Saturday, June 27, 2020

ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! வைகோ இரங்கல்!

ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனா தொற்று ஏற்பட்டு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

கொரோனா தொற்று காலத்திலும் செய்திகளை மக்களுகுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில்தான் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. வேல்முருகன் 20 ஆண்டுகள் ஊடகத் துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருவந்திருக்கிறார்.

ஊடகத்துறையில் பணியாற்றுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும் என்பதை வேல்முருகனுடைய இழப்பு நமக்கு உணர்த்துகிறது. ஊடகத் துறையில் பணியாற்றுகின்ற அனைத்துத் தோழர்களுக்கும், அவர்கள் சார்ந்த நிறுவனமும், அரசும் உரிய நோய்த் தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழிகாட்ட வேண்டும்.

வேல்முருகனை இழந்து வாடும் மனைவி, குடும்பத்தார் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அவரது மனைவி சண்முகசுந்தரி ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். உயிரிழந்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு ஒளியேற்றும் வகையில்,  சண்முகசுந்தரியை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என‌ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது இரங்கல் அறிக்கையில் 27-06-2020  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment