Monday, August 26, 2019

ஆகஸ்ட் 27: சேலத்தில் அணி திரள்வோம்; இனப்பகையை எதிர்கொள்ள ஆயத்தம் ஆவோம்-வைகோ அழைப்பு!

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் திராவிடர் கழகமாக வீறு கொண்டு எழுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்ற அதே சேலம் மாநகரில், ஆகஸ்ட் திங்கள் 27 ஆம் நாளில், தமிழர் உரிமைப் பாசறையாம் திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாடு எழுச்சியுடன் நடைபெறுவதை அறிந்து, நெஞ்சமெலாம் இனிக்கின்றது!
தமிழர் சமுதாயத்தை, மானமும் அறிவும் உள்ளதாக உயர்த்திட, அரிமாவாகச் சிலிர்த்து எழுந்து, உயிர் மூச்சு உள்ளவரை போராடிய அய்யா பெரியார் தலைமையில் அன்று நடைபெற்ற மாநாட்டில், நம் உயிரில், உணர்வில், குருதியோட்டத்தில் நீக்கமற நிறைந்துவிட்ட அறிஞர் அண்ணா அவர்களின் தீர்மானம், நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக பரிணாம வளர்ச்சி கொள்ளச் செய்தது.
இதுகுறித்து, “திராவிட நாடு” இதழில் (13.08.1944) பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க உணர்ச்சிமிகு தலையங்கத்தைத் தீட்டினார் அண்ணா!
‘சேலம் செயலாற்றும் காலம்’ எனும் அந்தச் சீர்மிகு ஆசிரிய உரையை, 19.08.1944 குடியரசு இதழின் முகப்பில், முதல் இடம் தந்து வெளியிட்டுப் பெருமைப்படுத்தினார் அய்யா!
‘27.08.1944 இல் சேலம் நகரில் கண்காட்சிக் கொட்டகையிலே, ஜஸ்டிஸ் கட்சியின் மாகாண மாநாடு நடைபெற ஏற்பாடு ஆகி விட்டது. பெரியார் தலைமை வகிக்கின்றார். தோள்தட்டி, மார் நிமிர்த்தி, அணி அணியாக வருக! வருக!! என்று வரவேற்புக்குழுத்தலைவர் இரத்தினசாமி கனிவுடன் அழைக்கின்றார்’
“உறுதியும் உணர்ச்சியும் பெருக்கெடுத்தோடும் உள்ளம் படைத்த உத்தம வீரர்களே! உங்கள் நாட்டின் எதிர்காலம், இனத்தின் எதிர்காலம் எப்படி அமைதல் வேண்டும் என்பதை எடுத்துரைக்க சேலம் வாருங்கள்”
என்று 75 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா அழைத்தாரே, அந்த சேலத்தில்தான் இப்போதும் மாநாடு.
“சூதும் சூழ்ச்சியும் புகமுடியாத வளமான உமது மனத்திலே தோன்றும் தூய கருத்தை அச்சம் தயை தாட்சணியமின்றி எடுத்துக் கூற வாரீர் சேலத்திற்கு என்று அழைக்கிறோம். அன்போடு, உரிமையோடு! சொல்லும் செயலும் வெல்லும் வகையுடையதாக உம்மிடம் அமைந்திருக்கிறது என்ற நம்பிக்கையோடு செயலாற்றும் சிலபேர்கள் உள்ளனர் என்ற பூரிப்போடு, வாரீர்! விரைந்து சேரீர்! ஒன்றாக சேலத்தில்! உரிமைப்போர் நடத்த இதுவே சரியான காலம் என்பதை சேலம் எடுத்துக்காட்டும் என்று நம்புகிறோம்”
என்று திராவிட நாடு இதழ் மூலம் அண்ணா அறைகூவி அழைத்தது இன்றைக்கும் பொருத்தமாகத்தானே இருக்கின்றது?
75 ஆண்டு வரலாறு காணும் திராவிடர் கழகம், நூறாண்டுகளைக் கடந்தும் தொடரும் திராவிட இயக்கம், தமிழ் மண்ணில் நிகழ்த்திய சாதனைகள், புரட்டிப் போட்ட புரட்சிகள் ஏராளம்! ஏராளம்!! சமூக நீதி, பெண்கள் உரிமை, மதநல்லிணக்கம், சமத்துவம் முதலான மறுமலர்ச்சி மாண்புகள் இந்தியத் துணைக் கண்டத்திலேயே, தமிழகத்தில் மட்டும் செழித்து செம்மாந்த நிலையில், உயிர்த் துடிப்புடன் உலவி வருவதற்கு பெரியார்-அண்ணா பெரும்படைதான் காரணம்!
நம் விழி திறந்த வித்தகர்களான பெரியாரும், அண்ணாவும் இல்லை என்ற துணிச்சலில், திராவிடத்தை ஆரியவர்த்தம் ஆக்கிட ஆளுகின்ற காவிக்கூட்டம் களம் இறங்கி உள்ள காலம் இது! ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்ற முழக்கம் பொருளாதார அளவுகோலால் வகுப்பு உரிமையை வீழ்த்தும் சதித்திட்டம், ‘இந்து’ எனும் மயக்க மருத்து தந்து, வர்ணாசிரம தர்மத்தை உயிர்ப்பிக்கும் பகீரதப் பிரயத்தனம் இவைகள் எல்லாம் அவர்களின் அம்புறாத்தூளியில் இருந்து அடுக்கடுக்காகப் புறப்பட்டு வரும் அம்புகள்.
அவற்றைத் தடுத்துத் தகர்ப்பதற்கு, பெரியார்-அண்ணா கொள்கை எனும் அறிவு ஆயுதம் ஏந்த வேண்டிய காலத்தில்தான் திராவிடர் கழக பவள விழா மாநாடு சேலத்தில் நடக்கின்றது. ஈரோட்டுப் பட்டறையிலும், காஞ்சிப் பாசறையிலும் வார்ப்பிக்கப்பட்ட திராவிடச் சிந்தனை எனும் கவசம் ஏந்தி, சங்கொலி முழங்கி அணிவகுத்திட, தமிழர்கள் சேலத்திற்கு அணிவகுத்திட வேண்டும்.
சற்று உடல்நலம் இன்றி, மருத்துவர்களின் கட்டுப்பாடு காரணமாக, ஓய்வில் இருந்தாலும்கூட, என் மனமெலாம் திராவிடர் கழக பவள விழா மாநாட்டு நிகழ்வுகளை நோக்கியே மையம் கொண்டுள்ளது. நெஞ்சத் திரையில் மாநாட்டின் மாட்சிகள் - வண்ணமிகு காட்சிகள் ஓவியமாய் ஓடிக் கொண்டே இருக்கின்றது.
திராவிடர் கழகத்தின் தலைவர்-விடுதலை ஆசிரியர் - தமிழர் தலைவர் நம் அனைவரின் மூத்த அண்ணன் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள இம்மாநாட்டில், தி.மு.கழகத்தின் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், நாளைய முதல்வருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவுரை ஆற்றுவதும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி அவர்களும், நம் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு முழக்கமிடுவதும் மகிழ்ச்சிக்கு உரியதாகும்!
‘இன உணர்வோடு அனைவரும் மாநாட்டுக்கு அணி திரண்டு வாருங்கள்’ என்று, பெரியாரின் பேரன்-திராவிட இயக்கப் போர்வாள் எனும் உணர்வோடு அழைக்கின்றேன். தமிழ் இன விடுதலைக்கு வழிகாட்டும் திராவிடர் கழகப் பவள விழா மாநாடு, வெற்றிகளைக் குவிக்கவும், புதிய சரித்திரம் படைக்கவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகின்றேன்.

No comments:

Post a Comment