Sunday, May 31, 2020

அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற தமிழர்களை அழைத்து வாருங்கள். அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, வைகோ கடிதம்!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்திய அயல் உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு, மின் அஞ்சல் கடிதம் எழுதி உள்ளார்.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற இந்தியர்களை அழைத்து வருவதற்காக, வந்தே பாரத் திட்டத்தை, நடுவண் அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகின்றது.

கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர், வேலை வாய்ப்பு இழந்தவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்தவர்கள், நாடு திரும்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அதன்படி, 50000 க்கும் மேற்பட்டவர்கள் நாடு திரும்பி விட்டனர்.

ஆனால், தமிழ்நாட்டுக்கு ஓரிரு வான் ஊர்திகள் மட்டுமே வந்தன.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்றனர். 

உணவு, இருப்பிடம், உரிய மருத்துவ வசதிகள் இன்றித் தவித்து வருகின்றனர்.

தங்கி இருக்கின்ற இடத்திற்கு வாடகை கொடுக்க முடியவில்லை.

குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள தமிழகத் தொழிலாளர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது.

அவர்கள் வடிக்கின்ற கண்ணீரை, நடுவண் அரசு கண்டு கொள்ளவில்லை.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வான் ஊர்திகளின் பட்டியலிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றது.

இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி ஆகும்.

பன்னாட்டு வான் ஊர்திகள் பறக்க தமிழக அரசு அனுமதி மறுத்து வருகின்றது.

எனவே, தாங்கள் இந்தப் பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்தி, தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டுத் தொழிலாளர்களை விரைவில் அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பன்னாட்டு வான் ஊர்திகள் பறக்க அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 31-05-2020 தெரிவித்துள்ளார்.

Thursday, May 28, 2020

மருத்துவப் படிப்புகளில் அநீதி இழைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குக! வைகோ வலியுறுத்தல்!

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒரு இடம்கூட ஒதுக்காமல் கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டே வஞ்சித்து வருகின்றது.

மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 விழுக்காடும், அகில இந்திய தொகுப்புக்கு மத்திய அரசால் பெறப்படுகிறது. இந்த இடங்களை நிரப்பும்போது பிற்படுத்தப்பட்டோரின் அகில இந்திய ஒதுக்கீடு 27 விழுக்காட்டை ஒதுக்காமல், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு தட்டிப் பறித்து வருகின்றது.

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய ஒதுக்கீடு செய்யப்படும்போது, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் சட்டப்பூர்வ இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு மறுத்து வருவது ஏன்?

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், இந்த ஆண்டு இதர பிற்படுத்தவலியுறுத்துகிறேன்‌இடஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கக் கூட்டமைப்பு சார்பில், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்திலும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதுகுறித்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது.

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கை ஏன் நிரப்பப்படவில்லை என்று கேட்டு அரசமைப்புச் சட்டப் பிரிவு 338பி பிரிவின் கீழ் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரணையைத் தொடங்கி உள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பில், மாநிலங்களிலிருந்து 7981 இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு மத்திய அரசு பெற்றுள்ளது. இதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அறவே இல்லாமல் பூஜ்ஜியம் என்ற நிலைமை உள்ளது.

முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கு நடப்பு ஆண்டான 2020-21 இல் மொத்த இடங்கள் 274. இதில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பூஜ்ஜியம்.

கடந்த 2017-18 ஆம் ஆண்டிலிருந்து 2019-20 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் மொத்தம் 11,879. இதில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான 3207 இடங்கள் பறிபோய்விட்டன.

அதே போன்று இளநிலை பல் மருத்துவப் படிப்பில் மொத்தம் உள்ள 931 இடங்களில் பிற்பட்ட மாணவர்கள் இழந்தது 251 இடங்கள் ஆகும்.

தமிழகத்தில் நடப்பு ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 1882. இதில் 50 விழுக்காடு இடங்கள் அதாவது 941 இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்குத் தரப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லை என்று மத்திய அரசு மறுப்பது சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் திட்டமிட்ட சதி ஆகும். இந்த இடங்கள் தமிழ்நாட்டிலேயே இருக்குமானால் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில் 470 இடங்கள் கிடைத்திருக்கும்.

அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட முதுநிலை மருத்துவ இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், 2017 இல் 3101 இடங்களும், 2018 இல் 2429 இடங்களும், 2019 இல் 2207 இடங்களும், 2020 இல் 2155 இடங்களுமாக நான்கு ஆண்டுகளில் மொத்தம் 9892 இடங்களை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்து உள்ளனர்.

ஆக மொத்தம் கடந்த நான்கு ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்களுக்காக மாநிலங்கள் வழங்கிய மொத்த இடங்கள் 42,842 இல் ஒரு இடம்கூட பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு இல்லை. 

ஆனால் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மட்டும் 10 விழுக்காடு இடங்களை வாரி வழங்குவதில் தாராளமான மனப்பான்மையுடன் பா.ஜ.க. அரசு நடந்து கொள்கிறது.

சமூக நீதியை மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் இந்நடவடிக்கைகளைக் கண்டித்து கடந்த மே 13 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இந்தியா முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கிடைக்க வேண்டிய 9892 இடங்களையும், அதேபோன்று இளநிலை மருத்துவப் படிப்புகள், இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான  27 விழுக்காடு சட்டப்பூர்வ இடஒதுக்கீட்டுக்கான 1135 இடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 11,027 இடங்களை சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 28-05-2020  தெரிவித்துள்ளார்.

Wednesday, May 27, 2020

பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்க! வைகோ அறிக்கை!

மராட்டிய மாநிலம் பீமாகோரேகான் வன்முறை தொடர்பாக பொய் வழக்கு புனையப்பட்டு, மும்பை பைகுல்லா சிறையில் ஓராண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமா சென் ஆகிய இரு பெண் சமூகச் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நீதிபதி சையத் தலைமையிலான குழு மத்திய அரசுக்கும், மராட்டிய மாநில அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பான கோரிக்கை மனுவில் உச்சநீதிதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த், வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர், பேராசிரியர் அமித் பாதுரி, பொருளாதார நிபுணரும் பேராசிரியையுமான ஜெயதி கோஷ், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் இந்திh ஜெயசிங், காலின் கன்சால்வேஸ், சமூகச் செயற்பாட்டாளர்கள் அருணாராய், தீஸ்தா செதல்வாட், பியூசில் பொதுச்செயலாளர் சுரேஷ், மனித உரிமைப் போராளி டாக்டர் பினாயக் சென் மற்றும் சபனா ஆஷ்மி உள்ளிட்ட 656 முக்கிய ஆளுமைகள் கையொப்பமிட்டுள்ளனர்.

2018 ஜனவரி 1 இல் பீமாகோரேகானில் எல்கார் பரிசத் நடத்திய மராட்டிய பேஷ்வாக்குகளுக்கு எதிராக ஆங்கிலேய மகர் படைப்பிரிவு நடத்திய போரின் 200 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் என்று வழக்குப் பதிவு செய்து வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமாசென், கவிஞர் வரவரராவ், வெர்ணன் கன்சால்வேஸ், வழக்கறிஞர் அருண் பெரைரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

மவோயிஸ்டுகளுடன் சேர்ந்து பிரதமருக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக சமூகச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மீது அப்போது மராட்டியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு குற்றம் சாட்டியது.

இந்தப் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சமூகச் செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமாசென் ஆகியோர் மும்பை பைகுல்லா சிறையில் கடும் சித்ரவாதைகளைச் சந்தித்து வருகின்றனர். பல்வேறு உடல் நோய்களுடன் போராடி வரும் இவர்கள் அடைக்கப்பட்டுள்ள பைகுல்லா சிறையில் கொரோனா நோய்த் தொற்று, பரவி இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். எனவேதான் இடைக்கால பிணை அளித்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பீமா கோரேகான் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள பேராசிரியரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கௌதம் நவ்லகா இருவரும் தேசியப் புலனாய்வு முகமை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாவோயிஸ்டுகளுடன் தொடர்புபடுத்தி, மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபா ஆறு ஆண்டுகளாக ஈவு இரக்கமின்றி சிறையில் அடைக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.

இந்துத்துவ கருத்தியலை எதிர்த்து வரும் சிந்தனையாளர்கள், வழக்கறிஞர்கள், ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களுக்காகப் போராடி வரும் மனித உரிமைப் போராளிகள், சமூகச் செயற்பாட்டாளர்களை தேசிய புலனாய்வு முகமை (NIA) பொய் வழக்குப் புனைந்து நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்தி, மிரட்டி அச்சுறுத்தி பணிய வைக்கும் அக்கிரமத்தில் இறங்கி உள்ளது. பா.ஜ.க. அரசின் இத்தகையப் பாசிசத்திற்கு எதிராக இந்தியாவில் அறிவுத்துறையினர் கொந்தளித்து வருகின்றனர்.

பெண்கள் என்றும் பாராமல் சுதா பரத்வாஜ், சோமாசென் போன்றோரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதை ஏற்கவே முடியாது. கொரோனா பேரிடர் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், மாற்றுக் கருத்துடையவர்கள் மீது அடக்கு முறையை ஏவிவிட்டு சித்ரவதை செய்வதை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியை சோமா சென் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 27-05-2020 தெரிவித்துள்ளார்.

ஆறுமுகம் தொண்டைமான் மறைவுக்கு, வைகோ இரங்கல்!

இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டைமான் அவர்கள், மாரடைப்பால் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். 

இலங்கையின் மலையகத்தில் கொத்தடிமைகளாக அடக்கி ஆளப்பட்ட தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களின் குரலாக ஒலித்தவர் பெரியவர் சௌமியமூர்த்தி தொண்டைமான். அவர்களுடைய மேம்பாட்டிற்காகவே தனி இயக்கம் கண்டார். அப்போது,கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சங்கத்தை உருவாக்கினார்.  இயற்கைப் பேரிடர்களின் போதும், நோய் நொடித் தாக்குதல்களில் இருந்தும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காகப் பாடுபட்டார். தோட்டப்புறங்களில் புதிய சாலைகள் அமைத்து, தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தம் வாழ்நாள் முழுமையும் தொண்டு ஆற்றினார். 

தோட்டப்புறங்களில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இடையே சாதி, மதப் பாகுபாடுகள் வளராமல் ஒருங்கிணைத்தவர். ஈழத்தமிழர்களுக்குக்  கூடுதல் உரிமைகள் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டு இருந்தார். தந்தை செல்வா அவர்களுடன் கூட்டணி அமைத்தார்.  

அவருடன் நீண்டகாலத் தொடர்புகள் உண்டு. பல நிகழ்ச்சிகளில் அவருடன் பங்கேற்று உரையாடி இருக்கின்றேன். அவருடைய மூதாதையர்கள், சிவகங்கை மாவட்டம் திருப்பதூர் அருகே பட்டமங்கலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அரசியலில் அவருக்கு உறுதுணையாக இயங்கியவர் அவரது பேரன் ஆறுமுகம் தொண்டைமான். 

அவரது மறைவுக்குப் பின்னர், தோட்டத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட இயங்கினார். இலங்கை அரசில் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கின்றார். எனினும், ஈழத்தமிழர்களின் நல்வாழ்விற்கு ஆதரவான கருத்துகளையே கொண்டு இருந்தார். 

சென்னைக்கு வரும்போதெல்லாம், தாயகத்திற்கும், என் வீட்டுக்கும் பலமுறை வந்து சந்தித்து இருக்கின்றார்.  55 வயதில், இயற்கை அவரைப் பறித்துக் கொண்டது அதிர்ச்சி அளிக்கின்றது. 

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கின்றேன். உற்றார், உறவினர்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 27-05-2020 தெரிவித்துள்ளார்.

Tuesday, May 26, 2020

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள். உற்பத்தியைத் தொடங்க உதவிடுவீர்! மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல்!

கொரோனா பொது முடக்கத்தால் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை 17 தொழிற்பேட்டைகளில் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்நிறுவனங்களை உடனடியாகச் செயல்படுவதற்கு பல்வேறு நெருக்கடிகள்ஏற்பட்டு இருக்கின்றன.

25 விழுக்காடு பணியாளர்களுடன் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளை இயக்கலாம் என்று அறிவித்துள்ள தமிழக அரசு, கொரோனா பரவல் உள்ள சிவப்பு மண்டலத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல தடை விதித்துள்ளது. 55 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளர்களையும், பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உடனடியாக இயங்குவதற்கு உள்ள தடைகள் குறித்து தி இந்து ஆங்கில நாளேட்டுக்கு (25.05.2020) அளித்தப் பேட்டியில், சென்னை திருமுடிவாக்கம் தொழில்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் செல்வம், “பீகார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து இங்கு பணியில் இருந்த 1500 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுவிட்டனர். தென் மாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த தொழிலாளர்க்ள பணிக்கு இன்னும் திரும்ப முடியவில்லை. எனவே தொழிலாளர் பற்றாக்குறையில் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்க முடியவில்லை” என்று தெரிவித்து இருக்கிறார்.

இதே நிலைமைதான் சென்னையைச் சுற்றி  உள்ள அனைத்துத் தொழிற்பேட்டைகளிலும் நிலவுகிறது என்று வில்லிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பாகல் எம்.படேல் கூறி உள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்குப் புறப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் தவிக்கின்றோம் என்று கவலை தெரிவித்துள்ளார்.

பொது முடக்கம் காரணமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் பணி ஆணைகள் கிடைக்காததால், உற்பத்தியை தொடக்கவும் முடியவில்லை. வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்களுக்குக் கூட பணி ஆணைகள் வரவில்லை. மத்திய அரசு அறிவித்திருக்கும் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள், சிறு, குறு நடுத்தர தொழிற்சாலைகள் உடனடியாகச் செயல்படுவதற்கு பயன் அளிக்கவில்லை என்று அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஏ.என்.சுஜேஷ் கூறி இருக்கிறார்.

உற்பத்தி இல்லாமல் தொழிற்சாலைகள் முடங்கிக் கிடக்கின்ற நிலையில், மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்படி, தொழிற்சாலைகளுக்கு ஏப்ரல், மே மாத ஊதியம் வழங்கவும், தொழில் முனைவோர்களால் முடியவில்லை.

மத்திய நிதி அமைச்சர் அறிவிப்புகளால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உடனடியாக செயல்படுவதற்கு வழி இல்லை என்பதைப் பல்வேறு தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு அளித்த நேர்காணல் மூலம் உறுதி ஆகிறது.

மத்திய நிதித்துறை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன் வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட திட்டம் மூலம் ரூ.3 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. 9.25 விழுக்காடு வட்டியில் உத்தரவாதத்துடன் கடன் அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் நடைமுறையில் வங்கிகளின் ஏராளமான நிபந்தனைகள் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோருக்கு சலிப்பையும், எதிர்காலம் குறித்த கவலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நா ட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு 28 விழுக்காடாக இருக்கிறது. மேலும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளின் உற்பத்தி, நாட்டின் ஏற்றுமதியில் 40 விழுக்காடு அளவுக்கு பங்கு வகிக்கிறது. வேளாண் தொழிலுக்கு அடுத்ததாக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளிப்பதில் இத்தொழில் நிறுவனங்கள்தான் முன்னிலையில் உள்ளன.

எனவே பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோர் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்களையும், நெருக்கடிகளையும் களைந்து, மீண்டும் உற்பத்தியைத் தொடங்கிட மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 26-05-2020 தெரிவித்துள்ளார்.

Monday, May 25, 2020

சிங்கம்பட்டி குறுநில மன்னர் மறைவுக்கு வைகோ இரங்கல்!

தமிழகத்தில் கடைசியாக முடி சூட்டப்பட்ட, சிங்கம்பட்டி குறுநில மன்னர், நல்லகுத்தி சிவசுப்பிரமணிய சங்கர முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள், நேற்று இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். 

என் அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய பெருந்தகை. பழகுதற்கு இனிய பண்பாளர். இராமநாதபுரம் அரசர் பாஸ்கர சேதுபதியின் நேரடிச் சொந்தம். 

சொரிமுத்து அய்யனார் கோவில் பரம்பரை அறங்காவலர் என்றாலும், சாதி, மத பேதம் இன்றி அனைத்து சமுதாய  மக்களுடனும், அன்புடனும்,பாசத்துடனும் பழகியவர். 

சிறந்த கல்விமான். இலங்கை கண்டியில் ஆங்கிலேயர்கள் கான்வென்டில் படித்தவர் என்பதால், தங்கு தடை இன்றி ஆங்கிலத்தில் உரையாற்றக் கூடியவர். 

பல நூல்களை எழுதி இருக்கின்றார். சங்கத் தமிழ்ப் பாடல்களை எல்லாம் மனனம் செய்தவர். பொருள் விளக்கமும் தருகின்ற ஆற்றலாளர். 

சிங்கம்பட்டி அரண்மனைக்குச் சென்று பலமுறை அவரைச் சந்தித்து இருக்கின்றேன். 

என் செயலாளர் அருணகிரி எழுதிய சங்கரன்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மூதூரின் வரலாறு என்ற நூலை, 2015 ஆம் ஆண்டு நான் வெளியிட பெருந்தகை முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அப்போது அவருடன் நீண்ணட நேரம் உரையாடினேன். என் மீது பற்றும் பாசமும் கொண்டவர். 

அவரது மறைவு ஒரு பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஜமீன் குடிகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 25-05-2020 தெரிவித்துள்ளார்.

Friday, May 22, 2020

தூத்துக்குடி துப்பாக்கி சூடு 2 ஆண்டு நினைவேந்தலில் வைகோ ஆன்லைன் உரை!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு 2 ஆம் ஆண்டு நிகழ்வில் தமிழினத் தலைவர் திரு. வைகோ எம்பி அவர்கள் 22.05.2020 இன்று  இரவு 7 மணியளவில் நேரலையில் உரையாற்றினார்.

அப்போது ஸ்டெர்லைட் ஆலையை இனி நுழையவிடமாட்டோம்‌ என்று ஆவேசமாக பேசினார்.

ஏராளமான கழகத்தினர், பிற அமைப்புகளை சார்ந்தவர்கள், பொதுமக்கள் ஆன்லைனில் நேரலையில் கலந்துகொண்டனர்.

Thursday, May 21, 2020

ஓமான் சலாலாவில் மரணமடைந்த இளங்கோவன் உடல் வைகோ எம்பி முயற்சியால் நெல்லை குளக்கட்டா குறிச்சி வந்து சேர்ந்தது. மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் திமு.ராஜேந்திரன் நேரில் அஞ்சலி!

உடல் நலம் குன்றி குளக்கட்டா குறிச்சி இளங்கோவன் கடந்த மே 11 ஆம் நாள் ஓமானில்‌ சலாலா என்னுமிடத்தில் மரணமடைந்தார். அவரது உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர குடும்பத்தினர் தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் அவர்களை தொடர்பு கொண்டு வேண்டுகோள் வைத்தனர். இந்த செய்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, தலைவர் வைகோ அவர்கள் இந்திய வெளியுறவு துறைக்கு தொடர்பு கொண்டு இளங்கோவன்‌ உடலை மீட்க கோரிக்கை வைத்தார். வெளியுறவு துறை அமைச்சர் ஓமன் இந்திய எம்பசிக்கு தகவல் தெரிவித்து இளங்கோவன் உடல் விரைவில் இந்தியா வர ஏற்பாடுக்ளை செய்ய ஆணையிட்டார்.


அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின் இந்த‌ கொரொனா நெருக்கடியான நேரத்தில் வானூர்திகள் இல்லாததால் சலாலாவிலிருந்து இந்தியா வந்த சிறப்பு விமானத்தில் இளங்கோவன் உடல் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. 



சலாலாவிலிருந்து நேற்று மாலை புறப்பட்ட விமானம் இரவு 8.30 மணியளவில் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தடைந்தது.



இளங்கோவன் உடலை அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குளக்கட்டா குறிச்சிக்கு இன்று 21-05-2020  காலை 8.30 மணிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். 



இளங்கோவன் உடலை கண்டு‌, மகள்களும், மனைவியும் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்தியது.



தென்காசி மதிமுக மாவட்டக் கழகத்தின் சார்பில், இளங்கோவன் உடலை ஊருக்கு கொண்டு வர முழு முயற்சி எடுத்து குடும்பத்திற்கு ஆதரவாக இருந்த, மாவட்ட செயலாளர் தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் அவர்கள் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.



நிகழ்வில், முன்னாள் சேர்மன் விசுவாமித்திரன், குருவிகுளம் தெற்கு ஒ.செ. இராசாராம் பாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இராஜகோபால் கிளைச் செயலாளர் ராஜ் பங்கேற்றனர்.



இளங்கோவன் அவர்களை இழந்து வாடும் குடும்ப த் தா ரு க்கு ஆழ்ந்த இரங்கல்.



மைக்கேல் செல்வ குமார்
செயலாளர்
ஓமான் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

Wednesday, May 20, 2020

தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து நடக்கும் கூட்டுப் போராட்டத்தை வெற்றி அடையச் செய்வீர்! திருப்பூர் சு.துரைசாமி வேண்டுகோள்!

மத்திய அரசு அண்மையில் தொழிலாளர்களுக்கு விரோதமாக, தொழிலாளர் வர்க்கம் நூறாண்டு காலத்திற்கு மேலாகப் போராடிப் பெற்ற, 8 மணி நேர வேலை நேரத்தை மாற்றி, நாளொன்றுக்குப் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று, தொழிலாளர்களுக்கு விரோதமாக அறிவிப்பு வெளியிட்டது.

மத்திய அரசாங்கத்தின் அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் இருக்கின்ற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசாங்கம் கொண்டுவந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி 18.05.2020 ஆம் தேதி அன்று சென்னை எச்.எம்.எஸ் தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நமது தொழிலாளர் முன்னணியின் தலைவர் வழக்கறிஞர் அந்திரிதாஸ் அவர்களும், செயலாளர் வெங்கடேசன் அவர்களும் அனைத்துச் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் 22.05.2020 காலை 10 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற தொழிற்சாலை அலுவலகத்திற்கு முன்பாக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு இருக்கின்றது.

எனவே, எம்.எல்.எப். தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டு நமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுகிறேன் என‌ 
மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி 
பொதுச்செயலாளர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் 20-05-2020 அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓமனில் இறந்த தமிழர் இளங்கோவன் உடல் வைகோ எம்பி முயற்சியால் தமிழகம் வருகிறது!

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், குளக்கட்டாகுறிச்சி கிராமத்தில், ஏழ்மையான ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த சாமுவேல் இளங்கோவன் கடந்த 11 மே ஆம் தேதி ஒமான் சலாலாவில் உடல் நல குறைவால் மரணமடைந்தார்.

இவரது உடலை கொண்டு வர உதவுமாறு, இவரது மருமகன் மணிகண்டன் தென்காசி மாவட்டச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் மூலம் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களைத் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தார்.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் உடனடியாக வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு அவசர மின் அஞ்சல் கடிதம் அனுப்பி, உடலை கொண்டு வர உதவுமாறு வேண்டினார்.

ஓமனில் உள்ள கழக உறவுகளையும் தொடர்பு கொண்டு, தக்க ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் இறந்தவரது குடும்பத்தினருடன் அலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

மேற்கொள்ளப்பட்ட துரித முயற்சியின் விளைவாக, இளங்கோவன் உடல் இன்று 20.05.2020 மாலை ஒமான் சலாலாவிலிருந்து, கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தடைகிறது.

உறவினர்கள் உடலைப் பெற சென்றுள்ளனர் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 20-05-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, May 19, 2020

கூடுதல் குதிரைத்திறன் மோட்டார் பயன்பாட்டுக்குக் கட்டணம்; அரசாணையை இரத்து செய்க! வைகோ வலியுறுத்தல்!

மத்திய பா.ஜ.க அரசு மின்சாரச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து, மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட அனைத்தையும் தனியார் பெருநிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு முனைந்துள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் இரத்துச் செய்யப்படும், கைத்தறி நெசவுத் தொழில் உள்ளிட்டவற்றுக்கும், ஏழை எளியவர்களின் குடிசைகளுக்கும் அளிக்கப்படும் இலவச மின்சாரமும் இனி வழங்கப்பட மாட்டாது என்று மின்சாரச் சட்டத் திருத்த வரைவு முன் வடிவில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
மத்திய அரசின் மின்சாரத்துறை சட்டத் திருத்தங்கள் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றது என்றால், தமிழக அரசின் மின் கட்டணம் தொடர்பான அரசு ஆணை, விவசாயிகளின் தலையில் கல்லைப் போட்டு ஒரேயடியாக ஒழிப்பதற்கு வழி செய்கிறது.
இயற்கைப் பேரிடர், நீர் பற்றாக்குறை, பருவநிலை மாற்றங்கள், உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு குறைந்தபட்ச ஆதார விலையின்றி தவிக்கும் சூழல் இவை அனைத்தையும் எதிர்கொண்டுதான் விவசாயிகள் உழவுத் தொழிலைக் கைவிடாமல் இன்றும் போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.
பருவ மழை பொய்த்துப் போவதால், ஆழ்துளைக் கிணறுகளை நம்பித்தான் நீர்ப்பாசனம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் நிலத்தடி நீர் பெரும்பாலான மாவட்டங்களில் ஆயிரம் அடிக்குக் கீழே போய்விட்டது. கிணற்றுப் பாசனம், ஆழ்துளைக் கிணறுகள் பயன்படுத்தும் விவசாயிகள், மின் மோட்டார் வைத்து நீர் இரைத்து பயிர் சாகுபடி செய்யும் நிலைதான் இருக்கின்றது.
கிணற்றுப் பாசனத்தை நம்பி இருக்கும் விவசாயிகள், தமிழக அரசு ஏற்கனவே அனுமதித்துள்ள 5 மற்றும் 7.5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
1000 அடிக்கு மேல் 1800 அடி வரை உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் 12 முதல் 15 குதிரைத் திறன் மோட்டார்களைப் பயன்படுத்தி நீர் இரைத்தால்தான் பயிர் சாகுபடி செய்ய முடியும்.
மத்திய அரசு இலவச மின்சாரத்தை இரத்து செய்து இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அரசு தன் பங்கிற்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் குதிரைத் திறன் மின் மோட்டார்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு குதிரைத்திறன் ஒன்றிற்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதற்கு ‘தட்கல் திட்டம்’ என்று கூறி அரசாணை எண் 19 என்பதை 11.05.2020 அன்று வெளியிட்டுள்ளது. இது மிகவும் அநியாயமாகும்.
இதனால் விவசாயிகள் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் வரை அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை உருவாகும்.
விவசாயிகள் வேளாண் தொழிலை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கருதுகின்றனவா என்ற ஐயம் ஏற்படுகிறது.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளின் மேல் பேரிடியாக இறக்கி உள்ள அரசாணை 19ஐ திரும்பப் பெறவேண்டும். கொரோனா பேரிடரால் முடங்கியுள்ள வேளாண்மைத் தொழிலை மேலும் சீரழிக்க முனையக் கூடாது. வேளாண்மையைப் பாதுகாக்க இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்குவதும், கூடுதல் குதிரைத்திறன் மோட்டார் பயன்பாட்டுக்குக் கட்டணம் இல்லாமல் மின் விநியோகம் செய்வதும் தமிழக அரசின் கடமை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 19-05-2020 தெரிவித்துள்ளார்.

பத்திரிகை துறையைப் பாதுகாக்க பிரதமருக்கு வைகோ கடிதம்!

இன்று பகல் 12 மணி அளவில், பத்திரிகை உரிமையாளர்கள் திரு ‘இந்து’ சார்பில் ராம் அவர்கள், ‘தினமலர்’ சார்பில் திரு ஆதிமூலம் அவர்கள், ‘தினகரன்’ சார்பில் திரு ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அவர்கள் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் என்னை நேரில் சந்தித்து, தற்போது பத்திரிகைத் துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை விவரித்து, இந்து பத்திரிகையின் சார்பில் திரு என்.ராம் அவர்கள், தினத்தந்தி உரிமையாளர் திரு. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் அவர்கள், தினமலர் சார்பில் ஆதிமூலம் அவர்கள், தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் திரு மனோஜ்குமார் சந்தாலியா அவர்கள், தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் அவர்களும் கையொப்பமிட்ட கடிதத்தைக் கொடுத்தார்கள்.
பத்திரிகைத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை விளக்கினார்கள். அதன் அடிப்படையில் கோரிக்கைகள்:
1) அச்சுக் காகிதங்கள் மீதான சுங்க வரியை நீக்க வேண்டும்
2) நாளிதழ்களுக்கு அரசுகளிடமிருந்து வரவேண்டிய விளம்பரக் கட்டண பாக்கிகளை உடனுக்குடன் கொடுக்க உத்தரவிட வேண்டும்.
3) அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதி, பரிந்துரை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
உங்கள் கோரிக்கைகள் முழுக்க முழுக்க நியாயமானவை. இதற்காக பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடி அவர்களுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்புகிறேன் என்று உறுதி அளித்தேன்.
அத்துடன் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி உடனடியாக பிரதமருக்கு ஒரு கடிதத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்தேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை -8
19.05.2020

To
Shri Narendra Modi
Hon’ble Prime Minister,
New Delhi - 110 101

Shri Narendra Modi Ji
Vanakkam.

Sub: Urgent Relief Measures to the Newspaper Industry-Reg.
I, the Member of Parliament from Marumalarchi Dravida Munnetra Kazhagam -MDMK would like to bring to your kind notice about the challenges faced by the Newspaper Industry in these unprecedented times. We are all sure of the fact that newspapers are the fourth pillar of our great democratic Country. The current situation has pushed them into question of survival and existence.
We can see it more clearly that many newspapers have already cut down pages, closing editions to keep them going as they have an ethical commitment to the society.
We have also been given to understand that this industry gives more than 30 lakhs people jobs and these people are the ones who enlighten our society at large.
The disastrous effects of COVID-19 have brought down the advertising revenues (which is most essential for the running of the newspaper) to almost nil and this is expected to continue for a longer period of time until the new normal is established and set rolling. Logistical issues have also reduced the circulation, medium or large.
The newspaper body has already proposed the following relief requests and we wish to present them to you again in their support.
* Waiver of customs duty on newsprint
* Clearance of the Outstanding BOC dues
* Increase rates by 100% for BOC advertisement
* Increase use of print medium for Govt. announcements
* Complete tax holiday for the next 2 fiscal periods

We are very certain that, you shall take every necessary step in the due course to provide relief.
With warm regards
Yours sincerly,
(VAIKO)

Monday, May 18, 2020

இந்திய ஜனநாயகத்தை நெரிக்கும் பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்கள். வைகோ கண்டனம்!

கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதற்கு ‘சுயசார்பு பொருளாதாரத் திட்டம்’ எனும் பெயரில் மோடி அரசால் 20 இலட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

கொரேனா பேரிடரால் வாழ்விழந்து தவிக்கும் கோடானுகோடி ஏழை எளிய மக்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், 45 கோடிக்கும் அதிகமான அமைப்புச்சாரா தொழிலாளர்கள், வேலை வாய்ப்பை இழந்துள்ள 9 கோடி பிற தொழிலாளர்களுக்கு நேரடியாகப் பணப் பயன் அளிக்கும் மனிதநேயத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ள திட்டங்களால் வேளாண்மைத் தொழிலை நம்பியுள்ள விவசாயிகள் வாழ்வில் வசந்தம் வீசும் என்ற நம்பிக்கையும் இல்லை. கடனில் மூழ்கித் தத்தளிக்கும் விவசாயிகளை கை தூக்கி விடுவதற்கும் இந்த அரசுக்கு மனம் இல்லை.

கொரோனா நெருக்கடி காலத்தில் பா.ஜ.க. அரசு மாநில உரிமைகள் அனைத்தையும் தட்டிப் பறித்துக்கொண்டு, எல்லா அதிகாரங்களும் எங்களுக்கு என்னும் எதேச்சாதிகாரமான ஆணவ தர்பாரை நடத்திக்கொண்டு இருக்கிறது.

மாநிலங்களுக்கான வரிப் பங்கீடு 46,038 கோடி, வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.12,390 கோடி, தேசியப் பேரிடர் நிவாரண நிதி ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு வழங்கி இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் கூறி இருப்பது யானைப் பசிக்குச் சோளப் பொரியாகும். கடன் பெறும் திறனை உயர்த்துவதால் மாநிலங்களின் கடன் சுமைதான் அதிகரிக்கும்.

மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறையைச் சந்தடி சாக்கில் முழுமையாக மத்திய அரசின் கீழ் கொண்டு செல்வதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய கல்விக் கொள்கைக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அலட்சியம் செய்துவிட்டு, அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

கொரோனா பேரிடரைப் பயன்படுத்தி நிலக்கரி, தாதுவளம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, வான்வெளி மேலாண்மை, விமான நிலையங்கள், விமானம் பழுது பார்த்தல் - பராமரிப்பு, யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் விண்வெளித்துறை ஆகிய எட்டு முக்கியத் துறைகளையும் பா.ஜ.க. அரசு தனியாருக்குத் தாரை வார்க்கப் போகின்றது.

தொழில் வளர்ச்சியிலும், பொருளாதார முன்னேற்றம், சுயசார்பு தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றில் இந்தியா சிகரம் தொடுவதற்கு அடித்தளமாக விளங்கிய பொதுத்துறை நிறுவனங்களை முழுக்க முழுக்க தனியார் பெரு முதலாளிகளுக்கு ஏலம் விடும் அக்கிரமத்தை எப்படிச் சகித்துக்கொள்ள முடியும்?

நிலக்கரிச் சுரங்கம், மீத்தேன் எரிவாயுத் திட்டம் ஏலம் விடப்படுவதுடன், நிலக்கரிச் சுரங்கத்தில் அரசின் முற்றுரிமை நீக்கப்பட்டு, எந்தவொரு தனியார் நிறுவனமும் ஏலம் எடுத்து, திறந்த சந்தையில் விற்கலாம் என்று நிதி அமைச்சர் கூறி உள்ளார்.

காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு இதுவரையில் திரும்பப் பெறாமல், தற்போது மேலும் இத்தகைய நாசகாரத் திட்டங்களுக்கு பொது ஏலம் விடுவோம் என்று அறிவித்து இருப்பது காவிரிப் பாசனப் பகுதிகளைக் கடுமையாகப் பாதிக்கும்.

அணுசக்தித்துறை, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புத் துறை போன்றவற்றில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவது போன்ற முக்கிய அறிவிப்புகளைச் செய்தியாளர்களைக் கூட்டி வெளியிட்டதன் மூலம் பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் துச்சமாகக் கருதி வருவதை உறுதி செய்து இருக்கிறது.

கொரோனா கொள்ளை நோயைவிட பெரிய துயரம், நாடு பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்களால் நெறிக்கப்படுவது ஆகும். இத்தகைய சர்வாதிகாரப் போக்குகளை மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 18-05-2020 தெரிவித்துள்ளார்‌.

Sunday, May 17, 2020

நினைவு சுடர் ஏற்றிய வைகோ!

முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்று பாலகன் பாலசந்திரனுக்கும், உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கும் நினைவை போற்றி சுடர் ஏற்றி‌ வீரவணக்கம் செலுத்தினார் வைகோ.

தாயகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் சுடர்!.

இன்று (17.05.2020) காலை தாயகத்தில் மதிமுக ஆட்சி மன்ற குழு செயலாளருப், திருவள்ளூர் மாவட்ட செயலாளருமான டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் சு.ஜீவன், சைதை ப.சுப்பிரமணி, டி.சி.இராசேந்திரன் சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி, எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நிசார் ஆகியோர் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் வகையில், 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுடர் ஏந்தி, வீர வணக்கம் செலுத்தி, சூளூரை மேற்கொண்டனர்.

முள்ளிவாய்க்கால் 11ஆம் ஆண்டு நினைவு சுடர் ஏற்றிய வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி அவர்கள் இன்று (17.05.2020) காலை அண்ணா நகர் இல்லத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூறும் வகையில், 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுடர் ஏந்தி, வீர வணக்கம் செலுத்தி, சூளூரை மேற்கொண்டார்.

Saturday, May 16, 2020

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கே.வரதராஜன் மறைவு. வைகோ இரங்கல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் கே.வரதராஜன் அவர்கள் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

கட்டுமானத்துறை வரைவாளர் படிப்பை முடித்து, நெல்லை மாவட்டம் - பாளையங்கோட்டையில்தான் பொதுப்பணித்துறையில் சேர்ந்து பணியாற்றினார். நெல்லை மாவட்டத்தில் அவர் பணியாற்றிய நேரத்தில்தான் பொதுஉடமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அரசுப் பணியிலிருந்து விலகி, முழு நேரக் கட்சித் தொண்டரானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி வட்டக்குழு செயலாளர் முதல் அரசியல் தலைமைக் குழு வரையில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராகவும், அதன்பிறகு அகில இந்திய விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பினை ஏற்று, விவசாயிகளுக்காகப் போராடினார்.

இந்திய விவசாயிகளின் வாழ்வி
ல் நம்பிக்கைச் சுடரை ஏற்றுவதற்குப் பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்திய பெருமைக்குரியவர்.

பொதுஉடமை இயக்கத்தில் இளைஞர்களை ஈர்ப்பதற்குப் பயிற்சிப் பாசறைகள் நடத்திய தோழர் கே.வி. அவர்கள், சீரிய சிந்தனையாளர். அவரது ‘தத்துவ தரிசனம்’ உள்ளிட்ட பல நூல்கள் காலத்தால் அழியாதவை.

தோழர் கே.வரதராஜன் அவர்களின் இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய விவசாயிகள் சங்கத்துக்கும் ஈடு செய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 16-05-2020 தெரிவித்துள்ளார்.

தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! வைகோ சூளுரை!

மே 17, 18 இரண்டு நாட்கள் மனிதகுல வரலாற்றில் கோடானு கோடி தமிழர்கள் நெஞ்சில் இரத்தக் கண்ணீரை வடிக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களாகும்.

தமிழர்களின் பூர்வீகத் தாயகம் இலங்கைத் தீவு. வரலாற்றின் வைகறைக் காலத்திலிருந்து அவர்கள் கொடி உயர்த்திக் கொற்றம் அமைத்துச் சிறப்பாக வாழ்ந்து வந்தனர்.

பிரித்தானியர் வெளியேறுகிறபோது, அதுவரை தமிழர்களின் நிர்வாகப் பகுதிக்குள் வராத சிங்களவர்களின் அதிகார நுகத்தடியில் தமிழர்களைச் சேர்த்துவிட்டுப் போய்விட்டார்கள். தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிமை கேட்டனர். ஆனால் அவர்கள் நாலாந்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டனர். ஈழத்துக் காந்தி தந்தை செல்வா தலைமையில் நீதி கேட்டனர்.

தமிழர்கள் நடத்திய அறப்போராட்டத்திற்குப் பரிசாக, துப்பாக்கிச் சூடு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை இதுதான் நடைபெற்றது. தமிழர்கள் தொடர்ந்து வதைக்கப்பட்ட காரணத்தால், “சுதந்திரத் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு” என்று வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா தலைமையில் தமிழர்கள் தீர்மானம் எடுத்தனர்.

இளைய தலைமுறை இதை முன்னெடுத்துச் செல்லட்டும் என்று தந்தை செல்வா பிரகடனம் செய்தார். அதையொட்டித்தான் உலகில் எவரும் இதுவரை கண்டும், கேட்டும் இராத நிகரற்ற சாகசங்கள் நிறைந்த யுத்தத்தை நான் நெஞ்சல் பூசிக்கும் தலைவர் பிரபாகரன் முன்னெடுத்தார்.

உலகத்தில் தாயக விடுதலைக்காக ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்று இருக்கின்றன. அப்படி நடைபெற்ற போராட்டங்களுக்கு மற்ற நாடுகளின் ஆயுத உதவிகள் கிடைத்தன. எந்த உதவியும் இல்லாமல் தரைப்படை, கப்பல் படை, ஆகாயப் படை அமைத்து ‘ஓயாத அலைகள்’, ‘அக்னி அலைகள்’ ‘யானையிரவுச் சமர்’ என்று வெற்றிமேல் வெற்றிகளை தமிழர்கள் குவித்து வந்த நேரத்தில், சிங்களவர்களுக்கு உலக நாடுகளின் ஆயுதங்கள் கிடைத்தன. ஆனால் தமிழர்களுக்கு எந்த ஆயுதங்களும் கிடைக்காத சூழல்.

அன்றைய அதிபர் கொடியவன் மகிந்த ராஜபக்சே. இன்றைய அதிபர் கொத்தபய ராஜபக்சே இராணுவ அமைச்சராக இருந்தபோது நடத்திய இராணுவப் படுகொலையில், இலட்சக்கணக்கான தமிழர்கள் கிளிநொச்சியை நோக்கி வருகை தந்தனர்.

மருத்துவச் சாலைகள், பள்ளிகள் மீது சிங்களவர்கள் குண்டுகளை வீசினர். பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், இளம்பெண்கள் நாசமாக்கிக் கொல்லப்பட்டனர்.

இப்படிப்பட்ட படுகொலைகள் நடைபெற்ற வேளையில், உலகத்தின் நீதி கிடைக்காதா? நாதி கிடைக்காதா? என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில் மே 17, 18 தேதிகளில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதற்கு நீதி வேண்டும் என்று இன்றைக்கு நாங்கள் கேட்கிறோம். மனிதகுல மனசாட்சியின் கதவுகளைத் தட்டுகிறோம்.

அர்மீனியர்களுக்குக்கூட ஜெர்மனிய நாடாளுமன்றம் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போடுகிறது.

தமிழர்கள் நாதியற்றவர்களா? எங்களுக்கு நீதி கிடையாதா? இலட்சக்கணக்கான தமிழர்கள் வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். 90 ஆயிரம் பெண்கள் இன்றைக்கு விதைவைகளாக இருக்கிறார்கள்.

மனிதகுலத்தின் நீதிமன்றமாகக் கருதுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் நீதி கேட்கிறோம். என்ன நீதி? கொடூரமான படுகொலைகளைச் செய்த மகிந்த ராஜபக்சே கூட்டம் சர்வதேச நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். காணாமல்போன தமிழர்கள் கண்டுபிடித்துக்கொடுக்கப்பட வேண்டும். சிறைப்பட்டத் தமிழர்கள் விடுதலைசெய்யப்பட வேண்டும். தமிழர்களின் காணிகளை, நிலங்களை அபகரித்துக்கொண்டு இராணுவத்தைக் கொண்டுபோய் குடியேற்றி இருக்கிறார்கள். அந்த நிலங்கள் மறுபடியும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உலகெங்கும் அகதிகளாக வாழுகின்ற தமிழர்களை அந்தப் பொதுவாக்கெடுப்பில் பங்கேற்கச் செய்திட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 16-05-2020 தெரிவித்துள்ளார்.

Friday, May 15, 2020

தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் புறக்கணிப்பு. வைகோ அறிக்கை!

இந்தியாவில், கேரளத்திற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் இருந்துதான் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், வளைகுடா நாடுகளிலும், அமெரிக்க, ஐரோப்பா,மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக நாடு திரும்ப வழி இல்லாமல் தவிக்கின்றார்கள். 

வந்தே பாரத் அறிவிப்பின் கீழ், முதல் கட்டமாக, ஒருசில வான் ஊர்திகள் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வந்தன. அதிலும், சௌதி அரேபியாவில் இருந்து ஒரு வான் ஊர்தி கூட வரவில்லை. 

கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை என்றார்கள். சௌதியில் நிறைய கர்ப்பிணிப் பெண்கள் உள்ளனர். இதர வளைகுடா நாடுகளில் இருக்கின்ற கர்ப்பிணிப் பெண்களையும் கொண்டு வருவதற்கு,  அங்கிருந்து புறப்பட்ட வான் ஊர்திகளில் போதிய இடம் தரவில்லை. 

இரண்டாவது கட்டமாக, அரசு அறிவித்து இருக்கின்ற 176 வான் ஊர்திகளில் ஒன்றுகூடத் தமிழ்நாட்டுக்கு இல்லை. முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றது- 

மலேசியாவில் இருந்து 15 க்கும் மேற்பட்ட வான் ஊர்திகள் இந்தியாவுக்கு வந்து, மலேசியக் குடிமக்களை ஏற்றிச் சென்றன. அங்கிருந்து காலியாக வந்த அந்த வான் ஊர்திகளில், மலேசியாவில் சிக்கி இருக்கின்ற இந்தியர்களை இலவசமாக அழைத்துச் செல்வதற்கு அவர்கள் ஆயத்தமாக இருந்தபோதிலும், இந்திய அரசு அதற்கு இடம் தரவில்லை.

வான் ஊர்திக் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க வேண்டும் எனக்  கேட்டுக்கொண்டு இருந்த நிலையில், முன்பை விடக் கூடுதல் கட்டணம் வாங்குவதாக வருகின்ற தகவல்கள், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற செயல் ஆகும். 

 தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், 3 மாதங்களாக ஈரான் நாட்டில் படகுகளில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதேபோல, சுற்றுலாக் கப்பல்களில் பணிபுரிகின்ற இந்தியர்களும், இரண்டு மாதங்களுக்கு மேல் தரை இறங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.   வான் ஊர்தி நிலையங்களில் தகுந்த சோதனை ஏற்பாடுகள் செய்ய முடியும். எனவே, அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புவதற்கு ஏற்ற வகையில், கூடுதலாக வான் ஊர்திகளை இயக்க வேண்டும். 

அதேபோல, தொடரித்துறையில் அறிவிக்கப்பட்ட சிறப்புத் தொடரிகளுள், தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலத் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு 18 தொடரிகள் புறப்பட்ட நிலையில், வெளியில் இருந்து ஓரிரு தொடரிகள்தான் தமிழ்நாட்டுக்கு வந்தன. 

தமிழ்நாட்டில் இலட்சத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில், இங்கிருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பிற மாநிலங்களுக்குச் செல்வதற்கும், பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் ‌15-05-2020 தெரிவித்துள்ளார்.

Thursday, May 14, 2020

ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டாத மத்திய அரசின் பொருளாதாரச் சலுகைகள் - வைகோ அறிக்கை!

கொரோனா பேரிடர் மக்களை வாட்டி வதைத்து வரும் சூழலில், நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 20 இலட்சம் கோடிக்கு சுயசார்பு பொருளாதாரத் திட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்கள் நேற்று, முதல் கட்டமாக சில பொருளாதாரத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நெருக்கடியிலிருந்து மீள உதவும் வகையில் ரூ. 3 இலட்சம் கோடிக்கு உத்தரவாதமில்லாத கடன் வழங்கப்படும். இந்நிறுவனங்களின் கடன் சுமையை குறைக்கும் வகையில் துணைக் கடன் வழங்க ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழிலை விரிவுபடுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
ஆனால் பாதிப்புக்கு உள்ளான தொழில் முனைவோர், வேலை இழந்த தொழிலாளர்களுக்கு பயன் கிடைப்பதற்கு நீண்ட காலமாகும் என்பதுதான் எதார்த்தமான நிலையாகும்.
கடந்த மார்ச் மாதம் 1.7 இலட்சம் கோடி பொருளாதார சலுகைத் திட்டங்களை அரசு அறிவித்தது. அதன்படி, பயன் பெற்றோர் குறித்த புள்ளிவிவரங்களை நிதி அமைச்சர் வெளியிடுவாரா? ஏனெனில் ஒன்றரை மாதங்களாக வங்கிப் பரிவர்த்தனைகள் முடங்கிக் கிடக்கின்றபோது தொழில், வணிக நிறுவனங்களுக்கு எந்த வங்கிகளும் கடன் அளிக்க முன்வரவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
நிதி அமைச்சர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக பணப்பயன் கிடைக்க எந்த அறிவிப்பும் செய்யாதது ஏமாற்றம் தருகிறது.
ஏனெனில் ஐ.நா.வின் நிறுவனமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ஐடுடீ) மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவில் 45 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரங்களை இழந்து விட்டது தெரியவந்துள்ளது. இதில் கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் உள்ளனர். வேலைவாய்ப்பை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்கும் திட்டம் இருந்தால்தான் உடனடி பயன் கிடைக்கும்.
இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) என்ற நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், ஊரடங்கு காரணமாக தொழில் துறைகளில் 20 வயது முதல் 39 வயது வரைக்கும் உள்ள 6 கோடி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்திய அரசின் செயல்திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதமான அறிவிப்புகள் எதுவும் இல்லை.
இந்தியா ரேட்டிங்ஸ் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் குறித்த ஆய்வு முடிவில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட முக்கியமான 21 மாநிலங்கள் ரூ.97,100 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன என்று தெரிய வந்துள்ளது.
கொரோனா கொள்ளை நோய் பாதிப்பில் இருக்கும் மக்களுக்கு நேரடியாக உதவிக்கரம் நீட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ள மாநில அரசுகள் நிதி நெருக்கடியில் கை பிசைந்து நிற்கின்றன. ஆனால் மத்திய அரசு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் நிதிச் சுமையைக் குறைக்க சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதை மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள் காட்டுகின்றன.
வேளாண் தொழில் மேம்பாட்டிற்கு உரிய பொருளாதாரத் திட்டங்களை அடுத்தடுத்த அறிவிப்புகளில் நிதி அமைச்சர் வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். விவசாயிகளின் அனைத்து வேளாண் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்களின் கல்விக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 14-05-2020 தெர்வித்துள்ளார்.

Wednesday, May 13, 2020

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையே இரத்து செய்க! வைகோ வலியுறுத்தல்!

கொரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த முடியாமல் போன நிலையில், கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி, வெளியிட்ட அறிக்கையில், “பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு தள்ளிப் போனதால், தேர்வு எழுதத் துடித்துக்கொண்டிருந்த இலட்சக்கணக்கான மாணவச் செல்வங்கள் துவண்டு விட்டனர். துள்ளி விளையாட வேண்டிய இளம் பிஞ்சுகள் ஊரடங்கு நேரத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாகி முடங்கிக் கிடக்கின்றனர். மாணவர்களின் பெற்றோரும் தவியாய்த் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வித் திறனை அடுத்தடுத்த 11 ஆம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தேன்.

எனது அறிக்கையைச் சுட்டிக்காட்டி, 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “முதல்வரிடம் கலந்து முடிவு எடுப்போம்” என்று பதில் அளித்தார். இதனிடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.

தற்போது, ஜூன் 1ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா கொள்ளை நோயைக் கட்டுப்படுத்த மே 17 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படும் என்று பிரதமர் நேற்று தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில், இயல்பு நிலை திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ என்று தெரியாத சூழலில், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த வேண்டிய தேவை என்ன?

இந்தக் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்துசெய்துவிட்டு, அனைத்து மாணவச் செல்வங்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 13-05-2020 தெரிவித்துள்ளார்‌.

முதுநிலைமருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பறிப்பு! வைகோ கண்டனம்!

சமூக நீதிக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. நீட் நுழைவுத் தேர்வைத் திணித்து, மருத்துவக் கல்வி என்பது ஏழை, எளிய, கிராமப்புற பின்தங்கிய மாணவர்கள் கனவிலும் எட்டாக் கனியாக ஆக்கிவிட்டது. இதே நிலைமைதான் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளிலும் நிலவுகிறது.

மாநிலங்களில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50 விழுக்காடு அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டும் மருத்துவப் மேற்படிப்புக்கான இடங்கள் 1758 இருக்கின்றன. இதில் 50 விழுக்காடு இடங்கள், அதாவது 879 இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்குத் தரப்படுகிறது. இவ்வாறு மற்ற மாநிலங்களிலிருந்தும் அகில இந்தியத் தொகுப்புக் அளிக்கப்படும் இடங்களை நிரப்பும்போது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தர முடியாது என்று மத்திய பா.ஜ.க. அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக விடாப்பிடியாக மறுத்து வருகிறது.

இந்தியா முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 19,100 மருத்துவ மேற்படிப்புகளில், 50 விழுக்காடு, அதாவது 9,550 இடங்கள் மத்திய அரசின் தொகுப்புக்கு ஒதுக்கப்படுகிறது. அதேபோன்று அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 1352 இல் 50 விழுக்காடு என 676 இடங்கள் மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் அகில இந்தியத் தொகுப்புக்கு அளிக்கப்படும் 9,550 முதுநிலை மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருகு 27 விழுக்காடாக 2,578 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வெறும் 371 இடங்களையே ஒதுக்கீடு செய்துள்ளது.

இது மொத்தம் உள்ள இடங்களில் 3.8 விழுக்காடு மட்டுமே ஆகும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர் வகுப்பு ஏழைகள் என்று பா.ஜ.க. அரசு புதிதாக உருவாக்கி உள்ள பிரிவினருக்கு 635 இடங்கள் அள்ளி வழங்கி இருக்கிறது.

அரசியல் சட்டப்படி இடஒதுக்கீடு உரிமை பெற்று இருக்கின்ற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டியதை மத்திய பா.ஜ.க. அரசு தட்டிப் பறித்து, சமூக நீதியை சவக்குழியில் தள்ளி வருகிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 2017 -2018 இல் 3101 இடங்கள் பறிக்கப்பட்டன.

2018 -19 இல் 2,429 இடங்களும், 2019 -20 இல் 2,207 இடங்களும் மத்திய பா.ஜ.க. அரசால் பறிக்கப்பட்டு இருக்கின்றன.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 7,737 இடங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இழந்து இருக்கின்றனர்.

தமிழகத்திலிருந்து மத்தியத் தொகுப்புக்கு அளிக்கப்பட்டுள்ள 50 விழுக்காடு இடங்களில், முறையான இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு இருந்தால், ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 50 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 440 இடங்கள் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கும்.

சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்குகள் வன்மையான கண்டனத்திற்கு உரியது. அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோரின் சட்டபூர்வமான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டையும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் மருத்துவப் படிப்புகள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 13-05-2020 தெரிவித்துள்ளார்.

Tuesday, May 12, 2020

மதிமுக இணையதள தோழர் ஆட்டோ ராஜ் மறைவுக்கு மதிமுகவினர் மலர் அஞ்சலி!

மதிமுக இணையதள தோழர் ஆட்டோ ராஜா அவர்கள் நேற்று 11-05-2020 மாலை பொழுதில் மாரடைப்பால் மரணமடைந்தார். 

அவரது இறுதி சடங்கு இன்று 12-05-2020 நடந்தது. இறுதி ஊர்வலத்தில் கொரொனா ஊரடங்கிலும் பாதுகாப்புடன் அதிகமான மதிமுக இணையதள தோழர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

கழக சார்பில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்  செங்குட்டுவன், சைதை சுப்பிரமணி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி செயலாளர் ஆவடி அந்தரிதாஸ், கழக முன்னோடிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா அவர்கள் வீரவணக்க முழக்கம் எழுப்பி முடிந்ததும், கழகத்தையே முச்சாக கருதிய ஆட்டோராஜ் அவர்கள் இறுதி சடங்கு செலவிற்காக தலைவர் வைகோ கொடுத்த, ரூபாய் 25 ஆயிரம், மல்லை சத்யா அவர்கள் முலமாக ஆட்டோராஜ் அவர்கள் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.

பணி நேரத்தை 12 மணியாக அதிகரிப்பது தொழிலாளர் வர்க்கத்திற்கு அநீதி வைகோ அறிக்கை!

கொரோனா பேரிடரால் மூடப்பட்டு இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களை மீண்டும் இயக்கினால்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மெல்ல மெல்ல மீட்சி அடைய முடியும். கொரோனா கொள்ளை நோய் பரவல், நாட்டின் 45 கோடி தொழிலாளர்களையும் முடக்கி இருக்கிறது.
வேலை வாய்ப்பு இன்றியும், வருவாயை இழந்தும் தவிக்கின்ற தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியதும், தொழிற்சாலைகளைப் படிப்படியாக இயங்கச் செய்வதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும்.
தொழில் நிறுவனங்கள் செயல்படவும், உற்பத்தி ஆலைகளை இயக்கவும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (Confedration on Indian Industries -CII) பிரதிநிதிகளுடன் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் காணொளியில் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதற்கு தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை நேரத்தை, 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும்; தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், தொழிற் தகராறுச் சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழிற்சங்கச் சட்டம் மற்றும் தொழிற்சாலைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை முடக்கினால்தான் தொழிற்சாலைகள் சுதந்திரமாக இயக்கப்பட முடியும் என்று தொழிற்துறைக் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பதும், 47 பேர் காயமடைவதும் நிகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டால் தொழிலாளர்களின் நிலைமை என்ன ஆகும்?
பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ததால், சுமார் 9 கோடி தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் பணிக்குத் திரும்ப அழைப்பதற்குப் பதிலாக, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்து ஊழியர்களைப் பணியில் ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றது.
மத்திய பா.ஜ.க. அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிப்பதும், சட்டபூர்வமான சலுகைகளை மறுப்பதும் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில், கொரோனா பேரிடரை காரணம் காட்டி, தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணியாக அதிகரிப்பதும், தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிப்பதும், தொழிலாளர் வர்க்கத்த்திற்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே மத்திய அரசு, இத்தகைய தொழிலாளர் விரோத கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 12-05-2020 தெரிவித்துள்ளார்.

Monday, May 11, 2020

உலக செவிலியர்கள் நாள் வைகோ வாழ்த்து!

ஊதியத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும், சகிப்புத் தன்மையும் கொண்டு மனிதநேயத்துடன் மகத்தான சேவை ஆற்றுபவர்கள் செவிலியர்கள். இராணுவம், காவல்துறை போன்று செவிலியர்களும் சீருடைப் பணியாளர்கள்தான்.

இங்கிலாந்தின் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சிஸ் தம்பதியர் இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் பணியாற்றியபோது 12.5.1820 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு அந்நகரின் நினைவாகவும், தங்கள் குடும்பப் பெயரான நைட்டிங்கேலையும் இணைத்து ‘புளோரன்ஸ் நைட்டிங்கேல்’ என்று பெயர் வைத்து அழைத்தனர்.

“அன்பு செலுத்துங்கள். காலம் குறைவாகவே இருக்கிறது” என்ற வேத வாசகத்தால் ஈர்க்கப்பட்டார் புளோரன்ஸ் நைட்டிங்கேல். பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, செவிலியர் பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நவீன தாதியியல் முறையை உருவாக்கி, செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினார்.

உலகத்தின் ஒளிச்சுடராய் விளங்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைகளைச் செய்து சிகரங்களைத் தொடுவதற்குப் பதிலாக ஆதரவற்றவர்கள் மீது அன்பு செலுத்தி அவர்களின் இதயத்தில் இடம்பிடித்தார்.

1854 - 56 ஆம் ஆண்டுகளில் ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும், இங்கிலாந்து ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரிமியாவில் நடைபெற்ற போரில் காயம்பட்டு குற்றுயிரும், குலை உயிருமாகப் போராடிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்க புளோரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று கிரிமியா போர்முனைக்கு அனுப்பப்பட்டனர்.

விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு கையில் இராந்தல் விளக்குடன் தேவதை ஒன்று தங்களைக் காக்க வந்துள்ளது என்று இராணுவ வீரர்கள் புகழ்ந்து பாராட்டினார்கள். ‘விளக்கேந்திய பெருமாட்டி’ என்று வர்ணித்தனர்.

புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பணியைப் பாராட்டி 1883 ஆம் ஆண்டு செஞ்சிலுவைச் சங்க விருது வழங்கியது. 1907 ஆம் ஆண்டு புளோரன்சின் 84-ஆவது பிறந்த நாள் பரிசாக பிரித்தானிய மன்னர் ஏழாம் எட்வர்ட்டின் ‘ஆர்டர் ஆ~ப் மெரிட்’ என்னும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

13.08.1910 ஆம் ஆண்டு புளோரன்ஸ் நைட்டிங்கேல் தனது உலக வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். அவர் மறைவிற்கு பின்பு அவரின் தன்னலமற்ற பணியை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் மே 12 ஆம் நாள் லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே மாளிகையில் உள்ள விளக்குகளில் ஒளி ஏற்றி, செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு, மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு உன்னதமான உணர்வுப் பூர்வமான தருணமாகும்.

புளோரன்ஸ் நைட்டிங்கேல் வழியில், தற்போது கொரோனா கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை பரிவோடு கவனித்துத் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களை மத்திய, மாநில அரசுகள் கௌரவிக்க வேண்டும்.

புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வரும் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த உலக செவிலியர்கள் தின நல்வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்ட்க் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 11-05-2020 தெரிவித்துள்ளார்.

மதுக்கடை திறப்பை எதிர்த்து தமிழக அரசின் மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தலைவர் வைகோ MA.,BL., MPஅவர்கள் ரிட்மனுதாக்கல்!

தமிழகத்தில், மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்தது! இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதிகேட்டு விண்ணப்பித்துள்ளது!

இந்த நிலையில் தமிழகத்தில் பல குடும்பங்களை நாசமாக்கும் மதுக்கடைகளை திறக்க கூடாது என வலியுறுத்தி இன்று (11.05.2020) மதியம் 2 மணிக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோஅவர்களின் சார்பில் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

தகவல்: கழக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மதுரை பா.சுப்பாராஜ் அவர்கள்!

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ உயிருடன் எரித்துக் கொலை; கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குக! வைகோ வலியுறுத்தல்!

விழுப்புரம் மாவட்டம் - திருவெண்ணெய் நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் - முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன் பகை காரணமாக ஜெயபால் என்பவரின் மகளான பத்தாம் வகுப்புப் பள்ளி மாணவி ஜெயஸ்ரீ கை - கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து தீவைத்துக் கொளுத்திய கொடூரச் செயல் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இக்கொடூரச் செயல் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். 

மகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 11-05-2020 தெரிவித்துள்ளார்.


வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் புகைப்பட மற்றும் ஒளிப்படத் தொழிலாளர்களுக்கு உதவிடுக! வைகோ வேண்டுகோள்!

கொரோனா கொள்ளை நோயால் அனைத்துத் துறைகளிலும் தொழில்கள் முடங்கி, இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் கட்டமாக மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் புகைப்படத் தொழிலை நம்பியுள்ள மூன்று இலட்சத்துக்கும் அதிகமான  தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

மிகச் சிறிய அளவில் கடை வைத்து வீடியோ மற்றும் புகைப்படம் சார்ந்த தொழில்களை செய்து வரும் இவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு அதிகபட்சம் நான்கு மாதங்கள் மட்டுமே திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் நிழல்படம், ஒளிப்படம் எடுக்க வாய்ப்புகள் கிடைக்கும். பின்னர் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு நிகழ்ச்சிகள் கிடைப்பதே அரிதாகும். ஒரு நிகழ்ச்சிக்கு வீடியோ மற்றும் நிழல்படம் எடுப்பதற்கும், தொழில்நுட்பப் பணிகளை முடித்துக் கொடுப்பதற்கும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நாட்கள் ஆகும். ஒரு சிறிய நிகழ்ச்சிக்கு 25 ஆயிரம் வாங்கும் இவர்கள், வீடியோ எடுக்கும் கலைஞருக்கு 2 ஆயிரம் ரூபாயும், நிழல்படம் எடுக்கும் இரண்டு பேருக்கு 4 ஆயிரம் ரூபாயும் ஊதியம் அளிக்கிறார்கள். ஆல்பம், வீடியோ எடிட்டிங், கேமரா வாடகை என்று ரூ.15 ஆயிரம் வரை செலவுகள் ஆகிவிடும். மீதமுள்ள தொகையை வைத்துத்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்.

கொரோனா நோய் பரவலால் மண்டபங்கள், கோவில்கள் மூடப்பட்டதால் விசேட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்ப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக நிழல்பட கலைஞர்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி உள்ளனர்.

நிழல்பட கலைஞர்களுக்கு தனி நலவாரியம் இல்லாததால், கொரோனா பேரிடர் பாதித்துள்ள  இதுபோன்ற காலங்களில் அரசின் சார்பில் பிற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலவாரிய உதவித் தொகை இவர்களுக்குக் கிடைப்பது இல்லை.

ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் ஆவணப்படுத்தி, எதிர்கால தலைமுறைக்கு வழங்கும் கடமையைச் செய்து வரும் நிழல்பட கலைஞர்கள் தங்கள் வாழ்வில் ஒளி இழந்து தவிப்பதைக் கருத்தில் கொண்டு, இலட்சக்கணக்கான புகைப்படக் கலைஞர்களுக்கு தமிழக அரசு சிறப்பு உதவித்தொகை வழங்கி அக்குடும்பங்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 11-05-2020 தெரி