Thursday, October 15, 2020

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு: நடப்பு ஆண்டில் வழங்க மத்திய அரசு மறுப்பு! வைகோ கண்டனம்!

மருத்துவப் படிப்புக்கான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பல் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்குக் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 42842 இடங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஒரு இடம்கூட இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யாமல், மத்திய பா.ஜ.க. அரசு சமூக நீதியைச் சவக் குழியில் தள்ளி விட்டது.

இந்நிலையில்தான் மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில் பிற்படுததப்பட்டோருக்கு மத்திய அரசு அளிக்கும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 50 விழுக்காடு ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 27 விழுக்காடு மற்றும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு 2020 -21 நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற்த்தில் நிலுவையில் இருப்பதால், நடப்பு ஆண்டில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று காரணம் கூறி உள்ள பா.ஜ.க. அரசு, நடப்பு ஆண்டில் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் 1417 காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும்  சட்டத்திற்கு எதிராகவும் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இருந்தபோதிலும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கு முனைந்து, முன்கூட்டியே அறிவிப்பாணை வெளியிட்டு இருக்கிறது.

அகில இந்தியத் தொகுப்புக்கு மாநில அரசுகளால் வழங்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில், ஓ.பி.சி. மாணவர்களுக்கு சட்ட ரீதியாகக் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதியாகும். பா.ஜ.க. அரசின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

எனவே நடப்பு ஆண்டிலேயே மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
15.10.2020

No comments:

Post a Comment