Sunday, May 31, 2020

அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற தமிழர்களை அழைத்து வாருங்கள். அயல்உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, வைகோ கடிதம்!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்திய அயல் உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு, மின் அஞ்சல் கடிதம் எழுதி உள்ளார்.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்ற இந்தியர்களை அழைத்து வருவதற்காக, வந்தே பாரத் திட்டத்தை, நடுவண் அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகின்றது.

கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தோர், வேலை வாய்ப்பு இழந்தவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்தவர்கள், நாடு திரும்புவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அதன்படி, 50000 க்கும் மேற்பட்டவர்கள் நாடு திரும்பி விட்டனர்.

ஆனால், தமிழ்நாட்டுக்கு ஓரிரு வான் ஊர்திகள் மட்டுமே வந்தன.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அயல்நாடுகளில் சிக்கி இருக்கின்றனர். 

உணவு, இருப்பிடம், உரிய மருத்துவ வசதிகள் இன்றித் தவித்து வருகின்றனர்.

தங்கி இருக்கின்ற இடத்திற்கு வாடகை கொடுக்க முடியவில்லை.

குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள தமிழகத் தொழிலாளர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது.

அவர்கள் வடிக்கின்ற கண்ணீரை, நடுவண் அரசு கண்டு கொள்ளவில்லை.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வான் ஊர்திகளின் பட்டியலிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றது.

இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி ஆகும்.

பன்னாட்டு வான் ஊர்திகள் பறக்க தமிழக அரசு அனுமதி மறுத்து வருகின்றது.

எனவே, தாங்கள் இந்தப் பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்தி, தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாட்டுத் தொழிலாளர்களை விரைவில் அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பன்னாட்டு வான் ஊர்திகள் பறக்க அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 31-05-2020 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment