிங் மரணத்திற்கும், மன்சூர் அலி தீக்குளிப்புக்கும் தமிழக அதிமுக அரசும், காவல்துறையும்தான் பொறுப்பு ஆவார்கள்” என்று கூறினார் என மதிமுக தலைமை நிலையம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் மன்சூர் அலியை வைகோ அவர்கள் பார்க்கும் புகைப்படம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment