Sunday, June 28, 2020

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு: வெளிமாநிலத் தமிழ் மாணவர்களும். தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். வைகோ அறிக்கை!

கொடிய கொரோனா தொற்று நோயால் நாடு பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ள நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்த வேண்டாம், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என 2020 ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று முதன்முதலாக அறிக்கை வாயிலாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.

அதன்பின்னர் நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றது. இறுதியாக பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு இரத்து செய்யப் படுவதாகவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்தார்கள்.

தமிழக பாடத்திட்டத்தின் படி வெளி மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி நிலை குறித்து அறிவிப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.

இதனால் மாராட்டிய மாநிலம், மும்பையில், தமிழக கல்வி முறையில் பயிலும் 190 மாணவர்கள் தங்கள் தேர்ச்சி நிலை குறித்து தெளிவான உத்தரவுகள் கிடைக்காததால் கவலை கொண்டுள்ளனர்.

இதுகுறித்த தகவலை மும்பை தமிழ் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் என் கவனத்துக்குக் கொண்டுவந்தார்கள்.

தமிழக அரசு 2019-20 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பில் பயின்ற தமிழக மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்ததைப் போல்,

தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மும்பை மாணவர்கள் 190 பேர் உட்பட, வெளி மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை விரைவில் வெளியிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி தனது அறிக்கையில் 28-06-2020  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment