Sunday, August 12, 2018

தமிழக மீனவர்கள் கைது; இலங்கையின் புதிய கடற்தொழில் சட்டத்தின் கீழ் வழக்கு! இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்-வைகோ வலியுறுத்தல்!

இராமநாதபுரம் மாவட்டம் - நம்புதாளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் - ஜெகதாபட்டினம் அருகில் உள்ள ரம்பவயல் கிராமத்தில் தங்கி, இங்கிருந்து முன்னூறுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில், மீனவர்கள் நாள்தோறும் மீன்பிடிக்கச் செல்வது வழக்கமாகும். 


இந்நிலையில், ஆகஸ்டு 10 ஆம் தேதி மாலை நெடுந்தீவு அருகே நாட்டுப் படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறிய ரோந்துக் கப்பலில் வந்து சுற்றி வளைத்து, நான்கு நாட்டுப் படகுகளைப் பறிமுதல் செய்ததுடன், அதில் இருந்த 27 மீனவர்களையும் கைது செய்து இருக்கிறார்கள்.

சிங்களக் கடற்படையினரால் அக்கிரமமான முறையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரும் இலங்கையின் காங்கேசன்துறை ராணுவ முகாமிற்கு கொண்டு சென்று, ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் நிறுத்தி, பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படை அத்துமீறி அவர்களைக் கைது செய்திருப்பது மட்டுமின்றி, இலங்கை அரசு தற்போது கொண்டுவந்துள்ள புதிய மீன்பிடிச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறித்து, நமது கடற்பரப்புக்குள் மீன்பிடித்தாலும் எல்லை மீறி நுழைந்து கைது செய்து அச்சுறுத்துவதும், புதிய சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, இலட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிப்பதும் இலங்கை அரசின் அடாவடித்தனத்தைக் காட்டுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களை 2016, டிசம்பர் 15 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து, பாக் நீரினைப் பகுதியில் பாரம்பரியமாக மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் குறி வைத்து, இலங்கை அரசு கொடிய சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. இந்திய அரசு இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

2017 மே 11 இல் இலங்கையில் நடந்த விசாக நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றபோதும், இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டுவந்துள்ள கடற்தொழில் சட்டத் திருத்த முன்வடிவை திரும்பப்பெற அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின. தமிழக மீனவர்களும் பிரதமரின் இலங்கை பயணத்தின் போது சிங்கள அரசின் இச்சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால் மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சியத்தால் இலங்கை அரசு கடற்தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, தமிழக மீனவர்களுக்கு எதிராக பயன்படுத்த முனைந்துள்ளது.

இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ள 27 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப்பெற இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 12-08-2018 அன்று தெரிவித்துள்ளார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment