Sunday, June 28, 2020

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு: வெளிமாநிலத் தமிழ் மாணவர்களும். தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். வைகோ அறிக்கை!

கொடிய கொரோனா தொற்று நோயால் நாடு பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ள நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்த வேண்டாம், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என 2020 ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று முதன்முதலாக அறிக்கை வாயிலாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

அதன்பின்னர் நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றது. இறுதியாக பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு இரத்து செய்யப் படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தார்கள்.

தமிழக பாடத்திட்டத்தின் படி வெளி மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி நிலை குறித்து அறிவிப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.

இதனால் மாராட்டிய மாநிலம், மும்பையில், தமிழக கல்வி முறையில் பயிலும் 190 மாணவர்கள் தங்கள் தேர்ச்சி நிலை குறித்து தெளிவான உத்தரவுகள் கிடைக்காததால் கவலை கொண்டுள்ளனர்.

இதுகுறித்த தகவலை மும்பை தமிழ் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் என் கவனத்துக்குக் கொண்டுவந்தார்கள்.

தமிழக அரசு 2019-20 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பில் பயின்ற தமிழக மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்ததைப் போல்,

தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மும்பை மாணவர்கள் 190 பேர் உட்பட, வெளி மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை விரைவில் வெளியிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 28-06-2020  தெரிவித்துள்ளார்.

Saturday, June 27, 2020

ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! வைகோ இரங்கல்!

ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்று ஏற்பட்டு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

கொரோனா தொற்று காலத்திலும் செய்திகளை மக்களுகுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில்தான் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. வேல்முருகன் 20 ஆண்டுகள் ஊடகத் துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருவந்திருக்கிறார்.

ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும் என்பதை வேல்முருகனுடைய இழப்பு நமக்கு உணர்த்துகிறது. ஊடகத் துறையில் பணியாற்றுகின்ற அனைத்துத் தோழர்களுக்கும், அவர்கள் சார்ந்த நிறுவனமும், அரசும் உரிய நோய்த் தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்ட வேண்டும்.

வேல்முருகனை இழந்து வாடும் மனைவி, குடும்பத்தார் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அவரது மனைவி சண்முகசுந்தரி ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். உயிரிழந்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு ஒளியேற்றும் வகையில்,  சண்முகசுந்தரியை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது இரங்கல் அறிக்கையில் 27-06-2020  தெரிவித்துள்ளார்.

Friday, June 26, 2020

காணொளி மூலம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உயர்நிலைக் குழுக் கூட்டம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம் 25.06.2020 அன்று கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் 23 பேர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15, 2020 நள்ளிரவில் சீனப் படையினர் ஊடுருவியதால், ஏற்பட்ட இந்திய -சீன இராணுவ மோதலில், எல்லையைக் காக்கும் பணியில் உயிர்த் தியாகம் செய்த தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்ளிட்ட 20  இந்திய வீரர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.

கொரோனா கொள்ளை நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் மனிதநேயக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது, நோய்த்  தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 2:

தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளத்தில் அலைபேசி விற்பனையகம் நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையைத் திறந்து இருப்பதாகக் கூறி, கடந்த ஜூன் 19 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தந்தை மகன் இருவரையும் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அடித்துத் துன்புறுத்தி இருக்கின்றனர். பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, மறுநாள் 20 ஆம் தேதி காலையில் கோவில்பட்டி அழைத்துச் சென்று கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி இரவு மகன் பென்னிக்ஸ் இதயவலி ஏற்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். ஜூன் 23 ஆம் தேதி காலை தந்தை ஜெயராஜும் உயிரிழந்துள்ளார். கோவில்பட்டி கிளைச் சிறையில் சட்ட விதிகளை மீறி காவலில் வைக்கப்பட்ட இருவரையும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் கொடூரமாக சித்ரவதை செய்ததால், உயிரிழந்திருக்கிருக்கின்றார்கள். இதில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். காவல்துறையினரின் கொலைவெறிக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

தமிழக காவல்துறையினர் நடத்தி வரும் இதுபோன்ற பச்சைப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், இக்கொடூர நிகழ்வின் உண்மை நிலையை வெளிக்கொணர பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்திட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3:

கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. ஜூன் 24 ஆம் தேதி நிலவரப்படி இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. நாடு முழுவதும் இதுவரையில் 14,576 உயிரிழப்புகள் நடந்துள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 67,468 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 45,814 பேர் ஆவர். 866 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 28,836 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 87 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஜூன் 24 ஆம் தேதி வரையில் 9 இலட்சத்து 712 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் மக்கள் தொகையில் மிக மிக சொற்பமான அளவுக்குக் கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.

கொரோனா தொற்று பரவலை முழுமையாக தடை செய்வதற்கும், பாதிப்பைக் கண்டறியவும் பொதுமக்களுக்கு பரிசோதனைகளை அதிகரிப்பது இன்றியாமையாதது ஆகும். அக்டோபர் - நவம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று ஐ.சி.எம்.ஆர். கொடுத்துள்ள எச்சரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே நாளொன்றுக்கு ஒரு இலட்சம் பேருக்கும் மேல் பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு உரிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கு ரூ.3 ஆயிரம் கோடி, பாதிப்புகளைக் கட்டுப்படுத்த ரூ. 9 ஆயிரம் கோடி சிறப்பு நிதி, கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிட ரூ.4 ஆயிரம் கோடி என மொத்தம் 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரி இருந்தது. ஆனால், மத்திய அரசு வெறும் 510 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்தது. இந்த நிதி பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதி ஆகும். தமிழ்நாட்டிற்கு கொரோனா சிறப்பு நிதி அளிப்பதற்கு  மத்திய பா.ஜ.க. அரசு இதுவரை முன்வராதது வேதனை தருகிறது.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி காணொளி காட்சி மூலம் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மன்றத்தின் 40 ஆவது கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் மத்திய அரசுக்கு முன் வைக்கப்பட்ட கோரிக்கையில், 2017-18 ஆம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு வரப்பெற வேண்டிய ஜி.எஸ்.டி. தொகை ரூ.4073 கோடி, 2018-19 ஆம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ரூ.553.01 கோடி மற்றும் 2019-2020 ஆம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ரூ.1101 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை உட்பட மொத்தம் ரூ.5727.62 கோடியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு இருக்கிறது. ஏனெனில் மாநில அரசுகளின் நிதி வருவாய் ஜி.எஸ்.டி. நடைமுறைக்குப் பின்னர் வெகுவாகக் குறைந்து, அந்த நிதி ஆதாரம் முழுவதும் மத்திய அரசின் கருவூலத்தில் வெள்ளமெனப் பாய்கிறது. எனவே தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5:

கொரோனா பேரிடரைப் பயன்படுத்தி மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்களின் அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறித்து வருகின்றது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் மாநிலங்களின் மூலம் இறக்குமதி செய்வதற்குக் கூட அனுமதி இல்லை. மாநில அதிகாரப் பட்டியலில் உள்ள சுகாதாரத்துறையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துச் சென்றிருக்கிறது. பொதுப் பட்டியலின் கீழ் கொண்டு செல்லப்பட்டதால், கல்வித் துறையும் முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது.

பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், மத்திய நிதித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் மாநிலங்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய முகமையான பிரச்சனைகளை மத்திய அரசு வெறும் அறிவிப்பின் மூலம் செயல்படுத்த முனைவது அரசியல் சாசனத்தையே அவமதிக்கும் மோசமான நடவடிக்கை ஆகும்.

நகராட்சிகளைப் போல் மாநிலங்களைக் கருதும் மத்திய பா.ஜ.க. அரசின் மனப்பான்மை கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல, மத்திய அரசின் ஏகபோக ஏதேச்சதிகாரத்திற்கு வழி அமைப்பதாகும். இதே நிலைமை தொடருமானால் மாநிலங்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்பதை இக்கூட்டம் சுட்டிக் காட்டுகிறது.

தீர்மானம் 6:

மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 விழுக்காடும், அகில இந்தியத் தொகுப்புக்கு மத்திய அரசால் பெறப்படுகிறது. இந்த இடங்களை நிரப்பும்போது, பிற்படுத்தப்பட்டோரின் அகில இந்திய ஒதுக்கீடு 27 விழுக்காட்டை மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக புறக்கணித்து, சமூக நீதியைப் புதைகுழிக்கு அனுப்பி வருகிறது.

நடப்பு ஆண்டு உள்ளிட்ட கடந்த நான்கு ஆண்டுகளாக மருத்துவப் படிப்புக்காக மாநிலங்கள் வழங்கிய மொத்த இடங்கள் 42 ஆயிரத்து 842. இதில் ஒரு இடம்கூட பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஆனால் பா.ஜ.க. அரசு புதிதாக உருவாக்கியிருக்கும் இடஒதுக்கீடான பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

இதனால் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழ்நாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் 50 விழுக்காடு இடஒதுக்கீடும் பறிக்கப்பட்டுள்ளது. சமூக நீதியை மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் இந்நடவடிக்கைகளைக் கண்டித்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 2020 மே 13 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வழக்குத் தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஜூன் 11 ஆம் தேதி அளித்த உத்தரவில், இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது என்று குறிப்பிட்டதுடன், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஜூன் 12 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. மேலும் பல்வேறு கட்சிகளும் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணையின் போது மத்திய அரசு, மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்களிலிருந்து பெறப்படும் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. எனவே மத்திய அரசு மருத்துவப் படிப்புகளில் முறையான இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டில் பின்பற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், கடந்த 4 ஆண்டுகளாகப் பறிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை வழங்குவதற்கும், சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கவும் வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7:

கொரோனா பேரிடர் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மத்திய அரசு பெட்ரோல் - டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்தி வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது ஆகும்.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 40 டாலர் அளவுக்கு சரிந்துள்ள நிலையிலும், பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காமல் மத்திய அரசு, மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றி வருகிறது.

கொரோனா பொது முடக்கம் காரணமாக 82 நாட்களாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்தபோதும் அதன் பயன் பொதுமக்களுக்குக் கிடைக்காமல் இருக்க மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது.

கடந்த மார்ச் 14, 2020 அன்று பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி ரூ.3 உயர்த்தப்பட்டது. மீண்டும் மே 5 ஆம் தேதி கலால் வரி பெட்ரோலுக்கு13 ரூபாய் என்றும், டீசலுக்கு 10 ரூபாய் என்றும் உயர்த்தப்பட்டது.

தமிழக அரசு தன் பங்குக்கு மே 2 ஆம் தேதி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 28 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடு ஆகவும், டீசலுக்கு 20 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாகவும் உயர்த்தியது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஜூன் 7 ஆம் தேதியிலிருந்து அதிகரித்து வருகிறது. 18 நாட்களில் மட்டும் 1 லிட்டர் பெட்ரோல் விலை 9 ரூபாய் 41 காசுகளும், டீசல் விலை 9 ரூபாய் 58 காசுகளும் அதிகரித்துள்ளது.

இதனால் பெட்ரோல் விலை ரூ.83.09 ஆகவும், டீசல் விலை 76.77 ஆகவும் உயர்ந்துள்ளன.

கொரோனா கொள்ளை நோயால் மக்கள் பெரும் துயரத்தில் இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பது அக்கிரமம் ஆகும். மத்திய, மாநில அரசுகள் கலால் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரிகளை குறைத்தது. பெட்ரோல், டீசல் விலையை 30 விழுக்காடு குறைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 8:

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த முடியாத சூழல் இருப்பதால் இந்தக் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை இரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி முதன் முதலில் அறிக்கை வெளியிட்டார்.

இதுகுறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் திரு கே.ஏ.செங்கோட்டையன் கவனத்திற்கு செய்தியாளர்கள் கொண்டு சென்றபோது, வைகோ அவர்களின் கருத்தை முதல்வருடன் கலந்தாய்வு செய்து முடிவு எடுப்போம் என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால் தமிழக முதல்வர் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று அறிவித்தது மட்டுமின்றி, ஜூன் 15 ஆம் தேதி தேர்வு நடத்த தமிழக அரசு முன்னேற்பாடுகளைச் செய்து வந்தது. இந்நிலையில் மீண்டும் மே 13 மற்றும் ஜூன் 8 ஆம் தேதிகளில் 10 ஆம் வகுப்புத் தேர்வை இரத்துச் செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வலியுறுத்தினார்.

மேலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வைத் தள்ளி வைக்கக் கோரி அறப்போராட்ட அறிவிப்பை வெளியிட்டன.

தமிழக அரசு ஜூன் 9 ஆம் தேதி 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை இரத்து செய்து, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. முதன் முதலில் இக் கருத்தை முன் வைத்து, கொரோனா பேரிடர் நேரத்தில் இலட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்தம் பெற்றோரையும் கவலையிலிருந்து மீட்கச் செய்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 9:

மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், அதனை மறைமுகமாக அல்ல நேரடியாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தை ஓசை படாமல் எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருகிறது.

நடப்புக் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான பாடப் பிரிவுகள் மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. மொழிப்பாடங்கள் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, எஞ்சியுள்ள மூன்றாம் பகுதியில் முக்கியப் பாடங்களுக்கு என்று நான்கு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றிலும் மொத்தம் 300 மதிப்பெண்கள் இருக்கும் வண்ணம் மூன்றே பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும் தலா 100 மதிப்பெண்கள்) மட்டுமே இருக்கும் வகையில் புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்படி பகுதி 1 - தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் பாடங்கள், பகுதி 2 - ஆங்கிலம், பகுதி 3 முக்கியப் பாடங்கள், அதில் முதல் பிரிவு கணிதம், இயற்பியல், வேதியியல் என்றும், இரண்டாம் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல் என்றும், மூன்றாம் பிரிவு கணிதம் இயற்பியல், கணினி அறிவியல் என்றும், நான்காம் பிரிவு வேதியியல், உயிரியல், மனையியல் என்றும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், மொத்த மதிப்பெண்கள் 600க்கு பதில், இனி 500 ஆக இருக்கும் என்றும் மாணவர்கள் தாங்கள் உயர் கல்வி பயில விரும்பும் படிப்பிற்கான பாடப்பிரிவு தேர்வினை 11 ஆம் வகுப்பில் சேரும்போதே இறுதி செய்துகொள்வதன் மூலம் கூடுதல் பாடங்களைப் படிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கின்றோம் என்ற போர்வையில் பாடத் திட்டங்களில் தமிழக அரசு மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளவற்றைப் பார்த்தால், தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பெரும் வாய்ப்புகளையே தட்டிப் பறிக்கும் கொடும் செயலாகவேத் தெரிகிறது.

மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்காத மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்து பயில விரும்பினால், மாற்றப்பட்ட பாடப் பிரிவுகளின் கீழ் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பொறியியல் படிப்புகளில் சேர முடியாது.

ஏனெனில் பிரிவு மூன்று மற்றும் பிரிவு நான்கில் சேரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பு மற்றும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் போடவே முடியாத நிலைக்குத் தள்ளும் வகையில் புதிய பாடப் பிரிவுகள் மூலம் சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசு திணித்துள்ள நீட் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளைக் கானல் நீராக ஆக்கி உள்ள நிலையில், தற்போது பொறியியல் கல்வி கனவையும் தகர்க்கும் நிலையைத் திட்டமிட்டே தமிழக பள்ளிக் கல்வித்துறை உருவாக்கி இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஏனெனில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் வடநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் பா.ஜ.க. அரசின் வஞ்சகப் போக்கிற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு பலியாகி இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

எனவே தமிழக அரசு 11 ஆம் வகுப்பு பாடத் திட்டங்களை மாற்றும் அறிவிப்பைக் கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம்: 10

கொரோனா நெருக்கடியால் நாடு சிக்கியிருக்கும் காலத்தில் மத்திய பா.ஜ.க. அரசு, மாநில அரசுகளின் கருத்துகளைக்கூட கேட்காமல், ஏதேச்சாதிகாரமான அவசரச் சட்டங்கள் கொண்டுவந்து, வேளாண்மைத் தொழிலையே வினாக்குறி ஆக்கி இருக்கின்றது.

மின்சார சட்டத் திருத்த மசோதா -2020, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் -1955 இல் திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம் -2020, விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி வேளாண் சேவைகள் அவசரச் சட்டம் -2020 போன்ற அவசரச் சட்டங்கள் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரானவை ஆகும்.

மின்சார சட்டத் திருத்தம், விவசாயிகள் பெற்று வரும் இலவச மின்சார உரிமையைப் பறிக்கிறது.

மேலும் ஜூன் 3, 2020 இல் மத்திய அரசு பிறப்பித்துள்ள மூன்று சட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் - 1955 திருத்தச் சட்டம், தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், உணவாகப் பயன்படும் எண்ணெய் வகைகள், உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலிலிருந்து நீக்கி உள்ளது. இதனால் இவற்றின் விலையை நிர்ணயிக்கும் பெரு நிறுவனங்கள், பதுக்கல்காரர்களால் விலையேற்றம் நடக்குமே தவிர, விவசாயிகளுக்குப் பயன் இல்லை.

வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம் -2020, ஒரே நாடு; ஒரே வேளாண் சந்தை என்று கூறுகிறது. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வர்த்தகர்கள், பெரு நிறுவனங்கள் விவசாய விளை பொருட்களை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யலாம் என்று இச்சட்டம் அனுமதி அளிக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழு சட்டங்கள் வேளாண் கொள்முதலை இனி கட்டுப்படுத்த முடியாது. தனியார் கொள்முதல் நிலையங்கள் விலையைத் தீர்மானிக்கும்.

விவசாயிகள் (அதிகாரப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் அவசர சட்டம் -2020, ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவித்து, வேளாண் வணிக நிறுவனங்கள் மற்றும் பெருவர்த்தக நிறுவனங்கள் வேளாண் உற்பத்தியைத் தீர்மானிக்க வழி செய்கிறது.

வேளாண்மைத் தொழிலை வர்த்தக நிறுவனங்கள், பெரு வணிக குழுமங்களிடம் ஒப்படைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 11:

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழ்வது சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்தான். இவைதான் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 28 சதவீத பங்கு வகிக்கிறது. அதேபோல் நாட்டின் ஏற்றுமதியில் இத்துறையின் பங்களிப்பு 40 சதவீதமாகும். அத்துடன் இத்துறையின் மூலம் 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த முழு ஊரடங்கானது இத்தொழில் நிறுவனங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்நிறுவனங்கள் பாதிப்புகளிலில் இருந்து மீண்டு வரவும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கவும், வருவாய் இழப்பினை ஈடு செய்யவும், ஆத்ம நிர்யர் பாரித் என்ற ஊக்குவிப்புக் கடன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 13.05.2020 அன்று ரூபாய் 3 இலட்சம் கோடியினை ஒதுக்கீடு செய்தது.

இத்திட்டமானது கடன் பெறும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 29.02.2020 அன்று வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் நிலுவையில் உள்ள கடனுக்கு 20 சதவீதம் கடனாக அசையா சொத்துக்களை அடமானம் ஏதும் வைக்காமல் பெறலாம் என்றும், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை அந்நிறுவனங்கள் வர்த்தகம் செய்யவும் 24.02.2020 அன்று வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் 25 கோடிக்கு மிகாமல் கடன் நிலுவையில் இருந்தால் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இத்திட்டத்தின் முழுப் பலன்களையும் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட செயல்வடிவத்தின் படி கீழ்க்கண்ட சிறிய திருத்தங்களைச் செய்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து தொழில் நடத்திடவும், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும்.

1) ரூபாய் 100 கோடிக்கு அதிகமாக வர்த்தகம் செய்யும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 29.02.2020 அன்று வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட நிலுவைக் கடன் தொகை 25 கோடிக்கு அதிகமாக இருக்குமேயானால் அந்நிறுவனங்களுக்கு அதிகபட்சம் 25 கோடிக்கு 20 சதவீதமாக ரூபாய் 5 கோடி கடன் வழங்க வேண்டும்.

2) இத்திட்டமானது சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கு மத்திய அரசால் 100 விழுக்காடு கடன் உத்தரவாதம் வழங்கப்படும் என்று அறிவிப்பு இருக்கையில், வங்கிகள் தங்களிடம் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் நிறுவனங்களை ஏற்கனவே வங்கிகளிடம் அடமானம் வைக்கப்பட்ட அசையா சொத்துக்கள் மீது வழங்கப்பட்ட பழையக் கடன் தொகையினையும் இப்புதிய திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொகையினையும் சேர்த்து ஏற்கனவே பதிவுத்துறை பத்திரப் பதிவு அலுவலகத்தில் முத்திரைத் தீர்வையைச் செலுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணப் பதிவை மீண்டும் ஒருமுறை தற்போது உள்ள ஒட்டுமொத்தக் கடன் தொகைக்கு முத்திரைத் தீர்வை செலுத்தி செலுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணமாக்க வேண்டும் என்று வங்கிகள் நிபந்தனை விதிக்கின்றன.

இம்முறையானது கடன் பெறும் நிறுவனங்கள் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் மீண்டும் தேவையற்ற ஒரு செலவினை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. எனவே வங்கிகள் புதிதாக ஆவணப் பதிவு செய்யத் தேவையில்லை என்ற ஆணையை மத்திய அரசு வழங்கம் வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 12:

கொரோனா தீநுண்மி பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஏழை எளிய உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செஞ்சிலுவைச் சங்கம் போன்று சேவை புரியும், உதவிகளை வழங்கும் என்று கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அறிவித்து இருந்தார். பொதுச்செயலாளரின் அன்பு வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முழுவதும் மறுமலர்ச்சி தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் சக்திக்கு மீறிய வகையில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி அறப்பணி ஆற்றி உள்ளனர். இத்தகைய மனிதநேயப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு சேவை செய்த கழகத்தின் கண்ணின் மணிகள் அனைவருக்கும் இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 13:

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா தீநுண்மி துயரம் எப்போது தீரும்? என்று கணிக்க முடியாத சூழலில், கொரோனா தடுப்புப் பணிகளிலும், கொரோனா பாதித்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளிலும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் இடையறாது சேவை புரியும் காவல்துறை, வருவாய்துறை உள்ளிட்ட பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது என‌ மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 25-06-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைக் கழகம்

Thursday, June 25, 2020

11ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம்; தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி! வைகோ கண்டனம்!

மத்திய பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், அதனை மறைமுகமாக அல்ல நேரடியாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தை ஓசை படாமல் எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருகிறது.

நடப்புக் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான பாடப் பிரிவுகள் மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. மொழிப்பாடங்கள் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, எஞ்சியுள்ள மூன்றாம் பகுதியில் முக்கியப் பாடங்களுக்கு என்று நான்கு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றிலும் மொத்தம் 300 மதிப்பெண்கள் இருக்கும் வண்ணம் மூன்றே பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும் தலா 100 மதிப்பெண்கள்) மட்டுமே இருக்கும் வகையில் புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்படி பகுதி 1 - தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் பாடங்கள், பகுதி 2 - ஆங்கிலம், பகுதி 3 முக்கியப் பாடங்கள், அதில் முதல் பிரிவு கணிதம், இயற்பியல், வேதியியல் என்றும், இரண்டாம் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல் என்றும், மூன்றாம் பிரிவு கணிதம் இயற்பியல், கணினி அறிவியல் என்றும், நான்காம் பிரிவு வேதியியல், உயிரியல், மனையியல் என்றும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மொத்த மதிப்பெண்கள் 600க்கு பதில், இனி 500 ஆக இருக்கும் என்றும் மாணவர்கள் தாங்கள் உயர் கல்வி பயில விரும்பும் படிப்பிற்கான பாடப்பிரிவு தேர்வினை 11 ஆம் வகுப்பில் சேரும்போதே இறுதி செய்துகொள்வதன் மூலம் கூடுதல் பாடங்களைப் படிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கின்றோம் என்ற போர்வையில் பாடத் திட்டங்களில் தமிழக அரசு மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளவற்றைப் பார்த்தால், தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பெரும் வாய்ப்புகளையே தட்டிப் பறிக்கும் கொடும் செயலாகவேத் தெரிகிறது.

மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்காத மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்து பயில விரும்பினால், மாற்றப்பட்ட பாடப் பிரிவுகளின் கீழ் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பொறியியல் படிப்புகளில் சேர முடியாது.

ஏனெனில் பிரிவு மூன்று மற்றும் பிரிவு நான்கில் சேரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பு மற்றும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் போடவே முடியாத நிலைக்குத் தள்ளும் வகையில் புதிய பாடப் பிரிவுகள் மூலம் சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசு திணித்துள்ள நீட் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளைக் கானல் நீராக ஆக்கி உள்ள நிலையில், தற்போது பொறியியல் கல்வி கனவையும் தகர்க்கும் நிலையைத் திட்டமிட்டே தமிழக பள்ளிக் கல்வித்துறை உருவாக்கி இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஏனெனில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் வடநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் பா.ஜ.க. அரசின் வஞ்சகப் போக்கிற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு பலியாகி இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

எனவே தமிழக அரசு 11 ஆம் வகுப்பு பாடத் திட்டங்களை மாற்றும் அறிவிப்பைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 25-06-2020 தெரிவித்துள்ளார்.

Wednesday, June 24, 2020

தமிழக அரசு நிபந்தனையால் சாட்டர் வானூர்திகள் ரத்து! மஸ்கட்டில் தவிக்கும் தமிழர்களை தாயகத்திற்கு மீட்டு செல்லுமாறு, வைகோ எம்பி அவர்களுக்கு ஓமன் தமிழர்கள் கோரிக்கை!

தலைவர் வைகோ எம்பி அவர்களுக்கு,
வணக்கம்!

கொரொனா கோவிட் 19 தொற்றால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்து நாடுகளும் பயணிகள் வானூர்தி போக்குவரத்தை ரத்து செய்தன. இதனால் வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், வேலை இழந்தும், மருத்துவத்திற்காகவும், குடும்ப சூழலாலும் சொந்த நாட்டிற்கு திரும்ப இயலாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வந்தே பாரத் திட்டம் மூலம் ஏப்ரல் மாதம் ஓரிரு வானூர்திகளே ஓமனிலிருந்து, தமிழ்நாட்டு தலைநகர் சென்னைக்கு பயணிகளுடன் வந்துள்ளது. ஜூன் 29 ஆம் தேதியும் ஒரு விமானம் மட்டுமே சென்னைக்கு பயணப்படுவதாக ஓமன் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆயிரகணக்கான தமிழர்கள் ஓமன் இந்திய தூதரகத்தில் பயணத்திற்காக பதிவு செய்தும் காத்திருக்கின்றனர்.

ஓமனிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஓரிரு வானூர்திகளே இயங்கும் நிலையில், 
இங்குள்ள தமிழர்கள் தன்னார்வலர்களாக இணைந்து தனியார் சாட்டர் வானூர்திகளுடன் பேசி வானூர்திகள் ஏற்பாடு செய்து ஏழை தொழிலாளர்களை  தாயகம் அனுப்ப ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக  திருச்சி ஜூன் 23, 25 ஆம் தேதியும், மதுரை ஜூன் 24 ஆம் தேதியும் செல்ல ஏற்பாடு செய்து, தமிழ்நாடு அரசு மற்றும் ஓமன் இந்திய தூதரகத்தின் அனுமதியையும் தனியார் வானூர்திகள் பெற்றிருந்தன.  

(இதனால் 1200 கிமீ தொலைவிலுள்ள மக்கள் விமானத்திற்காக முந்தின நாள் இரவே விமான நிலையம் வந்துவிட்டார்கள். காலையில் வானூர்தி புறப்பட இருந்த சில மணி நேரம் முன்புதான் ஜூன் 23 ஆம் தேதி திருச்சி செல்ல வேண்டிய வானூர்தி ரத்தாகியுள்ள செய்தி கிடைத்திருக்கிறது. அதில் பல கர்பிணி பெண்கள் இருந்துள்ளனர். வானூர்தி ரத்தாததால் மஸ்கட்டிலே தங்க வசதியில்லாமல் அவதியுறுகின்றனர். பலரை தன்னார்வலர்கள் ஹோட்டல்களில் தங்க வைத்திருக்கின்றனர். பலர் வீடு திரும்பி வேறு நாளுக்காக காத்திருக்கின்றனர். )

23 ஆம் தேதி தாயகம் அனுப்ப ஏற்பாடு செய்திருந்த நிலையில், அன்று காலை தமிழக அரசு தனியார் சார்ட்டர் விமானங்களுக்கு சில நிபந்தனைகளை விதித்தது. அதில், பயணிகள் பயணப்படும் முன் கோவிட் 19 பரிசோதனைக்காக பணம் கட்ட வேண்டும் அல்லது கோவிட் 19 சோதனை சான்று  வேண்டும். தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தரை இயங்கிய பிறகு, விடுதிகளில் தங்க வசதியில்லாதவர்களை, விமான நிலையம் அருகிலே  இலவசமாக 7 நாட்கள் தங்க வைக்க மண்டபம் போன்ற பெரிய வளாகங்களை, தொண்டு நிறுவனங்களே ஏற்பாடு செய்து, அதற்கான ஆதாரத்தையும் தமிழக அரசுக்கு வழங்க வேண்டுமென்றும், அதை தமிழக சுகாதாரதுறை அதிகாரிகள் சோதனையிட்டு அனுமதி பெற்றிருக்க வேண்டும். விடுதியில் தங்குகிறவர்களுக்கு செலவு தோராயமாக ஒரு நாள் ரூ 2500 ஆகும் செலவை பயணிகளே ஏற்கவேண்டும் என்ற அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டாலே வானூர்திகள் தமிழ்நாட்டில் இறங்க அனுமதிக்க இயலும் என்று கூறியுள்ளது தமிழக அரசு. 

வேலை இழந்த கூலி தொழிலாளர்கள், பல தன்னார்வலர்கள் உதவியுடன் பயண சீட்டு வாங்கவே சிரமபட்டு பயணசீட்டு வாங்கிய நிலையில்,  தமிழக அரசின் கடைசி நேர அறிவிப்பால் 23, 24, 25 ஆம் தேதி பயணம் செய்வதற்கான பயணசீட்டுகளும் எடுத்த நிலையில், கோவிட் 19 சோதனை, தங்குமிடத்திற்கு பணம் பணம் கட்ட இயலாததால் 23, 24, 25 ஆம் தேதி புறப்பட வேண்டிய சாட்டர் வானூர்திகள் அனைத்தும் ரத்தாகியுள்ளது.

இங்குள்ள தன்னார்வலர்கள் பெரும் சிரமமெடுத்து பெருந்தன்மையோடு எப்படியாவது தொழிலாளர்களை தாயகம் அனுப்ப வேண்டும் என்று முயலும் போது, தாய் மடியில் வந்த பிறகும் தாயே பிள்ளைகளை புறக்கணிப்பது போன்ற மனநிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது வேதனையளிக்கிறது. 

வந்தே பாரத் திட்டம் மூலம் வானூர்தி இல்லாமலும், தனியார் நிறுவனங்கள் மூலம் அரிதாக ஏற்பாடு செய்யப்படும் வானூர்திகளுக்கு கூட பல நிபந்தனை விதிப்பதன் மூலம் ஏழை தொழிலார்கள் ஓமனிலிருந்து தாயகம் செல்வது கனவாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. 

ஆகவே தமிழக அரசு இந்திய அரசு விமானங்களை அதிகமாக இயக்க அனுமதி வழங்க வேண்டுமென்றும், தனியார் சாட்டர் விமானங்களையும் எந்த நிபந்தனையுமின்றி தமிழ்நாட்டில் தரையிறங்க அனுமதித்து ஏழை தொழிலாளர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு தலைவர் வைகோ அவர்கள் அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களை மீட்டு தாயகம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யுமாறு ஓமன் தமிழர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
செயலாளர்
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை.
24-06-2020

Tuesday, June 23, 2020

காவல்துறை தாக்குதலால் தந்தை மகன் மரணம்! காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நீதி விசாரணை நடத்துக! வைகோ அறிக்கை!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த 26 வயது இளைஞர் பென்னிகஸ் மற்றும் அவரது 5தந்தை ஜெயராஜ்(56) காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, கோவில்பட்டி கிளைச் சிறையில் பூட்டப்பட்ட நிலையில், நேற்று இரவு பென்னிகஸும், இன்று காலை அவரது தந்தை ஜெயராஜும் இறந்துவிட்ட தகவல் அதிர்ச்சி அளிக்கின்றது.

சாத்தான்குளத்தில் செல்போன் கடையை அடைக்கக் கோரி காவல்துறையினருக்கும், கடை உரிமையாளரான பென்னிகஸுக்கும் ஜூன் 19 ஆம் தேதி மாலையில் வாக்குவாதம் எழுந்து இருக்கிறது. அதை ஒட்டி சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் சில காவலர்களும் சேர்ந்து இருவரையும் காவல் நிலையத்திற்குஅழைத்துச் சென்று, காவலர்கள் சிலர் துணையோடு காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதோடு, காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப் பதிந்து, கைது செய்து, ஜூன் 20 அன்று கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். குற்றவியல் சட்டம் 176(1)(ஏ) பிரிவின்படி குற்றவாளிகளைச் சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் இங்கு எழுகிறது.

தாக்கப்பட்டவர்களை நேரில் பார்க்கமலேயே நீதிபதி ரிமாண்ட் செய்திருக்கிறார்.

கோவில்பட்டி கிளைச் சிறையில் ஜெயராஜ் அவர்களின் ஆசானவாயில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதற்கிடையே காவல்துறை தாக்குதலில் நிலைகுலைந்து இருந்த பென்னிகஸ் நேற்று 22 ஆம் தேதி மாலை கோவில்பட்டி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார்.

இன்று ஜூன் 23 காலை அவரது தந்தையார் ஜெயராஜும்  கோவில்பட்டி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இது முழுக்க முழுக்க சாத்தான்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளரும், காவல்துறையினரும் நடத்திய அப்பட்டமான படுகொலை என குற்றம் சாட்டுகிறேன்.

சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டவர்களை ரிமாண்ட் செய்து, தூத்துக்குடி கிளைச் சிறையிலோ அல்லது பாளையங்கோட்டை மத்திய சிறையிலோ அடைக்காமல், வெகு தூரத்தில் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறைக்குக் கொண்டு சென்றதிலிருந்தே காவல்துறையினரின் குற்றச் செயல் உறுதி ஆகிறது.

காவல்துறையினரின் இந்த அப்பட்டமான படுகொலைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை பணி நீக்கம் செய்வதோடு, கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.

காவல்துறையினரின் இதுபோன்ற கொடிய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இருவரது உடல்களையும் வெவ்வேறு மருத்துவமனைகளில் நிபுணத்துவம் பெற்ற மூன்று மருத்துவர்கள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்திட வேண்டும்.

இச்சம்பவம் குறித்து உண்மை நிலையை வெளிக்கொணர, பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என மறுமலர்ச்சி திமுக சார்பில் வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 23-06-2020 தெரிவித்துள்ளார்.

Monday, June 22, 2020

மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ரயில்வே துறை கைவிட வேண்டும்! வைகோ அறிக்கை!

17 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்ற, உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது இந்தியன் ரயில்வே.  

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகின்ற பல்வேறு நடவடிக்கைகள், அந்தத் துறையை முடக்கி, தனியார் கைகளில் கொடுப்பதற்கான திட்டங்கள், படிப்படியாக நிறைவேற்றப்படுவதைக் காட்டுகின்றது, 

அதன் ஒரு கட்டமாக, ரயில்வே வாரியம்  ஜூன் 17 புதன்கிழமை வெளியிட்டு இருக்கின்ற ஆணையில், இந்தியா முழுவதும் உள்ள 17 ரயில்வே மண்டலங்களில் இயங்கும் 508 பயணிகள் தொடரிகளை, விரைவுத் தொடரிகளாக மாற்றுவதற்கு, விரைந்து முடிவு எடுத்து, இரண்டே நாட்களுக்கு உள்ளாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு இருந்தது. 

அவ்வாறு, விரைவுத் தொடரிகளாக மாற்றினால், பயணிகள் கட்டணமும், இரண்டு மடங்கு உயர்த்தப்படும்.

எடுத்துக்காட்டாக, திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு, தற்போது 40 ரூபாய் கட்டணம். இனி அது 100 ரூபாயாக உயரும். அதுபோலவே, செங்கோட்டையில் இருந்து மதுரைக்கான கட்டணமும், 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விடும். 

விழுப்புரம் / திருப்பதி, புதுச்சேரி/ திருப்பதி, விழுப்புரம் திருநெல்வேலி,  கோவை/ கண்ணனூர் என, அனைத்துத் தொடரிகளிலும் கட்டணம் இரு மடங்காக உயரும். 

இந்திய ரயில்வே வாரிய நிதி ஆணையாளர் (Financial Commissioner) கடந்த 19-06-2020 அன்று, அனைத்து பொது மேலாளர்களுக்கும் இரயில்வேயில் செலவினங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று வழிகாட்டுதல் வழங்கி இருக்கின்றார். 

அதில் ஐந்தாவது பிரிவில் வரிசை எண் 'C'ல் கூறி இருப்பதாவது:-

 "வருமானம் இல்லாத பாதைகளில் இரயில் இயக்கத்தை நிறுத்தி, அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது"  

தமிழகத்தில் சென்னை- கோயம்புத்தூர் மற்றும் சென்னை- நாகர்கோவில் வழித்தடங்கள் மட்டுமே லாபம் ஈட்டக்கூடிய , வழித்தடங்கள் என்று இரயில்வே கருதுகின்றது. 

மதுரை - இராமேஸ்வரம், திருச்சி - இராமேஸ்வரம், 
மதுரை - திருச்செந்தூர், மதுரை - கரூர் - ஈரோடு, 
திருச்சி - நாகூர், திருச்சி- கரூர், விழுப்புரம் - தஞ்சாவூர், 
விழுப்புரம் - காட்பாடி, மதுரை - செங்கோட்டை, 
விழுப்புரம் - திண்டிவனம், செங்கல்பட்டு- அரக்கோணம் போன்ற வழித்தடங்களில் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன.  

மேற்கண்ட பயணிகள் ரயில்களால் ரயில்வேக்கு போதுமான வருமானம் இல்லை என்பது உண்மை. ஆனால் சமூகத்தின் கீழ்த்தட்டு மக்கள், கிராமப்புற மக்கள், மாணவர்கள் மற்றும் ஏழை எளிய தொழிலாளர்கள், ரயில்களைத்தான் நம்பி இருக்கின்றார்கள்.   

மேலும், விரைவு வண்டிகளாக மாற்றப்படுவதால், பெரிய ஊர்களில் மட்டுமே வண்டிகள் நிற்கும். அடுத்த நிலையில் இருக்கின்ற சிற்றூர் மக்கள், தொடரிகளை மறந்து விட வேண்டியதுதான்.  இதனால், அன்றாட வணிகத்திற்கும், தொழிலுக்கும் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 

இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு, தொடரிப் பயணமே கட்டுபடியாகக் கூடியதாக இருக்கின்றது. 
கொரோனா முடக்கத்தால், வருமானத்திற்கு வழி இன்றி மக்கள் தவிக்கின்ற வேளையில்,  இத்தகைய நடவடிக்கைகள், தேவை அற்றவை,மக்கள் ஆட்சிக்கு எதிரானவை. 

எனவே, மக்களைக் கடுமையாகப் பாதிக்கின்ற நடவடிக்கைகளை, ரயில்வே துறை கைவிட வேண்டும். பயணிகள் ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக, சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கும், சென்னையில் இருந்து கோவை பாலக்காடு வரையிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பயணிகள் தொடரிகள் ஓடுவதற்கு, ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதன்மூலம், சாலைப் போக்குவரத்து நெருக்கடியை வெகுவாகக் குறைக்கலாம் விபத்துகளைக் குறைக்கலாம். குறைந்த செலவில், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யலாம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 22-06-2020 தெரிவித்துள்ளார்.

Friday, June 19, 2020

வளைகுடாவில் இறந்தவர்களின் உடல்கள் வைகோ முயற்சியால் தமிழகம் வந்தன!!

கோவில்பட்டி அப்பனேரியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் பிரகாஷ் திருப்பதி ஓமன் (மஸ்கட்) நாட்டில் உயிர் இழந்தார் என்ற தகவல் கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்பி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. 

அவர், வெளியுறவுத் துறை மூலமாக உடலைத் தாயகம் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொண்டார். 

பிரகாஷ் திருப்பதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தமது கடிதத்தில் கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில், பிரகாஷ் திருப்பதி உடல் 18.06.2020 காலை சென்னை வான் ஊர்தி நிலையம் வந்து சேர்ந்தது. உறவினர்கள் உடலைப் பெற்றுக் கொண்டு. சொந்த ஊருக்குச் சென்றனர்.

பிரகாஷ் திருப்பதி மரணம் குறித்து உரிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என ஓமனில் உள்ள இந்தியத் தூதர் வைகோவிற்கு விளக்கம் அளித்து மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.

அதேபோல ஓமன் நாட்டில் 14 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த, கலிங்கப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி, 12 நாட்களுக்கு முன்பு இயற்கை எய்தினார்.  வைகோ முயற்சியால், அவரது உடல் நேற்று மாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது.

பெரம்பலூர் மாவட்டம் - குன்னம் வட்டம், பேரளி கிராமத்தைச் சேர்ந்த மதுரை வீரன், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அபுதாபியில் இயற்கை எய்தினார்.

அவரது உடலைக் கொண்டு வருவதற்கும் வைகோ அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார்.
மதுரைவீரன் உடல்  ஜூன் 26ஆம் தேதி சென்னை வருகின்றது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 19-06-2020  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 17, 2020

காவல்துறையினருக்கான கொரோனா நிவாரணத்தை உடனே வழங்குக!தமிழ்நாடு அரசுக்கு வைகோ கோரிக்கை!

அனைவரையும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கின்ற கொடிய கொள்ளை நோய் கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், காவல்துறையினர் தங்கள் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாது மரணமே நேரினும் அதனை எதிர்கொள்ளும் மனத் துணிவுடன் இரவு பகலாகத் தொண்டாற்றி வருகின்றனர்.

கால நேரமின்றிப் பணியாற்றும் காவல்துறையினருக்கு கொரோனா தொற்று நோய் பாதித்தால் இரண்டு இலட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இதுவரையில் 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் அரசாங்கம் அறிவித்தவாறு நிவாரணம் எதுவும் தரவில்லை. சொன்ன வாக்குறுதியை தமிழ்நாடு அரசு காப்பாற்றாவிடில், அரசின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதோடு, அரசுப் பணிகள் ஆங்காங்கே முடங்குவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அறிவித்தவாறு நிவாரணம் வழங்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 17-06-2020 தெரிவித்துள்ளார்.

1018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் மாற்றம் திருத்தங்கள் தேவை - வைகோ அறிக்கை!

தமிழ் அறிஞர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுகின்ற முறையில் மாற்றங்கள் செய்து தமிழக அரசு பிறப்பித்து இருக்கின்ற ஆணை வரவேற்கத்தக்கது. பெரும்பாலான திருத்தங்கள் சரியாகத்தான் இருக்கின்றன.

சில திருத்தங்களில் ஒரே அளவுகோல் பின்பற்றப்படவில்லை.

குறிப்பாக தமிழில் நெடில் எழுத்துகளை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என இந்த ஆணை வரையறுக்கவில்லை; தெளிவுபடுத்தவில்லை.

வேலூர் என்பதை, ஆங்கிலத்தில் ‘Veeloor’ வீலூர் என எழுதியதற்குப் பதிலாக, ‘Vaeloor’ என எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும். 

வீடூர் என்பதை, ‘Veedur’ என எழுதி இருக்கின்றார்கள். டூர் என்ற நெடில் இல்லை. 

சில ஊர்களின் பெயர்களில் மட்டும் நெடிலாக ஒலிக்க வேண்டிய இடங்களில் இரண்டு ‘AA’ சேர்த்து எழுதப்பட்டு இருக்கின்றது. பல ஊர்களில் அந்த மாற்றம் இல்லை.  

வடக்கு அவிநாசிபாளையம் என்பதில், பாளையம் என்ற நெடிலுக்கு இரண்டு ‘AA’ உள்ளது, ஆனால், அவினாசி என்ற நெடிலுக்கு ஒரு ‘A’ தான் உள்ளது. எனவே, அதை அவினசிபாளையம் என்றே வாசிக்க முடியும். 

திருவாதவூருக்கு இரண்டு ‘AA’ இல்லை. எனவே, திருவதவூர் என ஆகின்றது.  திருவாரூர் என்பது, திருவரூர் என்றே இருக்கின்றது. 

பெரியநாயக்கன்பாளையம் என்பதை, பெரியநயக்கன்பாளையம் என்றே வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது. 

ஆண்டிபாளையம், அண்டிபாளையம் ஆக இருக்கின்றது. மணப்பாறையில் இரண்டு  ‘AA’ இல்லை. 

அதியமான் கோட்டை என்பது, ‘Athiyamankottai’ என்கிறது அரசு ஆணை. 

இங்கே, மான் என்ற  நெடிலுக்கு இரண்டு ‘AA’ இல்லை. 

திருமுல்லைவாயில் என்பது, ‘Thirumullaivaayal’ என மாற்றம் பெற்றுள்ளது. 

அதில், ‘த’ என்ற எழுத்திற்கு, ஆங்கிலத்தில் ‘Th’ என எழுதப்பட்டு இருக்கின்றது. 

தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய ஊர்களில் உள்ள த என்ற எழுத்திற்கும், ‘Th’ என்று உள்ளது. அதுபோலவே, பல ஊர்களில் த என்ற எழுத்திற்கு ‘Th’ என எழுதி இருக்கின்றார்கள். 

ஆனால், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களின் பெயர்களில், த என்ற எழுத்திற்கு வெறுமனே ‘T’ என்ற ஆங்கில எழுத்து மட்டுமே உள்ளது. 

வேலி என்பதற்கான நெடில் எழுத்திலும் மாற்றம் இல்லை. 

எனவே, அதை முன்பு போலவே, டிருநெல்வெலி என்றே வாசிக்க முடியும். 

அதேபோல, தென்காசி என்பதும் ஆங்கிலத்தில் டென்கசி என்றே வாசிக்கக்கூடியதாகவே இருக்கின்றது. திருத்தம் தேவை. 

திருவில்லிபுத்தூர் என்பதில் இரண்டு ‘OO’ இல்லை.  

ஈரோடு என்பதற்கு, இரண்டு ‘EE’ தேவை.

சேத்தூர் என்பதற்கு, மாவட்ட ஆட்சியர் ‘Seththur’ என பரிந்துரை செய்துள்ளார். ஆனால், அதை ‘Saeththoor’ என மாற்றி இருக்கின்றார்கள். இரண்டுமே பிழையானது. அது ‘ளுயநவாவாடிடிச’ என்றே இருக்க வேண்டும்.

தூக்கநாயக்கன் பாளையம் என்ற பெயரே இல்லாமல் போய்விட்டது. அதை, ஆங்கிலத்தில் ‘Thu.Naa. Paalayam’ என மாற்றி விட்டார்கள். 

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபொழுது, வடமொழியில் எழுதப்பட்டு இருந்த சில ஊர்களின் பெயர்களைத் தமிழில் மாற்றினார். குறிப்பாக, ‘மாயவரம்’ என்பது மயிலாடுதுறை ஆனது. 

ஆனால், வேதாரண்யம்,  திருமறைக்காடு ஆகவில்லை. ‘விருத்தாசலம்’, திருமுதுகுன்றம் ஆகவில்லை. 

இவையெல்லாம் நீண்டகாலக் கோரிக்கை. இதுகுறித்து, அரசு ஆணையில் எந்த அறிவிப்பும் இல்லை. 

ஆலயங்களில் உள்ள இறைவன், இறைவி பெயர்களையும் தமிழில் எழுத வேண்டும். 

தமிழில் வேப்பேரி என்பது ஆங்கிலத்தில் ‘Vepperi’ என்கிறது அரசு ஆணை. 

வே என்ற நெடில் வெ என்ற குறில் ஆகி இருக்கின்றது. ‘Vaeppaeri’ என்பதே பொருத்தமாக இருக்கும். 

க் என்றால் இரண்டு ‘KK’, ‘ச்’ என்றால் ‘Ch’ போட்டு இருக்கின்றார்கள். இது சரியானதே. ஆனால், இந்த மாற்றமும் பல ஊர்ப் பெயர்களில் இடம் பெறவில்லை. 

வாக்கூர் என்பதை மாவட்ட ஆட்சியர்  ‘Vaakkur’ என பரிந்துரை செய்து இருக்கின்றார். 

அரசு, ‘Vaakoor’ வாகூர் என ஆக்கி இருக்கின்றது. அதில் இரண்டு KK இல்லை.

‘மல்லிகைச் சேரி’ என்ற ஊர் ஆங்கிலத்தில் ‘Mallikaichcheri’ ஆகி இருக்கின்றது. 

ஆனால், எருக்கஞ்சேரி ‘Erukkenjery’ ஆகி இருக்கின்றது. 

இரண்டுமே சேரிகள்தான். ஆனால் அதை, ‘cheri, jery’ என இரண்டுவிதமாக எழுதி இருக்கின்றார்கள்.

சோழிங்கநல்லூர் ஆங்கிலத்தில் ‘Solinganalloor’ ஆகி இருக்கின்றது. 

ஆனால், எழும்பூர், ‘Ezhumboor’ ஆகி இருக்கின்றது. 

இரண்டு ஊர்களிலும், சிறப்பு ‘ழ’ கரம்தான் இருக்கின்றது. 

ஏன் இரண்டு விதமாக எழுதுகின்றார்கள்? 

‘Ezhumboor’ என்று எழுதினால், அதை ‘எஸ்ஹும்பூர்’ என்றுதான் பிற மொழிக்காரர்கள் வாசிப்பார்கள். 

‘எழும்பூர்’ என வாசிக்க மாட்டார்கள். 

இது மிகப்பெரிய குழப்பம். எனவே, ‘Elumpoor’ என எழுதுவதே சரி.

‘தமிழ்நாடு’ என்பதை ஆங்கிலத்தில் ‘Tamilnadu’ என்று எழுதுகின்றார்கள்.

அந்த ‘ழ’ வில் மாற்றம் இல்லை. பொதுவாக, ‘zha’ என்பதை பிறமொழிக்காரர்கள் ‘ழ’ என வாசிப்பது இல்லை. வட இந்தியர்கள் கூட, ‘டமில் நடு’ என்றுதான் சொல்லுகின்றார்கள். அதையும் ‘Thamilnaadu’ என்று எழுதுவதே பொருத்தமாக இருக்கும்.

சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்ற சில குறைகளை, அரசு களைய வேண்டும். அதற்காக, அறிஞர்கள் குழு ஒன்றைத் தெரிவு செய்து பொறுப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 17-06-2020 தெரிவித்துள்ளார்.

Tuesday, June 16, 2020

நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த பழநி! வைகோ புகழ் ஆரம்!

லடாக் எல்லையில், சீனப் படைகள் நடத்திய தாக்குதலில், இந்தியப் படை அதிகாரி ஒருவரும்,  வீரர்கள் இருவரும் உயிர் இழந்தனர், அவர்களுள் ஒருவர் தமிழகத்தின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த பழநி  என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். 

அன்று, 1962 இல் இந்தியா நட்பு உறவை நாடிய சூழலில்தான், இந்தியாவைச் சீனா தாக்கியது. 

அதைப் போலவே, தற்போதும் நேச உறவை வளர்க்கின்ற நோக்கத்தில்தான், சீனக் குடியரசுத் தலைவரை இந்தியா வரவேற்றது. 

தமிழகம் சிறப்பான வரவேற்பு அளித்தது. 

ஆனால், இப்போதும் சீனா தன் கைவரிசையைக் காட்டுகின்றது. கொரோனா வைரசைப் பரப்பியதான குற்றச்சாட்டுக் கணைகள், சீனாவை நோக்கிப் பாய்கின்ற நிலையில், உலகத்தின் கவனத்தைத் திசைதிருப்ப, இத்தகைய நடவடிக்கையில் சீனா இறங்கி இருக்கின்றது. 

ஏற்கனவே லடாக் பகுதியில் 37000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றிக் கொண்டு, அக்சாய்சின் எனப் பெயர் சூட்டிக்கொண்ட சீனா, 

மேலும் நிலத்தைப் பறிக்க முயல்கின்றது. 

இந்த வேளையில், நாட்டின் எல்லையைக் காப்பதற்காகத் தன் இன்னுயிர் ஈந்த வீரர்களின்  குடும்பத்தினருக்கு, என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன். 

தாக்குதல் நடைபெற்ற அன்று காலையிலும் பழநி தன் மனைவியோடு பேசி இருக்கின்றார். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள். 

22 ஆண்டுகள் பணிபுரிந்த பழநி, இன்னும் ஓராண்டில் ஓய்வு பெற இருந்த நிலையில், நாட்டுக்காகத் தன் உயிரை ஈந்திருக்கின்றார்.  

பழநியின் தம்பியும், இந்தியப் படையில் கடமை ஆற்றி வருகின்றார் என்பது பெருமைக்கு உரியது. 

வீரச்சகோதரன் பழநிக்குத் தலைவணங்கி கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிப்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது இரங்கல் அறிக்கையில் 16-06-2020  தெரிவித்துள்ளார்.

Monday, June 15, 2020

கல்வி தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்துக!/மத்திய - மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தல்!

கொரோனா தீநுண்மி பரவல் காரணமாக பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க முடியாத நிலை தொடர்கின்றது. இந்நிலையில், தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரையும், கல்லூரிகளும் இணைய வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன. அதே போல கலைக் கல்லூரிகள், தொழிற் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள், இணைய வழி கற்பித்தல் முறையைப் பின்பற்றி வரத் தொடங்கியுள்ளன.

இதில் மழலையர் பள்ளி தொடங்கி, பள்ளிக் கல்வி இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு இணைய வழி கற்பித்தல் என்பது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்ற நிலை இருக்கிறது.

இணைய வழி வகுப்புகள் நடத்துவதைத் தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஜூன் 10 ஆம் தேதி நீதியரசர்கள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய - மாநில அரசுகள் தரப்பில் இணைய வழி கற்பித்தல் வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான விதிகள் எதுவும் வகுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விதிமுறைகள் எதுவுமின்றி இணையவழி வகுப்புகள் நடந்து கொண்டு இருப்பதை மத்திய - மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 59 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. 1.3 கோடி மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். பொது முடக்கத்தால் இணைய வழிக் கல்வியை ஊக்குவிக்குமாறு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியது. அதற்கு ஏற்ப ஸ்வயம், பாடசாலா, தீக்ஷா உள்பட பல்வேறு கல்வி சார்ந்த வலைதளங்கள் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், ஸ்கைப், கூகுள் கிளாஸ், ஜூம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் இணைய வகுப்புகளை நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இணைய வழி கற்பித்தலுக்கான உள்கட்டமைப்புகளைப் பெற்று இருக்கின்றதா என்பதையும் ஆய்வு நடத்த வேண்டும்.

இணைய வழி கற்பித்தலுக்கு மின் வசதி, இணையத்தளத் தொடர்பு, கணினி, அறிவுத் திறன் பேசி (Smart phone) போன்ற வசதிகள் அனைத்துக் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்திருக்கின்றதா? என்பதையும் பார்க்க வேண்டும்.

ஆனால், உண்மை நிலை என்ன?

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் கிராமப்புறங்களில் 4.4 விழுக்காடு வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 23.4 விழுக்காடு வீடுகளிலும் மட்டுமே கணினிகள் உள்ளன. அதேபோன்று கிராமப்புறங்களில் 14.9 விழுக்காடு வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 42 விழுக்காடு வீடுகளில் மட்டுமே இணையதள (Internet) வசதிகள் உள்ளன.

மேலும் இவையன்றி, அறிவுத்திறன் பேசி வைத்துள்ளவர்கள் 24 விழுக்காடுதான் என்றும், 11 விழுக்காடு வீடுகளில்தான் கணினி, மடிக் கணினி, நோட்புக், நெட்புக் போன்றவை இருப்பதாக என்.எஸ்.எஸ்.ஓ ஆய்வு அறிக்கை 2017-18 தெரிவிக்கிறது.

‘ஸ்மைல் பவுண்டேஷன்’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்திய ஆய்வில், 56 விழுக்காடு பள்ளி மாணவர்களிடம் அறிவுத்திறன் பேசி இல்லாததால், எந்த முறையிலும் ‘ஆன்லைன்’ வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் இணையவழி கற்பித்தல் முறை என்பது சமூகத்தில் ஏழை எளிய, வசதியற்ற குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக் கனி என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

மேலும் இணைய வழி வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள், மாணவர்கள் காதொலிக் கருவிகளைப் பயன்படுத்துவதும், கண்கள், காதுகளின் திறனைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் 5 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு நீண்ட தூரம் ஆன்லைன்  வகுப்புகளை நடத்துவதாக பெற்றோர் புகார் அளித்தனர். கர்நாடக அரசு 5 ஆம் வகுப்புவரை  நேரலை இணைய வழி வகுப்புகளுக்கு தடைவிதித்துள்ளது.

கேரள மாநிலத்தில் பள்ளிகளுக்கு சோதனை முறையில் ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் என்று அரசு அறிவித்தது. அம்மாநில மலப்புரம் மாவட்டம், இரும்பிலியம் ஊராட்சியில் உள்ள கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணன் என்பவரின் மகள் தேவிகா அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இணைய வழி வகுப்பில் பங்கேற்க முடியாததால், தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

எனவே சமச்சீரற்ற முறையில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் இணையவழி  கற்பித்தல் முறையைக் கைவிட்டு, தொலைக் காட்சிகளின் வழியாக, தொலைக்கல்வி வகுப்புகள் நடத்தும் முறையை மத்திய - மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

தற்போது நெருக்கடியான காலகட்டத்தில் நாடு உள்ளபோது, செயற்கைகோள் மூலம் இயங்கும் கல்விக்கான சேனல்களை இதற்குப் பயன்படுத்தும் வகையில் திறனை அதிகரிப்பதுடன், தனியார் தொலைக்காட்சிகளிலும் கற்பித்தலுக்கான நேரத்தை ஒதுக்கித் தர மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.

இணைய வழி கற்பித்தலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், சிக்கல்கள், சமச் சீரற்ற முறைகளைக் கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகள் மூலம் நேரலை வகுப்புகளை நடத்திடும் திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 15-06-2020 தெரிவித்துள்ளார்.

Saturday, June 13, 2020

இந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகள் நேரும். வைகோ அறிக்கை!

உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் டெல்லியைச் சேர்ந்த நமஹா என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் தேசத்துக்கான இந்தியா எனும் பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டது. ‘இந்தியா’ என்ற பெயர் இன்னும் குறியீடாகவும், சொந்த மக்களுக்குப் பெருமையாகவும் இருக்கிறது. ஆனால் ‘இந்தியா’ எனும் பெயரை மாற்றி, ‘பாரத்’ என்று அழைக்கும்போது சுதந்திரத்துக்காகப் போராடிய முன்னோர்களுக்குப் பெருமைச் சேர்க்கும் விதமாக அமையும். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை நாம் கடந்துவிட்டோம் என்பதற்கு ‘பாரத்’ அல்லது ‘இந்துஸ்தான்’ பெயரை அங்கீகரிக்கும் நேரம் வந்துவிட்டது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, ‘இந்தியா’ எனும் பெயரை ‘இந்துஸ்தான் அல்லது பாரத்’ என்று மாற்ற மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு ஜூன் 3, 2020 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, “மனுதாரர் தனது மனுவின் நகலை மத்திய அரசின் சம்பந்தப்பட்டத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனை கோரிக்கை மனுவாகக் கருதி மத்திய அரசு முடிவு எடுக்கும்” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்ற ஒரு மனு 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், “ ‘இந்தியா’ அல்லது ‘பாரத்’ என்று அழைப்பது அவரவர் விருப்பம். நாட்டின் பெயரை மாற்றுமாறு கட்டளையிடுவது உச்சநீதிமன்றத்தின் பணி அல்ல” என்று மனுவைத் தள்ளுபடி செய்தார்.

தற்போது மீண்டும் அதே கோரிக்கையைப் பொதுநல வழக்காக தாக்கல் செய்திருப்பதும், அதனை உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்திருந்தாலும், மத்திய அரசின் தொடர்புள்ள அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும், மத்திய அரசு முடிவு எடுக்கும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. இதன் பின்னணிதான் பல ஐயப்பாடுகளை எழுப்புகிறது.

இந்திய அரசியல் நிர்ணய சபையில் விவாதித்து, “அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 1(1)இன் படி ‘பாரத்’ என்ற ‘இந்தியா’ மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று பிரகடனம் செய்யப்பட்டது.

இந்திய அரசியல் நிர்ணய சபையில், ‘இந்துஸ்தான்’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்புகள் எழுந்ததும், மறைக்க முடியாத வரலாறு ஆகும்.

இந்நிலையில், இந்துத்துவ சனாதன ஆதிக்க சக்திகளின் பிடியில் நாடு சிக்கியிருக்கின்ற இந்த நேரத்தில், நாட்டின் பெயரையே மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதும், அதற்கு உச்சநீதிமன்றத்தைத் துணைக்கு அழைப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள்1962 ஆம் ஆண்டில்  மாநிலங்களவையில் சுட்டிக் காட்டியது போல, இந்தியா ஒரு நாடு அல்ல, இணைக்கப்பட்ட துணைக் கண்டம் என்பதை பா.ஜ.க. ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முயற்சிப்பதும், ஆட்சி அதிகாரத்தை அதற்காக பயன்படுத்துவதும் கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.

இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள் வாழும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. ஆங்கிலேயர்களின் துப்பாக்கி முனைதான் இந்தியா என்ற நாட்டை கட்டமைத்தது  என்று முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவிரெட்டி அவர்கள் கூறிய கருத்தை மத்திய பா.ஜ.க. அரசுக்கு நினைவூட்டுகிறேன்.

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டுமெனில், ‘இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India)’ என்று மாற்றுவதுதான் பொருத்தமாகவும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பதாகவும் அமையும். அதைவிடுத்து, இந்துத்துவ சனாதன சக்திகள் தங்கள் விருப்பம் போல் நாட்டின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
13.06.2020

Friday, June 12, 2020

சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு!

மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து  இந்திய ஒதுக்கீட்டில்,  பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடங்கள் தரப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இடஒதுக்கீடு தரக்கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (12.06.2020) உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில், தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுச் சட்டங்களே பின்பற்றப்பட வேண்டும் என்றும் கோரி உள்ளார். 

இது தொடர்பாக வைகோ அவர்கள், ஏற்கனவே உச்ச நீதி மன்றத்தில் தொடுத்து இருந்த வழக்கில், உச்சநீதிமன்றம் நேற்று (11.06.2020) அளித்த உத்தரவின் பேரில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 12-06-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 9, 2020

மக்கள் சக்திக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! தமிழக அரசின் முடிவை, மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன். வைகோ அறிக்கை!

ஜூன் 15 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்துச் செய்யப்பட்டு, அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்வு பெற்றதாக, தமிழக முதல் அமைச்சர் அவர்கள் அறிவித்து உள்ளார்; மேலும், 11 ஆம் வகுப்புத் தேர்வுகளும் இரத்துச் செய்யப்படும், 12 ஆம் வகுப்புத் தேர்வுக்கு, வருகைப் பதிவு ஏடும், கால்ஆண்டு, அரைஆண்டு தேர்வு மதிப்பெண்களுள் 80 விழுக்காடும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து இருப்பது, எல்லை இல்லாத மகிழ்ச்சியைத் தருகின்றது.

கொரோனா தொற்று நோயைக் காரணம் காட்டி, பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று  கோரி, ஏப்ரல் 7 முதன்முதலில் நான் அறிக்கை கொடுத்து இருந்தேன்.

அதுகுறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், “வைகோ இவ்விதம் அறிக்கை கொடுத்து இருக்கின்றார்” என செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

மீண்டும் மே 13 ஆம் தேதி அன்று, தேர்வுகளை ரத்து செய்யக் கோரி அறிக்கை கொடுத்தேன், 

மூன்றாவது முறையாக, ஜூன் 8 ஆம் தேதி அறிக்கை கொடுத்து, தேர்வுகளை ரத்துச் செய்யக் கோரி வலியுறுத்தி இருந்தேன் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 

எச்சரிக்கை மணி அடித்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நன்றி செலுத்துகின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் நாளை நடத்துவதாக அறிவித்த அறப்போராட்டமும், இதற்கு ஒரு காரணம் என்பதில் மகிழ்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 9-6-2020  தெரிவித்துள்ளார்.

Monday, June 8, 2020

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தக் கூடாது! வைகோ அறிக்கை!

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுத் தேர்வு தள்ளிப் போனதால், மாணவச் செல்வங்கள் துவண்டு இருந்த நிலையில், பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தக்கூடாது என ஏப்ரல் 7 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டு இருந்தேன். 

அன்று இருந்ததைவிட, இன்று தமிழகத்தில் கொரோனா தொற்று பல நூறு மடங்கு உயர்ந்து இருக்கின்றது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலைமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. 

மூன்று மாதங்கள் இடைவெளி ஏற்பட்டு விட்ட நிலையில், மீண்டும் முறையான பயிற்சிகள் அளிக்காமல், ஆயத்தப்படுத்தாமல், மாணவச் செல்வங்களைத் தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. அது அவர்களின் மனநிலையைக் கடுமையாகப் பாதிக்கும். தங்கள் பிள்ளைகளின் உயிரோடு விளையாட பெற்றோர்களும்  விரும்பவில்லை.

11ஆம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது. 

எனவே, தமிழக அரசு இந்தக் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்; அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 8-6-2020  தெரிவித்துள்ளார்.

Saturday, June 6, 2020

ஆருயிர்ச் சகோதரர் டிஏகே இலக்குமணனை இழந்தேன்! வைகோ உருக்கம்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்,  டி.ஏ.கே இலக்குமணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். 

நெல்லை மாவட்டத்தில் தி.மு-க. வைப் பாடுபட்டு வளர்த்த முனனோடி செயல்வீரர்களுள், எதற்கும் அஞ்சாத தீரர்களுள் ஒருவர் டிஏகே இலக்குமணன் ஆவார். எழுபதுகளில் நாங்குநேரியில் தி.மு.க. வட்டக்கழகச் செயலாளராகப் பணி ஆற்றிய நாள்முதல், 45 ஆண்டுகள் என்னோடு உயிராகப் பழகியவர். தி.மு.க. நடத்திய போராட்டங்களில் பங்கேற்று, நானும் அவரும, பலமுறை கைதாகி, சிறைச்சாலையில் ஒன்றாக இருந்தோம்.

மாவட்டச் செயலாளராக,   பொதுப்பிரச்சினைகளில், மக்கள் பிரச்சினைகளில் தோழர்களைத் திரட்டி இடைவிடாத போராட்டங்களை நடத்தினார்.

கலகலப்பாக உரையாடி, போராட்டக் களங்களில் முன்னின்று, ஒன்றாக உண்டு, அண்ணனும் தம்பியுமாக உறவாடிய நாட்களை எண்ணிப் பார்க்கின்றேன். 

1977 இல், டாக்டர் கலைஞர் கைது செய்யப்பட்டபோது இலக்குமணனோடு சேர்ந்து, ஆயிரக்கணக்கானோர் கைதானோம். அனைவரும் பிணையில் சென்றபின்னரும், நானும் இலக்குமணனும் 87 நாட்கள் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் ஒன்றாக இருந்தோம்.

நெல்லை மாவட்ட தி.மு.க. தொண்டர் படையை உருவாக்குவதில் அவரும், மஸ்தானும், மிக முக்கியப் பங்கு ஆற்றினார்கள்.     

திட்டமிட்டுப் பணி ஆற்றக் கூடிய செயல் ஆற்றல் மிக்கவர். எதற்கும் அஞ்சாமல், ஆபத்துகளைப் பற்றிக் கவலைப்படாது, அச்சத்திற்குச் சற்றும் இடம் இன்றி, துணிச்சலோடு போராட்டக் களங்களில் நிற்கக்கூடிய மாவீரன்தான், சகோதரர் இலக்குமணன் ஆவார்

கடந்த ஆறு மாதங்களில், நெல்லைக்குச் செல்கின்றபொழுது, மூன்று முறை அவரைச் சந்தித்து விட்டு வந்தேன். அண்மையில், அவரது துணைவியாருடன் பேசினேன். அடுத்த முறை நெல்லைக்கு வருகின்றபொழுது வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னேன். 

இந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. அவருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 6-6-2020  தெரிவித்துள்ளார்.

வேடந்தாங்கல் பறவைகள் வாழிடத்தின் பரப்பைச் சுருக்கக் கூடாது. வைகோ அறிக்கை!

கொரோனா என்ற தீநுண்மித் தொற்று நமக்குப் பெரும் பாடம் புகட்டி இருக்கின்றது. அனைத்து வழிகளிலும், தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் தேவையை வெகுவாக உணர்த்தி விட்டது. குறிப்பாக, சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் கட்டாயத்தை அனைவரும் புரிந்து கொண்டுள்ளோம். 

இந்த நிலையில், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், அதைக் கெடுப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த முனைகின்றன. 

அதிலும் குறிப்பாக, பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 

உலக அளவில் தமிழகத்திற்குப் புகழ் சேர்ப்பது, வேடந்தாங்கல் பறவைகள் புகலிடம். 30 ஹெக்டேர் பரப்பில் அமைந்து இருக்கின்றது. புவியின் வடக்கு முனையை ஒட்டி இருக்கின்ற சைபீரியக் கடுங்குளிரில் வாழுகின்ற பறவைகளும், வறண்ட நிலமான ஆஸ்திரேலியாவில் இருந்தும், சுமார் 5000 முதல் பத்து ஆயிரம் கிலோமீட்டர்கள் பறந்து  வருகின்றன. இங்கே தங்கி, இனப்பெருக்கம் செய்கின்றன. 

பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற வேடந்தாங்கலில், சுமார் 40 விழுக்காடு பரப்பில், தொழில் துறை சார்ந்த உரிமங்களை வழங்க, தமிழக அரசு  முனைகின்ற செய்திகள், வேதனையை ஏற்படுத்துகின்றன. 

சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப் பகுதியை, 3 கிலோ மீட்டர் என்கிற அளவிற்குச் சுருக்குவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி, தேசிய காடுகள் உயிர் இயல் வாரியத்திடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருக்கின்றது. 

அப்படிச் செய்வதால், பல்வகை உயிர்களின் பாதுகாப்பிற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது, என தலைமை வனப் பாதுகாவலரைக்  கட்டாயப்படுத்தி அறிக்கையும் பெற்று இருக்கின்றார்கள். அதை, சுற்றுச்சூழல் துறைச் செயலாளரும் பரிந்துரைத்து இருக்கின்றார். 

இதன் பின்னணியில், அந்தப் பகுதியில் உள்ள மருந்து நிறுவனம் இருப்பதாகத் தெரிகின்றது. அவர்களுடைய தொழிற்சாலை விரிவாக்கப் பணிகளுக்காகவே இந்த நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு இருப்பதாகத் தெரிகின்றது. தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு வேறு எவ்வளவோ இடங்கள் இருக்கும்போது, வேடந்தாங்கலைக் குறி வைப்பது, இயற்கைப் பேரழிவுக்குத்தான் வழிவகுக்கும். 

ஏற்கனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியின் பெரும்பகுதி கட்டடங்கள் ஆகி விட்டது. 

நடுவண் அரசில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை என ஒரு தனி அமைச்சகம் இருக்கின்றது. ஆனால், இந்தியா முழுமையும், இதுபோன்ற, இயற்கைச் சூழலைக் கெடுக்கின்ற, நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு நடுவண் அரசு ஏப்ரல் மாதம் ஒப்புதல் அளித்து இருக்கின்றது. 2014 இல் அமைக்கப்பட்ட, தேசிய வன உயிர்இயல் வாரியம், இதுவரை ஒருமுறை கூடக் கூடியது இல்லை. துறையின் அமைச்சரே அனைத்து முடிவுகளையும் மேற்கொள்கின்றார். 

வளர்ச்சித் திட்டங்களால், வேலைவாய்ப்பைப் பெருக்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும். ஆனால், சுற்றுச்சூழலும், பல்லுயிர்ப் பெருக்கமும் பாதிக்கப்பட்டால், மனித இனம் வாழவே முடியாது.

பறவைகள் வாழிடத்தின் பரப்பைப் பெருக்குவதற்கு, விரிவுபடுத்துவதற்குத்தான் அரசு முயற்சிக்க வேண்டும்.

மாறாக, வேடந்தாங்கலின் பரப்பு அளவைக் குறைக்க முனையும் முயற்சியைத் தமிழக அரசு கைவிட வேண்டும், நடுவண் அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 6-6-2020  தெரிவித்துள்ளார்.

Friday, June 5, 2020

மக்கள் எதிர்ப்பை மீறி சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதா? மத்திய - மாநில அரசுகளுக்கு வைகோ கண்டனம்!

சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தால் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் விளைநிலங்கள் பாழாகும். இயற்கை அரண்களாக உள்ள மலைகள் தகர்க்கப்பட்டு, கனிம வளங்கள் சூறையாடப்படும், சுற்றுச் சூழல் சீர்கேடு அடையும் என்பதால், பொதுமக்களும், விவசாயிகளும், அனைத்து அரசியல் கட்சி மற்றும் பொதுநல இயக்கங்களும் தொடர்ச்சியாக இரு ஆண்டுகளாக போராடி வருகின்றன.

இத்திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. நீதியரசர்கள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 8 வழிச்சாலை பசுமைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசுப் பிறப்பித்த அறிவிப்பாணையை 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. பொதுமக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை 8 வார காலத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்காமல், தடை ஆணையை ரத்துச் செய்யக் கோரி, 2019 மே மாதம் உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு மேல் முறையீடு செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. உடனடியாக செயல்படுத்தி ஆக வேண்டும். எனவே இந்த வழக்கை உடனடியாக அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் தற்போது இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் சேலம் - சென்னை பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்காக சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும்.

277.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படவுள்ள பசுமை வழிச் சாலையில் 3 குகைப் பாதைகள், 23 பெரிய பாலங்கள். 156 சிறு பாலங்கள், 578 கல்வெட்டுகள், 8 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படும்.

இதனால் 10 ஆயிரம் பாசனக் கிணறுகள், 100 குளங்கள், 6 ஆயிரம் தென்னை மற்றும் பாக்கு மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும். மேலும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மரங்கள் வெட்டி அகற்றப்படும். பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் பறிபோகும்.

22 கி.மீ. தூரத்துக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக இச்சாலை அமைக்கப்படுவதால், சுற்றுச் சூழலுக்கு பேராபத்து ஏற்படுவதுடன், சேலம் மாவட்டத்தில் ஜருகுமலை, அருநூற்றுமலை, சேர்வராயன்மலை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன் மலை, தருமபுரி மாவட்டத்தில் சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் கவுந்திமலை, வேடியப்ப மலை உள்ளிட்ட 8 மலைகள் உடைத்து அழிக்கப்படும். மலைவளம் நாசமாகும்.  எனவேதான் சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக மக்கள் எரிமலையென வெடித்தனர்.

தமிழ்நாட்டையே சூறையாடி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, மக்கள் கொந்தளிப்பைப் புறந்தள்ளிவிட்டு, இத்தகைய நாசகாரத் திட்டங்களைச் செயல் படுத்தத் துடிக்கிறது, அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணைபோய்கொண்டு இருக்கிறது.

மத்திய - மாநில அரசுகள் தமிழகத்திற்கு இழைக்கும் பச்சைத் துரோத்திற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக மக்களின் எதிர்ப்புகளைத் துச்சமாகக் கருதும் மத்திய பா.ஜ.க. அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 5-6-2020 தெரிவித்துள்ளார்.

Thursday, June 4, 2020

அனைத்து இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு(AICTE) வைகோவுக்கு அளித்து இருக்கின்ற விளக்கம்!

பொறி இயல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான தகுதிப் பாடங்களின் பட்டியலில் இருந்து  வேதி இயல் பாடத்தை நீக்கியதாக வெளியான செய்திகள் குறித்து, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் பேசியதுடன், அனைத்து இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு இயக்குநருக்குக் கடிதமும் (27.02.2020) எழுதி இருந்தார். 

அதற்கு விளக்கம் அளித்து, ஏஐசிடிஇ உதவி இயக்குநர், வைகோவுக்கு எழுதி இருக்கின்ற விளக்கக் கடித விவரம் (21.05.2020): 

தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றோம்.

பொறிஇயல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான தகுதிப்பாடுகளில், அனைத்து இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு (All India Council for Technical Education) எந்தவித மாற்றமும் செய்யவில்லை. 

2001 ஆம் ஆண்டு முதல், இத்தகைய படிப்புகளுக்கான தகுதிப் பாடங்களில், இயற்பியலும், கணிதமும் கட்டாயப் பாடங்கள் ஆகவும், அவற்றுடன் கூடுதலாக, வேதிஇயல், உயிரி தொழில்நுட்பம் (Biotechnology), உயிர்இயல், தொழில்நுட்பப் பாடங்கள் (Technical Vocational) ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பாடமும் படித்தாக வேண்டும் என்பதே அடிப்படைத் தகுதியாக இருக்கின்றது.

பொறிஇயல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மேற்கண்ட கூடுதல் பாடங்களுள், கீழ்காணும் புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

கணினி அறிவியல் (Computer Science), தகவல் தொழில்நுட்பம், தகவல் நடைமுறைகள் (Informatic Practices), வேளாண்மை, பொறிஇயல் வரைகலை (Engineering Graphcs), வணிகக் கல்வி (Business studies). 

எனவே, வேதிஇயல் பாடம் நீக்கப்பட்டதாக, ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 04-06-2020 தெரிவிக்கப்பட்டுள்ளது.