Sunday, August 18, 2019

காண்டூர் கால்வாயை, போர்க்கால நடவடிக்கையில் சீரமைத்திடுக - வைகோ வேண்டுகோள்!

பெருந்தலைவர் காமராஜர், ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆகியோர் ஒருங்கிணைந்து கொண்டுவந்த பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம், ஆசியாவிலேயே முதல் திட்டம் ஆகும். இதன் விளைவாக, கொங்கு மண்டலம் தென்னை வளர்ப்பு உள்ளிட்ட வேளாண்மையில் சிறந்து விளங்குகின்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமாகவும், பரவலாகவும் மழை கொட்டித் தீர்த்தது. பரம்பிக்குளம், தூணக்கடவு நீர்பிடிப்புப் பகுதிகளில் பெருகிய வெள்ளத்தால், காண்டூர் கால்வாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால், ஆழியாறு, திருமூர்த்தி அணைகளுக்கு வரும் நீர் தடைப்பட்டுள்ளது. எனவே, பழைய, புதிய பாசன விவசாயிகள் நீர் இன்றித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் வாழும் நாகர்ஊத்து எனும் கிராமம் முற்றிலுமாக அழிந்து விட்டது.
கடந்த முறை காண்டூர் கால்வாயைச் செப்பனிடும்போது, பல சிற்றோடைகளைத் தடுத்து நிறுத்தி, காண்டூர் கால்வாய்க்குத் திருப்பி விட்டனர். எனவே, அந்த வழியில், திடீரெனப் பெருமளவில் நீர் வந்ததே கால்வாய் உடைப்பிற்குக் காரணம் ஆகும்.
எனவே, காண்டூர் கால்வாயை உடனடியாகச் சீரமைத்து, பழைய, புதிய ஆயக்கட்டு விவசாயத்திற்குத் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிற்றோடைகளைத் திசை திருப்பாமல், அவற்றின் போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அப்போதுதான் நல்லாற்றுப் பாசன விவசாயிகள் சிறிதளவேனும் பயன்பெறக்கூடிய நிலை ஏற்படும்.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், இதுவரை கட்டப்படாமல் இருக்கும் ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்தினால், இதுபோன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்கலாம்.
ஆகவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் காண்டூர் கால்வாயைச் சீரமைக்க வேண்டும்; வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 18-08-2019 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment