Tuesday, May 5, 2020

காஷ்மீர் தீவிரவாதிகள் தேடுதல் பணியில் தமிழக வீரர் சந்திரசேகர் வீர மரணம்-வைகோ இரங்கல்!

காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள வங்கம் காசியாபாத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த, தென்காசி மாவட்டம் - செங்கோட்டையைச் சேர்ந்த மத்திய காவல்படை வீரர் சந்திரசேகர், தீவிரவாதிகளால் பின்னால் இருந்து சுடப்பட்டு நேற்று வீரமரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியைத் தருகிறது.

செங்கோட்டை மூன்றுவாய்க்கால் பகுதியில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி மறைந்த செல்லச்சாமி - சியாமளா தம்பதியினரின் 31 வயது மகனான சந்திரசேகரின் துணைவியார் ஜெனிபர் கிறிஸ்டி (வயது 27), இரண்டு வயது மகன் ஜான் பீட்டர் ஆகியோரின் எதிர்காலத்தை நினைக்கும்போது, தாங்க முடியாத வேதனை ஏற்படுகிறது.

நாட்டைப் பாதுகாக்கும் பணியில் உயிர்த் தியாகம் செய்துள்ள சந்திரசேகரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய, மாநில அரசுகள் இக்குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, அவரது துணைவியாருக்கு கருணை அடிப்படையில் தக்க வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் 05-05-2020 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment