Monday, August 6, 2018

வரலாற்றை அழிக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசு - வைகோ கடும் கண்டனம்!

கல்வி, சுற்றுச்சூழல், சமூக நீதி, நிதி, தற்சார்பு போன்ற பல்வேறு தளங்களில் முதலாளித்துவத்திற்கும், இந்துத்துவத்திற்கும் ஆதரவாக பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, அச்சட்டங்கள் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க அரசு, தான் பதவியேற்றதிலிருந்து முனைப்போடு செயலாற்றி வருகிறது. இவை அனைத்தும் இந்திய இறையாண்மைக்கே பெரும் அச்சுறுத்தலாக அமைவதைப் பார்க்க முடிகிறது. இந்த வரிசையில் உயிருடன் இல்லாத சமஸ்கிருதம் மொழியையும், மனிதர்களைச் சமமாகப் பார்க்காத இந்துத்துவக் கொள்கையினைப் பறைசாற்றவும், இந்தியாவின் வரலாற்றுத் தொன்மை வாய்ந்த முக்கிய அடையாளங்களை அழிப்பதற்கு மத்திய பா.ஜக. அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைப்பதற்கு குழு ஒன்றை உருவாக்கியதோடு இல்லாமல், தற்போது “தொன்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்ட திருத்த மசோதா 2017”ஐ நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

பல்வேறு தேசிய இனங்கள் அவற்றிற்கே உரிய தனிதன்மையுடன் இந்தியாவில் இருந்ததற்கான எண்ணிலடங்கா அடையாளங்கள் கோவில்களாகவும், மசூதிகளாகவும், சமாதிகளாகவும், சிலைகளாகவும், நினைவுத் தூண்களாகவும் உள்ளன. இவை அனைத்தையும் பாதுகாத்து ஆராய்ச்சி செய்வதன் மூலம் நமது பாரம்பரியத்தை அறியவும் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் முடிகிறது.

இவற்றை பாதுகாக்கும் நோக்கில் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்களே 1904ஆம் ஆண்டு பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றினர். பின்னர் அதில் சில மாறுதல்கள் தேவைப்பட்டதால் 1958ஆம் ஆண்டு “தொன்மையான நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எஞ்சி நிற்பவை சட்டம் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958)” இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி வரலாற்றுச் சின்னங்களாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு செய்தாலோ, அல்லது சேதம் விளைவித்தாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். கூடவே, 100 மீட்டர் வரை எந்தவித கட்டுமானப் பணிகளும் நடக்கக் கூடாது என்று சொல்கிறது இச்சட்டம்.

பல நூறாண்டு தொன்மையான நினைவுச்சின்னங்களுக்கு அருகே கட்டுமான வேலைகள் நடக்கும் போது ஏற்படும் அதிர்வுகளால் நினைவுச் சின்னங்கள் பாதிப்பிற்கு உள்ளாகலாம் என்பதே இதற்கு காரணமாகும். ஆனால் கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா மக்களவையில் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்தார். அதில் மத்திய அரசின் அலுவலகங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர தேவைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களில் அரசு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும். 100 மீட்டருக்கு அப்பால் தான் கட்டுமானப் பணிகள் நடக்க வேண்டும் என்ற விதியை அகற்றிவிட்டது. இந்த சட்டத் திருத்தமானது ஆழமான உள்நோக்கங்களைக்கொண்டதாகவே தெரிகிறது.

உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 743 நினைவுச்சின்னங்கள் உள்ளதாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. அதில் பெரும்பாலும் முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. இன்னும் பல வரலாற்றுச் சின்னங்கள் மண்ணுக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. முழுவீச்சில் இந்துத்துவத்திற்கு எதிரான பல வரலாற்றை அழிக்கத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இந்த சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி தாங்கள் நம்பும் கொள்கைக்கு எதிராக இருக்கின்ற அனைத்து தொல்லியல் சின்னங்களின் மீதும் சாலை போடவும், பாலம் அமைக்கவும் அனுமதி கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

தமிழகத்தில் மட்டும் 413 தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. ஏற்கெனவே தமிழர்களின் நாகரிகமே தொன்மையானது என்பதற்கான ஆதாரமாக பல பொருட்கள் கிடைத்த கீழடி ஆராய்ச்சியை முடக்க மத்திய பா.ஜ.க. அரசு துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தச் சட்ட மசோதாவை இந்துத்துவத்திற்கு ஆதரவாகவே அரசு பயன்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளும்.
இந்த புதிய மசோதா ஏற்கனவே மக்களவையில் தாக்கல்செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது. மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பை சந்தித்ததால் தெரிவு குழுவுக்கு (Select committee) அனுப்பப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்து, இரண்டாம் கூட்டம் ஆறாம் தேதியான இன்று நடக்கவுள்ளது. அதன்பின் மீண்டும் அவையில் வைக்கப்பட்டு நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே இம்மசோதாவை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. ஆகவே இச்சட்ட மசோதாவை மதச்சார்பற்ற அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து எதிர்க்க வேண்டும் எனவும் ஒருபோதும் நமது வரலாற்றை அழிக்க நினைக்கும் முயற்சியை நிறைவேற்ற விடக் கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் இன்று 06-08-2018 தெரிவித்துள்ளார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment