Friday, August 31, 2018

சென்னையில் செப்டம்பர் 2-ல் கல்லூரி மாணவர்களுக்கான “பெரியார் - அண்ணா” நிறைவுப் பேச்சுப் போட்டி திரளாகப் பங்கேற்க! வைகோ அழைப்பு!

திராவிட இயக்கம் இம்மண்ணில் விதையாக விழுந்து, விருட்சமாக வளர்வதற்கு ஆதார சுருதியாக இருந்து நம்மை வார்ப்பித்தும், வளர்த்தும் வருபவர் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களுடன் கை கோர்த்து, பல்வேறு களம் கண்டு, அதுவரை சாமானியனுக்கு வாய்க்காத அதிகார அரசியலை எளியவர்க்கு வழங்கி தமிழர் ஏற்றம் பெற மாற்றம் கண்ட வித்தகத் தலைவர் அறிஞர் அண்ணா.
இத்தகைய வியத்தகு மாற்றத்தை மண்ணில் விதைத்து மூட நம்பிக்கை என்னும் முடை நாற்றத்தை மூட்டைக் கட்டி வீசியதும், ஆண்டான் அடிமை, பெண்ணடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்னும் வர்க்க பேதத்தை தகர்த்தெறிவதற்கு தன்மான இயக்கமாய் சுடர் விட்டு வளர்ந்தது திராவிட இயக்கத்தின் சாதனையன்றோ.
திராவிட இயக்கம் என்ன சாதித்துவிட்டது என ஏகடியம் பேசுவதும், பெரியார் சிலைகளை தமிழகம் முழுவதும் அப்புறப்படுத்துவோம் என்ற வெற்றுக்குரல் பிரீட்டு வருவதும், திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக, புத்தியக்கங்கள் எனும் பெயரில் போலிகள் புறப்பட்டு வரும் காலத்தில், அடிமை மோகத்தில் இருந்து தமிழரை மீட்டெடுக்கவும், மானமும், அறிவும் மனிதனுக்குத் தேவை என்று தடி உயர்த்தியவர் தந்தை பெரியார்.
இந்தி ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தமிழ் மொழியை மீட்டது மட்டுமின்றி, தாய்த் தமிழரையும் மீட்டெடுத்து கோட்டை முற்றத்தில் திராவிட இயக்கக் கொடி பறப்பதற்கு அகரம் தீட்டிய சிகரமன்றோ அண்ணா.
அத்தகைய தகைமைக்குரிய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இவர்தம் வரலாற்றை இளைய தலைமுறை கற்றுத் தெளியவும், நூறாண்டு கண்ட திராவிட இயக்கம் இன்னும் ஆயிரமாண்டு வளர்ந்து செழிக்கவும்.
மறுமலர்ச்சி திமுக ஈரோடு மாநகரத்தில் செப்டம்பர் 15-ல் நடத்த உள்ள பெரியார்-அண்ணா பிறந்த நாள் விழா, கட்சியினரின் தொடர் வலியுறுத்தல் காரணமாக ஒத்துக் கொள்ளப்பட்ட எனது பொதுவாழ்வுப் பொன் விழா, இயக்கத்தின் வெள்ளி விழா ஆகிய முப்பெரும் விழா மாநில மாநாட்டை முன்னிட்டு, கழக மாணவர் அணி முன்னின்று கல்லூரி மாணவர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கும் வகையில் பெரியார்-அண்ணா பேச்சுப் போட்டியை நடத்துவதாக அறிவித்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் மாணவர் அணியினர் அழைப்புக் கடிதம் அனுப்பி, ஜீலை மாதம் 22-ந் தேதி நாற்பது மாவட்டங்களில் நடந்த மாவட்டப் போட்டிகளில் 1500 கல்லூரிகளைச் சேர்ந்த 2200 மாணவர்கள் பங்கேற்று பெரியார்-அண்ணா பெருமைகள் குறித்து மூரி முழங்கினார்கள்.
மாவட்டத்தில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 6 ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் என பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர், ஆகஸ்ட் 19-ந் தேதி தமிழகத்தை ஏழு மண்டலங்களாகப் பிரித்து 120 மாணவர்கள் பங்கேற்ற மண்டலப் போட்டி நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் வென்ற மூவருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை-புரசைவாக்கம், கம்மவார் திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு நிறைவுப் போட்டி நடைபெற உள்ளது. இதில், மண்டலப் போட்டியில் வெற்றி பெற்ற 21 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
மாவட்ட, மண்டலப் போட்டிகளில் பின்பற்றிய விதிகளின் அடிப்படையில் கட்சி சாராத நடுவர் பெருமக்களைக் கொண்டு இப்போட்டி நடத்தப்படுகிறது.
அன்றைய தினமே முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பெரியார்-அண்ணா முகம் பதித்த தங்கப் பதக்கமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் பெரியார்-அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கமும், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் பெரியார்-அண்ணா முகம் பதித்த வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட உள்ளது.
நிறைவுப் போட்டி மற்றும் மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் நானும், கழக முன்னணியினரும் பங்கேற்க உள்ளோம். எழுச்சி சங்கநாதமென இளம் தலைமுறையாம் மாணவக் கண்மணிகள் உரை முழக்கம் செய்யும் பேச்சுப் போட்டி நிகழ்வில் மறுமலர்ச்சி திமுக தோழர்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன் என 31-08-2018 அன்று மதிமுக பொதுச் செயலாளர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, August 30, 2018

பேராசிரியர் திரு. கு.ஞானசம்பந்தம் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்து!

பேராசிரியர் திரு. கு.ஞானசம்பந்தம் அவர்களின் இல்லத்திருமணவிழா நேற்று 29-08-2018 மதுரையில் நடந்தது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

உடன் மதிமுக கழக நிர்வாகிகள் இருந்தார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கும் மோடி அரசின் பாசிசப் போக்கு! வைகோ கடும் கண்டனம்!

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பீமாகோரேகான் என்ற ஊரில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கும், அப்போதைய முடியாட்சியான பேஷ்வாக்களுக்கும் இடையே, 1818 ஆம் ஆண்டு, உக்கிரமானப் போர் நடைபெற்றது. அந்தப் போரில் ஆங்கிலேயர் ராணுவத்தில் பணிபுரிந்த தாழ்த்தப்பட்ட மகர் வகுப்பினர் ஐநூறு பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு அப்பகுதியில் ஆங்கிலேய அரசு போர் நினைவுத்தூண் ஒன்றை எழுப்பியது. பீமாகோரேகானில் ஆண்டுதோறும் தலித் மக்கள் ஒன்று கூடி போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

கடந்த ஜனவரி 1 ஆம் தேதியன்று 200 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி பீமா கோரேகானில் தாழ்த்தப்பட்ட மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரண்டு மரியாதை செலுத்தினர். அப்போது இந்துத்துவ மதவெறி அமைப்பைச் சேர்ந்தோர் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக வன்முறையை தூண்டினார்கள். ஒருவர் உயிர்ப்பலி ஆனார். இதன் எதிரொலியாக மராட்டிய மாநிலம் முழுவதும் தலித் மக்கள் ஒன்று சேர்ந்து வீரியமானப் போராட்டங்கள் வெடித்தன.

தலித் மக்களைத் தூண்டிவிட்டு கலவர விதைகளை தூவினர் என்று குற்றம்சாட்டி, கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று தலித் உரிமை செயற்பாட்டாளர் சுதிர் தவாலே, வழக்கறிஞர் சுரேந்திரா காட்லிங், மகேஷ் ரவுட், ஷோமாசென், ரோனா வில்சன் ஆகிய ஐந்து பேரை மராட்டிய பாரதிய ஜனதா அரசு கைது செய்தது. இவர்கள் அனைவர் மீதும் தடா, பொடா போன்று தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் கொடிய, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

நேற்று முன்தினம், ஆகஸ்ட் 28 ஆம் தேதி, பீமா கோரேகான் கலவர வழக்கை காரணமாக கhட்டி, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்களுமான ஐந்து பேரை மராட்டிய மாநில அரசு, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் அறிவித்தலின்படி கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக மராட்டிய காவல்துறை டெல்லி, ஐதராபாத், பரிதாபாத், மும்பை, தானே, கோவா, ராஞ்சி போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் கைது மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புரட்சிக் கவிஞரும், எழுத்தாளருமான கவிஞர் வரவரராவ், நலிந்த பிரிவு மக்களுக்காக உரிமைக்குரல் எழுப்பி போராடி வரும் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான பேராசிரியர் வெர்னான் கோன்சால்வஸ், டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றி வருபவரும், குடியுரிமை சுதந்திரத்துக்கான மக்கள் அமைப்பின் தேசியச் செயலாளருமான, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், மனித உரிமைகளுக்காகப் போராடி வரும், மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் பெரைரா, மக்கள் ஜனநாயக உரிமை யூனியன் அமைப்பின் உறுப்பினரும், மனித உரிமைப் போராளியுமான ஹரியானாவைச் சேர்ந்த கவுதம் நவ்லகா ஆகியோர் சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டப்படி (உஃபா) கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக இவர்கள் மீது மராட்டிய காவல்துறை வழக்கு புனைந்து இருக்கிறது.

ஒடுக்கப்பட்ட, பழங்குடி இன மக்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான இந்துத்துவ சக்திகளை எதிர்ப்பவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கூட்டத்தின் சதி நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டும் சிந்தனையாளர்கள் மீது ‘நக்சல்’ முத்திரைக் குத்தி பிரதமரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக மத்திய புலனாய்வு அமைப்புகளும், மராட்டிய மாநில அரசும் குற்றம்சாட்டி ‘உஃபா’ சட்டத்தின் கீழ் கைது செய்து இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

மோடி அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்க்கும் நிபுணர்கள், அரசு விமர்சகர்கள், இந்துத்துவா மதவெறியை எதிர்க்கும் ஜனநாயகப் போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரையும் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்துவது மோடி அரசின் பாசிசப் போக்கை அப்பட்டமாக காட்டுகிறது. உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளை கண்டித்துள்ளது. மராட்டிய மாநில அரசு உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு நீதி கேட்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் எடுத்துரைத்துவிட்டு நாடு திரும்பிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறது. அவரை தனிமை சிறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறது. அவர் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகளை தொடுத்துள்ள காவல்துறை, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தையும் (உஃபா) ஏவி உள்ளது.

தீவிரவாதிகள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க கொண்டுவரப்பட்டதாக சொல்லப்படும் ‘உஃபா’ சட்டத்தை மத்திய அரசை எதிர்ப்பவர்கள் மீது ஏவி விடுவது அநீதியான அக்கிரமமான நடவடிக்கை ஆகும்.

மோடி அரசின் மிரட்டலுக்கு அடிபணிந்து கிடக்கும் எடப்பாடி அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். திருமுருகன் காந்தி மீது போடப்பட்டுள்ள ‘உஃபா’ உள்ளிட்ட வழக்குகளை உடனடியாக் திரும்பப் பெற்றுக்கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 30-08-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, August 26, 2018

கேரள மாநில அரசுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி!

கேரள மாநில அரசுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி!

கேரள மாநிலத்தில் நூறாண்டு காலத்தில் ஏற்படாத இயற்கைப் பேரிடராக நேர்ந்த பிரளயம் போன்ற வெள்ளப் பெருக்கால் அம்மாநிலமே தண்ணீரில் தத்தளிக்கிறது. கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, அவர்கள் வேண்டுகிற நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கேரள மாநில அரசுக்கு பத்து இலட்சம் ரூபாய் நிதி வழங்குகிறது. மேலும் தேவையான நிவாரணப் பொருட்களைச் சேகரித்து அனுப்புகிறது என மதிமுக தலைமை கழகம் 26-08-2018 செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, August 24, 2018

தூத்துக்குடி மாவட்ட கழகம் புதிய 2 மாவட்டங்களாக மறுமலர்ச்சி தி.மு.க தலைமைக் கழக அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டக் கழகம் நிர்வாக வசதிக்காக வடக்கு - தெற்கு என மாவட்டங்களாக அமைக்கப்படுகிறது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டம்:-
அவைத் தலைவர்: டி.எஸ்.எம்.சம்பத்குமார்
மாவட்டப் பொறுப்பாளர்: ஆர்.எஸ்.ரமேஷ் (9443320796)
மாவட்டப் பொருளாளர்: செண்பகப் பெருமாள்
மாவட்டத் துணைச் செயலாளர்கள்: 1. பவுன் மாரியப்பன், 2. வழக்கறிஞர் ஆர்.குருசாமி கிருஷ்ணன், 3. எஸ்.செல்வராஜ்

மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்: வழக்கறிஞர் ஆர்.பரமசிவம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டதாகும்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம்:-
மாவட்ட அவைத் தலைவர்: குரு.மத்தேயு ஜெபசிங்
மாவட்டப் பொறுப்பாளர்: வழக்கறிஞர் புதுக்கோட்டை பி.செல்வம் (9791249205)
மாவட்டப் பொருளாளர்: காயல் அமானுல்லா
மாவட்டத் துணைச் செயலாளர்கள்: 1. ஆத்தூர் ஐ.லட்சுமணன், 2. வீரபாண்டி வி.பி.செல்லச்சாமி, 3. பேரூர் சு.சிவஞானவேல்


தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர், திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டதாகும்.

என மதிமுக தலைமை கழகம் 24-08-2018 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Tuesday, August 21, 2018

வீணடிக்கப்படும் காவிரி நீர் - வைகோ கண்டனம்!

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் பெருமழையால் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அனைத்து அணைகளும் நிரம்பி விட்டன. உபரி நீரை திறந்துவிட வேண்டிய நிலைமை அங்கு ஏற்பட்டதால் இலட்சக்கணக்கான கன அடி தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுகிறது.

மேட்டூருக்கு வந்து சேர்ந்த காவிரி நீரை சேமிக்கும் வகையில் மேட்டூர் அணை பராமரிக்கப்படாததால், முழு கொள்ளளவான 93.47 டி.எம்.சி. நீர் தேக்க முடியாமல் சுமார் 60 டி.எம்.சி. நீரை மட்டுமே சேமிக்க முடிகிறது. அணையில் குவிந்திருக்கும் மணல், களிமண், கற்கள் ஆகியவற்றை அகற்றவோ, தூர் வாரி முறையாக பராமரிப்பு மேற்கொள்ளவோ தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தாலும் அதனைத் தேக்கி வைக்க வழியில்லை.

காவிரியிலிருந்து முக்கொம்பு மற்றும் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு சுமார் 1.75 இலட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. ஆனால் கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுக்கும் நீர் நாகை, தஞ்சை மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய், ஏரி, குளங்களுக்குச் சென்று சேரவில்லை. தூர் வாரும் பணிகள் நடப்பதால் நீர் திறக்கப்படவில்லை என்று பொதுப்பணித்துறையினர் பொறுப்பற்ற முறையில் தெரிவிக்கின்றனர்.

உரிய காலத்தில் தூர் வாரி, பாசன வாய்க்கால்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளையும் பராமரிக்காததால் காவிரி ஆற்றில் நீர் நிரம்பி வழிந்தும் அவை பயனற்றுப் போய் கடலுக்குச் செல்லும் நிலைமை வேதனை அளிக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4200க்கும் மேற்பட்ட குளங்களில் சுமார் 50 விழுக்காடு குளங்களில் மட்டுமே நீர் நிரம்பி உள்ளது. அதேபோல அங்குள்ள 16 ஏரிகளில் ஒன்றுகூட நிரம்பவில்லை.

வடவாறு விரிவாக்க கால்வாய் பாசனப் பகுதிகளை உள்ளடக்கிய வடுவூர் தொடங்கி, உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, திருமக்கோட்டை பகுதிகளிலும், கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம், இருள்நீக்கி பகுதிகளிலும் வலங்கைமான் பயரி வாய்க்கால், கொரடாச்சேரி 18 வாய்க்கால், கொரடாச்சேரி அத்தி சோழமங்கலம் பகுதி வாய்க்கால்களிலும் தண்ணீர் சென்றடையவில்லை. அதேபோன்று நாகை மாவட்டத்தில் காவிரியின் கிளை ஆறுகளான வீரசோழன் ஆறு, மஞ்சள் ஆறு, மானங்கொண்டான் ஆறு ஆகியவற்றில் இன்னும் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று சேரவில்லை.

வெள்ள நீர் செல்லும் ஆற்றுக்கு அருகில் உள்ள நீர் நிலைகள்கூட தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி நீரை நம்பி சுமார் 25 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்படும் நிலையில், காவிரி நீர் அந்த மாவட்டத்திலும் போதுமான அளவில் வரவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால் கொள்ளிடத்திலிருந்து வடவாற்றில் மட்டும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சுமார் 1.5 இலட்சம் கன அடி நீர் கடலுக்குச் சென்று வீணாகிறது.

வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 47.50 அடி ஆகும். இதிலும் தூர் வாரி முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால் முழு அளவில் நீரைத் தேக்க முடியாமல், மேட்டூர் அணையிலிருந்து வரும் தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து பின்னர் வடவாறு வரியாக வீராணம் ஏரிக்கு வரும் நீர் மட்டம் உயர்ந்ததால் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 1 இலட்சத்து 90 ஆயிரம் கனஅடி நிர் திறக்கப்பட்டதால், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் வட்டத்தில் குமராட்சி ஒன்றியம் வல்லம்படுகை ஊராட்சி, பெராம்பட்டு ஊராட்சி, ஜெயங்கொண்டபட்டினம் ஊராட்சி, அக்கரை, வேளக்குடி, எறுக்கன்காட்டு படுகை, அகரநல்லூர், பழையநல்லூர், கண்டியாமேடு உள்ளிட்ட முப்பது கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. 6 அடி உயரத்துக்கு நீர் தேங்கி குடிசை வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மூழ்கிக் கிடக்கின்றன. சுமார் நான்காயிரம் மக்கள் ஊர்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் பாயும் காவிரி நீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதைத் தடுத்து சேமிக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பு அணைகள் கட்டப்படும் என்றும், அதற்காக ரூ.410 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 04.08.2014 இல் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால் நான்கு ஆண்டுகளாக தடுப்பு அணைகள் அமைக்கும் பணிகள் சிறு துரும்பைக்கூட ஆட்சியாளர்கள் கிள்ளிப்போடவில்லை. தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பாய்ந்து வரும் காவிரி நீர் வீணாடிக்கப்படுவது கடும் கண்டனத்துக்கு உரியது.

ஏரி, குளம், பாசன வாய்க்கால்களில் விவசாயிகள் குடிமராமத்துப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக வண்டல் மண், சவுடு மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நான் கோரிக்கை விடுத்தேன். தமிழக அரசு அதற்கு ஆணை பிறப்பித்தது. எனினும் முறையாக அப்பணிகள் நடைபெறவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகள், தூர் வாரி பராமரிக்கும் பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் விரைந்து முடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனறு வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 21-08-2018 அன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, August 20, 2018

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கருத்துக்கு வைகோ கடும் எதிர்ப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலை குறித்த வழக்கு, டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கோயல் தலைமையிலான அமர்வில் இன்று (20.08.2018) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அரசியல் கட்சிகளின் தூண்டுதலால்தான் தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து கலவரத்தை ஏற்படுத்தினர். இங்கு வந்துள்ள வைகோ போன்ற அரசியல கட்சித் தலைவர்கள் தொடக்கத்திலிருந்து எதிர்த்து வருகின்றனர் என்று கூறினார்.

அதற்கு வைகோ, 22 ஆண்டுகளாக மக்கள் நலனுக்காக, சுற்றுச் சூழலைக் காப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வருகிறேன். நான் தொடுத்த ரிட் மனு மீது 2010 ஆண்டு ஆலை மூடப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் ஆலையைத் திறப்பதற்குத் தீர்ப்பளித்தாலும், நீதிபதிகள் என்னுடைய பொதுநல நோக்கத்தையும், பணியையும் அந்தத் தீர்ப்பில் பாராட்டினார்கள். சக்திவாய்ந்த பெரிய நிறுவனங்களை எதிர்த்துப் போராட ஒருசிலர்தான் வருவார்கள். அப்படி ஈடுபடுகிறவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிட்டார்கள் என்று கூறினார்.

2018 மே 22 இரத்தம் தோய்ந்த துக்க கரமான நாளாகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் தாங்களாகவே ஸ்டெர்லைட்டை எதிர்த்து அறப்போராட்டம் நடத்தினர். ஏராளமான பெண்களும், மாணவ - மாணவிகளும் கலந்துகொண்டனர்.

காவல்துறை திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். வெளி மாநிலங்களிலிருந்து போராட்டத்தைத் தூண்ட எவரும் வரவில்லை. தூத்துக்குடியிலும், சுற்றுவட்டாரத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஸ்டெர்லைட் ஆலை நச்சு வாயுவினால் புற்றுநோய், நுரையீரல் நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வைகோ கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்த அனைத்து அம்சங்களையும் விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க தீர்ப்பாயம் முடிவுசெய்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிகளில் ஒருவரை நியமிக்கலாம் என்று நீதிபதி கோயல் அவர்கள் கூறியதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நீதிபதியையும் நியமிக்கக் கூடாது. அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடைய மனோநிலையை பிரதிபலிக்கும் நிலையை எண்ணிப் பயப்படுவார்கள். கேரளா, அல்லது கர்நாடகாவைச் சேர்ந்த நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

அதற்கு வைகோ கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் நடுநிலை தவறாத நேர்மையாளர்கள். அவர்கள் நேர்மையைச் சந்தேகப்படும் விதத்தில் ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் கூறி இருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது; எங்கள் மனதை மிகவும் துன்புறுத்துகிறது. யாரை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பாயம் முடிவெடுக்கட்டும். ஆலை நிர்வாகம் சொல்லக்கூடாது என்று வைகோ கூறினார்.

முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் இரண்டு வாரத்திற்குள் குழு அமைக்கப்படும் என்றும், நான்கு வாரத்திற்குள் அந்தக் குழு தனது விசாரணை முடிவை தெரிவிக்கும் என்றும் தீர்ப்பாய நீதிபதி கோயல் கூறினார்.

தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் வைகோ அவர்களுடன் கழக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களும், வழக்கறிஞர் ஆனந்தசெல்வமும் பங்கேற்றார்கள் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் 20-08-2018 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, August 16, 2018

ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது! வைகோ இரங்கல்!


இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாப் புகழ் படைத்த ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளியும் கோடானு கோடி மக்களின் இதயத்தில் இடம்பெற்றவருமான மாபெரும் தலைவர் அடல்பிகாரி வாஜ்பாய் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் என்னை தாக்கியது. நிலைகுலைந்தேன்; உள்ளம் உடைந்தேன.

நாற்பது ஆண்டுகளாக அவரிடம் நெருங்கிப் பழகி, என் தகுதிக்கு மீறிய அன்பை அவரிடமிருந்து பெற்றவன் நான்.

இந்தியிலும், ஆங்கிலத்திலும் அற்புதமாக உரையாற்றக் கூடியவர். ஜனசங்கத்தைக் கட்டிக் காத்த தலைவர்களில் ஒருவர். தலைசிறந்த கவிஞர், நகைச்சுவை உணர்வு மிக்கவர். வங்கதேச யுத்த வெற்றிக்குப் பின், பிரதமர் இந்திராகாந்தியை நாடாளுமன்றத்தில் “துர்காதேவியே, வெற்றித் தேவைதையே” என வாழ்த்தியவர்.

இந்தியாவின் அனைத்துத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். பேரறிஞர் அண்ணா அவர்களிடம் மிக்க அன்பு காட்டியவர். டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது, அண்ணன் வீரமணியுடன் சென்று நான் வாதாடியபோது, மீண்டும் பெரியார் மையம் எழுப்ப உன்னதமான ஒரு இடத்தை வழங்கினார்.

நெருக்கடி நிலை காலத்தில் 18 மாதம் பெங்களூர் சிறையில் வாடினார்.

1998, 1999 லிருந்து 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு தலைமையேற்றபோது, அக்கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் மதித்து அரவணைத்து கருத்துக்களைப் பரிமாறி, ஒரு கூட்டணி ஆட்சி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார்.

1998 செப்டம்பர் 15 இல், பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டை சென்னை கடற்கரையில் மதிமுக நடத்தியபோது, என் கோரிக்கையை ஏற்று, “சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும்” என்று பிரகடனம் செய்தார்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை மைய அரசு தனியார் மயமாக்க முடிவெடுத்த பின்னர், எளியேனின் வேண்டுகோளை ஏற்று, அந்த முடிவை இரத்து செய்ததை நினைக்கும்போதே என் கண்கள் குளமாகின்றன.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு தன் வேதனையையும், எதிர்ப்பையும் நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்தார். ஈழத்தமிழர் பிரச்சினையில் மாநிலங்கள் அவையில் நான் உரையாற்றியபோதெல்லாம் என்னை அவர் ஆதரித்துப் பேசியதை மறக்க முடியுமா?

1999 ஆம் ஆண்டில் அனைத்துக் கட்சி நாடாளுமன்றத் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் “இலங்கை அரசுக்கு எவ்விதத்திலும் இந்திய அரசு உதவி செய்யாது; ஆயுதங்களை சிங்கள அரசுக்கு ஒருபோதும் விற்பனை செய்யாது” என்று கொள்கை முடிவை அறிவித்தார்.


நானும், சகாக்களும் பொடா கைதிகளாக சிறையில் இருந்தபோது, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்பபடி குற்றம் ஆகாது என்று இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யுமாறு நடவடிக்கை எடுத்தவர் அடல்ஜி என்பதை நன்கு அறிவேன்.

டெல்லியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் என் தகுதிக்கு மீறி மற்றவர்கள் உரையாற்றியதற்குப் பின்னர் என்னை உரையாற்ற வைத்து ரசித்துப் பாராட்டியதை எப்படி மறப்பேன்?

தன் வாழ்வையே நாட்டுக்காக, கோடானு கோடி மக்களுக்காக அர்ப்பணித்து, தனக்கென்று ஒரு இல்லற வாழ்வை அமைத்துக்கொள்ளாத உத்தமத் தியாகி ஆவார்.

அவர் பிரதமராக இருந்தபோது, ஈழத்தமிழர்களுக்கு செய்த பல உதவிகளை நான் நன்கு அறிவேன். ஆண்டன் பாலசிங்கத்தை இந்தியாவுக்கு வரவழைத்து சிகிச்சை தருவதற்கும் தயாரானார். அந்தச் செய்தியை நான் சேர்ப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் பாலசிங்கம் கிளிநொச்சியை விட்டு சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

அவருடைய முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின் டெல்லியில் அவர் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி என் மகள் கண்ணகியின் திருமண வரவேற்பாகும்.

இந்தியா ஒரு அணு ஆயுத வல்லரசு என்பதை பொக்ரான் சோதனையின் மூலம் உலகத்துக்கு நிருபித்தார்.

இந்தியாவின் சாலை கட்டமைப்பை வலுப்படுத்த நாடு முழுக்க தங்க நாற்கரச் சாலைக்கு காரணமானார்.

கடந்த எட்டாண்டு காலமாக அவர் நினைவு குறைந்து படுத்த படுக்கையானபின், நான் டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் அவரது இல்லத்துக்குச் சென்று, அவரது படுக்கையின் அருகில் நின்று, கரம்கூப்பி வணங்கிவிட்டு பொங்கும் விழிநீரைத் துடைத்துக்கொண்டு வருவேன். முதல் இரண்டு ஆண்டுகளில் நான் அருகில் சென்றால் திக்கித் திக்கி என் பெயரை உச்சரிக்க முனைவதும், அவர் முகத்தில் பரவசம் பரவுவதையும் அங்கு இருப்பவர்களே சொல்லி வியந்தார்கள்.

“வைகோவை என் மகனாகவே கருதுகிறேன்” என்று கூறுகிற அளவுக்கு அம்மாமனிதரின் உள்ளத்தில் எனக்கு ஒரு இடம் கிடைத்தது என் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும்.

இந்திய அரசியலில் பேரொளியாய் பிரகாசித்த ஜனநாயச் சுடர் அனைந்துவிட்டது; துக்கம் தாங்கமுடியாமல் தவிக்கிறேன். துயர் சூழ்ந்துள்ள வேளையில் தலைவர் அடல்ஜி அவர்களின் வளர்ப்பு மகள் நமிதா அவர்களுக்கும், அவரது கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யா அவர்களுக்கும், அவர்களின் புதல்விக்கும், உற்றார் உறவினர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி நண்பர்களுக்கும், அத்தலைவரை மதித்து நேசித்த கோடானு கோடி மக்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது இரங்கள் அறிக்கையில் 16-08-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, August 13, 2018

ஆளுநர் மாளிகையில் தலைமை நீதியரசி பதவியேற்பு விழாவில் நீதியரசர்கள் முறையாக நடத்தப்படாததற்கு வைகோ கண்டனம்!

நேற்று (12.08.2018 அன்று) சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதியரசி தகில் ரமணி அவர்கள் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட நிகழ்ச்சியின் போது, இந்திய அரசு வகுத்துள்ள நெறிமுறை மதிப்பு வரிசைப்படி உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அமர இடம் ஒதுக்காமல், அமைச்சர்களும், காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாமல் சீருடையில் இல்லாத காவல்துறை அதிகாரிகளும், முன் வரிசைகளில் அமர்ந்ததும், பின் வரிசைகளில் நீதிபதிகள் உட்கார வைக்கப்பட்டதும் மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும்.

இந்தப் பதவியேற்பு விழாவில் நீதியரசர்களுக்கு இடம் ஒதுக்கப்படுவதை நேரில் வந்து பார்க்க சென்னை உயர்நீதிமன்றத்தின் செயலாளர் நாயகம் முயன்றபோது, ஆளுநர் மாளிகை அதற்கு அனுமதி மறுத்தது என்பது நீதித்துறையையே உதாசீனப்படுத்திய செயலாகும்.

இதற்கு முன்னர் மதுரை மாநகரில், மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சியின்போதும் அரசியல்வாதிகளுக்கும், அமைச்சர்களுக்கும் இடம் கொடுப்பதற்காக இருக்கைகளில் அமர்ந்திருந்த நீதிபதிகளை அவமானப்படுத்தி அவமதித்த செயலும் நடைபெற்றது இருக்கிறது.

நேற்று ஆளுநர் மாளிகையில் உயர்நீதிமன்ற நீதிபதிகளை அவமதிக்கின்ற வகையில் நடைபெற்ற செயலுக்கு ஆளுநர் மாளிகையின் அதிகாரப் பொறுப்பில் உள்ளோர்தான் பொறுப்பாளிகள் ஆவார்கள். இதற்குரிய விளக்கத்தை ஆளுநர் மாளிகை தருவதுடன், இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 13-08-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

தலைசிறந்த நாடாளுமன்ற மேதை சோம்நாத் சட்டர்ஜி மறைவு இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பேரிழப்பு-வைகோ இரங்கல்!

இந்திய நாடாளுமன்றத்தில் பத்து முறை மக்களவை உறுப்பினராக அனைவரின் பாராட்டையும் பெறும் விதத்தில் அனைத்து விவாதங்களிலும் பங்கேற்று தனது அணித்தரமான வாதத் திறமையால் இந்திய நாடாளுமன்றத்திற்குப் பெருமை சேர்த்தவர் சோம்நாத் சட்டர்ஜி ஆவார்.

2009 முதல் 2014 வரை நாடாளுமன்ற மக்கள் அவையின் சபாநாயகராக நடுநிலை தவறாது சபையை நடத்தி, அந்தப் பதவிக்குப் புகழைச் சேர்த்தார். நாடாளுமன்ற அவைகளின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் அவர்கள் தங்கள் அரசியல் கட்சிகளிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்தார்.

அவரது தந்தையார் நிர்மல் சந்திர சட்டர்ஜி உச்சநீதிமன்றத்தில் தலைசிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தவர். அகில பாரதிய இந்து மகா சபையை நிறுவியவர்களில் ஒருவராக இருந்தபோதும், 1948 இல் கம்யூனிஸ்டு கட்சி இந்திய அரசால் தடை செய்யப்பட்டதையும், கம்யூனிஸ்டு தலைவர்கள் கைது செய்யப்பட்டததையும் எதிர்த்து அகில இந்திய குடிமை உரிமைகள் சங்கத்தைத் தொடங்கி, கம்யூனிஸ்டு தலைவர்களை விடுதலை செய்யப் போராடினார். அரவது மகனான சோம்நாத் சட்டர்ஜி அவர்களும் உச்சநீதிமன்றத்தில் மிகச்சிறந்த வழக்கறிஞராகப் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாபெரும் தலைவரான ஜோதிபாசு அவர்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரிய மிக நெருங்கிய தோழராகத் திகழ்ந்தார்.

2008 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது, அதனை ஆதரிக்க மறுத்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து அவர் வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் ஐம்பது ஆண்டுகள் ஆற்றிய உன்னத சேவைக்காக சட்டமன்றத்தில் பொன் விழா நடத்தப்பட்டபோது, அந்த விழாவில் பங்கேற்று பெரும் சிறப்பு சேர்த்தார்.

பல ஆண்டுகள் அவரோடு நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பை நான் பெற்றேன். சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்கும்போது, அவர்களை ஊக்குவிக்கின்ற அரிய பண்பு மிக்கவர் ஆவார்.

அன்னாரது மறைவு இந்திய நாட்டின் பொதுவாழ்வுக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவரை உளமாற நேசிக்கும் பொதுஉடைமைத் தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் இன்று 13-08-2018 அன்று தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Sunday, August 12, 2018

தமிழக மீனவர்கள் கைது; இலங்கையின் புதிய கடற்தொழில் சட்டத்தின் கீழ் வழக்கு! இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்-வைகோ வலியுறுத்தல்!

இராமநாதபுரம் மாவட்டம் - நம்புதாளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் - ஜெகதாபட்டினம் அருகில் உள்ள ரம்பவயல் கிராமத்தில் தங்கி, இங்கிருந்து முன்னூறுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில், மீனவர்கள் நாள்தோறும் மீன்பிடிக்கச் செல்வது வழக்கமாகும். 


இந்நிலையில், ஆகஸ்டு 10 ஆம் தேதி மாலை நெடுந்தீவு அருகே நாட்டுப் படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறிய ரோந்துக் கப்பலில் வந்து சுற்றி வளைத்து, நான்கு நாட்டுப் படகுகளைப் பறிமுதல் செய்ததுடன், அதில் இருந்த 27 மீனவர்களையும் கைது செய்து இருக்கிறார்கள்.

சிங்களக் கடற்படையினரால் அக்கிரமமான முறையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரும் இலங்கையின் காங்கேசன்துறை ராணுவ முகாமிற்கு கொண்டு சென்று, ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் நிறுத்தி, பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படை அத்துமீறி அவர்களைக் கைது செய்திருப்பது மட்டுமின்றி, இலங்கை அரசு தற்போது கொண்டுவந்துள்ள புதிய மீன்பிடிச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறித்து, நமது கடற்பரப்புக்குள் மீன்பிடித்தாலும் எல்லை மீறி நுழைந்து கைது செய்து அச்சுறுத்துவதும், புதிய சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பதும் இலங்கை அரசின் அடாவடித்தனத்தைக் காட்டுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களை 2016, டிசம்பர் 15 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து, பாக் நீரினைப் பகுதியில் பாரம்பரியமாக மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் குறி வைத்து, இலங்கை அரசு கொடிய சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. இந்திய அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

2017 மே 11 இல் இலங்கையில் நடந்த விசாக நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றபோதும், இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டுவந்துள்ள கடற்தொழில் சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப்பெற அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. தமிழக மீனவர்களும் பிரதமரின் இலங்கை பயணத்தின் போது சிங்கள அரசின் இச்சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால் மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சியத்தால் இலங்கை அரசு கடற்தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, தமிழக மீனவர்களுக்கு எதிராக பயன்படுத்த முனைந்துள்ளது.

இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ள 27 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப்பெற இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 12-08-2018 அன்று தெரிவித்துள்ளார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Saturday, August 11, 2018

பா.இராமச்சந்திர ஆதித்தனார் திருஉருவப் படத்திற்கு வைகோ மலர் அஞ்சலி!

கதிரவன், மாலைமுரசு; ஏடுகளில் தமிழ் இன உரிமைக் குரலை அஞ்சாது ஒலிக்கச் செய்த பெருமகன் அய்யா பா.இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 84ஆவது பிறந்த நாளை ஒட்டி, அவரது திருஉருவப் படத்திற்கு சென்னையில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Friday, August 10, 2018

நெல்லையில் இலக்கியத் திருவிழா!

பைந்தமிழ் மன்ற விழா தமிழினம் கொண்டாட வேண்டிய மாமேதை திராவிட ஒப்பிலக்கணம் தந்த ஈடற்ற ஆய்வறிஞர் நெல்லைச்சீமையில் வாழ்ந்த வரலாறு "கால்டுவெல் " குறித்து இலக்கிய ஏந்தல் தலைவர் வைகோ தலைமையில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

நாள் :11.8.2018 சனிக்கிழமை, மாலை 6 மணி
இடம்: நூற்றாண்டு விழா மண்டபம் (வ.உ.சி மைதானம் வடபுறம்)
பாளையங்கோட்டை 

நிலைகுலையா நேர்மையாளர்; விளம்பரமின்றி எண்ணற்ற குடும்பங்களை வாழவைக்கும் டி.வி.எஸ். வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பப் பெறுக! வைகோ அறிக்கை!

தொழிலதிபர் டி.வி.எஸ். குழுமத்தின் வேணு சீனிவாசன் மீது திருவரங்கம் கோவில் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமின் கேட்டிருப்பதாகவும் செய்தி அறிந்து திடுக்கிட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.

இந்தியாவிலேயே புகழ்பெற்ற தொழில் நிறுவனமான டி.வி.எஸ். குழுமம், இலட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வு அளித்துள்ளது. மதிப்பிற்குரிய வேணு சீனிவாசன் அவர்கள் தமிழ்நாட்டில் நான்காயிரம் கிராமங்களில் முப்பது இலட்சம் மக்களுக்கு புதுவாழ்வு தந்துள்ளார். அண்டை மாநிலங்களில் ஆயிரம் கிராமங்களிலும் அனைத்து சமூக மக்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் அங்குள்ள பெண்களுக்கு கூடை முடைதல், பாய் பின்னுதல், நெசவுநெய்தல், இயற்கை உரம் தயாரித்தல் போன்ற தொழில்கள் சுய வேலைகளுக்கு நிதி உதவி தந்து, ஒரு இலட்சத்து 68 ஆயிரம் மகளிர் வருடத்திற்கு 680 கோடி ரூபாய் வருமானம் பெற வழிவகுத்தார்.என்ற செய்தியை கிராமங்களில் உள்ள மக்கள் மூலம் நான் அறிந்தபோது, ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று மனம் நெகிழ்ந்தேன். இதுகுறித்து அந்தப் பெருந்தகை எந்தவிதத்திலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டது இல்லை.

நான் அவரிடம் நெருங்கிப் பழகியது இல்லை. இதனை அறிந்ததனால் ஓராண்டு முன்னர் அவரைச் சந்தித்து, அவர் செய்யும் மனிதாபிமான தொண்டுகளைக் கேட்டு அறிந்தேன்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 104 கண்மாய்களில் தன் சொந்தச் செலவில் தூர் வார ஏற்பாடு செய்தவர். சென்ற வருடத்தில் மட்டும் இவரது முயற்சியால் 733 கோடி லிட்டர் மண் தூர் வாரப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முதலமைச்சர் டாக்டர் ஜெயலலிதா அவர்களும் தமிழகத்தின் திருக்கோயில்களில் திருப்பணிகளைச் செய்வதற்குரிய பொறுப்புக்களை திரு வேணு சீனிவாசன் அவர்களிடம் ஒப்படைத்தனர். அண்ணா திமுக ஆட்சியில் 1995 ஆம் ஆண்டு தொடங்கி, திமுக கலைஞர் ஆட்சியில் நிறைவுசெய்யப்பட்ட நவ திருப்பதி கோவில்களின் திருப்பணியும், குடமுழுக்காட்டும் திரு வேணு சீனிவாசன் அவர்கள் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து நெல்லை மாவட்டம் வரையிலும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள நவ திருப்பதி என்று அழைக்கப்படும் ஒன்பது வைணவக் கோவில்களுக்கும் திரு வேணு சீனிவாசன் அவர்கள் ஏற்பாட்டில் திருப்பணியும் குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டது.


அனைத்துச் சமூக மக்களும் ஒன்றுபட்டு இத்திருப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும் என்ற முதுமொழியைக் கருத்தில் கொண்டு, ஆங்காங்கு உள்ள அனைத்துத் தரப்பினரிடமும் அவர்களால் இயன்ற அளவு நிதியைப் பெற்று, தானே இருபது கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திருப்பணியில் ஈடுபட்டார்.

திருப்புளியங்குடி எனும் வைணவத் தலத்தில் குடமுழுகாட்டு விழாவினை பெரியவர் சங்கரலிங்க நாடார் தலைமையில் நடத்தியபோது, அவர் எங்கள் சமுதாயத்துக்கே கொடுக்கப்பட்ட மரியாதை என்று அந்த விழாவில் கண்ணீர் சிந்தினார். ஒவ்வொரு கோவிலிலும் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமானவர்களை குடமுழுக்கு விழாவுக்குத் தலைமையேற்கச் செய்தார்.

கபாலீஸ்வரர் கோவிலில் திருப்பணிக்குழுத் தலைவராக இவர் பொறுப்பேற்று, 2004 ஆம் ஆண்டு குடமுழுக்காட்டு விழா நடைபெற்றது. இந்த ஆலயத்தில் உள்ள கபாலீஸ்வரர் மீது b காண்ட பக்தியால் திரு வேணு சீனிவாசன் அவர்கள் இதற்கு 70 இலட்ச ரூபாய் தன் சொந்தப் பணத்தை அறக்கட்டளையிலிருந்து செலவழித்திருக்கிறார்.

2015 ஆம் ஆண்டு திரு வேணு சீனிவாசன் அவர்கள் திருவரங்கம் கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். திருமால் பக்தரான வேணு சீனிவாசன் தன்னுடைய சொந்த அறக்கட்டளையிலிருந்தே திருப்பணிக்கு 25 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்.

தமிழகத்திலும், கர்நாடகா, கேரளத்திலும் உள்ள நூறு ஆலயங்களுக்கு தனது சொந்த அறக்கட்டளை பணத்திலிருந்து செலவழித்து திருப்பணி செய்திருக்கிறார். திருவரங்கம் கோவிலில் முறைகேடு நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் உயர்திரு வேணு சீனிவாசன் அவர்களையும் சேர்த்து வழக்குப் பதிவு செய்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏர்வாடி பகுதியில் உள்ள இசுலாமியப் பெருமக்களும், சாயர்புரம் பகுதியில் உள்ள கிறித்தவப் பெருமக்களும் பண்பாளர் வேணு சீனிவாசன் அவர்களை உச்சிமேல் வைத்து மெச்சுவதை நான் நன்கு அறிவேன். அனைத்துச் சமயங்கள், சாதிகள் சார்ந்த மக்களை ஒருங்கிணைத்தே அந்தந்த ஊர்களில் மகளிர் சுயஉதவி நிதி, கண்மாய்கள் சீரமைப்பு ஆகியவற்றை தனது சொந்த அறக்கட்டளை நிதியிலிருந்து செய்து வரும் கொடைச் செயலை எவ்விதத்திலும் அவர் விளம்பரப்படுத்திக்கொள்வது இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.

அநீதி யாருக்கு இழைக்கப்பட்டாலும், கொடுமை எங்கு நடந்தாலும் அதனை எதிர்த்துப் பொங்கி எழவேண்டும் என்றான் கவிஞன் பாரதி. தமிழ் மொழியின்பால் பற்றும், தமிழ் இலக்கியங்கள்பால் உயர்ந்த ஈர்ப்பும் கொண்டுள்ள நெறியாளர் வேணு சீனிவாசன் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தமிழக அரசு உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும்.

தூய உள்ளமும், கொடைத் திறனும் கொண்டு அறவழியில் நடப்போர் மீது வழக்குத் தொடுப்பதும், குன்றிமணி அளவும் தவறு செய்யாத ஒருவர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி, அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதும் சகிக்க இயலாதது; மன்னிக்க முடியாதது என்பதை உணர்ந்து அக்குற்றச்சாட்டிலிருந்து தமிழக அரசு அவரது பெயரை நீக்கி அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 10-08-2017 அன்று தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

டாக்டர் பருக் அப்துல்லாவுடன் வைகோ சந்திப்பு!


09.08.2018 வியாழக்கிழமை மாலையில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் டாக்டர் பருக் அப்துல்லா அவர்களை புது டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்து, செப்டம்பர் 15 இல் ஈரோட்டில் நடைபெற இருக்கும் மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்டு டாக்டர் பருக் அப்துல்லா அவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதாக இசைவளித்தார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Thursday, August 9, 2018

ஸ்டெர்லைட் வழக்கில் டில்லி தீர்ப்பாயத்தில் வைகோ மனுதாக்கல்-வழக்கு 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் நீதியரசர்கள் கோயல், ஜாவத் ரகீம், வாங்கோய் மற்றும் நிபுணர் நாகின் நந்தா அமர்வில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் வைகோவின் மனுவை ஏற்கக் கூடாது, அரசியல் விளம்பரத்துக்காகத்தான் செய்கிறார் என்ற ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் ஆட்சேபனை மனுவை எதிர்த்து வைகோ தாக்கல் செய்த பதில் மனு பின்வருமாறு:-

நான் அரசியல் விளம்பரத்துக்காக வழக்கைத் தொடுக்கிறேன் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறி இருப்பது அடிப்படை அற்றதும், கண்டனத்துக்கு உரியதும் ஆகும். 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை எதிர்த்து நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராடி வருகிறேன். 1997 ஜனவரி 1 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ளநான் தாக்கல் செய்த ரிட் மனு மீதுதான் ஆலையை மூடும் தீர்ப்பை 2010 செப்டம்பர் 28 இல் உயர்நீதிமன்றம் வழங்கியது. அதன் மீது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து அமர்வுகளிலும் நான் பங்கேற்றேன். உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2013 ஏப்ரல் 2 இல் ஆலையை நடத்துவதற்கு அளித்த தீர்ப்பில், என்னுடைய பங்களிப்பை பொதுநலனுக்கான கடமை என்று பாராட்டினர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆலையை மூடுவதற்கு நான் தொடுத்த வழக்கில்தான் தமிழ்நாடு அரசு தன் கொள்கை முடிவை தெரிவித்தது. தூத்துக்குடி சுற்றுவட்டார மக்கள் வாழ்வு நாசமாகிவிடும் என்பதால்தான் ஸ்டெர்லைட்டை எதிர்க்கிறேன்.

எனக்கு அரசியல் விளம்பரம் தேவை இல்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்வில் இருக்கிறேன். மிசா சிறைவாசம், பொடா சிறைவாசம் உள்ளிட்டு ஐந்தாண்டுகள் சிறையில் இருந்துள்ளேன். 1998 லும், 1999 லும் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் எனக்கு கேபினெட் அமைச்சர் பதவி வழங்க முன்வந்தபோது, அதனை நான் ஏற்க மறுத்ததை இந்திய அரசியல் ஞானம் உள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள்.

என் மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் என்று பதில் மனு தாக்கல் செய்த வைகோ, அதுகுறித்துப் பேச வாய்ப்புக் கேட்டபோது பின்னர் தரப்படும் என்று நீதிபதி கூறினார்.

இன்று இருதரப்பு வாதங்களும் நடைபெற்று, பத்து நாட்களுக்குள் அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்து கண்காணிப்புக் குழு அறிக்கை தர வேண்டும். அக்குழுவில் மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதியும், ஸ்டெர்லைட் நிர்வாகப் பிரதிநிதியும் இடம் பெறுவார்கள் என்று கூறி, வழக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதில் வைகோ அவர்களுடன் கழக சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களும், வழக்கறிஞர் ஆனந்தசெல்வமும் பங்கேற்றார்கள் என்ற தகவலை மதிமுக தலைமை நிலையம் தாயகம் 09-08-2018 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் கைது! ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதற்கு வைகோ கண்டனம்!

தமிழக வாழ்வாதாரங்களையும், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காகவும், ஈழத்தமிழர் இனப்படுகொலையை உலக அரங்கில் வெளிப்படுத்தவும், அறவழியில் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினையில் தமிழக காவல்துறையினர் நடத்திய 13 பேர் படுகொலையை, ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் அண்மையில் பதிவு செய்தார். அதில் எந்தத் தவறும் கிடையாது. உலகத்தில் ஒவ்வொரு நாட்டிலும் இப்படி நடைபெறுகிற படுகொலைகள் மனித உரிமைக் கவுன்சிலில் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் திருமுருகன் காந்தியை எவ்விதத்திலாவது நிரந்தரமாக முடக்கிவிட வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டு, காவல்துறையை ஏவி அவரைக் கைது செய்வதும், குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

திருமுருகன் காந்தியின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தினாலும், கவலையினாலும் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, சோசியல் டெமாரக்டிக் கட்சி, தமிழ் அமைப்புக்கள் அனைவரோடும் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தியது.

பாசிச வெறியாட்டம் போடும் மத்திய அரசும், அதற்குக் குற்றேவல் செய்யும் தமிழக அரசும் திருமுருகன் காந்தியின் குரலை ஒடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளன. அதன் விளைவாகத்தான் கர்நாடக காவல்துறையைப் பயன்படுத்தி பெங்களூரில் கைது செய்துள்ளனர்.

இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்ய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Monday, August 6, 2018

விடுதலைபுலிகள் மீதான தடை நீக்க கோரும் வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைப்பு!

விடுதலைபுலிகள் மீதான தடை நீக்க கோரும் வழக்கு இன்று காலை 10-30 மணிக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நேரில் ஆஜரானார். ஆனால் அரசு வழக்கறிஞர் இந்த வழக்கை ஒத்தி வைக்க கோரியதால் வழக்கு ஆக.14 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தகவல்: இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் சீதக்காதி தமிழ்ப் பேரவையைத் தொடங்கிவைத்து வைகோ சிறப்புரை!

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையின் சீதக்காதி தமிழ்ப் பேரவையும் மாணவர் பேரவையும் இணைந்து 7.8.2018 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் நடத்தும் சீதக்காதி தமிழ்ப் பேரவையின் தொடக்கவிழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “இன்பத் தமிழ்ச் சோலையில் இஸ்லாமிய இலக்கியங்கள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். 

தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசுகிறார். கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துத் தலைமையுரையாற்றுகிறார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கின்றனர். 

கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக், அரசுதவி பெறாப் பாடங்களின் இயக்குநர் முனைவர் ஏ.அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

நிகழ்ச்சியில் மாணவர் பேரவை மற்றும் தமிழ்த்துறை சார்பில் இவ்வாண்டு நடைபெற உள்ள மாணவர் வாசகர் வட்டத்தின் ஆண்டுநிகழ்வுகளையும் வைகோ தொடங்கிவைக்கிறார். 

நிகழ்ச்சிகான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறையும் மாணவர் பேரவையும் இணைந்து செய்துவருகிறது.

தகவல்: சேது முத்தையா

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

வரலாற்றை அழிக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசு - வைகோ கடும் கண்டனம்!

கல்வி, சுற்றுச்சூழல், சமூக நீதி, நிதி, தற்சார்பு போன்ற பல்வேறு தளங்களில் முதலாளித்துவத்திற்கும், இந்துத்துவத்திற்கும் ஆதரவாக பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, அச்சட்டங்கள் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க அரசு, தான் பதவியேற்றதிலிருந்து முனைப்போடு செயலாற்றி வருகிறது. இவை அனைத்தும் இந்திய இறையாண்மைக்கே பெரும் அச்சுறுத்தலாக அமைவதைப் பார்க்க முடிகிறது. இந்த வரிசையில் உயிருடன் இல்லாத சமஸ்கிருதம் மொழியையும், மனிதர்களைச் சமமாகப் பார்க்காத இந்துத்துவக் கொள்கையினைப் பறைசாற்றவும், இந்தியாவின் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த முக்கிய அடையாளங்களை அழிப்பதற்கு மத்திய பா.ஜக. அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கு குழு ஒன்றை உருவாக்கியதோடு இல்லாமல், தற்போது “தொன்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்ட திருத்த மசோதா 2017”ஐ நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

பல்வேறு தேசிய இனங்கள் அவற்றிற்கே உரிய தனிதன்மையுடன் இந்தியாவில் இருந்ததற்கான எண்ணிலடங்கா அடையாளங்கள் கோவில்களாகவும், மசூதிகளாகவும், சமாதிகளாகவும், சிலைகளாகவும், நினைவுத் தூண்களாகவும் உள்ளன. இவை அனைத்தையும் பாதுகாத்து ஆராய்ச்சி செய்வதன் மூலம் நமது பாரம்பரியத்தை அறியவும் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் முடிகிறது.

இவற்றை பாதுகாக்கும் நோக்கில் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்களே 1904ஆம் ஆண்டு பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றினர். பின்னர் அதில் சில மாறுதல்கள் தேவைப்பட்டதால் 1958ஆம் ஆண்டு “தொன்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டம் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958)” இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி வரலாற்றுச் சின்னங்களாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு செய்தாலோ, அல்லது சேதம் விளைவித்தாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். கூடவே, 100 மீட்டர் வரை எந்தவித கட்டுமானப் பணிகளும் நடக்கக் கூடாது என்று சொல்கிறது இச்சட்டம்.

பல நூறாண்டு தொன்மையான நினைவுச்சின்னங்களுக்கு அருகே கட்டுமான வேலைகள் நடக்கும் போது ஏற்படும் அதிர்வுகளால் நினைவுச் சின்னங்கள் பாதிப்பிற்கு உள்ளாகலாம் என்பதே இதற்கு காரணமாகும். ஆனால் கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா மக்களவையில் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசின் அலுவலகங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர தேவைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களில் அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும். 100 மீட்டருக்கு அப்பால் தான் கட்டுமானப் பணிகள் நடக்க வேண்டும் என்ற விதியை அகற்றிவிட்டது. இந்த சட்டத் திருத்தமானது ஆழமான உள்நோக்கங்களைக்கொண்டதாகவே தெரிகிறது.

உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 743 நினைவுச்சின்னங்கள் உள்ளதாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. அதில் பெரும்பாலும் முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. இன்னும் பல வரலாற்றுச் சின்னங்கள் மண்ணுக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. முழுவீச்சில் இந்துத்துவத்திற்கு எதிரான பல வரலாற்றை அழிக்கத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்த சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி தாங்கள் நம்பும் கொள்கைக்கு எதிராக இருக்கின்ற அனைத்து தொல்லியல் சின்னங்களின் மீதும் சாலை போடவும், பாலம் அமைக்கவும் அனுமதி கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

தமிழகத்தில் மட்டும் 413 தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. ஏற்கெனவே தமிழர்களின் நாகரிகமே தொன்மையானது என்பதற்கான ஆதாரமாக பல பொருட்கள் கிடைத்த கீழடி ஆராய்ச்சியை முடக்க மத்திய பா.ஜ.க. அரசு துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தச் சட்ட மசோதாவை இந்துத்துவத்திற்கு ஆதரவாகவே அரசு பயன்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளும்.
இந்த புதிய மசோதா ஏற்கனவே மக்களவையில் தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது. மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பை சந்தித்ததால் தெரிவு குழுவுக்கு (Select committee) அனுப்பப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்து, இரண்டாம் கூட்டம் ஆறாம் தேதியான இன்று நடக்கவுள்ளது. அதன்பின் மீண்டும் அவையில் வைக்கப்பட்டு நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே இம்மசோதாவை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. ஆகவே இச்சட்ட மசோதாவை மதச்சார்பற்ற அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனவும் ஒருபோதும் நமது வரலாற்றை அழிக்க நினைக்கும் முயற்சியை நிறைவேற்ற விடக் கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 06-08-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை